Thursday, November 28, 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த காமன்வெல்த்

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், பாலியல் வன்முறைகள், இனத்தை வன்கலப்பு செய்வது, சிங்களர்களை கொண்டு வந்து குடிவைப்பது என்று இன அழிப்பின் எல்லா விஷயங்களையும் கடந்த 60 வருடங்களாக சிங்கள அரசுகள் செய்த அளவில் சற்றுக் கூட அளவுகுறையாமல் செய்து அதன் உட்சபட்ச வெற்றியையும் ஈட்டியது் ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு. ஐக்கிய நாட்டு சபையில் அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளின் கள்ளத்தனமான மௌன அங்கீகாரத்தில் தான் இவற்றைப் புரிந்தது. இருந்தாலும் பிரிட்டன், கனடா போன்ற நாடுகளின் தலையீடு இருப்பதால் போர்க்குற்ற விசாரணை ஒன்றை சும்மா உப்புக்கு சப்பாணியாக நடத்தியும் முடித்தது. இத்தோடு நிற்காமல் 2009ல் தொடங்கி உலக திரைப்பட விழா, கிரிக்கெட் போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை கோலாகலமாக நடத்துவதன் மூலம் பிண ஓலத்தை மறைக்கவும் முயற்சி செய்கிறது. இந்த கொலைபாதகச் செயல்கள் அனைத்திற்கும் சர்வதேச நாடுகளில் ஆதரவு தெரிவிப்பவர்களே அதிகம். இதில் கியூபா, சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிஸ்ட்டு நாடுகளும் அடக்கம். ஐக்கிய முண்ணணி தந்திரத்தின் பக்கங்களுக்குள் பாவம் இந்த கம்யூனிச நாடுகளும் சிக்கிக் கொண்டன. இவர்கள் இதற்கு சொல்ல இருக்கும், விரும்பும் காரணம் அனேகமாக அமெரிக்காவுக்கு எதிரான வியூகம் என்கிற சாக்கு தான். இந்தப் பிண்ணணியில் மேலும் தைரியம் பெற்ற ராஜபக்சேவின் அரசு காமன்வெல்த் மாநாட்டையும் நடத்தி மொத்தப் பாவத்தையும் பூசணிக்காயில் மறைக்க முயன்றது.

 இப்படியொரு நேரத்தில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற இருந்ததையொட்டி, இலங்கை அதை நடத்துவதையும் அதன் மூலம் மறைமுகமாக இந்தியா அதன் படுகொலைப் பாவத்தை கடலுக்குள் கரைப்பதையும் தெரிந்திருந்தாலும் தமிழ்நாட்டில் மக்கள் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லைதான். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திராவிட கட்சிகளல்லாத மற்றைய கட்சிகள் சமத்துவ கட்சி, பெரியார் திராவிட கழகம், சீமானின் நாம்தமிழர், வைகோவின் மதிமுக, திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள், நெடுமாறனின் அமைப்பு போன்ற பல கட்சிகள் சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தி, ரயில்களை மறித்து தமிழ்நாட்டு மக்களின் அடி ஆழத்தில் உள்ள அதிருப்தியை மத்திய அரசுக்கு கொஞ்சம் வெளிக்காட்டினர். இந்தப் போராட்டங்கள் தொலைக்காட்சிகளில் செய்திகளாக காட்டப்பட்ட வேளைகளில் தான் நம் தமிழ் மக்களும் ஈழப் படுகொலைகளை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டனர். கலைஞர் கருணாநிதி வழக்கம் போல 'துரும்பைக்' கூட கிள்ளிப் போடாமல் தனது டெசோ அமைப்பை வைத்து அறிக்கைகள் விட்டு மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்றதும் ஏமாற்றமளிக்கிறது என்று கையை கட்டி நின்றுகொண்டார். அம்மாவின் தீர்மானங்கள் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க தொண்டர்கள் யாருக்கும் இதற்காக போராட வேண்டும் எனத் தோன்றாதது ஆச்சரியமான விஷயமல்ல. ஒரு மாநகராட்சி உணவகத் திறப்பு விழா முதல் , ஈழ ஆதரவு போராட்டத்தைக் கூட அம்மா மட்டுமே முன் நின்று நடத்தவேண்டும் என்பது அந்தக் கட்சியின் முக்கியமான கொள்கையல்லவா?

 முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையின் முந்தைய தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவே கூடாது என்கிற தீர்மானத்தையும் முன்வைத்தார். உலக சமூகத்தின் பார்வையில் இது முக்கியமான ஒரு தீர்மானமே. ஆனால் மத்திய அரசு வழக்கம் போல இதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கிளம்பிய இத்தகைய எதிர்ப்பு அலைகளை மத்திய அரசு வழக்கம் போல அலட்சியமாக கடந்து சென்றது. மாநாட்டிற்குச் சென்று ராஜபக்சேயுடன் விருந்து சாப்பிடும் மூடில் இருந்த மன்மோகன் சிங் ஜெயலலிதாவின் தீர்மானம் தந்த அழுத்தத்தினால் வயிற்று வலி போன்ற காரணங்களால் வரமுடியவில்லை என்று ராஜபக்சேவுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து லீவ் லெட்டர் அனுப்பியதுடன் இந்தியா சார்பாக சல்மான் குர்ஷித்தை வேறு அனுப்பி வைத்தார். ஜெயலலிதாவின் கனவு பிரதமர் ஆவதோடு நின்றுவிட்டதால், அவர் இந்தியா தாண்டி உலகப் பிரச்சனைகளைப் பற்றி யோசிக்க விருப்பமில்லாமல் இது வெளியுறவுப் பிரச்சனை எனவே தீர்மானம் போடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எல்லை வைத்திருக்கிறார்.

 இது தெரியாமல் நெடுமாறன் ஐயா ஜெயலலிதா அம்மையாரின் பரம எதிரியான நடராஜனின் நிலத்தில் நடராஜனின் முக்கிய பணப்பங்களிப்பில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்கிற நினைவுச் சின்னத்தை கட்டினார். அதைத் திறக்க முற்படும் போது தான் அவருக்கு பிரச்சனை வருகிறது. நெடுஞ்சாலைத்துறை முந்திய நாள் அதிகாலையில் வந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தின் காம்பவுண்ட் சுவர் அரசின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது எனவே இடிக்கிறோம் என்று நோட்டீசு கூட கொடுக்காமல் வந்து இடித்துவிட்டார்கள். நெடுமாறன், சீமான், வைகோ, நடராஜன் போன்ற யாருக்குமே தெரியவில்லை யார் இப்படி இடிக்கச் சொன்னதென்று. ஒருவர் மத்திய அரசின் சதி என்கிறார். இன்னொருவர் எனக்கும் அந்த விழாவுக்கும் சம்பந்தமில்லை என்கிறார். ஒருத்தர் ஜெயலலிதா ஈழத்தாயே தான் ஆனால் அவர் அரசு இப்படிச் செய்துவிட்டதே என்று திகைக்கிறார். ராஜபக்சே எதுவழியாகவோ புத்தர் போல சிரிக்கிறார்.

 ஆனால் பாருங்கள் இந்த காமன்வெல்த் மாநாட்டில் ஈழப்பிரச்சனையை வைத்து சிக்ஸர் அடித்தவர் பிரிட்டன் பிரதமர் கேமரூன். இவ்வளவு நாளும் ஏன் போர் நடந்த நேரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்காலில் வதங்கிய போதும் ஐ.நாவின் பான்கிமூன் இலங்கை வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டுச் சென்ற போதும் சும்மா இருந்தவர் திடீரென்று ஒருநாள் சேனல் - 4 டி.வியை பார்த்துவிட்டார் போலிருக்கிறது. உடனே வீராவேசமாக பேசியிருக்கிறார். காமன்வெல்த்தில் நிறைய பணம் ஸ்பான்ஸார் செய்த ஒரு பிரிட்டன் நாட்டு செல்போன் கம்பெனிக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறார். ராஜபக்சேவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது மாறாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று சூடு கிளப்பிவிட்டிருக்கிறார். நம்பமுடியாத நிகழ்வுதான் இல்லையா?

 ஈழப்பிரச்சனையின் போக்கை தீர்மானிக்கும் கருவியாக இருந்த பிரபாகரனை இதே பிரிட்டன் உட்பட இந்த நாடுகள் எல்லோரும் சேர்ந்துதான் வேட்டையாடி அழித்தார்கள். முக்கிய காரணி பிரபாகரன் இறந்துவிட்டதால் இனிமேல் இதை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்ள முடியும். ஈழப்பிரச்சனையை அமெரிக்காவோ, பிரிட்டனோ, பிரான்சோ, கையில் எடுத்து இலங்கையை மிரட்ட முடியும். அதேபோல இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கையின் கூட நின்றுகொண்டு 'அதெல்லாம் ஓண்ணுமே நடக்கலை.. ஒரு அப்பாவி கூட சாகலை.. செத்தது யாரோ அவங்க எல்லாமே எல்.டி.டி.ஈ' என்று சாதித்து பின்புலத்தில் இலங்கையின் தொழில் வர்த்தக லாபங்களை தாங்கள் அடைந்துகொள்ள முடியும். பிரபாகரன் இருந்தவரை தமிழ்நாட்டு தமிழர்களுக்கு ஈழப்பிரச்சனையால் எதுவும் பெரிய பிரச்சனை வந்துவிடவில்லை. ஆனால் இனிமேல் இது உலக வல்லரசுகள் இந்திய கடல் பகுதியில் தங்களது ஆளுமையை ஏற்படுத்திக்கொள்ள, மற்ற நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க இந்தப் பிரச்சனையை தங்கள் இஷ்டத்துக்கு எழுப்புவார்கள். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஒரு குறியீடாக மாற ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அது தமிழருக்கு விடிவுதரும் குறியீடாகுமா என்பது கேள்விக்குரியதே. ஏனென்றால் முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு இன்னும் தமிழர் தரப்பிலிருந்து சிங்களருக்கு ஒரு பதிலடி கொடுக்கப்படவில்லை. மாறாக சிங்கள ஆதிக்கத்திற்கு தமிழர்கள் அடிபணிந்து, கேவலப்பட்டு பரிதாபமாக நிற்கும் நிலையே உள்ளது. உள்நாட்டு அகதி முகாம்கள் எனும் சிறைகள் இன்னும் இருக்கின்றன. தமிழர் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்கள் அரசால் அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். தமிழர்களை ராணுவம் வீட்டு வாசலில் நின்று கண்காணிக்கிறது. இப்படி ஈழத்தமிழர்கள் வாழ்வில் சீரழிவுகள் மட்டுமேயுள்ளனவேயன்றி முன்னேற்றங்களில்லை.

 இந்தியாவுக்குள்ளே வடக்கத்திய ஆரியர்களும் தெற்கத்திய திராவிடர்களும் இரு எதிர் பிரிவுகளாக இருப்பது போல இலங்கையில் எதிரெதிராக வைக்கப்படும் இனங்களில் சிங்களர்கள் ஆரியர்களாகவும், தமிழர்கள் திராவிடர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது இந்திய ஆளும்வர்க்கத்துக்குள்ளே நடந்திருக்கிறது. இந்திய சுதந்திர காலத்திலிருந்து ஆளும் இந்திய வர்க்கம் தமிழனை மதராஸி என்று இழிவாகப் பார்க்கும் எண்ணம் கொண்டே இருந்திருக்கிறது . இலங்கை மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு எதிரானதாக அமைக்கப்பட்டதை திராவிடர்களுக்கு எதிரான ஆரியர்களுக்கு ஆதரவான கொள்கையாக இது அமைந்ததுடன் ஒப்பிட்டால் இந்த சிங்கள-ஆரிய பாசம் புரியவரும். திராவிடத் தமிழர்களால் இதை மாற்றவே இயலாமல் போனது. தமிழர்கள் அரசியல் ராஜதந்திர ரீதியாக இது பற்றி பெரிதாகவும் கவலையுற்றதில்லை. இப்போதாவது நாம் இதைக் கருத்தில் கொள்ளவில்லையென்றால் பிற்காலத்தில் ராகுலின் பேரன் இந்தியாவை ஆளும்போது, விஜய் நம்பியாரின் பேரன் சுனில் நம்பியார் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் போது, இலங்கை சிங்களர்களின் தேசமாக முற்றிலும் ஆகியிருக்கும்.

 முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த காமன்வெல்த்தில் ராஜபக்சே வெற்றிக் கொடி நாட்ட பின்னாலிருந்து மன்மோகன் சிங் கைதட்ட, கேமரூன் கடைசி வரிசையில் நின்றுகொண்டு விசிலடித்து கூட்டத்தை கலைக்கப் பார்க்கிறார். அம்மாவோ கோட்டைச் சுவருக்கு வெளிப்பக்கம் நின்று தீர்மானம் இயற்றுகிறார். நெடுமாறன் ஐயா போன்றவர்கள் இடிந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரின் இடிபாடுகளில் நின்று அம்மாவை எப்படித் திட்டுவது என்று முழிக்கிறார்கள். இத்தகைய நாடகங்களின் முடிவுகள் ஈழத்தின் தீர்வுகளாய் ஆகாது. ஈழ ஆதரவு மற்றும் ஈழ எதிர்ப்பு நாடகங்கள் எல்லாவற்றையும் மக்கள் பொறுமையாக கவனித்தால் மட்டுமே யதார்த்தம் புரியும். மக்கள் கவனிப்பார்களா ? உண்மை வெல்லுமா ? நூற்றுக்கு தொன்னூறு சதவீதம் வாய்ப்பில்லை.

Monday, November 18, 2013

'பாண்டிய நாடு' கிரானைட்ஸ் உடைத்து

ஆதலினால் காதல் செய்வீரில் உங்கள் சுயநலத்துக்காக மட்டும் காதல் செய்யாதீர்கள் என்று சொன்ன கையோடு இந்த ரத்தம் உறையும் பாண்டிய நாட்டுக் கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.  வழக்கமான பழிவாங்கும் கதை என்று லேசாகச் சொல்லிவிட்டு செல்லமுடியாதபடி திரைக்கதை அமைந்துவிட்டது தான் படத்தின் சிறப்பம்சம்.
விஷால் மதுரையில் ஒரு செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை செய்யும் சர்வீஸ் இன்ஜினியர். அவருடைய அண்ணன் அரசின் கனிமவளத்துறையில் அதிகாரி. அண்ணனது குடும்பம் மற்றும் அப்பா, அம்மாவுடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். அவர்களது மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் கும்கி லட்சுமி மேனன். ஸ்கூல் டீச்சரான அவரை காதலிக்கிறார் விஷால். இதுவரை கதை எளிமையான அழகான ஒரு காதல் கதையாகச் செல்கிறது. இணையாக இன்னொரு கதையும் செல்கிறது. அதுதான் 2012ல் பிரசித்தி பெற்ற பி.ஆர்.பியின் முப்பதாயிரம் கோடிரூபாய் கிரானைட் ஊழல் கதை.  
மதுரையில் ஒரு பிரபல ரவுடி இறந்து போகவே அவரது சிஷ்யர்கள் இருவருக்கும் இடையே அடுத்த தாதா யார் என்பதில் போட்டி வருகிறது. ஒருவரையொருவர் கொல்வதற்கு அலைகிறார்கள். அதில் மத்தியஸ்தம் பேச வருபவர் இருவருக்குமிடையே ரியல் எஸ்டேட், சாராயக்கடை, வசூல், கிரானைட்ஸ், ஹோட்டல் என்று அவர்களின் தொழில்களை பங்கு பிரித்துக் கொள்ளுங்கள் என்று வழக்கமான முறையில் அட்வைஸ் பண்ண வருவார். அப்போது ரவி என்கிற அந்த தாதா சொல்வான் சாராயக்கடை, வசூல், ஹோட்டல் என்று எல்லா பிஸினெஸ்ஸையும் தூக்கிச் சாப்பிடும் கிரானைட்ஸ் தொழிலில் வரும் கொள்ளை லாபம் வருஷத்துக்கு முன்னூறு கோடி ரூபாய் என்பான். எனவே தொழில் போட்டி என்பது கிரானைட்ஸ் தொழிலை யார் அபகரிப்பது என்பதாக ஆகிறது. அரசு அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து சரிக்கட்டுவது இல்லாவிட்டால் ஆக்ஸிடெண்ட் போல திட்டமிட்டு காரில் மோதிக் கொல்வது, சட்டவிரோதமாக குறிப்பிட்ட ஆழத்துக்கும் மேல் தோண்டுவது போன்ற பி.ஆர்.பி விஷயங்கள் அப்படியே படத்தில் இருக்கின்றன.
பி.ஆர்.பி ஊழலில் துவங்கி, ஸ்பெக்டரம், கோல்கேட், தற்போதைய தாதுமணல் வரை எல்லா ஊழல்களிலும் அதை கண்டிக்கும், எதிர்க்கும் சாதாரண மக்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுவதும் அதை தடுத்துக் கேட்க ஆளின்றிப் போனதும், சட்டங்கள் மற்றும் காவல்துறை போன்றவை முப்பதாயிரம் கோடிகளுக்கு சலாம் போடுவதும், பிரதமர் கூட மென்று முழுங்கி பதில் சொல்வதுமான யதார்த்தத்தில் பாண்டிய நாடு நம் மனதில் பாண்டி ஆடிவிடுகிறது. படத்தில் அப்படிக் கொல்லப்படும் அரசு அதிகாரியான விஷாலின் அண்ணனின் மரணத்துக்காக அந்த சாதாரண நடுத்தர குடும்பம் எப்படி பழிக்குப் பழிவாங்க முயல்கிறது என்பதாகச் செல்கிறது இரண்டாம் பகுதிப் படம்.
சுசீந்திரனின் எழுத்தும் இயக்கமும் கூர்மையாகிக் கொண்டேதான் வருகின்றன. இப்படத்தில் கிரானைட்ஸை மையமாக வைத்ததில் அவரது தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். 1992ல் ஜெயலலிதா அரசு அரசின் வசமிருந்த கிரானைட் தோண்டும் உரிமையை உலகமயமாக்கலின் விளைவாக தனியாருக்கு லைசன்ஸ்களாக வழங்கியது. 2000ஆம் ஆண்டு துவங்கி கார்ப்பரேட்டுகளுக்கு இணையாக வளர்ந்துவிட்டிருக்கும் ஒரு இயற்கைவளச் சுரண்டல் தான் கிரானைட்ஸ் தொழிலில் செய்யப்பட்ட முப்பதாயிரம் கோடி ரூபாய் கொள்ளை. இதில் மதுரையருகே மேலூரில் புகழ்பெற்ற யானைமலை என்கிற மலையையே இவர்கள் கிரானைட்ஸ் மலை என்பதையறிந்து அதையும் லவட்ட முயன்றபோதுதான் இத்தகைய கார்ப்பரேட் சைஸ் கொள்ளை கலெக்டர் தேவசகாயம் அரசுக்கு எழுதிய கடிதம் மூலம் பொது வெளிச்சத்துக்கு வந்தது. கருணாநிதியின் மகன் மத்திய அமைச்சர் அழகிரிக்கு நேரடித் தொடர்பு இருந்திருக்கிறதென்று அதில் ஆதாரங்கள் காட்டப்பட்டிருந்தன. இப்போது அ.தி.மு.கவுக்கு இந்தக் கொள்ளையில் தன் பங்கைப் பெற நல்ல வாய்ப்பு. கோர்ட் மூலமாக இழுத்து மூடப்பட்டது கிரானைட் குவாரிகள். தற்போது பேரங்கள் படிந்திருக்கக்கூடும் எனவே பி.ஆர்.பி(P.R.P)க்கும் அவரது குடும்பத்திற்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இனி கிரானைட்ஸ் கதை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் கதை போலவே ஆகும். சரி நம்ம பாண்டிய நாட்டுக்கு வருவோம்.
Director Suseendran
படத்தில் பாத்திரங்கள் அனைத்தும் கச்சிதம். பாரதிராஜா ஒரு நடுத்தர அப்பாவாக அசத்தியிருக்கிறார். தமிழ்ப் படங்களுக்கு அசத்தலான ஒரு புதிய அப்பா வரவு. வெல்கம் சார். ஸ்கூல் டீச்சராக வரும் லட்சுமி மேனன் கும்கியில் வந்த ஆதிவாசிப் பெண்ணா இவர் என்று கேட்கவைக்கிறார். விஷாலின் அண்ணன் மகளாக வரும் அந்தச் சுட்டிப் பெண். தயாரித்து நடித்திருக்கும் விஷாலும் ஜமாய்த்திருக்கிறார். இமானின் இசையில் பாடல்கள் இதம் பிண்ணனி இசை் பலம். மதியின் ஒளிப்பதிவு படத்தின் யதார்த்தத்தை அதிகமாக்கியிருக்கிறது. சண்டைகள், டூயட்கள் என்று கொஞ்சம் கொஞ்சம் யதார்த்தத்தை விட்டு விலகினாலும் அது படுசீரியசான இந்தக் கதையை நோக்கி பார்வையாளர்களை கட்டிப் போடவே பயன்பட்டிருக்கிறது. அதற்காக அதை மறந்துவிடலாம்.
படத்தின் பிற்பகுதியில் கிரானைட்ஸ் பெயரே வராததால் படம் கிரானைட்ஸ் கொள்ளை என்பதாக இல்லாமல் வெறும் தாதா பிரச்சனை போன்று மாறிவிடுகிறது. அதே போல இவ்வளவு பெரிய கொள்ளைகள் நடைபெறும் போது அதன் பின்புலத்தில் செய்லபடும் அரசியல் புளளிகளின் பங்கு பெரிதாக வெளிக்காட்டப்படவில்லை. மற்றபடி ஒவ்வொரு முறையும் தாதாக்கள் பாரதிராஜாவையும், விஷாலையும் நெருங்கும் போது நாம் பதறுகிறோம். அதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.
தாதாக்களையும், ரவுடிகளையும் அரசியல்வாதிகளையும் பொதுமக்களும் பழிவாங்கலாம் 'யாரு செஞ்சான்னு கண்டுபிடிக்கமுடியாம செஞ்சா தாதாக்களை சாதாரண மக்களும் பழிவாங்கலாம்' என்கிற ஐடியாவை மக்களுக்கு கொடுப்பதன் மூலம் அநியாயங்களை எப்படியாவது தண்டிக்கவேண்டும் என்று பொதுமக்களுக்கு எழும் தார்மீகக் கோபத்துக்கு ஒரு ஜனரஞ்சகமான வடிகாலை காட்டியிருக்கிறார் இயக்குனர். தீபாவளிப் படங்களிலேயே உருப்படியான படம் இதுதான் போலிருக்கிறது. பாண்டிய நாட்டை தியேட்டரில் சென்று பாருங்கள்.

ஆதலால் காதல் செய்யாதீர்.

இன்றைய சமூகத்து இளைஞர்கள் இன்பம் திளைப்பதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்களாகவும், சுயநல விரும்பிகளாகவும் இருப்பதை நெற்றியில் அறைந்து சொல்லியிருக்கும் படம். பார்வையாளர்களுக்கு அவர்களது குறைகளை அவர்களுக்கே சுட்டிக் காட்டும்படியாக ஒரு திரைப்படம் அமையும்போது பார்வையாளர்கள் படத்துக்கு எதிரான ஒரு மனோநிலைக்கு வருகிறார்கள். இப்படி எதிர் மனநிலை
கொள்ளவைத்தாலும் அவர்களின் தவறான மனோபாவத்தை இடித்துக் காட்டியதால் அத்திரைப்படம் அவர்களது ஆழ்மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஆகிவிடுகிறது.
தமிழில் யதார்த்தத்தை மிகவும் நெருங்கிவிடக்கூடிய அதே சமயம் ரசிக்கக்கூடிய விதத்திலும் எடுக்கப்படும் படங்கள் குறைவு. இயக்குநர்களும் குறைவு. அவை தியேட்டரில் ஓடுவதும் குறைவு. ராஜபாட்டையில் சறுக்கி விழுந்த சுசீந்திரன் மீண்டும் ஆதலால் காதல் செய்வீரில் நிமிர்ந்து நின்றிருக்கிறார்.
அது ஒரு இருபாலர் படிக்கும் பொறியியற் கல்லூரி. கல்லூரி என்றால் காதல் தானே. அங்கே படிக்கும் சந்தோஷூம், மனீஷாவும் முதலில் நண்பர்களாக இருக்கிறார்கள். பின்பு காதலர்களாகிறார்கள். காதலர்களானால் அவுட்டிங் போகவேண்டுமே. காதலியே எப்போ போகலாம் என்கிறாள். சந்தோஷ் மஹாபலிபுரம் என்கிறான். அங்கே போகிறார்கள். மோகமும் காதலில் அடக்கம் இல்லையா ? காதல் கலவியாகிறது. இப்படியே ஆறுமாதங்கள் போனபின் கவனப் பிசகால் மனீஷா கர்ப்பமாகிறாள். அதைக் கலைக்க அவர்கள் அலைவதும் அதன் பிரச்சனைகளுக்கும் முன் காலம் கடந்துவிட, வீட்டிலும் தெரிந்துவிட, வெடிக்கும் பிரச்சனைகள், சுயநலம் மிக்க மனிதர்கள்.. அதன் முடிவுகள்.
படத்தில் நடித்த அனைவருமே நன்கு நடித்திருக்கிறார்கள். படம் இரு குடும்பங்களுக்குள் நடைபெறும் விஷயங்களை ஒரு மூன்றாவது பார்வையாளன் கோணத்தில் சொல்லிச் செல்கிறது. சந்தோஷூம், மனீஷா, மனீஷாவின் தோழி, அம்மா, அப்பாக்கள் என்று யாருமே நடிப்பில் சளைக்கவில்லை. இயக்குனருக்கே இவர்களை நடிக்க வைத்ததன் பாராட்டுக்கள் சேரும். பூர்ணிமா ஜெயராம் நீண்ட நாட்களுக்குப் பின் நடித்திருக்கிறார். ஆனால் அழுத்தமான பாத்திரம் அவருக்கு இல்லை.
படத்தின் காட்சிகள் சுருக்கம் மற்றும் கச்சிதம். வளவளவென்று இழுவை இல்லை. இளைஞர்கள் பெற்றோரை எவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியும், ஏமாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுமிடத்தில் சுசீந்திரன் ஜெயிக்கிறார். படம் ஒரு விதத்தில் எதிர்மறையானது தான் என்றாலும் இதுதான் இன்றைய மேற்கத்திய கலாச்சாரம் ஊடுருவிய இந்தியா, தமிழ்நாடு. இதை மறுக்கச் சொல்லுங்கள். டாஸ்மாக் வைத்துக் குடிக்கவைத்து மக்களை அழித்து காசு சம்பாதிக்கும் அரசு இருக்கும் ஊரில் வாழும் பிள்ளைகள் மட்டும் சுயநலமில்லாமல் இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் பளிச்.பளிச். யுவன் படத்திற்கு மிகப் பெரிய பலம். அவருடைய ஹிட்டான பாடலை டைட்டில் சாங்காக வைத்து வீணடித்திருக்கிறார் இயக்குநர். (பட்ஜெட் பிரச்சனையோ ?). இன்னும் கவனமாக ஷாட்கள் வைக்கப்பட்டு, கதாபாத்திரங்கள் பிரபல முகங்களாக இருந்திருந்தால் படத்தின் தாக்கம் பெரிதாய் இருந்திருக்கும்.
விதி என்று சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு படம் வந்தது. அதில் மோகனும், பூர்ணிமா ஜெயராமும் இதே மாதிரி காதலிப்பார்கள். அதில் மோகன் ஒரு ரோமியோ டைப். அவர் பூர்ணிமாவை நைச்சியமாகப் பேசி மஹாபலிபுரம் கூட்டிச் சென்று கடலில் விளையாட வைத்து, ஹோட்டலில் ரூம் போட்டு திட்டமிட்டு அவரை வளைத்துவிடுவார். பின்பு பூர்ணிமா கர்ப்பமாகிவிட வில்லத்தனமாகச் சிரிப்பார் மோகன். பூர்ணிமா பின்பு கோர்ட்டுக்குச் சென்று வக்கீல் சுஜாதாவின் உதவியோடு பரபரக்கும் கோர்ட் காட்சிகளோடு மோகனை கோர்ட்டில் ஜெயிப்பார்.
இந்த இரு படங்களுக்கும் நடுவில் இவ்வளவொரு கலாச்சார மாற்றம் ஏற்பட்டிருப்பது சுவராசியமான விஷயமாகும். பழைய படம் கொஞ்சம் நாடகத்தனமானது. புதிய படம் யதார்த்தத்தை நெருங்கி நிற்பது. பழைய படத்தில் காதல் என்பது கல்யாணத்தை நோக்கி என்று வரையறுக்கப்பட்டிருக்கும். புதுப் படத்தில் காதல் காதலுக்காக மட்டுமே. ஜாலியாக இருப்பது காதலின் முக்கிய தொழில். அதில் காமம், உடலுறவு எல்லாம் சகஜம் என்கிற சமூக மனோபாவம் வெளிப்பட்டிருக்கிறது.
மேற்கத்திய பாணிச் சுதந்திரம் சமூக அளவில் மட்டுமின்றி உடலளவிலும் சுதந்திரத்தை தேட விட்டிருக்கிறது நம்மை. உடல் ரீதியான சுதந்திரம் தேவையா இல்லையா? இளைஞர்களால் உடல் ரீதியான சுதந்திரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த முடியுமா ? எதிரில் நடந்துவரும் ஆணை நிமிர்ந்து பார்ப்பதே குற்றம் என்கிற அளவுக்கு சமூகக் கண்காணிப்பு இருந்த காலத்திலும் இது போன்ற எல்லை மீறல்கள் உண்டு தான். இப்போது கண்காணிக்கவே யாரும் தயாராயில்லாத போது எல்லை மீறல்கள் என்பது யதார்த்தமாகின்றன. சகஜமாகின்றன. வளரும் மகனை, மகளை கண்காணிக்க வேண்டிய அப்பாவும், அம்மாவுமே தங்கள் உடல் தேடல்களை முடித்தபாடில்லாமல் அலைகிறார்கள் இங்கே. உடல் ரீதியான மீறலுக்கும், உள்ள ரீதியான மீறலுக்கும் உள்ள வேறுபாடு பருண்மையானது. சுதந்திரம் பற்றிப் பேசும் எல்லோருமே அதைக் கவனத்தில் கொள்ளத் தவறுகிறார்கள். மனரீதியாக கனவில் தியேட்டரில் பார்த்த நடிகையுடன் சரசமாடலாம். ஆனால் அதுவே நிஜத்தில் நடந்தால் அதன் விளைவுகளே வேறு. இது ஒரு யதார்த்தம்.
சுசீந்திரன் நான் மகான் அல்லவில் இதைப் போன்றேயான ஒரு பிரச்சனையை கையாண்டிருப்பார். இதிலும் அசத்தியிருக்கிறார் மனிதர் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் அந்த க்ளைமாக்ஸ். இந்தப் படம் மட்டும் ஹன்ஸிகா மோத்வானி, சித்தார்த் போன்ற பிரபல முகங்கள் நடித்திருந்தால் பெரிதும் பேசப்படும் படமாக ஆகியிருக்கக் கூடும். பார்வையாளர்களை பெரிய அளவு சலனப்படுத்தியிருக்கவும் கூடும். தாண்டவம் ஆடிய கோரதாண்டவத்தில் பரதேசியாய் சுசீந்திரன் ஆனதால் இப்படி ரசிகர்களை பெரிதும் வசீகரிக்காத புதுமுகங்களை காதல் செய்வீர் என்றிருக்கிறார் சுசீந்திரன். இந்தப் படத்தை பிள்ளைகள்
ஓடவைக்க வாய்ப்பில்லை. பெற்றவர்களே! நீங்கள் ஓடவையுங்களேன்.
இளசுகளே! ஆதலால் இது போன்ற காதல் செய்யாதீர்.

Tuesday, August 27, 2013

தலைவா.. தலைவலியே வா!

இந்தா வர்றேன். அந்தா வர்றேன் என்று 15 நாட்களாய் இழுத்தடித்த தலைவா தியேட்டருக்கு ஒரு வழியாய் வந்தே விட்டது. இதே கேப்பில் இது தியேட்டரை விட்டு ஓடவும் கூடும் என்கிற சந்தேகம் வரத்தான் செய்கிறது. பாரிவேந்தர் கல்லூரி மாணவர்கள் இயக்கம் விடுத்த வெடிகுண்டு மிரட்டல்(? அதெப்படிங்க எந்த தீவிரவாதிகள் குண்டு வைக்கிறோம்னு சொன்னாலும் அவங்களையே போய் விரட்டிப் பிடிச்சுடுற காவல்துறைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவங்களை மட்டும் கண்டுபிடிக்கவே முடியலையாம்..). உடனே தியேட்டர் அதிபர்கள் கதிகலங்கி படத்தை போடமாட்டோம்னு மிரட்டல். உடனே அம்மாவிடம் விரட்டல். அம்மா கொடநாட்டில் அலட்டல். விஜய் அன் கோ உண்ணாவிரத அரட்டல்.  என்று பத்திரிக்கைகள் பூராவும் சந்தி சிரித்துப் போனது விஜய்யின் தலைவா பட விவகாரம். அது உங்களுக்கு நன்றாகத் தெரியுமென்பதால் விமர்சனத்துக்குப் போவோம்.

தலைவா விஜய் ப்ளாஷ்பேக்கில் சிறு குழந்தையாய் பம்பாய் தாராவி பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஓட்டப்பட்டவர். கமல் ப்ளாஷ்பேக் இல்லாமல் தூத்துக்குடியிலிருந்து பம்பாய்க்கு ஓடிவந்தவர். விஜய்யின் அப்பா சத்யராஜ் வெள்ளைச் சால்வையை போர்த்தியபடி தாராவி மக்களுக்கு நல்லதெல்லாம் செய்து தீய ரவுடிகளிடமிருந்து அம்மக்களைக் காப்பாற்றுகிறார். விஜய்யோ நாசரின் பாதுகாப்பில் வாட்டர் கேன் சப்ளை செய்யும் கம்பெனி நடத்தியபடி சைடில் நடனமாடிக் களிக்கிறார். அமலாபாலுடன் ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறும் சுரேஷ் ஹோட்டல் ஆரம்பிக்க அங்கே விஜய் வாட்டர் சப்ளை செய்யப் போக காதல் சப்ளையாகி விட அமலா பால் விஜய்யுடன் காதல் நடனமாட ஆரம்பிக்கிறார்.

இந்தியாவுக்கே வந்திராத விஜய் காதல் விஷயமாக அப்பாவை திடீரென்று பார்க்க கிளம்பி பம்பாய் வந்திறங்க அப்பா நாயகன் வேலுநாயக்கனின் பார்ட் 2வாக நிற்பதைப் பார்த்து ஆடிப்போகிறார். வேலுநாயக்கனுக்கு ஒரு செல்வா போல 'அண்ணா' (திராவிட இயக்கங்களின் தலைவர் பெயரை ஒரு ரவுடி தாதாவுக்கு வைக்க ரொம்பத்தான் தில் வேணுங்கோ டைரக்டர் விஜய் சார்)வுக்கு ஒரு ரங்கா நம் பொன்வண்ணன். அண்ணாவுக்கு ஒரு எதிரி. பழைய பகையின் மகன். அண்ணாவை அவன் போட்டுத் தள்ள. அவ்விடத்திற்கு தேவர் மகனாக வந்து விடுகிறார் விஜய். தாராவி மக்களெல்லாம் இனி அடுத்த பெரிய தேவர் இனி நீ தான் நம் தலைவா என்று உடனே கொண்டாடி விடுகிறார்கள். 'அந்தி மழை மேகம்' டைப் பாட்டு.. டான்ஸ்..நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவுமே தப்பில்லை டயலாக் மாதிரி.. 'கத்தியெடுத்தா அது உன்னை காக்கும் மற்றும் கொல்லும் ஆனா கீழ போடமுடியாது' என்று டயலாக்  கூட உண்டு. அப்புறம் தளபதி விஜய் தலைவா விஜய்யாக மாறி ஸ்டைலாக நாலு பேர் பின்புறம் கூட நடக்க நடந்து வந்து வில்லனை எப்படிச் சாய்க்கிறார் என்பது மீதிக் கழுதை.. சாரி கதை.
 
இயக்குனர் விஜய் பல படங்களைக் காப்பியடிப்பதில் வித்தகர் என்பது அவரது மதராஸப் பட்டினம், தெய்வத் திருமகள் போன்ற படங்களிலிருந்து குவார்ட்டரடித்தால் ஏறும் மப்புபோல தெளிவானது. அதே வித்தையை இங்கேயும் செய்திருக்கிறார் அவர். ஆனால் 50 கோடி செலவு செய்து நாயகனையும், தேவர் மகனையும் சேர்த்து சாண்ட்விச் செய்து காட்டினால் யாருக்குங்கோ பிடிக்கும்னு அவர் கொஞ்சமாச்சும் யோசிச்சிருக்கலாம். ஒரு வேளை அந்தப் படமெல்லாம் வந்து ரொம்ப வருஷமாச்சேன்னு நெனச்சிட்டாரோ என்னமோ. போகட்டும் அப்படியே செய்திருந்தாலும் அதை இப்படி ஓவராக பில்டப் கொடுத்து 'தலைவா' என்று பெயர் வைத்திருக்கலாமா? போக்கிரி - பார்ட் 2 என்று பெயர் வைத்திருந்தால் கூட  விஜய்யின் வாங்கன்னா வணக்கம்னா பாட்டு, முற்பாதியில் ஒரு ஆட்டம், ஒரு டூயட், நாலு பைட் சீக்வன்ஸ் என்று படம் ஏதோ ஒரு வழக்கமான விஜய் பட வரம்புக்குள் நின்றிருக்கும்.

படத்தின் டயலாக்குகளும், காட்சிகளும் அபத்தமோ அபத்தம். பத்துப் பேரை வெட்டிச் சாய்க்கும் ஒரு நாளில் விஜய் தலைவாவாகிறார். தலைவனாக வேண்டுமென்றால் பத்துப் பேரை வெட்டிச் சாய் என்று அர்த்தம் போலும்? அவர் சட்டத்தை மதிப்பதில்லை, அறவழியில் போராடுவதில்லை. பழிக்குப் பழி தீர்க்கிறார். கட்சி ஆரம்பிக்கவில்லை. கொள்கைகள் என்று எதுவுமில்லை. சமூகத்தை என்ன செய்து திருத்துவது என்று ஒரு இழவு கூட யோசித்ததில்லை. இப்போதிருக்கும் நாட்டுப் பிரச்சனைகள் எதைப் பற்றியும் மறந்து கூட கருத்துச் சொல்வதில்லை. ஆனால் 'தலைவா'வாக ஆகவேண்டும் என்று ஆசை மட்டும் இருக்கிறது விஜய்க்கு.

சந்தானம் பாவம் என்ன செய்வார். அவர் கடமையை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் சிரிப்புத் தான் வரவில்லை தலைவா. ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என்று எதுவுமே எடுபட மறுக்கிறது. இசை ஜீ.வி.பிரகாஷ்குமார். இரண்டு பாட்டுக்களை தேற்றுகிறார். தளபதி தளபதி என்கிற பாடல் படத்தின் அபத்தத்தின் உச்சகட்ட வெளிப்பாடு.

விஜய்யை வளர்த்துவிட்டவர் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்பார்கள். விஜய்யின் எதிர்காலத்தை இருட்டாக்கப் போகிறவரும் அவராகவே இருக்கலாம். தேவையில்லாமல் கட்சி, காங்கிரஸ், திமுக என்று சுற்றி, ரசிகர்களை ஆதரவாளர்கள் என கற்பனை செய்யவைத்து, 'நாங்க சப்போர்ட் பண்ணி தான் போன தடவை எலெக்ஷன்ல இந்தம்மா ஜெயிச்சாங்கன்னு' ஏடாகூடமா உளறி என்று ஏகத்துக்கு பண்ணியிருக்கிறார். ஜாக்கிரதைங்கண்ணா. 
Actor Vijay Politics Jayalalitha Admk
தலைவலியே வா என்று வருந்தி அழைத்துக் கொண்டதுதான் தலைவா என இப்போது நன்கு புரிந்திருக்கும் விஜய்க்கு. தலைவாவா தலைவியா என்கிற இந்தப் போட்டியில் தலைவி அம்மா இப்படி ஒரு சுமாரான படத்தையே போட்டு இப்படி வறுத்தெடுத்து தன்னுடைய பவரை காட்டிக் கொள்ளவேண்டிய அளவுக்கு சிறுபிள்ளைத் தனமாகத் தான் இருக்கிறார் என்பது அவரால் ஆளப்படும் மக்களாகிய நாம் வருத்துத்துடன் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம்.

சராசரி விஜய் ரசிகர்களாய்ச் செல்பவர்களுக்கும், இந்த தலைவா பாலிடிக்ஸ் எதுவும் தெரியாமலே அப்பாவியாய்ப் படம் பார்க்கச் செல்லும் குடும்பஸ்தர்களுக்கும், குடும்பஸ்த்ரீக்களுக்கும் இந்தப் படம் வழக்கமான ஒரு விஜய்யின் மாசாலாப் படம் தான். ஆனால் மற்ற யாருக்கும் தலைவாவைப் பிடிக்கக் காரணம் பெரிதாய் எதுவுமில்லை. எனவே தலைவாவின் கெத்து எடுபடுமா ?  சந்தேகம் தான்.

Tuesday, August 6, 2013

ராஜீவ்காந்தியை தாக்கியதற்காக வருத்தப்படவில்லை - விஜிதாமுனி டி சில்வா(vijithamuni de silva)

இலங்கையில் தமிழர்களும் மனுசங்கதான் அவங்களுக்கு ஏதாவது குடுங்க என்கிற அளவில் ஏதோ போனாப்போகுது என்கிற சில உரிமைகளை மட்டும் தரும்விதமாக, முக்கியமாக  நிலத்தின் மீதான உரிமைகள், பாதுகாப்பு, வரி வசூலிப்பு போன்ற அரசின் தன்னாட்சியை உறுதிப்படுத்தும் உரிமைகள் எதையும் ஜாக்கிரதையாகத் தமிழர்களுக்குத் தராமல் நைசாக போடப்பட்டது தான் அரசியல் சட்டப்பிரிவு 13வது திருத்தம். அதற்குப் போடப்பட்டது தான் ராஜீவ்-ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தம்.

இப்படி ஒரு மேம்போக்கான ஒப்பந்தத்தை போட்டதற்கே காங்கிரஸ்காரர்கள் ராஜீவ் காந்தியை ஈழத் தமிழரின் விடிவெள்ளி என்று இன்னும் கூத்தாடுகிறார்கள். இந்திய காங்கிரஸ் அரசு கூட இன்னும் அதையே தான் பாவம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா அமெரிக்காவும் இலங்கையும் திரிகோணமலையை அமெரிக்காவுக்குத் தருவது சம்பந்தமாக பேசுவதை சகிக்க முடியாமல் இலங்கையை 'என்னை மீறி யாருடன் நெருக்கம் வைத்தாலும் ஜாக்கிரதை' என்று அப்போது வலியுறுத்த செய்தது தான் ராஜீவ்காந்தி திடீரென்று இலங்கைக்குள் அத்துமீறி இந்திய ஹெலிகாப்டர்களை பறக்கவைத்து சும்மா உணவு போட்ட சம்பவம்.

இவ்வாறான ராஜீவின் மிரட்டலைக் கண்டதும், எப்போதும் தங்களை ஆக்கிரமிப்பவராக இந்தியாவைப் பார்க்கும் சிங்களர்கள், ராஜதந்திரமாக இந்தியாவை வைத்தே தமிழர்களை அழிக்க திட்டத்தை மாற்றிக் கொண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்துக்கு இசைந்தனர். ராஜீவ்காந்தியின் நெருக்குதலால் போடப்பட்ட இந்த அம்சங்களில் பலவற்றை சிங்களர்கள் வெறுத்தனர். இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கையை பல் மத, பல்லின நாடு என்று விவரித்ததை சிங்களர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை சிங்கள நாடு மட்டுமே என்பது அவர்கள் வாதம். மேலும் அது தமிழர் வசிக்கும் பகுதிகளை வடக்கு, கிழக்கு தமிழ் மாகாணங்களாக அங்கீகரித்ததுடன் அவற்றை இணைப்பது பற்றியும் விவரித்தது. தமிழர்களை மைனாரிட்டி இனமாகக் கருதும் சிங்களர்களுக்கு இவ்வாறு தமிழ் மாகணங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது மிகப் பெரிய தவறாகத் தோன்றியது. 

இவ்வொப்பந்தத்தின் 13வது சட்டத்திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பையே மாற்றம் செய்யக் கூடியதாக அமைந்தது. அதன் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவல் சாத்தியப்படலாம் என்கிற நிலை எழுந்தது. இத்தனைக்கும் 13வது சட்டத்திருத்தம் வரிவசூலித்தல், போலீஸ் துறை, நிலத்தின் மீது உரிமை போன்ற அதிகார உரிமைகளை தமிழருக்குப் பெற்றுத் தரவில்லை. சுயநிர்ணய உரிமைகளைப் பற்றி பேச்சே இல்லை (ஒரு இன மக்கள் ஒரு அரசால் மரியாதையாக நடத்தப்படாத பட்சத்தில் அந்த அரசைவிட்டுப் பிரிந்து தனியாகப் போகும் உரிமையே சுயநிர்ணய உரிமை).
இப்படிப்பட்ட ஒரு டுபாக்கூர் ஒப்பந்தத்தை போட்டபோது இலங்கையின் அரசியல் சாணக்கியத்தனம் வேலை செய்தது. அவர்கள் சரி அதை நிறைவேற்ற இந்தியாவே அமைதிப் படை கொண்டு வந்து ஆயுதங்களை போராளிகளிடமிருந்து வாங்கி அமைதியை நிலைநாட்டட்டும் என்றுவிட்டனர். விடுதலைப் புலிகள் போன்ற சில உண்மையான போராட்டக் குழுக்கள் தவிர மற்ற எல்லாப் போராட்டக்குழுக்களையும் இந்திய அரசு உருவாக்கி மறைமுகமாக வளர்த்து வந்திருக்கிறது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.  எனவே இப்போது தான் கொடுத்த ஆயுதங்களை தானே வாங்கிப் போடவேண்டும் என்கிற நிலை இந்தியாவுக்கு. இதை பெரும்பாலான தமிழர் விடுதலை இயக்கங்கள் எதிர்த்தன. விடுதலைப் புலிகளும் கூட எதிர்த்தனர். சிங்களர்களோ கடுமையாக எதிர்த்தனர். இந்தியாவின் ஆதிக்க மனோபாவம் என்கிற வெறுப்பு சிங்களர் மத்தியில் மேலும் கிளர்ந்தது. சிங்கள அரசு ரகசியமாக தமிழர் விடுதலை இயக்கத்தினருக்கு ஆயுதங்கள் கொடுத்து ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளவும், இந்தியப் படையுடன் சண்டையிடவும் தூண்டிவிட்டது. விடுதலைப் புலிகளை தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்ட இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளுடன் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டது. சிங்களர்கள் நைசாக ஒதுங்கிக் கொண்டனர். இந்திய ராணுவம் ஒழுங்கு நடத்தையில் உலகில் மிக மோசமான ராணுவங்களில் ஒன்றாகும். அமைதிக்கு அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தின் சீக்கியப் பிரிவுப் படையினர் தமிழர்களைக் கொன்று, சித்திரவதை செய்து, தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்பு இந்திய ராணுவம் விடுதலைப் புலிகளிடம் அடிவாங்கி ஓடிவந்தது தனிக்கதை.

இப்படி போதுமான அதிகாரம் வழங்க முயலாததால் ஈழத்தமிழருக்கும், இந்தியா நம்மை நிர்ப்பந்திக்கிறது என்று சிங்களவர்களுக்கும் இவ்வொப்பந்தத்தின் மீதான, இந்தியாவின் மீதான வெறுப்பு இருந்தது. இந்நிலையில் தான் இதைக் கையெழுத்திட்டு இந்தியா திரும்ப இருந்த ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இலங்கை ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கிளம்ப இருந்த போது முன் வரிசையில் நின்று கொண்டிருந்த விஜிதாமுனி டி சில்வா என்கிற சிங்கள கடற்படை வீரன் தான் பிடித்திருந்த துப்பாக்கியைத் திருப்பிப் பிடித்து ராஜீவ் காந்தியின் தலையைச் சேர்த்து ஓங்கி அடித்தான். ராஜீவ் காந்தி அதைக் கவனிக்காமல் இருந்திருந்தால் அங்கேயே மூளை தெறித்து இறந்திருப்பார். ஆனால் சுதாரித்துக் கொண்ட ராஜீவ் தலை குனிந்து அந்தத் தாக்குதலில் இருந்து தப்பித்தார். அடி அவர் தோள் மேல் விழுந்தது. அவர் இறந்திருந்தால் இந்நேரம் இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டு இருபது வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும்.
அவனை இலங்கை ராணுவ கோர்ட் விசாரித்தது. அவனது செய்கையை கொலை முயற்சியாகக் கருதாமல் தாக்குதல் முயற்சியாக மட்டுமே கருதி சாதாரணமாக விசாரித்து ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதில் 21/2 வருடங்களிலேயே சிறையை விட்டு வந்த விஜிதாமுனி டிசில்வா இலங்கை ஒப்பந்த எதிர்ப்புக் குழுவில் முக்கிய தலைவராக இருந்து வருகிறான். இலங்கையில் இசைத்தட்டு சி.டிக்கள் விற்கும் கடையொன்றை நடத்தி வரும் இவனிடம் சமீபத்தில் பேட்டி காணப்ப்ட்டது.

அப்போது பேட்டியில் அவன் கூறிய சில விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை: "ராஜீவ் காந்தி ஒப்பந்த்தில் கையெழுத்திட இலங்கையை நிர்ப்பந்தப்படுத்தியதை தடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அவரை தாக்கினேன். அவரைக் கொல்லவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் தாக்கினேன். ஏனென்றால் இலங்கையை சிதைக்கும் எண்ணம் கொண்டவர் ராஜீவ். என்னுடைய இந்தச் செயலுக்காக இப்போதும் நான் சந்தோஷப்படுகிறேன். தாக்குதலுக்குப் பின் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் நான் செய்ததற்காக வருத்தப்படவேயில்லை. தான் தாக்கப்படலாம் என்று ஊகித்திருந்தார் ராஜீவ். இதற்காகவே தன்னுடன் பாதுகாவலரையும் அணிவகுப்பில் அழைத்து வந்திருந்தார். ஆனாலும் நான் தாக்கியது குறி தவறிவிட்டது." .. இவ்வளவையும் நஞ்சாகக் கக்கிவிட்டுப் பேசும் விஜிதாமுனி டிசில்வா 'நான் எப்போதும் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. நான் நிறைய சி.டிக்கள் இந்தியர்களுக்குத் தான் விற்றுள்ளேன். எனக்குப் பிடித்தவை இந்தியப் பாடல்கள் தான்' என்றும் கூறிக் கொள்கிறான்.

இவ்வளவுக்குப் பின்னும் இந்திய பூகோளவியல், வரலாற்று ஆய்வாளர்கள் காலையில் எழுந்து இந்து பேப்பர் படிக்கிறார்கள்.  இந்தியாவுக்கு என்ன பிரச்சனை ? ஒன்றுமேயில்லை என்று பேசிக்கொள்கிறார்கள். சிங்களன் இந்திய மீனவர்களை, தமிழ் மீனவர்களை அடித்தால் ஒற்றை வரியில் கண்டனக் கடிதங்கள் மட்டுமே வாசிக்கிறார்கள். அமெரிக்கா கிட்டே வந்தால் உறுமிய இ்தியா இன்று சீனாவும் இலங்கையும் பிண்ணிப் பிணைந்து நட்பாகிவிட்டாலும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ராஜீவ் காந்தியை விஜிதாமுனி துப்பாக்கியின் வலுவான பின்பக்கத்தால் அடித்த அடி மிகப் பலமானது. உயிரையும் கொல்லக்கூடிய அளவு வலுவானது. அன்று அவன் அடித்த அடியில் அவர் செத்திருந்தால் இன்னேரம் ஈழத்தில் தமிழர்கொடியும் சேர்ந்து பறந்திருக்கும். ஆனால் இப்போதோ இலங்கையை இன்னும் இந்தியா நயவஞ்சகமாக ஆதரிப்பது இந்திய உயர்சாதி ஆளும் வர்க்கம் சிங்களர்கள் நம் இனம் தானோ என்று நம்புவதைப் போலவே இருக்கிறது. தமிழர்கள் அன்னியர்கள் என்கிற பார்வையில் சும்மா பேச்சுக்கு கண்டிப்பது போல் கண்டிப்பதாகவே இந்தியாவின் நடவடிக்கைகள் இருக்கிறது. இவ்வளவு பெரிய நாடான இந்தியாவிடம் இவ்வளவு வருடங்களாக அசால்ட்டாக மிரட்டி, நயந்து பேசி, உள்ளுக்குள்ளேயே அடித்துக் கொள்ள வைத்து இப்படி எல்லா ராஜதந்திரங்களும் செய்து  இன்றைக்கு அமெரிக்கா, சீனா, இந்தியா மூவரிடமும் எல்லாவித உதவிகளையும் பெற்று ஜாலியாக ஐ.நா. சபையில் காலாட்டிக் கொண்டிருக்கிறது.  விஜிதாமுனி டி சில்வா நல்லவன் தான் போலிருக்கிறது. உள்நாட்டிலேயே நமக்கு இருக்கும் போன்மோகன்களையும், போனியாக்களையும், போகுல் பூந்திகளையும் நாம் என்ன செய்து தாண்டி வரப் போகிறோம்.. ?

Monday, July 29, 2013

கோத்ராவில் அடிபட்டு இறந்த நாய்க்குட்டிகள்


ஏற்கனவே சுமார் பத்தாண்டுகள் போன்மோகன் சிங்கை வைத்து இந்தியாவை நன்றாக வெளிநாடுகளுக்குத் திறந்து விட்டு விட்டாயிற்று.. இங்கிருக்கும் மிடில் கிளாஸ் மக்கள் முதல் கீழ்த்தட்டு மக்களை இன்னும் நடுரோட்டிற்குத் தள்ளிவிட்டாயிற்று.. இப்போது போங்கிரஸ் மேல் மக்களுக்கு நம்பிக்கையே சுத்தமாகப் போய்விட்டிருக்கிறது.. போனியா, ராகுகால பூந்தி,  த்ரியங்கா போன்ற முகங்கள் ஸ்டார் கதா பாத்திரங்களாகவே இருந்தாலும் போங்கிரஸின் கதை போணியாகாது என்று ஒரு சம்சயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது அம்பானி, பிர்லா முதலான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மாற்றுக் கடவுளாகத் தெரிந்துகொண்டிருப்பவர் நம்ம பரேந்திர மூடி. போன் மோகன் சிங்குக்கு மவுசு போய்விட்டதால் அடுத்து புதிதாக ஹீரோவாக அறிமுகமாகிறார் இவர். எல்லாம் எதுக்கு ?அடுத்து இவரை பிரதமராக்கவும் செய்யலாம் ஒருவேளை வாய்ப்பிருந்தால்.. அடுத்த பத்து வருஷத்துக்கு மிச்சமிருக்கும் இந்தியாவின் கோவணத்தையும் அவுத்து அவுங்க கையில் கொடுக்க அடுத்த ஆள் ரெடி. இவரை சுமார் ஒரு இரண்டு வருடங்களாகவே குஜராத்தை சொர்க்கபுரியாக மாற்றிவிட்டார். அங்கு இருக்கும் விவசாயிகளெல்லாம் தங்கத் தட்டில் தான் சாப்பிடுகிறார்கள். வெள்ளித் தம்ளரில் தான் பால் குடிக்கிறார்கள் என்று சொல்லாத குறையாக விளம்பரங்கள் செய்துவருகிறார்கள்.

சாம்பிளுக்கு சில. உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கின் போது அதில் சிக்கிக் கொண்ட தனது குஜராத் மாநிலத்தவர்கள் 7500 பேரை நரேந்திர மோடி எப்படி காப்பாற்றினார் என்று நம்ம அம்மா அங்கு சிக்கிய நூறு தமிழர்களை எப்படி 'வீரசாகசம் புரிந்து' காப்பாற்றினார் என்று செயா டி.வி. விளம்பரப்படுத்துகிறதோ அதே போல பல மடங்கு திறமையாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். ஒரு கார்ட்டூன் படம் அதில் மோடி ஒரு சோட்டா பீம் போல நிற்கிறார். அவரது ஒரு கையில் 7500 பேர் இன்னொரு கையில் இன்னொரு 7500 பேர். அவர்களை அப்படியே அனுமார் போலப் பறந்து அவர்களைத் தூக்கி வந்து குஜராத்தில் இறக்கி விடுகிறார்.

இது மட்டுமல்ல. சீனாவின் பேருந்து நிலையம் ஒன்றின் புகைப்படத்தை எடுத்துப் போட்டுவிட்டு பேஸ்புக்கிலும், ஈமெயிலிலும் 'இங்கே பாருங்கள் அகமதாபாத் பேருந்து நிலையத்தை. மோடி எப்படி  மாற்றிவிட்டார்  பாருங்கள்' என்று ஃபார்வர்டுகள் செய்துவிட்டார்கள். இது போல மோடி குஜராத்தின் எல்லா கடன்களையும் அடைத்துவிட்டதோடு மேலும் வேர்ல்டு பேங்க்கில் கொஞ்சம் ஃபிக்ஸ்ட் டெபாஸிட்டும் போட்டுவைத்திருக்கிறார் என்று ஒரு கதை.  எல்லா கிராமத்துக்கும் கரண்ட் குடுத்தார். குழந்தைகள் மரணத்தை குறைத்தார். பெண்குழந்தைக் கொலையைத் தடுத்தார். மதிய உணவு கொடுத்தார்..  இப்படி எல்லாம் சொல்வார்கள். இவை எல்லாவற்றிற்கும் யோஜனா என்கிற பெயரில் எல்லா முதலமைச்சர்கள் போலவே அவரும் மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்திருக்கிறார் என்பதுதான் உண்மை. ஆனால் அதுக்குள்ளேயே எல்லாம் செய்து முடித்துவிட்டதாக பில்ட் அப். (நம்ம அம்மா ஆரம்பிக்கும் அதிரடி திட்டங்கள் முன்னால் இதெல்லாம் ஜூஜூபி). இவரை இப்படி விளம்பரப்படுத்தி 'மோடி பிராண்ட்'ஐ விற்கவென்றே 'ஆப்கோ வேர்ல்ட்வைட்' என்கிற அமெரிக்க விளம்பரக் கம்பெனியை வேறு மாதம் 12லட்ச ரூபாய் பணம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார் நம்ம மோடி.

இத்தகைய விளம்பரங்கள் அவருக்கு ஏன் தேவைப்படுகின்றன? 2002ல் நடந்த குஜராத் கலவரங்கள், சோராபுதீன் என்கவுண்டர் வழக்கு போன்ற விஷயங்களில் அவரின் இந்துத்துவ நச்சுப் பல்லின் விஷத்தால் இறந்து போன முஸ்லீம்கள் பல்லாயிரம், வீடிழந்தவர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேல். அவர் குஜராத்தில் பண்ணிய ரத்தக் களரிக்கு தமிழ்நாட்டில் கூட அவர் வந்தால் பயந்து மிரள்கிறார்கள். அவரை எப்படி அடுத்த பிரதமராக்குவது ? அவரைப் பற்றி தெரிந்த எல்லோருக்கும் அவருடைய இந்துத்துவ வெறியும், ரத்தம் குடித்த கோரப்பற்களும் தான் தெரிகிறது இல்லையா ? அதை மறக்கடிக்கத் தான் இந்த விளம்பரங்கள்.


இவர் பிரதமராவதில் யாருக்கு என்ன லாபம் ?  இதற்குப் பதில் தெரிய மீண்டும் முதல் பாராவைப் படியுங்கள்.

குஜராத் கலவரத்தின் போது குல்பர்கா சொஸைட்டி என்கிற முஸ்லீம்கள் பகுதியில் வசித்து வந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான ஈஷான் ஜாப்ரியின் வீட்டில் அண்டை வீடுகளைச் சேர்ந்த சுமார் 150 முஸ்லீம்கள் அடைக்கலம் புகுந்து கொண்டனர். அவர் வீட்டைச் சூழ்ந்து கொண்ட இந்துத்துவா பயங்கரவாதிகள் அவரை வீட்டை விட்டு வெளியே வரச்சொல்லி மிரட்டியுள்ளனர். இல்லாவிட்டால் வீட்டுக்குள் கொளுத்தப்பட்ட சமையல் சிலிண்டர் வந்து விழும் என்று எச்சரித்தனர். முன்னாள் காங்கிரஸ் எம்பியாதலால் ஜாப்ரி தனது வீட்டு போனில் இருந்து நகரின் போலீஸ் கமிஷனர், பிஜேபி அமைச்சர்கள் என்று பலரையும் தொடர்பு கொண்டு உடனே வந்து கலவரக்காரர்களை விரட்டி விட்டு தங்களைக் காப்பாற்றும் படி கேட்டிருக்கிறார்.  மோடியின் ஆபீஸூக்கும் போன் செய்திருக்கிறார். ஆனால் யாரும் எடுக்கவில்லை (நான் இல்லன்னு சொல்லிடு - மணிரத்னத்தின் தளபதி பட டயலாக் ).  வேறு வழியின்றி தான் வெளியே வந்தால் வீட்டில் இருக்கும் யாரையும் எதுவும் செய்து விடவேண்டாம் என்று கேட்டபடி வீட்டிற்கு வெளியே சென்றார் ஜாப்ரி. அவருடைய உடல் இன்று வரை கிடைக்கவேயில்லை.

இதை மறக்கடிக்கத் தான் இந்த விளம்பரங்கள்.
  அப்போது வீராவேசமாகப் பேசிய மோடி இப்போதுபிரதம வேட்பாளராகப் போவதால் பம்மி பம்மி பேசுகிறார். இப்படிப் பம்மலாக அமுக்கிப் பேசியும் இப்போது நரேந்திர மோடிக்கு வந்திருப்பது புதுப் பிரச்சனை.  ஒரு பேட்டியின் போது 'கோத்ரா கலவரம் குறித்து வருத்தப்படுகிறீர்களா?' என்று கேட்கப்பட்டது. "அது மிக மோசமானதொரு நிகழ்வு. என் ஆட்சியில் இது நடந்தது என்பதற்காக நான் மிகவும் வெட்கித் தலைகுனிகிறேன். அதில் வாழ்விழந்த மக்களின் வாழ்வை மீட்டுத்தருவதையே என் லட்சியமாகக் கொண்டிருக்கிறேன்." இப்படியெல்லாம் அவர் பேசியிருப்பார் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. அவர் என்ன சொன்னார் தெரியுமா ? "நாம் காரில் பயணம் செய்யும் போது அந்தக் காரில் ஒரு நாய்க்குட்டி அடிபட்டால் வருத்தப்படமாட்டோமா" என்று பேசியிருக்கிறார்.

இப்படி இறந்து போன மக்களை ஒரு நாய்க்குட்டியோடு ஒப்பிட்டுப் பேசியதற்காக அவர் மீது பாட்னா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மோடி மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளாராம். இவர் உண்மையிலேயே மோடியின் இந்து மத வெறி முகத்தை வெளிக்கொண்டு வர இதைச் செய்தாரா இல்லை இதுவும் 'ஆப்கோ வேர்ல்ட்வைட்'ன் மோடி பிராண்ட்  விளம்பர யுத்திகளில் ஒன்றா ? அந்த குஜராத்தியம்மனுக்கே வெளிச்சம்.

Saturday, July 6, 2013

ஓநாய்களும் இரு ஆட்டுக்குட்டிகளும்...சாதிகள் ஒழிவதில்லை.

பா.ம.க கட்சியின் நிறுவனரான ராமதாஸ் 80களில் செய்த சாதி அரசியல் அப்போது மிகப் பிரபலமானது. தனது வன்னியசாதி இனமக்களுக்கு அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தில் வன்னிய இன மக்கள் பெரும்வாரியாக சேர்ந்து குதித்து நடுரோட்டில் பெரிய மரங்களை வெட்டிப் போட்டு தமிழ்நாட்டையே சில வாரங்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். அப்படி தமிழகத்தையே உலுக்கியதில் அந்தச் சாதியினருக்கு கர்வம் கூட இருந்தது (நாங்க யாரு தெரயும்ல..).

அப்போது சாதியவெறி பற்றிய விழிப்புணர்வும் அது தவறு என்கிற மனப்பான்மையும் பெரிதும் மக்களிடம் வளர்ந்துவிடவில்லைதான். ஏனெனில் அது ஊடகங்கள் வளர்ந்திராத காலம். அன்று மக்களின் உணர்வுகளை மாற்றும் வலிய ஊடகம், அதுவும் ஒன்றே ஒன்றுதான். அது தூர்தர்ஷன் மட்டுமே.

ஆனால் 30 வருடங்களுக்குப் பின் இன்றைய நவீன செல்போன்கள் மற்றும் தொலைதொடர்பு யுகத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 200 டி.வி. சேனல்கள் இருக்கின்றன. குடும்பத் தொலைக்காட்சிகள், கட்சி தொலைக்காட்சிகள், மதத் தொலைக்காட்சிகள் என்று விஷயங்கள் 200 மடங்கு அதிகமாக மக்களைச் சென்று அடைகின்றன.

மக்கள் மாறியிருக்கிறார்களா? ஆம் மாறியிருக்கிறார்கள். சாதியின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கிறது. பொருளாதார ஏற்றம் சாதியை மழுங்கடிக்கச் செய்யும் சக்தியை பெற்றிருப்பதால் சாதியை பொருட்படுத்தாமலிருக்க பழகியிருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றங்களோடு சேர்ந்து சாதிய வெறித்தனமும் அதன் வடிவத்தைக் கூர்மையாக்கியிருக்கிறது.

தர்மபுரியில் அது அடையாளமாக வெடித்துக் கிளம்பி இன்று பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. கடைசியாக காவு வாங்கப்பட்டது இளவரசன். நத்தம் காலனிப் பகுதியில் வன்னியசாதியைச் சேர்ந்த திவ்யாவும் தலித்சாதியைச் சேர்ந்த இளவரசனும் காதலித்து ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். திவ்யாவின் தந்தை போலீசில் பெண்ணை மீட்டுத் தரும்படி புகார் செய்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து பா.ம.க கட்சி அரசியல் நிலையில் பலமிழந்து போனதாலும், கட்சி வன்னியருக்கு என்ன செய்து கிழித்துவிட்டது என்று பெரும்பாலான வன்னியர்கள் எண்ணிப் பார்த்து 'போங்கடா போய் புள்ளக் குட்டிகள படிக்க வைங்கடா.. வெட்டியா இவனுங்க பின்னாடி சுத்திக்கிட்டு அலையாம' என்று போய்விட்டதாலும் கட்சிக்கு வரும்படி குறைந்து விட்டது. தனது பலத்தை மீண்டும் நிலைநிறுத்த தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்தார் பா.ம.க ராமதாஸ்.

'ஜீன்ஸ் பேன்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு எங்கள் பெண்களை மயக்கி காதல் திருமணம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடம் புகட்டுவோம்' என்பது போன்ற புரட்சி வசனங்களை ராமதாஸூம் அவரது அடிபொடி 'குரு'க்களும் சேர்த்துப் பேச ஆரம்பித்தனர். கீழே உள்ளது மருத்துவர் ஐயாவின் பொழிப்புரையிலிருந்து ஒரு சேம்பிள்..

இந்நிலையில்தான் இளவரசனும்-திவ்யாவும் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். இதில் இளவரசன் 17 வயதேயான மைனர். திவ்யா இளவரசனை விட மூத்த பெண். அவரது குடும்பம் நடுத்தர சராசரிக் குடும்பம். இளவரசனின் குடும்பமோ கொஞ்சம் வசதியானது. அதற்காக பெரும்பணக்காரர்கள் இல்லை. அவனது அப்பா அரசு பிணமருத்துவக் கிடங்கில் அறைக் காப்பாளராக வேலை செய்கிறார். அரசு வேலை.

இப்போது தர்மபுரியில் இருக்கும் சாதீயப் பெருந்தலைகளுக்கு நம் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு தலித் பையன் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டானே என்கிற வெறி. நேரே திவ்யாவின் அப்பாவைக் கூப்பிட்டு நாலு காய்ச்சு காய்ச்சி நீயெல்லாம் சாதிகெட்டவன் என்கிற ரீதியில் அவரை மிரட்டி, திட்டித் தீர்க்க அவர் வீட்டில் வந்து தூக்கில் தொங்கிவிட்டார்.

இதைச் சொல்லி வன்னிய சமூக மக்களிடையே வெறுப்பை ஊதியதில் தர்மபுரியில் நத்தம் காலனியில் 200 தலீத்துகளின் வீடுகள் தீக்கிரையாயின. இதையெல்லாம் தாண்டி திவ்யாவும் இளவரசனும் தங்களது திருமணத்தில் உறுதியாக நின்றார்கள்.

இந்தக் கலவரங்களுக்குக் காரணமாய் நம் மருத்துவர் ஐயா சொன்ன முத்துக்களில் சில கீழே..

"நம் வீட்டுப் பெண் பிள்ளைகளை 14 வயது பெண் குழந்தைகளை காதல் நாடகமாடி கடத்திச் சென்று கர்ப்பமாக்கி கை விட்டு விடுகிறார்கள். தருமபுரியில் நடந்தது அது தான். தருமபுரி கலவரத்தில் ஒரு உயிருக்கு சேதம் ஏற்பட்டதா? ஒரு பன்றிக் குட்டியைக் கூட கொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோட அப்பன் செத்துப் போனான். இழப்பு எங்களுக்குத்தான். காதல்-கலப்புத் திருமணம் இதையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முசுலீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் பிரச்சனையில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது. உரிமை இல்லை என்று சொல்றான். பெற்றோர் தலையிடாமல் பின் யார் தலையிடுவது? காதலுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. எங்கள் சாதி பெண்களிடம் அதை வைத்துக் கொள்ளக் கூடாது"  - மருத்துவர் ஐயா மேதகு ராமதாசு அவர்கள்.

திவ்யாவின் அம்மாவின் மூலம் போலீசுக்குப் போன பாமக தரப்பு திவ்யாவை அம்மாவிடம் திரும்பித் தர கோரியது. கோர்ட்டிற்கு அழைத்துவரப்பட்ட திவ்யா தான் விருப்பத்துடனேயே இளவரசனுடன் திருமணம் செய்து வாழ வந்ததாகக் கூறிவிட்டார். சாதிவெறியினர் முகத்தில் கரியைப் பூசிய அவரை விட்டுவிட்டு திவ்யாவின் அம்மாவை குறிவைத்தனர். திவ்யாவின் அம்மாவை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததில் கதறிக் கொண்டு திவ்யா ஓடிவந்தார்.

அம்மா செத்துப் போவாரோ என்று பயந்து போன திவ்யா இளவரசனை விட்டுவிட்டு அம்மாவிடம் திரும்பினார். இப்போது திவ்யாவுக்கு இளவரசனுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன விளைவுகள் வரும் என்று விளக்கிச் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னதில் அவர் இளவரசனுடன் இனிச் சேர்ந்து வாழமாட்டேன். அவரைப் பார்த்தால் இறந்துபோன என் தந்தை ஞாபகம் வருகிறது. என்று இருநாட்கள் முன்பு பத்திரிக்கைகளைக் கூட்டி விரிவான அறிக்கை கொடுத்துவிட்டார்.

அதைப் பத்திரிக்கையில் படித்த இளவரசன் தனது மாமாவிடம் இப்படி பத்திரிக்கையில் சொல்லியிருக்கிறாளே அவள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டுவிட்டு, தான் போலீஸ் வேலையில் சேர்வதற்கான பயிற்சிகளை எடுக்கப்போவதாயும், போலீஸ் வேலை வாங்கிய பின் திவ்யா மனம் மாறி மீண்டும் வந்துவிடுவாள், தான் அவளை வைத்துக் காப்பாற்றுவேன் என்றும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறான். பின்பு தனது தந்தையிடம் அவரது பைக்கை வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளியுள்ள ஊரிலிருக்கும் தனது நண்பன் ஒருவனைப் பார்க்கச் செல்கிறேன் என்று கிளம்பியிருக்கிறான் இளவரசன். காலையில் தருமபுரி ரயில் நிலையத்தருகே நின்று கொண்டிருந்த அவனது பைக்கைத் தொடர்ந்து சென்று பார்த்ததில் ரயில்வே பாதையோரம் மூளை சிதைந்து இறந்து கிடந்திருக்கிறான் இளவரசன்.

ரயிலில் அடிபட்டு இறந்தானா அல்லது ரயிலில் தள்ளப்பட்டு இறந்தானா அல்லது கொல்லப்பட்டு தள்ளப்ப்ட்டானா ? இளவரசன் இறந்து கிடந்ததை காலை அத்தனை நேரம் வரை அப்பகுதியைக் கடந்து சென்ற எந்த ரயில்களின் டிரைவர்களும் பார்த்து ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுக்கவில்லை. இது ஏன் என்பது ஒரு கேள்வி.

இளவரசன் இறந்ததைக் கேள்விப்பட்ட தர்மபுரி பாமக கட்சியினர் பலர் ஊர்ஊராகச் சென்று அந்தச் செய்தியை வேட்டுக்கள் வெடித்து மகிழ்ச்சி பொங்க அறிவித்தபடியே சென்றார்களாம்.

இளவரசனும் அவரது அப்பாவும் கடைசியாக இன்று மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். இம்முறை அப்பா வேலை செய்யும் பிணக்கிடங்கிலேயே பிணமாக வந்து கிடக்கிறான் மகன் இளவரசன்.

இந்தச் சாதீயப் பிரச்சனையில் தலித்துக்களுக்காக நின்று போராடும் சக்தி திருமாவளவனுக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. 15 வருடங்களுக்கு முன்பிருந்த திருமாவளவனாயிருந்தால் இந்நேரம் இளவரசனுடன் துணையாக நின்று அவனுக்குத் தோள் கொடுத்திருப்பார் திருமா. இப்போதோ கலைஞர் தாத்தாவின் செல்லப் பேரனாக அவர் தரும் பணத்தின் நிழலில் வாழ்ந்து பழகிவிட்டதால் வெறும் அறிக்கைகளோடே நின்றுவிட்டார். மற்ற கட்சிகள் இடதுசாரிகள் உட்பட இப்பிரச்சனையின் ஆழம் புரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டனர். ஜெ. அம்மாவிடம் கேட்டால் இவன் யார் மேல்சாதிப் பெண்ணை திருமணம் செய்ய ? இவனுக்கு இது வேண்டியதுதான் என்று சொன்னாலும் சொல்வார். அவருடைய எல்லைகள் பாமகவை இந்தப் பிரச்சனையை வைத்து ரவுண்ட் கட்டிவிடுவதோடு நின்றுவிடுகிறது.  இப்படி எல்லாரும் கைவிரித்து விட்ட நிலையில் அவன் கொல்லப்படுவதை தடுக்க ஆளேயில்லாமல் போய்விட்டது. இப்போது அது தற்கொலை என்று பிரச்சனையை மூடிவிடப் பார்க்கிறதாம் போலீசு.

சாதிகள் இல்லையடி பாப்பா - பாரதியார். குழந்தைகள் முதலே இந்த எண்ணம் வரவேண்டும் என்று நினைத்த அவர் ஒரு தீர்க்கதரிசி தான்.

Friday, June 7, 2013

ஸ்ரீசாந்த் அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார்?

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சமீபத்தில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா என்கிற மூன்று ராஜஸ்தான் ராயல் அணியின் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் செய்த ஸ்பாட் பிக்சிங் என்பது என்ன? இவ்வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட சில ஓவர்களில் வேண்டுமென்றே லூஸ் பால்கள் போட்டு ரன்களை எதிரணியினருக்கு அதிகப்படுத்திக் கொடுப்பார்கள். இதில் இவர்களுக்கு என்ன லாபம்?

இவர்கள் அணியினருக்கு லாபம் இல்லை. ஆனால் சூதாட்டம் நடத்தும் புக்கிகளுக்கும் அதனால் இவர்களுக்கும் லாபம். உதாரணமாக ஸ்ரீசாந்த்தின் நெருங்கிய நண்பனான ஜிஜூ ஜனார்தனன் என்பவர் 'புக்கி'(bookie) எனப்படும் சூதாட்டத் தரகராக இருந்துள்ளார். 

இவர் போட்டி நடக்கும் போது நிமிடங்களில் பல கோடிகள் பெட் வைக்கப்படும் சூதாட்டத்தை போன் மூலமே நடத்துவார். பெரும் பெரும் தலைகள் கம்பெனி முதலாளிகள் கலந்துகொள்வார்கள். உதாரணமாக ஜனார்தனன் அடுத்த ஓவரில் எதிரணியின் ஆட்டக்காரர் 14 ரன்களுக்கு மேல் எடுக்கப்போகிறார் என்று நிறைய பணம் பந்தயம் கட்டுவார். அதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கோடிகள் பெட் வைக்கப்படும்.  ஆனால் ஜிஜூவுக்கும், ஸ்ரீசாந்துக்கும் மட்டுமே தெரியும் ஸ்ரீசாந்த் வீசப்போகும் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே எளிதான பந்துகளைப் போட்டு எதிரணிக்கு 14 ரன்களுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்று.

ஸ்ரீசாந்த் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே சொதப்பலான பால்கள் போட்டு 14 ரன்னுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்பது ஜிஜூவுக்கு எப்படித் தெரியும் ? ஓன்றுமில்லை. அது ஒரு கோட் வேர்ட். ஸ்ரீசாந்த் தனது இடுப்பில் வெள்ளை நிற டவலை சொருகியிருந்தால் அந்த ஓவரில் 14 ரன்களுக்கு மேல் கொடுப்பார் என்பது ஜிஜூவுக்குத் தெரியும். எனவே அதை வைத்து அவர் உறுதியாக பெட் கட்டுவார். பல கோடிகள் லாபம் சம்பாதிப்பார்.

அந்த லாபத்தில் ஒரு பங்கு ஸ்ரீசாந்துக்கு அதாவது சுமார் 40 லட்சங்கள் ஒரு ஓவருக்கு கிடைக்கும்.

இவ்வளவு அருமையான ஒரு டெக்னிக்கை கையாண்டு பல்லாயிரம் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களான ஸ்ரீசாந்த்தும், அங்கீத் சவானும் சில கோடிகள் சம்பாதிப்பதில் என்ன பெரிதாய் தவறு நேர்ந்திருக்கிறது ? ஒன்றுமில்லை ராஜஸ்தான் ராயல்ஸூக்குப் பதில் கொல்கத்தா டேர்டெவில்ஸ் ஜெயிப்பார்கள். ரசிகர்களுக்கு அதிலென்ன பிரச்சனை? அவர்களுக்குத் தேவையான த்ரில்லான அந்த நான்கு மணி நேரம் அவர்களுக்குப் பொழுது நன்றாகப் போய்விடுகிறது. யார் தோற்றால் என்ன ? ஜெயித்தால் என்ன ?

உலக நாடுகளில் ஏற்கனவே கிளப் விளையாட்டுக்கள் என்கிற பெயரில் பெரும்பணம் சம்பாதிக்கும் விளையாட்டு நிறுவனங்களின் செயலை கமர்ஷியலாக லலித் மோடி கிரிக்கெட்டில் 50 ஓவர்களை20 ஓவர்களாக சுருக்கி ஐ.பி.எல் 20-20 என்று அறிமுகப்படுத்தினார்.

9 அணிகள் ஒரு வருடத்திற்கு 90 கிரிக்கெட் மேட்ச்சுகள். இவற்றால் விளையும் வருமானம் சில ஆயிரம் கோடிகள். இந்த லாபம், வருமானம் யாருக்குப் போகிறது ? ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்துக்கு. அதன் ஓனர்கள் அல்லது உறுப்பினர்கள் யார் ? அம்பானி, மல்லையா என்கிற வெளிப்படையான முதலாளிகள் முதல் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா போன்ற பினாமி முதலாளிகள் தான் ஐ.பி.எல்லின் உரிமையாளர்கள்.

இவர்களுடைய நோக்கம் நீதி, நேர்மை வழுவாது கிரிக்கெட் என்னும் விளையாட்டின் உன்னத தருணங்களை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கொண்டு சேர்ப்பதல்ல. மாறாக எல்லோருக்கும் ஒரு நான்கு மணி நேர முடிவு தெரிய டென்ஷனாகும் ஒரு பரபரப்பான த்ரில் சினிமாவைக் காட்டுவது. அதை சினிமாவாக இல்லாமல் லைவ்வாக கிரிக்கெட்டாக காட்டுகிறார்கள்.

நீங்களே சொல்லுங்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க ஒரு சாதாரண ரசிகருக்கு இருக்கத் தேவையான தகுதி என்ன? போர், சிக்ஸ், சிங்கிள்ஸ், அவுட், ரன் அவுட், டக் அவுட் அவ்வளவுதான். அதைத் தாண்டி கிரிக்கெட் என்கிற விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி எந்த அறிவும் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஐ.பி.எல்லில் கடைசி ஐந்து அல்லது ஆறு ஓவர்களின் முன்னேயே விளையாட்டின் முடிவு தெரிந்துவிடும்படியான போட்டிகள் எத்தனை? குறைவு. மாறாக கடைசி ஓவரில், கடைசி பாலில், கடைசி ரன்னில் பார்வையாளரின் பி.பி.யை எகிறவைக்கும் க்ளைமாக்ஸ் கொண்ட ஆட்டங்களே அதிகம். ஏன்? இது வேண்டுமென்றே செய்யப்பட்டு வருகிறது என்று ஏன் ஒருத்தரும் சி.பி.ஐயிடம் போய்க் கேட்கவில்லை?

அதனால் தான் இன்று இல்லத்தரசிகள் முதல், இரும்புப் பட்டறை வைத்திருப்பவர் வரை எல்லோரும் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸின் ஸ்கோர் கேட்கிறார்கள். 'பட்டைய கிளப்பிட்டான்' என்று சந்தோஷப்படுகிறார்கள். அல்லது 'சே..சொதப்பிட்டான் ' என்று சலித்துக் கொள்கிறார்கள். இதன் ஒரே காரணம் அந்த அணியின் பெயரில் சென்னை என்று ஒரு வார்த்தை வருவதால். அதைத் தவிர அவர்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை.

இப்படி சென்னைக்கு சம்பந்தமேயில்லாதவர்கள் நடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸூக்காக பேஸ்புக் முதல், ட்விட்டர் வரை வாய் கிழிய மார்தட்டிப் பேசுபவர்கள் பல்லாயிரம் பேர். இதே போல் தான் மற்ற அணியினருக்கும் அந்தந்த மாநிலத்தின் ரசிகர்கள் தான் ஓனர்கள் போல் நினைப்பு. ஸ்ரீசாந்த் முதல் யாரோ பெயர் தெரியாத புக்கிகளை ஏதோ கொலைக் கேஸில் பிடித்தவர்களைப் போல முக்காடு போட்டு கூட்டிச் சென்ற இதே சிபிஐ மெய்யப்பன் மற்றும் அவருடைய மாமனார் சீனிவாசனின் வீட்டு வாசலில் பவ்யத்தோடு நிற்கிறது வாலாட்டியபடியே. இதைப் பற்றியெல்லாம் நம் மக்களுக்கு என்ன கவலை?

அவர்களுக்குத் தேவை நான்கு மணி நேர பரபரப்புச் சினிமா. அடுத்த நாளில் அதைப் பற்றி ரசித்துப் பேச கிடைக்க ஓரு டாபிக். இதில் ஹஸ்ஸி, சேவாக் என்று விளாசும் ஸ்டார்களின் மீதான ரசனைகள் தனி. இன்று ஊழல் வந்த போதும் அதை ஒரு டாபிக்காக மட்டும் பேச ஒரு ஆள் வேண்டும். அது ஸ்ரீசாந்த் மற்றும் அவரது உடந்தையாளர்கள். ஸ்ரீசாந்த் பெண்கள் கூட சல்லாபம் செய்யும் பேர்வழி என்று கோரமான வில்லனாக ஸ்ரீசாந்த் ஆக்க்படுகிறார். ஏனென்றால் ஏமாற்றப்பட்டதாக உணரும் ரசிகர்களின் கோபத்துக்கு ஒரு வடிகால் வேண்டுமே அதற்காகத்தான். மாறாக நீதி கிடைக்கவேண்டுமென்று அல்ல.

2008ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல்லில் ஐந்நூறு கோடி முதல் ஆயிரம் கோடிவரை ஊழல் புரிந்தார், மேட்ச் பிக்சிங்குகள் செய்தார் லலித் மோடி என்று 2010ல் புகார் கிளம்பியது. சிபிஐ கிளம்பியது. லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவ்வளவு தான் கேஸ் போட்டு அது...நடந்..து கொண்டே இருக்கிறுது. இருக்கும் ஜெ அம்மையாரின் வழக்குகள் போல. சி.பி.ஐக்காரர்கள் அப்போது கிளம்பியவர்கள் இன்னும் வந்து சேரவில்லை போல அதற்குள் அடுத்த ஊழல் பிரச்சனை ஸ்பாட் பிக்சிங். இந்த முறை சீனிவாசன் தைரியமாக அறிவிக்கிறார் தான் பதவி விலக முடியாதென்று. யாருக்கு வரும் இந்த தில்லு? உங்களுக்கோ எனக்கோ வருமா ?

இன்று 2013. இன்று வரை அந்த ஊழல் புகார்கள் என்ன ஆனது ? இந்தப் போட்டிகளை எப்படி நிஜமான விளையாட்டுக்கள் என்று நம்புவது என்பது பற்றி எந்த முட்டாள் ரசிகனுக்கும் கவலை இல்லை. அவனது சொந்தப் பணமான 500 ரூபாயை செலவழித்து டிக்கெட் வாங்கி இந்த மோசடி மேட்ச்களை பார்க்கிறோமே என்று யாருக்கும் வருத்தமும் இல்லை. இந்த ஸ்பாட் பிக்சிங்கில் இதுவரை 17 புக்கிகளை கைது செய்துள்ளதாம் போலீஸ். புக்கிகள் என்பவர்கள் தரகர்கள் மட்டுமே. பச்சையாகச் சொன்னால் புரோக்கர். கமிஷனுக்காக வேலைகள் செய்பவர். ஆனால் உண்மையில் சூதாட்டம் ஆடுபவர்கள் பலநூறு கோடிகளை சில்லறையாக எறிபவர்களே. அவர்களில் ஒருவர் கூட சி.பி.ஐயின் காமாலைக் கண்ணில் இதுவரை பிடிபடவில்லை. இனியும் பிடிபட மாட்டார்கள் என்பதுவே நிஜம்.

இதில் பல லட்சம் பேர் நம்ம வீட்டு டி.வியில் சாயங்காலம் வீட்டுக்குப் போனால் நைட் தூங்கறவரைக்கும் விறுவிறுப்பான என்டர்டெய்ன்மன்ட். அது எப்படி இருந்தா எனக்கென்ன? என்று நினைக்கும் மனப்பாங்குள்ள எளிமையான ரசிகர்கள். அவர்களுக்கும் டாஸ்மாக்கின் வாசலில் காலை ஏழு மணிக்கே வந்து நின்று கை நடுங்க சரக்கடிக்கும் குடிகாரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. டாஸ்மாக்கோ, கடாமார்க்கோ, கள்ளச் சாராயமோ எனக்கு அந்த நேரத்துக்கு கிடைச்சாப் போதும். அவ்வளவுதான்.

இப்படி தவறுகள் ஐ.பி.எல்லை ஆரம்பித்த லலித் மோடியிலிருந்து அதன் தற்போதைய உரிமையாளர்கள், கறுப்புப் பணமுதலைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வரை எல்லோரிடமும் கொட்டிக் கிடக்கும் போது, சில பல லட்சங்களுக்காக ஸ்ரீசாந்த் மற்றும் ஒரு மூவரை மட்டும் கட்டம் கட்டி இவர்கள் தான் கிரிக்கெட்டுக்கு களங்கம் கற்பிப்பவர்கள், இவர்களை ஒழித்தால் போதும் ஐ.பி.எல் தூய்மையான கங்கை நதியாக மாறிவிடும் என்று படம் காட்டும் ஊடகங்களும் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

அது ஸ்ரீசாந்த் வெறும் ஒரு பலியாடு மட்டுமே என்பதை.
ஆனால் ஓநாய்களோ...

Saturday, May 11, 2013

விமர்சனம் : அயர்ன் மேன் 3. அமெரிக்காவின் இரும்பு மனிதன்.


சமீபத்தில் உலகெங்கும் வெளியிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது மார்வல் ஸ்டூடியோஸின் அயர்ன் மேன் 3. சூப்பர் ஹீரோ அயர்ன் மேனாக ராபர்ட் டௌனி ஜூனியர் (Robert Downey Jr) கலக்கியிருக்கும் 3ஆவது படம் இது. அயர்ன் மேன் என்பது மார்வல் காமிக்ஸ் புத்தகத்தின் ஒரு கற்பனை சூப்பர் ஹீரோ கதாபாத்திரம். கதைப்படி ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸ் என்கிற அமெரிக்க ஆயுதம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் முதலாளி மற்றும் ஆராய்ச்சியாளர் டோனி ஸ்டார்க்.

அயர்ன் மேனின் முதலாவது மற்றும் இரண்டாவது பாகங்களில் ஸ்டார்க் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அங்கிருக்கும் அமெரிக்கப் படைகளில் தனது நண்பரான கமாண்டெர் ஒருவருக்கு ஜைக்கோ ஏவுகணைகளைப் பற்றி விளக்கம் தரச் சென்றிருக்கும் போது ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அவர்களின் பிடியில் அவர்களுக்கு ஏவுகணை செய்து தரும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறான். ஆனால் அவன் ரகசியமாக ஒரு தப்பிக்கும் இரும்புக் கவசத்தை செய்ய முற்படுகிறான் ஸ்டார்க். அதுதான் அயர்ன் மேன். அதீத சக்திகளடங்கிய அந்தக் கவசத்தை அணிந்து விண்ணில் பறந்து பல சாகசங்கள் புரிந்து எதிரிகளை வீழ்த்துவான் ஸ்டார்க். யார் இந்த அயர்ன் மேன் என்று உலகமே வியக்கும் போது அது தானே என்று வெளிப்படுத்துவான் ஸ்டார்க்.

இந்த மூன்றாவது பாகத்தில் அமெரிக்காவினுள் புதியதொரு வெப்ப உயிரியல் ஆயுதம் கொண்டு வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடுக்கும் மண்டாரின் எனப்படும் இஸ்லாமியத் தீவிரவாதியின் தொல்லைக்கு பதிலடி கொடுக்க விளைகிறான் ஸ்டார்க். ஆனால் அவனுடைய மொத்த ஆராய்ச்சிக் கூடத்தையும் அவனது அயர்ன் மேனையும் அழிக்கும் எதிரிகள் அவனையும் துரத்துகின்றனர்.  ஜனாதிபதியையே கடத்திவிடுகின்றனர். கடைசியில் அவனுக்கும் இன்னொரு உயிரியல் தொழில்நுட்ப கம்பெனியின் முதலாளிக்குமிடையே நடக்கும் போட்டியில் ஸ்டார் புதிய எதிரிகளை அயர்ன் மேனின் துணை கொண்டு வீழ்த்தினானா என்பது தான் கதை.

படம் முழுவதும் நகைச்சுவை இழையோடுகிறது. ராபர்ட் டௌனி ஜூனியர் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். அவரது காதலியாக வருகிறார் ஜின்னத் பால்ட்ரோ(Gwyneth Paltrow). காமெடி வில்லனாக பென் கிங்ஸ்லீயும், சீரியஸ் வில்லனாக கய் பியர்ஸூம் நடித்துள்ளனர். திரைக்கதை மூவருடன் சேர்ந்து எழுதி இயக்கியிருக்கிறார் ஷேன் ப்ளாக்(Shane Black).. படம் முழுவதும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

தியேட்டரில் இதைப் பார்த்தபோது அயர்ன் மேன் உடையின் பாகங்கள் பறந்து வந்து ஸ்டார்க்கின் உடலில் ஒட்டிக்கொள்ளும் காட்சிகளில் ஆடியன்ஸின் கைதட்டல் காதைப் பிளக்கிறது. ஸ்பெஷல் எபக்ட்கள் படத்தின் மிகப் பெரும் பலம். அயர்ன் மேன் நிஜமாகவே இருப்பதைப் போலவே நம்மை நம்பவைத்து விடுகிறார்கள். ஸ்பைடர் மேன் போலல்லாது மக்களுடன் சர்வ சாதாரணமாக நெருங்கிப் பழகுகிறான். ஆட்டோகிராப் போடுகிறான் இந்த அயர்ன் மேன். நடுவில் அயர்ன் மேனா ? அதற்குள்ளிருக்கும் ஸ்டார்க்கா ? யார் முக்கியம் என்கிற கேள்வி எழுப்பப்பட்டு அயர்ன் மேனாய் இல்லாமல் போக நேரிடும் நாட்களில் அதன் விடையை கண்டடைகிறான் ஸ்டார்க். ஸ்டார்க்குக்கு உதவி செய்யும் சிறுவனுக்கும் அவனுக்குமான உரையாடல்கள் சுவராசியமானவை. மொத்தத்தில் இந்த 3-டி அயர்ன் மேன் 3 நிச்சயமான வெற்றிப் படம். கண்டிப்பாகப் பாருங்கள்.

இனி சாதாரண ஒரு ஆக்ஷன் படமாகக் களமிறங்கியிருக்கும் அயர்ன் மேனின் உள்ளே பொதித்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் விதைகளைப் பார்க்கலாம்.

அயர்ன் மேனின் கதாநாயகன் வைத்திருக்கும் தனியார் நிறுவனம், அமெரிக்காவுக்கு ஆயுதம் செய்து தரும் நிறுவனம். எனவே அதன் முதலாளியான ஸ்டார்க்; நல்லவர், வல்லவர், நாட்டின் மேல் பற்று கொண்டவர் மற்றும் அறிவாளி. ஒரு நாட்டின் ஆயுதங்கள் தேசிய பாதுகாப்பு ரகசியமானவை. அந்நாட்டின் தன்மானத்தை எதிரி நாட்டுக்கு உணர்த்த பயன்படுபவை. அதைத் தயாரிப்பது ஒரு தனியார் நிறுவனம்(?). தனியார் நிறுவனம் நாட்டின் ரகசியத்தைப் பாதுகாக்கிறது. எப்புடீ?

இது ஏற்கனவே அமெரிக்கா நடைமுறைப் படுத்தியிருக்கும் விஷயம். அமெரிக்காவின் ஆயுதத் தயாரிப்புக்களில் பெரும்பாலானவை லாக்ஹீட் மார்ட்டின் போன்ற தனியார் கம்பெனிகளின் வசமே விடப்படுகின்றன. அதாவது தனியார் கம்பெனி சொல்லும் விலையில் மக்கள் வரிப்பணத்தில் ஆயுதங்கள் அரசால் கொள்முதல் செய்யப்படும். அது நாட்டின் பாதுகாப்புச் செலவில் சேர்க்கப்படும். பல பில்லியன் டாலர்கள் வருமானம் ஆயுதக் கம்பெனிக்கு; செலவுக் கணக்கோ நாட்டுக்கு. அமெரிக்காவில் மட்டுமல்ல நம்ம இந்தியாவிலும் இந்த தனியார் ராணுவ பிஸ்னெஸ் கொடிகட்டிப் பறக்கிறது.

ஈராக்கின் மீது என்ன எளவுக்கென்று தெரியாமலேயே தொடுக்கப்பட்ட போரில் அமெரிக்காவின் படைகள் உபயோகப்படுத்திய ஆயுதங்கள், போட்ட குண்டுகள், எறிந்த ஏவுகணைகளின் வழிச் செலவுக் கணக்கு 100 பில்லியன் டாலர்கள். அது அமெரிக்க மக்களின் வரிப் பணம்(பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா என்கிற கூட்டாளிகள் வேறு). ஆயுதங்கள் தயார் செய்தது ஜனாதிபதி மற்றும் பெரும் முதலாளிகளின் சார்பான தனியார் ஆயுதக் கம்பெனிகள். ஆயுதங்களை விற்ற வகையில் அவர்களுக்கு சுமார் 100 பில்லியன் டாலர்கள் லாபம். ஈராக்கில் 3 லட்சம் குடும்பங்கள் நாசமாய்ப் போக அங்கிருந்த எண்ணெய் வயல்களை அமெரிக்க தனியார் எண்ணெய் கம்பெனிகள் வளைத்துப் போட்டதில் இன்னும் பல நூறு பில்லியன் டாலர்கள் அவர்களுக்கு லாபம்.

இப்படி லாபங்களை தனியார் கம்பெனிகள் அடித்துக் கொள்ளவும் நஷ்டங்களையும், குண்டுகளையும் மக்கள் தலையில் போடவும் செய்யப்படும் ஏற்பாடு தான் இந்தத் தனியார் ஆயுதக் கம்பெனிகள். இதை நியாயப்படுத்தவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறார் நம் டோனி ஸ்டார்க்.  இவர் ஆயுதம் தயாரிப்பதோ அமெரிக்காவில் அதைப் போய் போடுவதோ ஆப்கானிஸ்தானில். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்னய்யா முடிச்சென்று தியேட்டரில் கைதட்டிய யாருக்கும் உறைக்கவேயில்லை.

இதில் காமெடி வில்லனாக காட்டப்படும் பென்கிங்ஸ்லியின் தோற்றமும், அமைப்பும் நடவடிக்கைகளும் அப்படியே ஓசாமா பின்லேடனை ஞாபகப்படுத்துகின்றன. இது மறைமுகமாக அமெரிக்காவின் தயாரிப்புதான் ஒசாமா பின்லேடன் என்று ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம். படம் அதை நகைச்சுவையாகச் செய்கிறது. அதாவது ஒசாமா சீரியஸ் அல்ல. காமெடி பீஸ்.

இதில் அமெரிக்காவின் கனவு ராணுவ வீரன் கதையும் இருக்கிறது. அமெரிக்கா இப்படி வேற்று நாடுகளில் போய் அடாவடித்தனம் பண்ண வேண்டுமென்றால் அதற்கு அமெரிக்காவில் வாழும் ஒரு சாதாரண மனிதனை எப்படி போர்வீரனாக அனுப்புவது? அவனுக்குள் எழும் கேள்விகள்?  குழப்பங்கள். நாட்டுக்காக போர்புரிந்தால் சரி. ஏதோ ஒரு நாட்டில் நின்று யாரையோ எதிரியாக்கி, யாரையோ பாதுகாப்பது ஏன் என்கிற கேள்விகள் அவர்களில் பலருக்கு எழுகிறது. “தாய்நாட்டைக் காக்க எழு ! !” என்கிற கனல் கக்கும் வசனங்கள் எடுபடுவதில்லை. ஈராக்கில் போர்புரிய போர்முடிந்து இத்தனை வருடங்களாகவும் இன்னும் உள்ளே சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவத்தினரில் பலர் மனநிலை பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது அமெரிக்க ராணுவம். இவர்களில் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அமெரிக்க ராணுவத்தில் 2012ல் மட்டும் 348 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஈராக் சென்று திரும்பும் போர்வீரர்கள் பலருக்கு பிடிஎஸ்டி(PTSD) எனப்படும் அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்த நோய் ஏற்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வு தான் அயர்ன் மேன். அயர்ன் மேன் ஒரு வெறும் இரும்புக் கவசம் அவன் அமெரிக்காவில் இருந்து வீடியோ கேம் மாதிரி ஒரு வீரனால் கண்ட்ரோல் செய்யப்படுவான். அவன் தீவிரவாதிகளை தேடிப் போவான். மெஷின் கன்னால் எதிரிகளைத் துளைப்பான். ஏவுகணைகளை கையாலேயே ஏவுவான். பயங்கரவாதிகளைப் பந்தாடுவான். அபலைகளை காப்பான். (என்ன ஒரு சிறு பிரச்சனை என்றால் அவனால் ஜாலியாக ‘ரேப்’ செய்யமுடியாது). அயர்ன் மேன் செய்யும் சாகசங்கள் நாளைய அமெரிக்காவின் தொழில்நுட்பம் நிரம்பிய சர்வதேசப் போர்வீரன் பற்றிய கனவுகளேயன்றி வேறில்லை. நம்மைப் போன்ற மூன்றாம் உலகநாட்டு அப்பாவி ரசிகர்களோ அதைப் பார்த்து கை தட்டுபவர்களேயன்றி வேறில்லை.

அமெரிக்காவின் பொழுதுபோக்கைக் கூட நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியிருப்பதை இப்படம் உறுதி செய்கிறது. மற்றபடி இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் படம் பார்க்க விரும்பினால் சத்யம் தியேட்டரில் சென்று பாருங்கள். ஏ.சி. நன்கு குளுகுளுவென இருக்கும். 40 ரூபாய்க்கு ஆறிப்போன பாப்கார்ன் இத்தினியூண்டு கிடைக்கும். என்ஜாய் பண்ணலாம்.

Wednesday, March 27, 2013

சிங்கள-தமிழ் பிரச்சனையை வடஇந்தியர்-தமிழர் பிரச்சனையாக்க கரியவாசம் செய்த தந்திரம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் முன்பு காலத்தில் ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசியவரே என்றாலும் கடந்த சில வருடங்களாக ஈழத்தமிழருக்கு ஆதரவாக செயல்படுவது தெரிந்ததே. ஈழத்துக்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டத்தில் கூட அவர் வெளிப்படையாக மாணவர்களை ஆதரிக்கவில்லை.

சென்ற வாரம் ஈழமக்களின் துயரங்களை கேள்விப்பட்ட சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மனம் வருந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்குக் கூட அரசிடமிருந்து எதுவும் நிவாரணங்கள் சென்றதாகத் தெரியவில்லை. ஊடகங்களும் அந்தச் செய்தியை வெளியிடவில்லை. ஒருவேளை இனி ‘நாம் சாவது தேவையில்லை நம்மை சாகடிப்பவர்களை சாகடிப்போம்’ என்கிற போராட்ட உணர்வு எழுந்திருப்பதுவும் காரணமாக இருக்கலாம்.

அம்மையார் மற்றவர்கள் போராடுவதை விட தான் தன் அதிகாரத்தின் மூலம் செயல்களைச் செய்வதையே விரும்புகிறார் என்பதை காட்டும் விதமாக மூன்று நான்கு முறை இந்தியாவுக்கு “நட்பு”ரீதியில்(கொல்றதையும் செஞ்சுக்கிட்டு நட்பு என்னா நட்பு?) விளையாட வந்த சிங்களவர்களைத் தமிழக அரசே வெளியேற்றியது.

இப்போது ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களைக் குறிவைத்து காசு பார்க்க நடத்தப்பட இருக்கும் வேளையில் அதில் இலங்கை வீரர்கள்-நடுவர்கள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகள் எதுவும் சென்னையில் நடக்க விடமாட்டோம் என்று அம்மா அதிரடியாக அறிவித்துவிட்டார். இதே அறிவிப்பை ஈழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினரும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சென்று தெரிவித்திருக்கின்றனர். அவர்களுடைய அறிக்கையில் சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாமென்றும், அப்படி விளையாடினால் மைதானத்துக்குள் நுழைந்து போராடுவோம் என்றும் அறிவித்திருக்கின்றனர்.

ஐபிஎல் என்கிற தனியாருக்கு கொள்ளை லாபம் பெற்றுத் தரும் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமிலேயே வெட்கமில்லாமல் இரண்டு சிங்கள வீரர்களை வைத்திருக்கின்றனர். இது போல மற்ற அணிகளிலும் இருக்கும் இலங்கை வீரர்களின் எண்ணிக்கை பனிரெண்டு. இந்தப் பனிரெண்டு பேரும் சென்னையில் நடைபெறும் எந்தப் போட்டிகளிலும் விளையாட மாட்டார்கள் என பிசிசிஐயும் பிரச்சனை எதுக்கு என்று நினைத்து அறிவித்துவிட்டது. ஆனால் அவர்கள் மற்ற மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளில் விளையாடுவார்கள். ஏனென்றால் வட இந்தியர்களுக்கு தமிழன் இந்தியாவைச் சேர்ந்தவன் என்று கருதுவதில் கஷ்டம் இருக்கிறது.

இதை உறுதிப் படுத்தும் விதமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் எனும் சிங்களர் வட இந்திய ஊடகங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊடகங்களுக்கு நைஸாக அனுப்பிய மின்னஞ்சல் (ஈமெயில்) இப்போது அம்பலமாகியுள்ளது. அந்த ஈமெயிலில் அவர் இலங்கையின் சிங்களவர்கள் கி.மு. 300களில் வட இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலிருந்து (கலிங்கம்) வந்தவர்கள் என்றும், அசோகர் புத்தமதத்தை பரப்ப தனது மகள் சங்கமித்ரையையும், மகன் அரிஹத் மஹிந்தாவையும் அனுப்பினார் என்றும், அவர்கள் இலங்கையில் வந்திறங்கி பெருகியவர்களே இன்று சிங்களர்களாக இருக்கிறார்கள் என்றும், எனவே, இந்தியா 12 சதவீதமே இருக்கும் தமிழர்களின் உரிமைகளுக்காக கவனம் செலுத்துவதை விட 75 சதவீதமாய் இருக்கும் வட இந்தியர்களான சிங்களர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழராக இருந்தாலும் பிராமணரான சுப்பிரமண்ய சாமி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா திருத்துவதை தடுக்க அமெரிக்கா சென்று அமெரிக்க தலைவர்களை சந்தித்து பேசிப் போராடி இலங்கைக்கு எதிரான வாசகங்கள் ‘இனப்படுகொலை’, ‘சர்வதேச விசாரணை’ வராமல் பார்த்துக் கொண்டார். இது இன்னும் இனப் பிரச்சனை அல்ல சும்மா போர்க்குற்றங்கள் தான் என்று பேசும் தமிழ்நாட்டு தேசியக் கட்சிகள் இப்போதாவது விழித்தெழுந்து கொள்வார்களா?

கரியவாசம் போன்ற இலங்கை நாட்டின் தூதர் எனப்படும் மிகப் முக்கியமான பதவியிலிருப்பவரே சிங்களர்களின் மூதாதையர்கள் வடஇந்தியர்கள் என்கிற கருத்தை முன்வைக்கும் போது நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன. ஒருவேளை இதனால் தான் இந்தியா சிங்களருக்குச் சாதகமாகவே இவ்வளவு காலமாக நடந்துவருகிறதா? இலங்கைக்கான இந்திய வெளியுறவுக் கொள்கை தமிழர்களைக் காப்பதற்குப் பதில் சிங்கள மூதாதையர்களான வட இந்தியர்களைப் பாதுகாக்கவே அமைக்கப்பட்டதா?  அதனால் தான் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்தே தமிழர்களின் உரிமைகள் படிபடிப்படியாக பறிக்கப்பட்டு இன்று இன அழிப்பு உச்சத்திலிருக்கிறதா ? கி.மு. 300ல் போன சிங்களர்களுக்கு இலங்கை என்றால் அவர்களுக்கு 5000 வருடங்களுக்கு முன்பே அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு இலங்கை சொந்தமில்லையா ? அவர்கள் இலங்கையின் மூதாதையர்கள் இல்லையா ?
தமிழர்களே யோசியுங்கள். இலங்கையின் சிங்களன்-தமிழன் பிரச்சனை இந்தியாவின் வட இந்தியன் -தென்னிந்தியன் பிரச்சனையாக மாற்றப்படுகிறதா ? அதனால் தான் மற்ற மாநிலங்களில் இலங்கை வீரர்கள் ஐபிஎல் மேட்ச் விளையாட அனுமதிக்கப்படுகிறார்களா?

Friday, March 15, 2013

அமெரிக்காவை அடிவருட கமல் எடுத்திருக்கும் 'விஸ்வரூபம்'



டைட்டில்ஸ்:
விஸ்வரூபம் படம் பல சர்ச்சைகளுக்குப் பின் கடந்த பிப்.7 அன்று தமிழ்நாட்டிலும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கமல் இருந்த வீட்டை விட்டுவிட்டு நடுத்தெருவிற்கு வரப்போகிறேன் என்று ரீல் விட்டது போய் அவர் இருக்கும் ஏரியாவையே வாங்கும் அளவுக்கு அவருக்கு துட்டு சம்பாதித்துத் தந்துவிட்டிருக்கிறது இந்தப் படம். இவ்வளவு பெரும் பணத்தை நோக்கிய பாய்ச்சலில் உண்மையில் அவர் ‘கலைஞனாக’ மட்டுமே இந்தப் படத்தில் தெரிகிறாரா? இது ஹாலிவுட் படங்களை தூக்கிச் சாப்பிடும் மேக்கிங் கொண்ட படமா ?  இப்படம்

பேசும் அரசியல் என்ன ? இது முஸ்லீம்களுக்கு எதிரான படமா? இல்லையா? நம் தமிழ் இனமே 2009ல் லட்சக்கணக்கில்  அழிக்கப்பட்டபோதும், மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் ‘கம்’முனு கமுக்கமாக இருந்த கமல் எங்கோ இருக்கும், ஆப்கானிஸ்தான் பிரச்சனையை கையில் தேடி எடுத்தது ஏன் ? திரையில் அவர் காட்டும் நாத்திகவாதம் போன்ற முகமூடிகள் எதுவரை ? என்பது போன்ற கேள்விகளுக்கு விரிவாக பதில் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

விஸ்வரூபம் – உருவான கதை..
சில வருடங்களுக்கு முன்பு...
கமலின் மன்மதன் அம்பு படம் தோல்வியடைந்த நிலையில் அடுத்ததாக அவர் பெரிய பட்ஜெட்டில் தமிழ்க் ‘கலைச் சேவை’ செய்ய எந்தத் தயாரிப்பாளரும் குனிய வராத நிலை. செல்வராகவன் முதல் மனைவியான சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்பு கீதாஞ்சலி என்கிற பணக்காரப் பெண்ணை காதலித்துக் கொண்டிருந்த நேரம், செல்வராகவனின் முந்தைய ஆயிரத்தில் ஒருவன் தோல்வியடைந்த நிலையில் கீதாஞ்சலியின் உறவினர்களான பி.வி.பி என்கிற பெரும் கோடீசுவரத் தயாரிப்பாளர்கள், கீதாஞ்சலியின் தயவில் செல்வராகவனின். அடுத்த படமான ‘இரண்டாம் உலகத்தில்’ கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க செல்வராகவன் இயக்க என்று பிரமாண்டமாக தயாரிக்க ஒப்புக் கொண்டார்கள். ஆரம்பத்தில் இதற்கு பெரிய தொகைகள் அட்வான்ஸாக வழங்கப்பட்டு ஸ்டோரி டிஸ்கஷன்கள் நடைபெற்றபோது கமலின் சிறுமூளை எக்ஸ்ட்ராவாக வேலை செய்ய, அவருக்கும் செல்வராகவனுக்குமிடைய மனஸ்தாபங்கள் படம் ஆரம்பிக்கும் முன்பே முளை விட, ஒரு கட்டத்தில் கமல் எதிர்பார்த்தபடி செல்வராகவன் கோபித்துக் கொண்டு போய்விட்டார். கமலை அணுகிய பி.வி.பி காரர்களைப் பார்த்து “கவலையே படாதீர்கள் அவர் போய்விட்டால் என்ன ? என் கால்ஷீட் உங்களுக்குத் தான். நானே ஒரு கதை வைத்திருக்கிறேன். அதை வைத்து விஸ்வரூபம் எடுப்போம்..” என்று சொல்ல அவர்கள் தமிழ்த் திரையின் ஜாம்பவானே சொல்லும்போது ‘சரி’ என்று ஒத்துக்கொண்டார்கள். செல்வராகவனுக்கு கீதாஞ்சலி மீண்டும் ரெகமண்ட் செய்து அதே தயாரிப்பாளர்களுக்கு இரண்டாம் உலகத்தை கமல் இல்லாமல் இயக்கிக் கொடுக்க சம்மதிக்க அதன் வேலைகளும் ஆரம்பித்து விட்டன.

விஸ்வரூபம் படத்தை கமல் எடுக்க எடுக்க சுமார் 50 கோடிகள் ஆனபின்பு பி.வி.பி “படம் எப்ப சார் முடியும்?” என்று கேட்க, கமலோ சர்வசாதாரணமாக “இப்பத்தான் இண்டர்வெல்லே முடிஞ்சிருக்கு” என்று சொல்ல கமலின் இந்தப் புது அவதாரத்தைப் பார்த்த அவர்களும் கடுப்பாகி பஞ்சாயத்துக்குப் போய்விட்டார்கள். உண்மையில் கமல் ஒரு படத்து பட்ஜெட்டிலேயே இரண்டாவது பாகத்தையும் சேர்த்து எடுத்து விட்டார் என்கிறார்கள். பிவிபிகாரர்களுக்கு செட்டில் செய்ய எடுக்கப்பட்ட படத்தை போட்டுக்காட்டி வேறு சில தயாரிப்பாளர்களை குனியவைத்து பணம் ரெடிசெய்து பிவிபியையும் கழட்டி விட்டுவிட்டு ராஜ்கமலின் ஏகபோக தயாரிப்பாக உருமாறி விஸ்வரூபம் வெளிவந்திருக்கிறது. ஒரு மாதத்தில் ஆன கலெக்ஷன் 200 கோடியாம். படம் எடுக்க ஆன செலவு 40 கோடி போக கமலுக்கு கிடைக்கும் லாபம் மட்டுமே 160 கோடி.. இதில் ரசிகமகா ஜனங்களே நீங்கள் கவனிக்க வேண்டியது கமல் எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பதல்ல. மாறாக இப்படம் ஒரு கலைச் சேவை என்று காட்டப்படும் பிம்பம் எவ்வளவு தவறானது என்பதே.

விஸ்வரூபம் – கதை..
விஸ்வா என்கிற பெண்மை நிரம்பிய நடனக் கலைஞனாக நியூயார்க்கில் நடனம் கற்றுத் தரும் ஆசிரியர் கமல். தன்னை விட வயதான கமலை அமெரிக்கா வருவதற்காகவே திருமணம் செய்துகொண்ட நிருபமா அமெரிக்கா வந்த பின் தன்னுடன் ஆபிசில் வேலை செய்யும் பாஸூடன் கள்ளக் காதலாகி, அதன் ஈர்ப்பில் கமலிடமிருந்து விவாகரத்து வாங்க ஏதாவது காரணம் கண்டுபிடிப்பதற்காக அவருடைய நடவடிக்கைகளை கவனிக்க ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடுகிறார். அப்போது தான் தெரிகிறது அவர் அல்கொய்தாவால் தேடப்படும் இந்திய சீக்ரட் ஏஜண்ட் என்று.

அந்த நேரத்தில் தோன்றும் ப்ளாஷ்பேக்கில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து தப்பிய காஷ்மீரியாகச் வேஷமிட்டுச் செல்லும் (காஷ்மீரி தெரியாத) கமல்ஹாசனை “ஓமர்” என்கிற (தமிழ் நன்றாகப் பேசும்) அல்கொய்தா தளபதி சந்திக்கிறான். அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி தரும் நம் கமல் அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடனையும் பார்க்கிறார். அல்கொய்தாவால் கடத்தப்பட்ட வெள்ளை இன தூதரக உறுப்பினர்களை ஒரு கிராமத்தில் ஆப்கானிஸ்தான் மக்களிடையே அங்கே பதுக்கி வைக்க கமல் கொடுக்கும் ரகசிய சிக்னல் மூலம் உறுப்பினர்களை மீட்க வரும் நேட்டோ படையால் அந்தக் கிராமமே சின்னாபின்னமாக, கடைசியில் உண்மையில் கமல் யார் என்று பார்ப்பவர்களுக்குத் தெரியவருகிறது. அவர் இந்திய உளவுத்துறை ‘ரா’ வின் ஸ்பெஷல் அதிகாரி. காஷ்மீரியாக வேடமிட்டு ஒசாமையே நெருங்கிவிட்ட சூராதி சூரர்; பிற்பாடு அமெரிக்காவில் மீண்டும் தொடரும் அல்கொய்தா கதையில் தங்களின் எதிரியான அமெரிக்காவை டர்ட்டி பாம்ப் எனப்படும் சீசியம் அணுகுண்டினால் நியூயார்க் நகரையே அழித்துவிட நினைக்கும் அதே தீவிரவாதிகளின் செயலை கமல் எப்படி திறமையாக முறியடித்து ‘ஜெய்ஹிந்த்’(ஜெய்அமெரிக்கா?) என்கிறார் என்பது மீதிக் கதை. ஹாலிவுட்டில் வருடத்துக்கு ஒரு படமாவது ‘நியூயார்க்-குறிவைக்கும் எதிரி-ஹீரோ-நகரையே-காப்பாற்றுவது’ என்கிற இந்த கதையமைப்போடு வருவது சகஜம் தான். ஆனால் இந்தியாவிலிருந்து கொண்டு அமெரிக்காவுக்கு சலாம் போடும் நம் கமலின் ‘கலைத் தாகம்’ தான் காணச் சகிக்கவில்லை. கமலின் ‘வெற்றி விழா’ படம் பார்த்திருக்கிறீர்களா... அது விஸ்வரூபத்தின் ஆதிகாலத்திய 0.01வது வெர்ஷன் என்று சொல்லலாம்.

விஸ்வரூபம் – ஒரு கலைப்படைப்பாக..
விஸ்வரூபத்தை கமலே இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மட்டுமே அவரது முந்தைய படங்கள் போல வேறு ஒரு இயக்குனரின் பெயரை டம்மியாகப் போட்டுவிட்டு இவரே ஸ்டார்ட் கட் சொல்லி பின் அந்த டைரக்டர் கடுப்பாகி கிளம்பிவிட பிறகு தவிர்க்க இயலாமல் இவர் ‘இயக்குனர்’ என்று பெயர் போடும் அசம்பாவிதம் (உ.ம். சாஷி 2000, விருமாண்டி, ஹேராம்) நடைபெறவில்லை. நேரடியாகவே தானே டைரக்டர் என்று போட்டுக்கொண்டார். அடுத்த ஹாலிவுட் படம் அவருக்குத் தானே கிடைக்கவேண்டியிருக்கிறது.

திரைக்கதையமைப்பில் பெரிய சுவாரசியம் கமல் பெண் தன்மையுள்ள அப்பாவி டேன்ஸர் அல்ல மாறாக பத்துப் பேரை ஒரே நேரத்தில் கொன்றுவிட முடிந்த உளவுத்துறை ஹீரோ என்று காட்டப்படுவது வரை இருக்கிறது. அதற்குப் பின் அவர் காஷ்மீரி என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஆப்கானிஸ்தானில் போய் நிற்பது ஜேம்ஸ்பாண்ட் சம்பந்தமேயில்லாத ஏதோவொரு மூன்றாவது உலக நாட்டில் வில்லனை துப்பறியச் செல்வது போல நமது உணர்வுக்கும் வாழ்வுக்கும் சம்பந்தமில்லாத ஏதோ துப்பறியும் பட விவகாரமாகவே இந்திய, தமிழ் பார்வையாளருக்குத் தோன்றும். ஆகவே படம் துவங்கி அரைமணி நேரத்திற்குப் பின் பார்வையாளர்கள் ஆயாசமடைந்து விடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் பார்வையாளர்கள் படத்தில் தொடரமுடிகிற பரிச்சயமான ஒரே நபர் கமல்ஹாசன் மட்டுமே. மற்ற எல்லோரும் வில்லன்களாகவும், அல்லது அவனுடன் தொடர்புள்ள யாரோவாகவுமே புரிந்துகொள்ளப்படுவார்கள். அதிலும் கமல்ஹாசன் அங்கு போய் செய்யும் துப்பறியும் ‘குருதிப்புனல்’ வகை துரோக வேலைகள் வீரசாகசமாகவோ அல்லது கொடும் நம்பிக்கைத் துரோகமாகவோ மனதில் பதிவதில்லை. கதை நகர்த்தல் தெளிவாக இல்லாமல், கமல் நல்லவரா கெட்டவரா என்று நம்மை முடிவுக்கு வரவிடாமல் குழப்புவது போலவே குழப்பமாக இருக்கிறது. இதில் இரண்டாம் பாகம் ஒன்று வேண்டுமென அவர் முன்பே முடிவு செய்துவிட்டதால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் இந்தக் கதை பாதியிலேயே அம்போவென விடப்பட்டு மீண்டும் அமெரிக்காவிற்கு கதை போகிறது. ஆப்கானிஸ்தானில் ஒமராகவும் அவரது துணையாளாகவும் வருபவர்களே பின்பு அமெரிக்காவிலும் அவரைத் துரத்துகிறார்கள். அவர்களே இவர்கள் என்று எளிதில் தெரியாதபடி இருக்க ராகுல் போஸின் குரலை மாற்றியது, ஜெய்தீப்பின் முடிவெட்டு, தாடியை எடுத்தது என்று மெனக்கெட்டிருக்கிறார் கமல். ஒரே நேரத்தில் பத்து மேக்கப் போட்டு மெனக்கெட்டவராயிற்றே!

இதில் சீசியம் அணு எண், அணு எடை, கதிரியக்கம், பாரடே ஷீல்ட், டர்ட்டி பாம்ப் என்று டெக்னிக்கல் விஷயங்களிலும் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் இதற்கே எப்.பி.ஐ காரன் வாயைப் பிளப்பது போல் காட்டியதுதான் காமெடி. அதிலும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் சிலவற்றில் ஜேம்ஸ்பாண்டிடம் யாராவது ஒரு இளம்பெண் அவரது அழகிலும், சாகசத்திலும் மதிமயங்கி “யார் நீங்கள்” என்று வியந்து கேட்க, அவர் பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் என்று ஸ்டைலாகக் கூறுவது போலவே கமலையும் இந்தப் படத்தில் ஒரு எப்.பி.ஐ. ஆபீசர் ஆச்சரியப்பட்டு கேட்கிறார். இன்னொரு எப்.பி.ஐ. ஆபிசர் ‘உங்க கடவுளுக்கு நாலு கை இருந்தால் அவரை எப்படி சிலுவையில் அறைவீர்கள்’ என்று சம்பந்தமேயில்லாமல் கேள்வி கேட்கிறார். எப்.பி.ஐ மேல் என்ன கடுப்போ கமலுக்கு தெரியவில்லை.

படத்தின் ஆரம்பத்திலேயே வரும் ஷாட்டில் ஒரு மாடியிலிருந்து புறாவை கமல் கீழே பறக்க விட அது கீழ்நோக்கிய ஷாட்டில் அமெரிக்க கொடியைத் தாண்டி பறந்து விழ. அடுத்த ஷாட்டில் அதே புறா வால்ஸ்ட்ரிட்டின் எருமையின் காலிலிருந்து மேலே எழும்பி பறந்து போகிற மேல் நோக்கிய ஷாட்டில் திரும்பவும் அமெரிக்க கொடி பறக்கிறது. அதாவது புறாக்களால் கீழே விழ இருந்த அமெரிக்க அரசின் மானத்தை அம்பி கமல் காப்பாற்றி மேலேற்றிவிட்டார் என்கிற அர்த்தத்தில்.

படத்தின் ஒலிப்பதிவை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொறுப்பேற்க க்ரிஸ் எம். ஜேகோப்சன் என்கிற வெளிநாட்டவர் சவுண்ட் எடிட்டராக செய்திருக்கிறார்.  படத்தில் ஹாலிவுட் அளவுக்கு ஒலியின் தரம் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள். நன்றாகவே இருக்கிறது தரம்.

இசையமைத்திருப்பவர்கள் ஷங்கர்-லாய்-இஷான் என்கிற மூவர். கமல் ஆடும் முதல் பரதநாட்டியப் பாடல் நன்றாக இருக்கிறது. மற்ற மூன்று பாடல்களும் மோசமில்லை. படத்துக்கு பலமே சேர்க்கின்றன. ஆனால் பிண்ணனி இசை தான் சொதப்பல். காரணம் கமலுக்கே தமிழ்நாட்டில் இருந்து போன ஒரு சிபிஐ ஆள், ஆப்கானிஸ்தானில் யாரோ ஒரு இளைஞன், யாரோ ஒரு டாக்டர் போன்றவர்களின் மரணங்களுக்காக என்ன எக்ஸ்ப்ரஷன் காட்டுவான் என்று சிறிது குழம்பி நின்று வரும்போது இசையமைப்பாளர்களும் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். கடைசியில் கமலும், அவர்களும் சேர்ந்து தீவிரவாத-பயங்கரவாத இசையில் போய் நின்று கொள்கிறார்கள். ஆடியன்ஸும் மனிதாபிமானம் என்ற அளவிலோடு பார்க்க முடிகிறதே தவிர அந்தக் காட்சிகள் மனதை ஒன்றும் செய்துவிடுவதில்லை.

காட்சிகள் மனதைப் பாதிக்கும், பயமுறுத்தும் இடங்களும் உண்டு. தூதரக அதிகாரி கழுத்து அறுபடும் இடம், தூக்கிலிடப்படும் இடம் என்று சில இடங்களில் முஸ்லீம்களின் மனத்தில் குற்ற உணர்வையும், முஸ்லீம் அல்லாதவர்களின் மனத்தில் முஸ்லீம்களின் மேல் பய உணர்வையும்,  ஆழ்மனத்தில் வெறுப்புணர்வையும் படம் தோற்றுவிக்கிறது. இது கமலின் ஆழ்ந்த அமெரிக்க மனநிலையை காட்டுகிறது.

படத்தின் ஒளிப்பதிவு சானு ஜான் வர்கீஸ் (மலையாளி போல் தெரிகிறது) இவர் தான் டேவிட் படத்திற்கும் ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவில் நம்மவர்களின் தரம் உலகப் படங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு வளர்ந்து ரொம்ப நாளாகிவிட்டது. வர்கீஸின் ஒளிப்பதிவும் கச்சிதம். ஆனால் அவர் கமலைத் தாண்டி எந்த புது முயற்சியும் செய்துவிடவில்லை.

எடிட்டர் மகேஷ் நாராயணனைச் சொல்லி குற்றமில்லை. கமல் சொன்ன பகுதிகளை இரண்டாம் பாகத்திற்கு விட்டது போக மற்ற பகுதிகளை ஏதோ தன்னால் முடிந்த அளவு ஜம்ப் இல்லாமல் எடிட் செய்திருக்கிறார். செய்த வரை அவருக்கு சபாஷ்தான்.

ஆர்ட் டைரக்ஷனை இளையராஜா என்பவரும் நான்ஸி டெர்ரின் என்பவரும் கவனித்திருக்கிறார்கள். நியூயார்க்கில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு உள்ளூரில் நான்ஸி அம்மணியையும் இந்தியாவில் மற்றும் ஆப்கானிஸ்தான் போல் சென்னை ஈசிஆர் ரோட்டில் செட் போட்டு எடுத்த காட்சிகளுக்கும் இளையராஜா ஆர்ட் டைரக்டர் போல் தெரிகிறது. இளையராஜாவின் திறமை பளிச்சிடுகிறது. ஆப்கானிஸ்தானின் ஹெலிகாப்டர்கள் தாக்குதல்கள் லாஜிக்கலாக கவனித்தால் படுசுமார். நியூயார்க் நகரில் நடக்கும் திராபையான கார் துரத்தல் காட்சி சோபிக்கவில்லை. அதே போல எப்.பி.ஐ சம்பந்தமான காட்சிகளும், வசனங்களும் வலுவாக இல்லை. ஒன்று எப்.பி.ஐயை மட்டம் தட்டும் நோக்கில் காட்சி வைக்கப்படுகிறது. இல்லையென்றால் எப்.பி.ஐக் காரன் கமலையோ, நிருபமாவையோ புகழ்வதாக காட்சி வைக்கப்படுகின்றது.

கிராபிக்ஸூக்கும் பெரிய டீம் வேலை செய்திருக்கிறது. நாசரின் மகனை கிரேனில் தூக்கிலிடும் காட்சியில் பத்து பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதை நூறு பேர் போல காட்டியது கிராபிக்ஸ் வேலையே. படத்தை மெருகேற்ற இவையெல்லாம் உதவியிருக்கின்றன. வில்லனாக நடித்த ராகுல் போஸின் டபுள் மேக்கப் கன கச்சிதம். ராகுல் போஸின் நடிப்பும் கூட அருமை. ஹிந்தி சினிமாவில் பெரிய ஆளாக இருக்கும் ராகுல் போஸ் தமிழிலும் நுழைந்திருக்கிறார். இவரை வைத்து தமிழில் யாராவது நல்ல படங்கள் எடுக்க முயற்சி செய்யலாம்.(விஸ்வரூபம் நல்ல படமா ?)

மொத்தத்தில் தொழில்நுட்ப ரீதியாக இது தமிழில் ஒரு வலுவான படமே. கமலுக்கு இதில் வெற்றியே கிடைத்திருக்கிறது பெரும் பொருட்செலவில். ஆனாலும் இப்படம் ஒரு டெக்னிக்கல் மாஸ்டர் பீஸ் அல்ல. உதாரணமாக ஆப்கானிஸ்தான் என்றதும் நமக்கு மலைக்குகைகளை மட்டும் காட்டிவிட்டார்கள். ஆப்கானிஸ்தான் மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, அதில் போர் செய்திருக்கும் கோலம், சீரழிந்த அவர்களது வாழ்க்கை முறை என்று எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதையெல்லாம் நுட்பமாகப் பதிவு செய்வதும் கமலின் நோக்கமல்ல. அவரது நோக்கமெல்லாம் இந்தியாவில் இருக்கும் ஒருவருக்கு ஆப்கானிஸ்தான் என்றால் ஞாபகம் வரும் வறண்ட மணல் பகுதி, நிறைய குகைகள் இருக்கும் மலைகள், ஒசாமா பின்லேடன், பர்தா அணிந்த பெண்கள், அபின் செடிகள், காலி துப்பாக்கி ரவைகளை எடைக்கு எடை வாங்கும் கடை(எதுக்கு?) என்பவற்றை காட்டினாலே போதும் என்று நினைத்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் என்ன அல்ஜீரியா என்றாலும் நாம் நம்பித்தானே ஆவோம்.

கமல் என்கிற கலைஞன் தனது 55 வயதிலும் இளைஞனாக வேடமிட்டு இவ்வளவு திறமையாக ஒரு படம் எடுத்திருப்பதை நிச்சயம் நாம் பாராட்டுகிறோம். ஆனால் ஒரு சராசரி ரசிகராக அவர் ஒரு ‘சகலகலா வல்லவன்’ தான்.. ‘உலக நாயகன்’ தான் என்று பெருமையடித்துக் கொள்வதை செய்வதற்கு மனது ஒப்பவில்லை.

தொழில் நுட்பத்திலும், இயக்கத்திலும் கமல் இன்னும் கொஞ்சம் 10 சதவீதம் சிரமப்பட்டால் உலகப்படங்களின் நேர்த்தியை, தரத்தை அடைந்துவிட முடியும் தான். ஆனாலும் அவர் ஒரு இன்ஞ்ச் கீழேயே இருப்பதன் காரணம் ஹாலிவுட் உலகத்தை அப்படியே காப்பியடிக்க அவரும், மணிரத்னமும் சதா முயன்று கொண்டேயிருப்பது. சமீபத்தில் பாலா இயக்கிய பரதேசி படம் கேன்னஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பெரிய பாராட்டுதல்களைப் பெற்றது என்கிறார்கள். பாலாவிடம் இது போன்ற ஹாலிவுட் பின்தொடர்தல் என்பது இல்லை. அவர் உலக சினிமாக்கள் பார்ப்பவரே என்றாலும் உலகச் சினிமாவை, அதன் உயரத்தை, நம் தமிழ் கலாச்சாரத்தின் வழியாகவே தொட முயல்கிறார். அதிலேதான் அவர் வெற்றியும் பெறுகிறார்.

கமலின் இன்னொரு பலவீனம் இவ்வளவு சாதித்த பின்னும் இன்னும் ஒவ்வொரு படத்திலும் தான் ஒரு ‘சகலகலாவல்லவன்’ என்று காண்பிக்க முயல்வது. அதற்காக டி.ராஜேந்தர் போல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நெறியாள்கை அப்புறம் இவற்றுடன் சேர்த்து ஹீரோவாக நடிப்பு, இன்னும் 4 ரோல், பத்து வகை மேக்கப் என்று தேவையில்லாமல் தனது ஆற்றலை சிதறவிடுகிறார். திரைக்கதையில் இயக்குனர் கமலின் தலையீடு எப்போதும் இருப்பதால் அவரின் படங்கள் பெரும்பாலும் திரைக்கதையில் நடிகர் கமலையே தொடர்வதாக இருக்கும். தொடர்ந்து எல்லா சீனிலும் அவர் நடித்துக் கொண்டே இருப்பார் என்னும் விதமாக கதை அமைக்கப்படும் போது அது கதைக்கான படமாக இல்லாது கதாபாத்திரமான ஹீரோ கமலைத் தொடரும் படமாகவே ஆகிவிடும் (உதா. மஹாநதி, விருமாண்டி, அன்பே சிவம், அவ்வை சண்முகி..). இதில் விதிவிலக்காக அன்பே சிவம் போன்ற படங்களின் கதையமைப்பே இயல்பில் ஹீரோவையும் அவருடனான துணை கதாபாத்திரமான மாதவனையும் பின் தொடர்ந்து போவதாக இருந்ததால் கமலின் மிக நேர்த்தியான படங்களில் ஒன்றாக அன்பே சிவம் ஆனது.

விஸ்வரூபம் – ஒரு நுணுக்கமான அரசியல் தந்திரமாக..
விஸ்வரூபத்தின் நுணுக்கமான சாணக்கியத்தனமான அரசியலை புரிந்து கொள்ள நிறைய கவனம் வேண்டும். படத்தில் நிறைய நாத்திகவாத வரிகள் வருகின்றன. கடவுள் கிட்ட கேக்கணும்னு ரூபா சொல்லும்போது ‘எந்தக் கடவுள்’ அப்படின்னு பேசறதுலருந்து, அய்யராத்துப் பொண்ணே நீ கறியை டேஸ்ட் பண்ணு என்று சொல்லுமிடத்திலிருந்து ஆங்காங்கே நாத்திகவாத வரிகள் வந்து கமல் ஐயர்களையே திட்டத்தான் செய்கிறார் பாருங்கள் என்கிற வாதத்திற்கு உபயோகமாக இருக்கிறது. ஆனால் கமலை வெறுக்கும் பிராமணர்கள் எவ்வளவு பேர்? மிகக் குறைவு. காரணம் அவருடைய பிராமண நாத்திகவாதம் ஒரு விதத்தில் பிராமண மக்கள் ரசிக்கும்படியே தான் இருக்கிறது என்பதால் தான்.

ஒரு காட்சியில் கமல், ஆண்ட்ரியா போன்றோர் டி.வி பார்த்துக் கொண்டிருக்க டி.வியில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை ஒபாமா அறிவிக்க எல்லோரும் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். கமல் கேட்பார் ஏன் ஒருத்தரைக் கொன்னதைப் போய் கொண்டாடுறாங்க ? இது தப்பில்லையா ? அதுக்கு ஆண்ட்ரியா சொல்வார் அசுரனை கிருஷ்ணன் வதம் பண்ணினா சந்தோஷம்னு சொல்வாரே அது போலத்தான் என்பார் (அசுரன்=ஒசாமா=தீவிரவாதி, கிருஷ்ணன்=ஒபாமா=தேவர்). அப்போது கமலின் மாமா சொல்வார் “சந்தோஷமா என்று தீவிரவாதியின் மகன்-மகள் புள்ளைகளைக் கேளுங்கள். அவர்களுக்கு அவன் நல்ல தகப்பன் இல்லையா என்று”.

ரொம்ப லாஜிக்காக தத்துவம் கலந்து எழுதப்பட்டது போல் தோன்றும் இந்த விவாதத்தில் ஒசாமா நல்லவனா கெட்டவனா என்பது ஏற்கனவே முடிவாகிப் போய்விட்டது(அசுரன்). அதன்படி தீவிரவாதி கெட்டவன். கேள்வியை அவன் நல்லவனா கெட்டவனா என்று கேட்பதில் நிறுத்தாமல் அவன் கொலை செய்யப்பட்டது சரியா தவறா என்கிற விவாதத்தில் போய் நிறுத்திவிட்டதன் மூலம் அவன் கெட்டவன் தான் என்பதை மறைமுகமாக அழுத்துகிறார் கமல். பகத்சிங் அன்றைய ஆங்கிலேயரால் தீவிரவாதி என்று தூக்கிலிடப்பட்டவன். இன்று நமக்கு அவன் யார் ? ஒசமா பின்லேடன் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் மக்களிடத்தில் எவ்வாறாக அறியப்படுகிறான்? சந்தேகமேயில்லாமல் அவர்களுக்கு அவன் ஒரு பகத்சிங். கமல் தீவிரவாதம் சம்பந்தமான விவாதங்களை சாமர்த்தியமாக தவிர்க்கிறார். தீவிரவாதம் = படுமோசமான கொலைகாரர்கள் என்று மட்டுமே அடையாளப்படுத்துகிறார்.

காஷ்மீரி என்கிற தீவிரவாதியாக அவர் ஆப்கானிஸ்தானில் நுழைவதன் பிண்ணனியை பார்ப்போம். கமலின் அப்பா காஷ்மீரி என்கிற ஆப்கானிஸ்தான் வரை புகழ்பெற்ற ஒரு தீவிரவாதி அதாவது போராளி. அவர் பெயரைச் சொன்னதுமே தீவிரவாதிகளின் தலைவரான ஓமரே ஆச்சரியப்படுகிறார். அப்படிப்பட்ட பெரிய போராளி காஷ்மீரி தன் மனைவியை கர்ப்பிணியாக்கி அம்போவென விட்டுவிட்டுப் போனவராக சித்தரிக்கப்படுகிறார். ‘அப்பன் இல்லாதவன்’ என்று ஆக்கப்பட்ட அவருடைய மகனான கமல் தானே தன் அம்மாவின் மானத்தைக் காக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இப்படி வலிந்து சொல்லப்படும் ஒரு கதை ஏன் முன் வைக்கப்படுகிறது ?  நீங்கள் நினைப்பது போல் பொழுது போக்குக்காகவா ?

தீவிரவாதிகள் அனைவரும் கூட்டாக, தனியாக தொழும் காட்சிகள் படம் முழுக்க. குண்டு வைத்து அத்தோடு சேர்ந்து சாகப் போகும் தீவிரவாதி அதன் பக்கத்திலேயே பாய்விரித்து தொழுகிறான். சீசியம் என்கிற கதிரியக்கத் தனிமத்தை வெறும் கையாலேயே எடுத்தால் ஆறேழு மாதங்களில் சாவு நிச்சயம் என்று தெரிந்தும் பங்க்கர்களில் வாழ்ந்து கொண்டு உயிரையும் விடத் தயாராயிருக்கும் முஸ்லீம் ஜிகாதி. இடத்தையே வெடிவைத்துத் தகர்க்க சுற்றிலும் குண்டு வைத்துக் கொண்டு தொழுது கொண்டிருக்கும் முஸ்லீமைச் சுற்றி வளைத்து எஃப்பிஐ நின்றவுடன் பாய்ந்து சென்று ரிமோட் கண்ட்ரோலை எடுத்து, அவனைத் துளைத்த துப்பாக்கிக் குண்டுகளையும் தாண்டி சிரித்தபடியே பட்டனை அமுக்கி தானும் தன்னைச் சுற்றியுள்ள அனைவரும் வெடித்துச் சிதறும்படி செய்து மாண்டுபோகிறான். மனித வெடிகுண்டு முஸ்லீம் இளைஞன். கழுத்தை அறுக்கும் முஸ்லீம். தூக்கில் இடும் முஸ்லீம். பேசிக் கொண்டிருக்கும் போதே திருப்பி நிறுத்தி பின்மண்டையில் சுட்டுக் கொல்லும் முஸ்லீம். கழுத்தில் கயிற்றை இறுக்கிக் கொல்லும் முஸ்லீம். இப்படி படம் முழுவதும் முஸ்லீம்கள் மிகக் கொடும்பாதகமான செயல்களைச் செய்கிறார்கள்.

இவர்களை இப்படி மானாவாரியாகக் காட்டிவிட்டு இஸ்லாம் சகோதரர்கள் பிரியாணி கிண்டிப் போடவேண்டும் என்று கமல் எதிர்பார்ப்பது அவர்களை எல்லாம் எவ்வளவு முட்டாள்கள் என்று அவர் நினைத்திருப்பார் என்பதைக் காட்டுகிறது. “ஏன்யா ஒரு படத்துல கதைப்படி முஸ்லீம்கள் இப்படி செய்யிற மாதிரி வந்தா என்ன தப்பு?” என்று சுதந்திரம் பற்றி பேச நீங்கள் விரும்பினால் இதற்கு பதில் சொல்லுங்கள்; அந்த முஸ்லீம்கள் எல்லோரும் செய்யும் செயல்களுக்கு முன்போ பின்போ தொழுவதையும் ஏன் காட்டுகிறார் கமல்?

இவ்வளவு விரிவாக தலீபான் தீவிரவாதம் பற்றிப் பேச விரும்பும் கமல். தலீபானின் தோற்றம் என்ன ? அதன் வளர்ச்சி என்ன? அது அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எவ்வாறு போராடியது என்று எந்த வரலாறும் பேச விரும்பவில்லை. மாறாக பின்லேடனைத் தேடும் அமெரிக்கனுக்குத் தெரியும் தலீபானாகவே நமக்கும் காட்டுகிறார். சரி காட்டிவிட்டுப் போகட்டும். ரொம்பத் தைரியம் தான். அப்படிப்பட்ட தைரியசாலி ரொம்ப வருஷமில்லை ரெண்டே வருஷம், அதாவது 2009ல் நம்ப தமிழ்நாட்டிலிருந்து 10 கி.மீ தொலைவில் இலங்கையில் நடந்த பயங்கரவாதத்துக்கு எதிரான  போர் என்கிற பெயரில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானோரைப் பற்றி ஏன் படம் எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை. தமிழ்நாட்டைப் பற்றி யோசித்தால் கற்பனை வறண்டுவிடுமோ ? காஷ்மீரிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் தமிழ் பேசும் காஷ்மீரி என்று கற்பனை பண்ண முடிந்த அவருக்கு தமிழ் பேசும் கமல் தமிழ்நாட்டிலிருந்து பத்து கி.மீ கடலுக்குள் போனான் என்று கதை யோசிப்பதில் கடும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதன் காரணம் எனக்கு விளங்குகிறது.

காரணம் கமல் மட்டுமல்ல. இந்திய அரசும் ஒரு காரணம். ஏன் அமெரிக்க அரசும் ஒரு காரணம். என்னவென்றால், குற்றப் பத்திரிக்கை என்ற பெயரில் ராஜீவ் காந்தி கொலையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்தார் ஆர்.கே.செல்வமணி. அப்படம் சென்சாரிலேயே கிழித்தெறியப்பட்டது. ஆர்.கே.செல்வமணி அதற்குப் பின் படமே எடுக்கவில்லை. கமல் உணர்ச்சி வசப்பட்டு ஈழத் தமிழனாக உருமாறி ‘புலி’ரூபம் இலங்கையில் எடுத்திருந்தாரென்றால் (ராகுல் போஸ் கேரக்டரை அவர் செய்வார் இதில்) அப்படமும் சென்சார் போர்டு தூண்டிலில் சிக்கி  திணறிக் கொண்டிருக்கும் இன்னேரம். கமல் ரசிகர்கள் அப்போது  போராட வருவார்களா?  சந்தேகமே. மேலும் அவருமே சிங்களன் ராஜபக்சே போல ‘இவனுங்க எதுக்கு அவன் நாட்டுல போய்கிட்டு தனி நாடு கேட்குறானுங்க’ன்னுட்டு கூட நினைத்திருக்கக் கூடும். அப்படிப் போனவுக 1800ல போன மலையகத் தமிழருங்க மட்டுமே அய்யா. அவுகளைத் தவிரவும் சுமார் 20 லட்சம் தமிழங்க, தமிழ் மூதாதையருங்க,  மூவாயிரம் வருஷத்துக்கும் முன்னால இருந்தே இலங்கைல வாழறாங்கய்யான்னு நாம் சொன்னாலும் யாருக்குப் புரியுது. அட விடுங்கய்யா நேத்து கூட நாலு பேரைச் சுட்டான் இலங்கைக் கடற்படைக் காரன். அதை விடவா உங்களுக்கு பரபரப்பான கதைக் களம் வேணும்? (இந்த மீனவர்கள் கதைக் களத்தை வைத்து எடுத்த ‘கடல்’ படத்துல அவுங்க மீனவங்களுக்கு வெச்ச ஆப்பை பாத்தீங்களா? இவுக ராஜபக்சேக்கு ஆதரவா கதையெழுதுறாக.. வில்லன் பாதிரியார் ஒரு மீனவனை கொன்னுட்டு அந்த டெட்பாடியை நடுக்கடல்ல கொண்டு போய் போட்டுட்டு வந்து இலங்கைக் கடற்படை சுட்டான்னு சொல்றாங்களாம்... என்னா கதை.. என்னா கதை..).

கமல் இந்த மாதிரியெல்லாம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவே இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜி-7 நாடுகள் என்ற பெயரில் அநியாயங்கள் பல புரியும் நாடுகளின் கூட்டமைப்புக்கு ஆமாம் சாமி போடும் படம் தான் எடுக்க விரும்பினார். அப்படி அவர் எடுத்த விஸ்வரூபம் அமெரிக்காவில் நூறு நாளை நோக்கி வெற்றி நடை போடுகிறது. அமெரிக்காவின் அடிபொடி இந்தியாவும் தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து படத்தை ஓட்டுகிறது. அமெரிக்கா-இந்தியாவின் நோக்கம் தலீபான்கள், பொதுவாக முஸ்லீம்கள் பயங்கரவாதிகள். அவர்களை ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டும் என்கிற உணர்வை ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊட்டவேண்டும். ஊட்டிவிட்டார்கள்.

இஸ்லாம் மதத்துடன் அமெரிக்கா கூறும் தீவிரவாதம் இணைந்து காணப்படுவது தற்செயலானது அல்ல. அமெரிக்கா இதற்கு முன்பு ஏப்பம் விட்ட நாடுகளையும் இப்போது ஏப்பம் விட மிரட்டிக் கொண்டிருக்கும் நாடுகளையும் பாருங்கள். ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், எகிப்து, லிபியா, சிரியா, ஏமன், சௌதி அரேபியா, பாகிஸ்தான்... எல்லாமே இஸ்லாமிய நாடுகள். எல்லாமே எண்ணெய் வளம் கொண்ட நாடுகள். அமெரிக்காவின் ஹிட்லிஸ்ட்டில் இவை தவிர மற்ற நாடுகளும் உண்டு.

இறையாண்மை, இறையாண்மை என்று கூக்குரலிடும் மோகன்கள், சோனிக்கள் அமெரிக்காவின் இந்த மாதிரியான இறையாண்மையை பார்க்க மறுத்து அவர்களோடு ஈஷிக்கொண்டு ஏன் நிற்கிறார்கள்? கழுத்தை அறுக்கும் தீவிரவாதி மோசமானவன் என்றால் பட்டினி போட்டே நாளைக்கு நூறுபேரைக் கொல்லும், 3 ஆண்டுகளில் 3 லட்சம் பேரை ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் கொன்ற இந்த அமெரிக்க அரசும் அதன் நயவஞ்சக அரசியலும் எவ்வளவு மோசமானது? கொடூரமானது?  தீவிரவாதிகளின் கொடூரச் செயல்கள் தீமையை எதிர்க்க இயலாமல் நிற்கும் அவர்களின் கையறு நிலையைக் காட்டுகிறதேயன்றி அவர்களின் வெறித்தனத்தை அல்ல. தீவிரவாதிகள் தங்களின் இழிந்த வாழ்வு நிலையை உணராத, உணர இயலாத மக்களாலேயே அத்தகைய கையறு நிலைக்கு ஆளாகிறார்கள்.

இது போல தலீபான்கள் ஆங்கிலம் பேசுவதை எதிர்ப்பது, பெண்கள் உடலின் பாகங்களை மூட வேண்டும் என்று பேசுவது, அன்னிய கலாச்சாரம் தங்களுள் ஊடுருவாமல் தடுப்பது என்று தங்களின் அமெரிக்க எதிர்ப்பின் அடையாளமாகச் செய்திருக்கும் செயல்களை வெறுமனே அடிப்படைவாதம் என்று பார்க்க விரும்பும் கமலின் செயல் சரியானது அல்ல. இன்றைய காலகட்டத்தில் மிகவும் கலாச்சார மற்றும் மதத் தாக்குதலுக்குள்ளாகும் மதம் இஸ்லாமிய மதமாகும். எனினும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றிணைய அவர்களுடைய ஆழமான மத நம்பிக்கையாலும் முடியவில்லை என்பது இஸ்லாமியர்கள் அனைவரும் ஆய்ந்து தெளியவேண்டிய விஷயமாகும்.

நைஜீரியர்கள் என்றால் தீவிரவாதிகளா?

கடைசி காட்சியில் நியூயார்க்கில் குண்டு வைப்பவன் தற்போது வெளிவரும் பல ஹாலிவுட் படங்களைப் போலவே ஒரு நைஜீரியன். அவனுக்கும் இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும், கமலுக்கும் என்ன சம்பந்தம் ?

நைஜீரியா ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு ஏழை நாடு. நாடென்னவோ ஏழை நாடு ஆனால் அதன் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு வளங்கள் அதிகம். அமெரிக்காவுக்கு தன்னுடைய நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி (44 சதவீதம்) யைத் தருகிறது நைஜீரியா.
வழக்கம் போல முதலில் அந்நாட்டு மக்களின் நோய்களைப் போக்க மருத்துவத்தை ப்ரீயாகத் தந்து உள்ளே நுழைந்தது அமெரிக்கா; கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆக்கிரமிப்பை செய்தது. அந்நாட்டில் உட் புரட்சிகளை ரெடி செய்து நடத்தி தங்களுக்குத் தேவையான ஆளை 1999ல் அங்கு பதவியமர்த்தியது. அதன் பின் இப்போது 2009ல் உள்நாட்டு புரட்சிக்காரர்களை அடக்க பாதுகாப்பு(??) படையை அனுப்ப ஹிலாரியம்மா ஏற்பாடு பண்ணினார்.(மேலும் விவரம் வேணும்னா இதைப் படிங்க http://concernedafricascholars.org/african-security-research-project/?p=83) இப்படி நைஜிரியாவுக்குள் ஒட்டகம் கூடாரத்துக்குள் ஒதுங்க இடம் கேட்ட கதையாய் அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்ய கடைசியில் அங்கிருந்து போராடும் அமைப்புகளுக்கு உள்நாட்டில் கூட போராடமுடியாத நிலை. அரசு ராணுவமே அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து தான் செயல்படுகிறது. எனவே தான் ஒரு நைஜீரியாக்காரன் அமெரிக்காவில் வந்து அமெரிக்காவுக்கு குண்டு வைக்க நினைக்கிறான். இவ்வளவு பெரிய விஷயத்தை கமல் எப்படி ஹாலிவுட் படங்களைப் போலவே மறைத்து, கூலாக பாட்டுக் கேட்டுக் கொண்டு பாம் வெடிக்கும் ஒரு ‘பயங்கர’மான தீவிரவாதியை மட்டும் நமக்குக் காட்டுகிறார் ?

இத்தனைக்குப் பின்பும் சப்பைக் கட்டு காட்சிகளுக்கு குறைவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் செய்யும் காமெடியை கவனியுங்கள். நைஜீரியன், தற்கொலைப் படை குண்டு வைப்பவனாக, அணு குண்டை ரெடி செய்துவிட்டு அது வெடிக்கும் முன் அதனருகே உட்கார்ந்து தொழுகை செய்வான். அதே நேரத்தில் அவன் வீட்டுக்கு வெளியிலேயே வாசலில் எஃப்.பி.ஐயுடன் அவனைப் பிடிக்க வழிபார்த்து காத்துக் கொண்டிருக்கும் கமல் என்கிற காஷ்மீரியும் தொழுகை செய்வார். அவர் தவறாத இஸ்லாமியர் என்று இஸ்லாமியரைப் பெருமைப் படுத்துகிறாராம்.

இப்படி அரசியல் என்கிற தளத்தில் படம் முழுவதும் வண்டி வண்டியாய் விஷத்தை அள்ளித் தெளித்திருக்கும் கமலின் விஸ்வரூபத்தின் முன் டெக்னிக் விஷயங்களில் விஸ்வரூபம் பெற்ற பாராட்டு ஒன்றுமேயில்லை. இவ்வளவு விஷங்களையும் விதைத்த கமலின் படம் தடை செய்யப்பட்டது என்ன காரணத்தாலென்றாலும் அது வரவேற்கப்பட்டிருக்க வேண்டியதே. அல்லது வெளியிடப்பட்டாலும் அதன் ரகசிய நச்சுக் கொடுக்கை நாம் இனம் கண்டு மக்களுக்கு வெளிப்படுத்தி பின்னர் அவர்கள் இப்படத்தைப் பார்த்தால் யதார்த்தத்தை எவ்வளவு தூரம் திரிக்க முடியும் என்பதை கண்டுகொள்வார்கள். படம் நிறுத்தப்பட்ட போது இதற்கு ஆதரவு தெரிவித்து இணையத்திலும், பேஸ்புக்கிலும் மிக உணர்ச்சி வசப்பட்டு அமெரிக்காவில் இருந்து பணம் அனுப்பிய அமெரிக்கோ-இந்தியர்கள் அதிகம். அவர்கள் இவ்வளவு விளக்கங்களையும் படித்து விட்டு இனியும் கமலுக்கு பணம் அனுப்புவார்களா?

இப்போது நீங்கள் சொல்லுங்கள் விஸ்வரூபம், விஷமான ரூபமா ? இல்லையா?


Thursday, March 7, 2013

ஹியூகோ சாவேஸ் - ஒரு மக்கள் தலைவனின் மரணம்


வெனிசூலா. தென்னமெரிக்காவின் வடக்குக் கடற்கரையில் இருக்கும் 3 கோடி மக்கள் கொண்ட ஒரு சிறிய நாடு. எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டை வல்லரசுகளான அமெரிக்காவும், இங்கிலாந்தும் கபளீகரம் செய்ய தங்கள் நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலம் முயன்ற காலத்தில் அதை தடுத்து நிறுத்தி தன் நாட்டின் எண்ணெய் வளங்களைக் காப்பாற்றி, அரசுடைமையாக்கி, அதன் வருமானம் முழுதும் தனது நாட்டு மக்களுக்கே போய்ச் சேரும்படிச் செய்தவர் தான் அதிபர் ஹியூகோ சாவேஸ். 58ஏ வயதான சாவேஸ், செவ்வாய் அன்று வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோயால் மரணமடைந்தார்.

ராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்த சாவேஸ் 1992ல் அப்போதைய அதிபர் கார்லோஸை கவிழ்க்க முயற்சி செய்து அது தோல்வியில் முடிய கைது செய்யப்படுகிறார். பின்பு இரண்டு வருடங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர் சமூக ஜனநாயக கட்சியை ஆரம்பித்து 1998ல் வெனிசுலாவின் அதிபரானார். அதன் பின் தொடர்ந்து நான்கு முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசியாக கடந்த 2012 டிசம்பரில் நடந்த தேர்தலில் கூட அவர் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது உடல் நலம் குன்றிய நிலையில் பதிவி ஏற்காமலேயே மரணமடைந்தார்.

நமக்கு சாவேஸ் யார்?  நாம் ஏன் அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும் ? இதற்கு பதில் அவர் ஜனாதிபதியாக வெனிசுலா மக்களுக்கு என்ன செய்தார் என்பதைப் பார்த்தால் தெரிந்துவிடும்.

வெனிசூலாவில் இருந்த பன்னாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை (அதாங்க நம்ப ஊர்ல ரிலையன்ஸ், ஷெல், மொபில் போன்ற கம்பெனிகளை) அரசுடைமையாக்கினார். அதனால் என்ன லாபம்? ரிலையன்ஸ் கம்பெனியின் எண்ணெய் வருமானம் பூராவும் அம்பானியின் பாக்கெட்டுக்குப் போகாமல் அரசுக்குப் போய்விடும் இல்லையா அது போல அங்கு எண்ணெய் வருமானங்கள் அனைத்தும் அரசுக்கே போய்ச் சேர்ந்தன. அந்தப் பணத்தை வைத்து குழந்தைகளுக்கு மூன்று வேளை சத்துணவுத் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவம், குடும்பத்துக்கு உழைக்கும் பெண்களுக்கும் ஓய்வூதியம்-பென்சன் என்று பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்தார்.

வெனிசூலாவில் வாண்டையார் பரம்பரைகள் போல் பல்லாயிரம் ஏக்கர்கள் வைத்து ராஜாவாகத் திரிந்த பிரபுக்களை சரிக்கட்டி அவர்கள் நிலத்தை விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்து கூட்டுறவு விவசாயத்தை உருவாக்கினார். கூட்டுறவு விவசாயம் வந்தால் என்ன ஆகும் ? விவசாயம் பெருகும். விளைபொருட்கள் பெருகும். உணவுக்கு அடுத்த நாட்டை நாடவேண்டிய அவசியம் வராது. கிராமங்கள் செழிப்பாக இருக்கும். விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்ள மாட்டார்கள்.

அமெரிக்காவின் ஏகபோக நிறுவனங்களையும், அமெரிக்காவின் ஆதிக்கப் போக்கையும் வெளிப்படையாகவே சாடி வந்தார். ஆனாலும் அவரது நாட்டு எண்ணெய்யின் பெரும்பகுதியை அமெரிக்காவுக்கே விற்கும்படி நேரிட்டதால், அமெரிக்காவை முற்றிலும் ஒதுக்கிவிட முடியவில்லை. அதற்காகவே ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் சேர்ந்து புதிய எண்ணெய் வர்த்தக திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் போய்ச் சேர்ந்துவிட்டார்.

கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நல்ல நண்பர். ஏதோ செத்தாரு எங்கள வுடுய்யா என்று நீங்கள் மனத்துள் பேசுவது கேட்கிறது. உலக வரைபடத்தில் அமெரிக்காவையும் அதன் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியையும் எதிர்த்து நின்று நாட்டின் பொருளாதாரம் மக்களையே போய்ச் சேரவேண்டும் என்று நினைக்கும் மிக மிகச் சில தலைவர்களில் சாவேஸூம் ஒருவர். சாவேஸின் மரணம் அப்படி ஒரு அமெரிக்க எதிர்ப்பாளத் தலைவரை நாம் இழக்க வைத்து விட்டது. நம்ம ஊர் போனியா, போன்மோகன்சிங், போரணாப்போகர்ஜி போன்றவர்களைப் பார்த்தே பழகிய நமக்கு இவர் இங்கிருந்தால் அண்ணா, பெரியார் ரேஞ்சுக்கு உயரே வைத்து போற்றப்படும் தலவைராக இருந்திருப்பார் என்பது புரிய வாய்ப்பு மிகவும் குறைவு.

அவர் ஒரு சிறந்த சோஸலிஸ்ட். அவருடைய முறைகள் இடது சிந்தனைகளையொட்டி இருந்தாலும் இடது சாரிகள் போல புரட்சி என்று வெளிப்படையாக உலகளாவியம்(Globalisation) போன்ற விஷயங்களை அவர் எதிர்க்கவில்லை. ஜனநாயக வழியிலேயே நாட்டைச் சீர்திருத்த முடியும் என்று நம்பினார். அவருடைய புதிய வழிமுறைக்கு பொலிவியனிசம் என்று பெயரும் சூட்டினார். அதன்படி வெனிசுலாவை அதன் மக்களை சமவாழ்வு மற்றும் தன்னிறைவு அடையச் செய்ய செயல்பட ஆரம்பித்திருந்தார். அதற்கு இன்னும் ஒரு 40 ஆண்டுகளாவது ஆகும் தான். ஆனால் அதற்குள்ளேயே இறந்து விட்டார்.

அவரே ஒரு முறை குற்றம் சாட்டியது போல அவருக்கு கேன்ஸர் வரும்படி செய்யவே ஏதோ வல்லரசு நாடுகள் சேர்ந்து ரகசியமாகத் திட்டம் நிறைவேற்றினர் என்றெல்லாம் கதைகள் உண்டு. அமெரிக்காவின் எதிரி அழிப்பு முறைகள் பலவிதம். பறக்கும் விமானங்கள் வெடித்து அதிபர்கள் இறப்பது, திடீரென்று முளைக்கும் புரட்சிப் படை லிபியாவில் கடாபியைக் கொன்றது போல தலைவர்களைக் கொல்வது இன்னொரு முறை, அல்லது நாட்டின் உள் அரசியலைப் பயன்படுத்தி உள்நாட்டு புரட்சி அமைப்புகளின் வழியாக வெடிவைத்துக் கொல்வது (நம் ராஜீவ் காந்தி போல) என்று பலவிதங்கள் உண்டு. அதில் இப்படி நோய்க்கிருமிகளை செலுத்தி தலைவர்களை சீக்கிரம் மேலே அனுப்புவது புது வழியாக இருக்கலாம். ஏற்கனவே சிஐஏ அவரைக் கவிழ்க்க முயற்சி செய்து தோற்றும் போயிருக்கிறது. ஆனால் மரணத்தின் குறி தப்பாததல்லவா?

சாவேஸ் போன்ற அற்புதமான மனித நேயமிக்க, மக்களின் வாழ்வு சிறக்கவேண்டும் என்று பாடுபட்ட தலைவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. புதிதாக அப்படிப்பட்ட நல்ல மனிதர்களை தலைவராக வர எந்த நாட்டின் ஆளும் வர்க்கமும் அனுமதித்துவிடுவதும் இல்லை.

உலகின் எதிர்காலம் படிப்படியாக மங்கிக் கொண்டே இருக்கிறது.