Thursday, April 23, 2009

தமிழ்ப்பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் – 9 வது நாள்

ஏப்ரல் 21, 2009. செவ்வாய்க்கிழமை.
சென்னை மார்ஷல் சாலையில் உள்ள ம.தி.மு.க அலுவலக கட்டிடம்.

அமைதியான வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இடம் வழங்கக் கூட போலீஸ் மறுத்த ‘சனநாயக’ நிலையில் அரசியல் சார்பற்ற பெண்கள் இயக்கங்கள் போராட வை.கோ தனது சென்னை எழும்பூர் கட்சி அலுவலகத்தின் முன்புறத்தை வழங்கினார். இருபது பேர் பங்கேற்றுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இதுவரை 5 பேர் கவலைக்கிடமாகப் போயுள்ளனர். அவர்கள் ஜெயமணி(34) - திருச்சி; பழனியம்மாள்(28) – மதுரை, செல்வி(40)-கொடைக்கானல், லோகநாயகி(44) – வேலூர், சாந்தி(35) – திண்டுக்கல் ஆவர். இதில் ஜெயமணி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் சிகிச்சையை மறுத்து திரும்பி வந்து போராட்டத்தைத் தொடர்கிறார்.

அந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 9வது நாளாக நீடிக்கிறது.
இன்று காலையில் விவேக் மற்றும் பல சினிமா பிரமுகர்கள் வந்து உண்ணாவிரதம் இருக்கிறவர்களை வாழ்த்திச் சென்றனர்.

முன்னதாக, நேற்று, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் பெண்கள் சோனியா காந்தி தங்களிடம் போரை நிறுத்த உறுதியளிக்க வேண்டும் எனப் போராடி வருவதால் கனிமொழி, தி.மு.க சார்பான வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டனர்.

மாலை ஆறு மணியளவில் ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வந்திருந்து உரையாற்றினார். ஈழப் போராட்டம் இன்று உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதற்காக பெருமிதம் அடைந்தார். தென்னாப்பிரிக்காவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த இலங்கைப் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் (வயது 75) தென்னாப்பிரிக்க தகவல் தொடர்புத்துரை அமைச்சரின் உறுதிமொழிக்குப் பின் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அடுத்த சில நாட்களில் நடந்த நெல்சன் மண்டெலாவின் ஆளும் கட்சி மாநாட்டில் ஈழப் போராட்டத்தை அங்கீகரிப்பதாக தீர்மானம் இயற்றியுள்ளனர் என்ற தகவலை காசி ஆனந்தன் கூறினார்.

அதைத் தொடர்ந்து நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் அங்கு வந்திருந்த 100 பேர் கலந்து கொண்டனர். எழும்பூர் ரயில் நிலையம் வரை சென்று திரும்பியது ஊர்வலம். மெழுகு வர்த்தி ஏந்தி சாலையோரம் நின்று குழுவினர் தொண்டை வலிக்க “ சோனியாவே போரை நிறுத்து” என்று கோஷம் போட சாலையில் இங்குமங்கும் வாகனங்களில் எனக்கென்ன வந்தது என்று ‘பறந்து’கொண்டிருந்தனர் பொது சனங்கள்.
ஊர்வலம் முடிந்ததும் உண்ணாவிரதத்தை நடத்தி வரும் விஜயலஷ்மி வடஇந்தியாவிலிருக்கும் சில சமூக அமைப்புகள் மற்றும் மேதா பட்கரிடமிருந்து, இப்போராட்டத்தை ஆதரித்து வந்த கடிதங்களை வாசித்தார். பின்னர் பேசிய மருத்துவர் அம்மா பெண்கள் அனைவரும் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு போரை நிறுத்திவிட இயலும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர்கள் அனைவரையும் மீண்டும் நாளை சந்திக்கலாம் என்று எண்ணியபடி கிளம்பி வீடு வந்து விழுந்து டி.வி.யை ஆன் செய்தால், கலைஞர் மேலும் இரண்டு ‘தந்திகள்’ கொடுத்திருந்தார் மத்திய அரசுக்கு. அத்தோடு நாளை மறுநாள்(23ம் தேதி) வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
நாளை மறுநாளுக்குள் ராணுவம் மொத்த புத்துமாத்தளம் பகுதியையும் தரைமட்டமாக்கியிருக்கும்.

அப்புறம் போர் தன்னாலேயே நின்றுவிடும்.

உடனை கலைஞர் ‘வேலை நிறுத்தம் வெற்றி!! மத்திய அரசு பணிந்தது !!’ என்று அறிக்கை விட, அதை ஜெயலலிதாவும், ராமதாஸும் ‘நாடகம்’ என்று வருணிக்க, பிரணாப், ‘அன்னை’ சோனியா முதல் பான் கி மூன், ஹில்லாரி வரை அனைவரும் ‘தீவிரவாதத்தை’ ஒழித்த நிம்மதியோடு தூங்கப் போவார்கள். ராஜபக்சேவும், சகோதரர்களும் தமிழர்களின் வாழ்க்கையை எப்படி வதை முகாம்களில் ‘சீரமைப்பது’ என்று அவர்களின் அடுத்த ஐந்தாண்டு திட்டங்களில் இறங்க, நம்ம ஊர்த் தன்மானத் தமிழ் மக்கள் IPL ஒரு 25-25 மேட்ச் நடத்த அதை டி.வி.யின் முன்னால் உட்கார்ந்து வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்.

ஏப்ரல் 22, 2009. செவ்வாய்க்கிழமை. உண்ணாவிரதத்தின் 10வது நாள்
அதிகாலை 5 மணி.

சத்தமில்லாமல் மார்ஷல் சாலையின் இருமுனைகளையும் தடுப்புகள் போடப்பட்டன. சாலையோடு இணையும் மற்ற சந்துபொந்துகளில் போலீசார் வந்து நின்றனர். பத்திரிக்கை, டி.விக்காரர்கள் ரோட்டின் முனையிலேயே நிறுத்தப்பட்டனர். இரண்டு வேன்களில் வந்த சுமார் 150 போலீசார் உண்ணாவிரதமிருந்தவர்களில் கவலைக்கிடமாக இருந்த 5 பெண்களை கைது செய்து வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற பெண்களை கைது செய்யவில்லை. அவர்கள் அடுத்து கவலைக்கிடமான நிலையை அடையும் போது கைது செய்யலாமென்று விட்டுவைத்திருக்கிறார்கள் போல.

வாழ்க சனநாயகம்.

ஏப்ரல் 25, 2009. வெள்ளிக்கிழமை. உண்ணாவிரதத்தின் 13வது நாள்
திடீர் ஈழ வீராங்கனையாய் அவதரித்த ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் அரசின் கெடுபிடிகளினாலும், ஊடக இருட்டடிப்புகளாலும் வாடியிருந்த பெண்கள் மக்களின் 'எனக்கென்ன வந்தது' என்ற பார்வையால் மனம் வெறுத்து போராட்டத்தை நிறுத்தியிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Friday, April 17, 2009

வாழ்க்கையின் விளையாட்டு.

புதுதில்லி:

வாழ்க்கை :

ஜனவரி 2009, ஒரு அதிகாலை 5 மணி.


பாத்திமா பேகம். வயது 65. டில்லி (குடிசை)வாசி.

வழக்கம் போல் சீக்கிரமே எழுந்து குடிசையை விட்டு தன் சாக்குப் பையுடன் வேலைக்குக் கிளம்புகிறார்.


20 வருட வேலை. அலுக்காத, சளைக்காத வேலை. குப்பை பொறுக்கும் வேலை.

நேரே விறுவிறுவென நடந்து அருகிலிருக்கிற கார்ப்பரேஷன் குப்பைக்கிடங்கு வந்து சேர்கிறார். இதுதான் அவருடைய ஆபீஸ். 60 மீட்டர் உயர குப்பை மலை அது. 3 4 சதுர கி.மீட்டர் பரப்பளவு இருக்கும். அதன் நாற்றம் அரை கிலோமீட்டர். டில்லியின் மூன்று பெரிய குப்பைக்களங்களில் இதுவும் ஒன்று.


இன்னும் விடியவில்லை. டீ குடிக்கவும் தற்போது முடியாது.


கையிலிருக்கும் குச்சியைக் கொண்டு காலடியில் மிதிபடும் குப்பையை கவனமாகக் கிளறுகிறார்.


என்ன கிடைக்கும் ? பழைய பாட்டில்கள், உடைந்த பழைய பல்புகள், இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக் இன்னும் உங்கள் வீட்டில் எதெது வேண்டாமோ அவற்றையெல்லாம் இங்கே சேர்த்துக்கொள்ளவும்.


குப்பை சேகரிப்பும், பிரிப்பும் எவ்வாறு நடக்கிறது ? முதுகில் ஒரு பெரிய கோணியும், கையில் ஒரு குச்சியுமாகத் தெருக்களில் நாம் பார்க்கிறோமே. இவர்கள் பேரிவாலாக்கள்என்றும்போரிவாலாக்கள்என்றும் (ஹிந்தியில்) அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் பணி.. தெருக்களிலும், தெருக்குப்பைகளிலும் இருந்து மறுசுழற்சி’(recycling) செய்யப்படக்கூடிய இரும்பு, பிளாஸ்டிக் முதலான பொருட்களைப் பிரிப்பது. அதுதான் அவர்களின் மால்’.


பேகம் போன்றவர்கள் பின்னிவாலாஎன்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பெரிய குப்பைக்களங்களில் இறங்கி குப்பை பிரிப்பவர்கள். காடிவாலாக்கள் ஆபீஸ்களிலிருந்து வேஸ்ட் வாங்குபவர்கள். கபாரிகள்வீடுகளில் பழைய பொருட்களை வாங்குபவர்கள். நம்ம ஊரில் குப்பை பொறுக்குபவன், பழைய பேப்பர்க்காரன் என்ற இரண்டே பெயர்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.


இவர்கள் அனைவரும் குப்பைகளை கொண்டு சேர்க்கும்(விற்கும்) இடம் குடோன்’ (godown) எனப்படும் குப்பைப் பிரிப்பறை. இதை நடத்துபவர்கள் சிறுசிறு முதலாளிகள். இங்குதான் குப்பைகள் தொழிற்சாலை, ரசாயன மற்றும் வீட்டுக்கழிவுகளாகவும், மற்றும் எளிதில் உயிர்ச்சிதையக்கூடிய, உயிர்ச்சிதைவடைய இயலாத மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.


இங்கிருந்து அந்தந்த சுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகின்றன.

பேகம், இந்தப் பரந்த குப்பைச்சந்தையில் தான் ஓர் முக்கிய அங்கம் என்ற உணர்வேயின்றி பரபரவென்று குப்பைகளிலிருந்து பொறுக்கி தன் சாக்குப் பையில் போட்டுக்கொண்டே முன்னேறுகிறார். சுற்றுமுற்றும். அந்த அழுகிய நாற்றத்தினால் எள்ளளவும் பாதிக்கப்படாதவர்கள் போல மேலும் பல தலைகள் குனிந்தவாறே ஆங்காங்கே தென்பட்டன. யாரும் யாரையும் பார்த்து ஹாய் குட்மார்னிங் சொல்லவில்லை. ரொம்பவும் நெருங்கி தன் தேடுதல் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் விரட்டவும் இல்லை. அவரவர் குப்பை அவரவருக்கு.


பேகம் குப்பைகளுக்குள் ஏதோ பளீரென்று தட்டுப்பட, கூர்ந்து பார்க்க குனிந்தபோது, மட்டென்று பின் மண்டையில் ஓர் அடி விழுந்தது. நிலைகுலைந்து விழுந்தவரின் முகம் நசநசவென்ற எதையோ உணர்ந்தது. நிமிர்ந்து பார்க்க, எதிரே நின்ற ஆள் யூனிபாரம் அணிந்திருந்தான். கோபமாகப் பேசினான்.


இங்கேயெல்லாம் வந்து இனிமேல் குப்பை பொறுக்கக்கூடாது...எங்க கம்பெனி காண்ட்ராக்ட் எடுத்திருக்கு.. புரிஞ்சதா.. போ போ.. பேகம் அவன் சொல்வதன் அர்த்தம் புரியாமல் வலியைத் தாங்கியபடி ஏன் பொறுக்கக்கூடாது என்றதற்கு மீண்டும் பிரம்படியும், உதையும்தான் பதிலாகக் கிடைத்தன பேகத்திற்கு.


ஏதோ தவறாக நடந்துவிட்டது என்று புரிகிறது பேகத்திற்கு. ஆனால், என்னவென்றுதான் புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். நாளை முதல் பேகம் இங்கு குப்பை பொறுக்கமுடியாது.


------ ****** ----------------

விளையாட்டு :

இங்கிலாந்தின் அடிமை நாடுகளாக இருந்த காலனி நாடுகளுக்கிடையே (அடிமை)நல்லுணர்வை வளர்த்துக் கொள்வதற்காக 1921ல்ஆரம்பிக்கப்பட்டது காமென்வெல்த்’. இதன் தலைவர் இங்கிலாந்து ராணி எலிசபெத் ஆவார்.


பிற்காலத்தில் விடுதலையடைந்த பின் இவை காமென்வெல்த் குடும்பங்களாயின. காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இதன் தற்போதைய 54 உறுப்பினர் நாடுகளுக்கிடையே நல்லுணர்வை வளர்க்க நடத்தப்படும் போட்டிகளாகும். வரும் 2010 அக்டோபரில் இப்போட்டிகளை நடத்தும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது.


தலைநகர் தில்லியில் நடைபெற இருக்கும் இப்போட்டிகளுக்கான விளையாட்டுக்கிராமம் (sports village) யமுனையாற்றின் கரையில் எழிழுடன் கட்டப்பட ஆயிரத்து நூற்று ஐம்பத்தியொரு(1151) கோடி ரூபாய்ச் செலவில் 160 ஏக்கர் இடத்தில் பிரம்மாண்டமாய்த் தயாராகிக்கொண்டிருக்கிறது.

54 நாடுகளிலிருந்தும் வரவிருக்கும் வீரர்களும் தங்க, விளையாட, சுற்றிப் பார்க்க வசதிகள் செய்யப்படும். பெரிய பெரிய தலைவர்கள் விருந்தினராய் வருகை தருவார்கள். இப்படிப்பட்ட முக்கியமானநிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் தில்லி மாநகரம் மட்டும் அழுக்காகத் தெரியலாமா ? பளபளக்க வேண்டாமா ?


நல்ல விஷயந்தானே. இந்தியா மிளிரவேண்டாமா ?’


யோசித்தது தில்லி கார்ப்பரேஷன்’. விளைவு. தில்லியின் குப்பைகளை அள்ளும் பொறுப்பை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது. இதனால் குறைந்த செலவில் நிறைந்த குப்பையை அள்ள முடிகிறது. கார்ப்பரேஷன் இதில் மிச்சம் பிடிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா ?


நாற்பது ( ௪௦ ) கோடி ரூபாய். அடேங்கப்பா.


நல்ல விஷயந்தானே. எந்தக் கார்ப்பரேஷன் தான் லாபத்தில் ஓடியிருக்கிறது ? 40 கோடி ரூபாய் அரசுக்கு லாபம் தானே ?


----------- ************ --------------------------------------------------------


வாழ்க்கையின் விளையாட்டு:

இவ்வளவு நாளும், தில்லி கார்ப்பரேஷனின் அரசு ஊழியர்கள் வாறிய 80 சதவீத குப்பைகள் போக மீதி 20 சதவீத குப்பைகளை அள்ளி சுதந்திரமாய்பிழைத்த பேகம் போன்ற ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர்(1,50,000) இனிமேல் நடு குப்பையில்தான் நிற்க வேண்டும்.


ஒரு நாளில் 150 200 ரூபாய்கள் சம்பாதித்து ராஜபோகவாழ்க்கை வாழ்ந்தவர்கள் இவர்கள்.


இதில் சில ஆயிரம் பேர் தங்கள் வருமானத்தில் பாதிக்கும் குறைவான சம்பளத்திற்கு இந்தத் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளிடமே கொத்தடிமை வேலை பார்க்க நேரிடும்.

ஒரு லட்சம் பேர் அள்ளிய குப்பையை இந்த சில ஆயிரம் பேரே அள்ளிவிடவேண்டும்.


ஒருவேளை கார்ப்பரேட்டுகளுக்காக குப்பை அள்ளும்போது கழுத்தில் டைகட்டி அள்ள வேண்டிவருமாயிருக்கும். பாவம், இந்த வாழ்நாள் ஒப்பந்தஅடிமைகளுக்கு அது தான் தூக்குக் கயிறு.


இந்த (கொடுமையான) வேலைகூட கிடைக்கப்பெறாத மற்றவர்கள் ? இருக்கவே இருக்கிறது திக்கற்றவர்களின் பழம்பெரும் பாரம்பரியத் தொழில், பாலியல் தொழில்.


காமன்வெல்த் போட்டிகளை
DDயில் காட்டுவார்களா ? இல்லை டிஷ்ஷில் மட்டும் தான் காட்டுவார்களா ? அதுதானே நம் கவலை.

சரி. நம்ம ஊர்க்கதை என்ன எனகிறீர்களா ? 'ஓனிக்ஸ்'காரனிடம்தான் கேட்கவேண்டும்.
- அம்பேதன்.

Thursday, April 9, 2009

அகிம்சை மரணிக்கும்போது ...

'தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர்' கலைஞர் தலைமையில் இன்று இலங்கைத்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற, குண்டு வீச்சுகளிலிருந்து காப்பாற்ற, வதை முகாம்களிலிருந்து மீட்க 'மாபெரும்' பேரணி!!!

'தந்தி கொடுத்தார் கலைஞர்.. ' , 'தந்தி கொடு்க்கிறார் கலைஞர்', 'தந்தி கொடுப்பார் கலைஞர்'. தந்தி கொடுக்க என்ன செலவாகும் ? அதிக பட்சம் ஐந்து ரூபாய் ? ஆனால் பதவியை விட்டால்... பல்லாயிரம் கோடிகளில் லாபம் போகும்... பிள்ளைகளின் எதிர்காலம் போகும்... கடற்கரையில் 'உறங்க' இடம் இல்லாமல் போகும்.. இதில் காமெடி என்னவென்றால் இவருடைய தியாகங்களின் பட்டியலில் 'தந்தியடித்ததையும்' இவர் சேர்ப்பதுதான்.
புரட்சித் தலைவியோ இன்னும் அபாரம். 'போரென்றால் மக்கள் கொல்லப்படுவது சகஜம்' என்று 'வசனம்' பேசியவர் திடீரென்று 'டயட் உண்ணாவிரத' நாடகம் நடத்துகிறார்.

இது தான் இன்றைய அஹிம்சை போராட்டங்களின் கேலிக்கூத்து.

அஹிம்சை வழியில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குமார் முதல் மாரிமுத்து வரை எல்லாம் முட்டாள்களாகிப்போனார்கள்.
உலகமெங்கும் மூன்று மாதங்களாக ஊர்வலம் போய் போராடிய தமிழ் மக்கள் அனைவரும் சாதித்தது என்ன ?
ஹில்லாரி கிளிண்டன் ராஜபக்சேவுக்கு 'கடிதம்' எழுதுகிறார்... வேண்டுகோள் விடுக்கிறார்...

அஹிம்சை என்பது இன்றைய கால கட்டத்தில் ஏமாற்றுவதற்கான ஒரு எளிய முகமூடியாய் பயன்படுத்த முடிவதன் காரணம் என்ன?
உண்மையில் அஹிம்சைப் போராட்டம் ஒர் எல்லைக்குட்பட்டது.

ஜீவ மரணப் போராட்டத்தில் கண்டிப்பாக அஹிம்சை இருக்கமுடியாது. 'திலீபன்' என்ற 24 வயதுப் போராளி ஒருவனின் அஹிம்சை மரணம் உலகுக்கு உணர்த்தியது இதுதான்... 'பேரரசுகளுக்கு' சாமானியனின் அஹிம்சைப் போராட்டம் 'யானைக்கு கொசுக்கடி ' போலத்தான். ரொம்ப சாதாரணமானது.

'அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே... செல்வத்தைத் தேய்க்கும் படை'.
'செல்வச்செருக்கு' மட்டுமல்ல தேயப்போவது..