Thursday, November 28, 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த காமன்வெல்த்

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், பாலியல் வன்முறைகள், இனத்தை வன்கலப்பு செய்வது, சிங்களர்களை கொண்டு வந்து குடிவைப்பது என்று இன அழிப்பின் எல்லா விஷயங்களையும் கடந்த 60 வருடங்களாக சிங்கள அரசுகள் செய்த அளவில் சற்றுக் கூட அளவுகுறையாமல் செய்து அதன் உட்சபட்ச வெற்றியையும் ஈட்டியது் ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு. ஐக்கிய நாட்டு சபையில் அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளின் கள்ளத்தனமான மௌன அங்கீகாரத்தில் தான் இவற்றைப் புரிந்தது. இருந்தாலும் பிரிட்டன், கனடா போன்ற நாடுகளின் தலையீடு இருப்பதால் போர்க்குற்ற விசாரணை ஒன்றை சும்மா உப்புக்கு சப்பாணியாக நடத்தியும் முடித்தது. இத்தோடு நிற்காமல் 2009ல் தொடங்கி உலக திரைப்பட விழா, கிரிக்கெட் போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை கோலாகலமாக நடத்துவதன் மூலம் பிண ஓலத்தை மறைக்கவும் முயற்சி செய்கிறது. இந்த கொலைபாதகச் செயல்கள் அனைத்திற்கும் சர்வதேச நாடுகளில் ஆதரவு தெரிவிப்பவர்களே அதிகம். இதில் கியூபா, சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிஸ்ட்டு நாடுகளும் அடக்கம். ஐக்கிய முண்ணணி தந்திரத்தின் பக்கங்களுக்குள் பாவம் இந்த கம்யூனிச நாடுகளும் சிக்கிக் கொண்டன. இவர்கள் இதற்கு சொல்ல இருக்கும், விரும்பும் காரணம் அனேகமாக அமெரிக்காவுக்கு எதிரான வியூகம் என்கிற சாக்கு தான். இந்தப் பிண்ணணியில் மேலும் தைரியம் பெற்ற ராஜபக்சேவின் அரசு காமன்வெல்த் மாநாட்டையும் நடத்தி மொத்தப் பாவத்தையும் பூசணிக்காயில் மறைக்க முயன்றது.

 இப்படியொரு நேரத்தில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற இருந்ததையொட்டி, இலங்கை அதை நடத்துவதையும் அதன் மூலம் மறைமுகமாக இந்தியா அதன் படுகொலைப் பாவத்தை கடலுக்குள் கரைப்பதையும் தெரிந்திருந்தாலும் தமிழ்நாட்டில் மக்கள் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லைதான். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திராவிட கட்சிகளல்லாத மற்றைய கட்சிகள் சமத்துவ கட்சி, பெரியார் திராவிட கழகம், சீமானின் நாம்தமிழர், வைகோவின் மதிமுக, திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள், நெடுமாறனின் அமைப்பு போன்ற பல கட்சிகள் சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தி, ரயில்களை மறித்து தமிழ்நாட்டு மக்களின் அடி ஆழத்தில் உள்ள அதிருப்தியை மத்திய அரசுக்கு கொஞ்சம் வெளிக்காட்டினர். இந்தப் போராட்டங்கள் தொலைக்காட்சிகளில் செய்திகளாக காட்டப்பட்ட வேளைகளில் தான் நம் தமிழ் மக்களும் ஈழப் படுகொலைகளை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டனர். கலைஞர் கருணாநிதி வழக்கம் போல 'துரும்பைக்' கூட கிள்ளிப் போடாமல் தனது டெசோ அமைப்பை வைத்து அறிக்கைகள் விட்டு மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்றதும் ஏமாற்றமளிக்கிறது என்று கையை கட்டி நின்றுகொண்டார். அம்மாவின் தீர்மானங்கள் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க தொண்டர்கள் யாருக்கும் இதற்காக போராட வேண்டும் எனத் தோன்றாதது ஆச்சரியமான விஷயமல்ல. ஒரு மாநகராட்சி உணவகத் திறப்பு விழா முதல் , ஈழ ஆதரவு போராட்டத்தைக் கூட அம்மா மட்டுமே முன் நின்று நடத்தவேண்டும் என்பது அந்தக் கட்சியின் முக்கியமான கொள்கையல்லவா?

 முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையின் முந்தைய தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவே கூடாது என்கிற தீர்மானத்தையும் முன்வைத்தார். உலக சமூகத்தின் பார்வையில் இது முக்கியமான ஒரு தீர்மானமே. ஆனால் மத்திய அரசு வழக்கம் போல இதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கிளம்பிய இத்தகைய எதிர்ப்பு அலைகளை மத்திய அரசு வழக்கம் போல அலட்சியமாக கடந்து சென்றது. மாநாட்டிற்குச் சென்று ராஜபக்சேயுடன் விருந்து சாப்பிடும் மூடில் இருந்த மன்மோகன் சிங் ஜெயலலிதாவின் தீர்மானம் தந்த அழுத்தத்தினால் வயிற்று வலி போன்ற காரணங்களால் வரமுடியவில்லை என்று ராஜபக்சேவுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து லீவ் லெட்டர் அனுப்பியதுடன் இந்தியா சார்பாக சல்மான் குர்ஷித்தை வேறு அனுப்பி வைத்தார். ஜெயலலிதாவின் கனவு பிரதமர் ஆவதோடு நின்றுவிட்டதால், அவர் இந்தியா தாண்டி உலகப் பிரச்சனைகளைப் பற்றி யோசிக்க விருப்பமில்லாமல் இது வெளியுறவுப் பிரச்சனை எனவே தீர்மானம் போடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எல்லை வைத்திருக்கிறார்.

 இது தெரியாமல் நெடுமாறன் ஐயா ஜெயலலிதா அம்மையாரின் பரம எதிரியான நடராஜனின் நிலத்தில் நடராஜனின் முக்கிய பணப்பங்களிப்பில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்கிற நினைவுச் சின்னத்தை கட்டினார். அதைத் திறக்க முற்படும் போது தான் அவருக்கு பிரச்சனை வருகிறது. நெடுஞ்சாலைத்துறை முந்திய நாள் அதிகாலையில் வந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தின் காம்பவுண்ட் சுவர் அரசின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது எனவே இடிக்கிறோம் என்று நோட்டீசு கூட கொடுக்காமல் வந்து இடித்துவிட்டார்கள். நெடுமாறன், சீமான், வைகோ, நடராஜன் போன்ற யாருக்குமே தெரியவில்லை யார் இப்படி இடிக்கச் சொன்னதென்று. ஒருவர் மத்திய அரசின் சதி என்கிறார். இன்னொருவர் எனக்கும் அந்த விழாவுக்கும் சம்பந்தமில்லை என்கிறார். ஒருத்தர் ஜெயலலிதா ஈழத்தாயே தான் ஆனால் அவர் அரசு இப்படிச் செய்துவிட்டதே என்று திகைக்கிறார். ராஜபக்சே எதுவழியாகவோ புத்தர் போல சிரிக்கிறார்.

 ஆனால் பாருங்கள் இந்த காமன்வெல்த் மாநாட்டில் ஈழப்பிரச்சனையை வைத்து சிக்ஸர் அடித்தவர் பிரிட்டன் பிரதமர் கேமரூன். இவ்வளவு நாளும் ஏன் போர் நடந்த நேரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்காலில் வதங்கிய போதும் ஐ.நாவின் பான்கிமூன் இலங்கை வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டுச் சென்ற போதும் சும்மா இருந்தவர் திடீரென்று ஒருநாள் சேனல் - 4 டி.வியை பார்த்துவிட்டார் போலிருக்கிறது. உடனே வீராவேசமாக பேசியிருக்கிறார். காமன்வெல்த்தில் நிறைய பணம் ஸ்பான்ஸார் செய்த ஒரு பிரிட்டன் நாட்டு செல்போன் கம்பெனிக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறார். ராஜபக்சேவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது மாறாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று சூடு கிளப்பிவிட்டிருக்கிறார். நம்பமுடியாத நிகழ்வுதான் இல்லையா?

 ஈழப்பிரச்சனையின் போக்கை தீர்மானிக்கும் கருவியாக இருந்த பிரபாகரனை இதே பிரிட்டன் உட்பட இந்த நாடுகள் எல்லோரும் சேர்ந்துதான் வேட்டையாடி அழித்தார்கள். முக்கிய காரணி பிரபாகரன் இறந்துவிட்டதால் இனிமேல் இதை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்ள முடியும். ஈழப்பிரச்சனையை அமெரிக்காவோ, பிரிட்டனோ, பிரான்சோ, கையில் எடுத்து இலங்கையை மிரட்ட முடியும். அதேபோல இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கையின் கூட நின்றுகொண்டு 'அதெல்லாம் ஓண்ணுமே நடக்கலை.. ஒரு அப்பாவி கூட சாகலை.. செத்தது யாரோ அவங்க எல்லாமே எல்.டி.டி.ஈ' என்று சாதித்து பின்புலத்தில் இலங்கையின் தொழில் வர்த்தக லாபங்களை தாங்கள் அடைந்துகொள்ள முடியும். பிரபாகரன் இருந்தவரை தமிழ்நாட்டு தமிழர்களுக்கு ஈழப்பிரச்சனையால் எதுவும் பெரிய பிரச்சனை வந்துவிடவில்லை. ஆனால் இனிமேல் இது உலக வல்லரசுகள் இந்திய கடல் பகுதியில் தங்களது ஆளுமையை ஏற்படுத்திக்கொள்ள, மற்ற நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க இந்தப் பிரச்சனையை தங்கள் இஷ்டத்துக்கு எழுப்புவார்கள். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஒரு குறியீடாக மாற ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அது தமிழருக்கு விடிவுதரும் குறியீடாகுமா என்பது கேள்விக்குரியதே. ஏனென்றால் முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு இன்னும் தமிழர் தரப்பிலிருந்து சிங்களருக்கு ஒரு பதிலடி கொடுக்கப்படவில்லை. மாறாக சிங்கள ஆதிக்கத்திற்கு தமிழர்கள் அடிபணிந்து, கேவலப்பட்டு பரிதாபமாக நிற்கும் நிலையே உள்ளது. உள்நாட்டு அகதி முகாம்கள் எனும் சிறைகள் இன்னும் இருக்கின்றன. தமிழர் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்கள் அரசால் அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். தமிழர்களை ராணுவம் வீட்டு வாசலில் நின்று கண்காணிக்கிறது. இப்படி ஈழத்தமிழர்கள் வாழ்வில் சீரழிவுகள் மட்டுமேயுள்ளனவேயன்றி முன்னேற்றங்களில்லை.

 இந்தியாவுக்குள்ளே வடக்கத்திய ஆரியர்களும் தெற்கத்திய திராவிடர்களும் இரு எதிர் பிரிவுகளாக இருப்பது போல இலங்கையில் எதிரெதிராக வைக்கப்படும் இனங்களில் சிங்களர்கள் ஆரியர்களாகவும், தமிழர்கள் திராவிடர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது இந்திய ஆளும்வர்க்கத்துக்குள்ளே நடந்திருக்கிறது. இந்திய சுதந்திர காலத்திலிருந்து ஆளும் இந்திய வர்க்கம் தமிழனை மதராஸி என்று இழிவாகப் பார்க்கும் எண்ணம் கொண்டே இருந்திருக்கிறது . இலங்கை மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு எதிரானதாக அமைக்கப்பட்டதை திராவிடர்களுக்கு எதிரான ஆரியர்களுக்கு ஆதரவான கொள்கையாக இது அமைந்ததுடன் ஒப்பிட்டால் இந்த சிங்கள-ஆரிய பாசம் புரியவரும். திராவிடத் தமிழர்களால் இதை மாற்றவே இயலாமல் போனது. தமிழர்கள் அரசியல் ராஜதந்திர ரீதியாக இது பற்றி பெரிதாகவும் கவலையுற்றதில்லை. இப்போதாவது நாம் இதைக் கருத்தில் கொள்ளவில்லையென்றால் பிற்காலத்தில் ராகுலின் பேரன் இந்தியாவை ஆளும்போது, விஜய் நம்பியாரின் பேரன் சுனில் நம்பியார் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் போது, இலங்கை சிங்களர்களின் தேசமாக முற்றிலும் ஆகியிருக்கும்.

 முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த காமன்வெல்த்தில் ராஜபக்சே வெற்றிக் கொடி நாட்ட பின்னாலிருந்து மன்மோகன் சிங் கைதட்ட, கேமரூன் கடைசி வரிசையில் நின்றுகொண்டு விசிலடித்து கூட்டத்தை கலைக்கப் பார்க்கிறார். அம்மாவோ கோட்டைச் சுவருக்கு வெளிப்பக்கம் நின்று தீர்மானம் இயற்றுகிறார். நெடுமாறன் ஐயா போன்றவர்கள் இடிந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரின் இடிபாடுகளில் நின்று அம்மாவை எப்படித் திட்டுவது என்று முழிக்கிறார்கள். இத்தகைய நாடகங்களின் முடிவுகள் ஈழத்தின் தீர்வுகளாய் ஆகாது. ஈழ ஆதரவு மற்றும் ஈழ எதிர்ப்பு நாடகங்கள் எல்லாவற்றையும் மக்கள் பொறுமையாக கவனித்தால் மட்டுமே யதார்த்தம் புரியும். மக்கள் கவனிப்பார்களா ? உண்மை வெல்லுமா ? நூற்றுக்கு தொன்னூறு சதவீதம் வாய்ப்பில்லை.

Monday, November 18, 2013

'பாண்டிய நாடு' கிரானைட்ஸ் உடைத்து

ஆதலினால் காதல் செய்வீரில் உங்கள் சுயநலத்துக்காக மட்டும் காதல் செய்யாதீர்கள் என்று சொன்ன கையோடு இந்த ரத்தம் உறையும் பாண்டிய நாட்டுக் கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.  வழக்கமான பழிவாங்கும் கதை என்று லேசாகச் சொல்லிவிட்டு செல்லமுடியாதபடி திரைக்கதை அமைந்துவிட்டது தான் படத்தின் சிறப்பம்சம்.
விஷால் மதுரையில் ஒரு செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை செய்யும் சர்வீஸ் இன்ஜினியர். அவருடைய அண்ணன் அரசின் கனிமவளத்துறையில் அதிகாரி. அண்ணனது குடும்பம் மற்றும் அப்பா, அம்மாவுடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். அவர்களது மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் கும்கி லட்சுமி மேனன். ஸ்கூல் டீச்சரான அவரை காதலிக்கிறார் விஷால். இதுவரை கதை எளிமையான அழகான ஒரு காதல் கதையாகச் செல்கிறது. இணையாக இன்னொரு கதையும் செல்கிறது. அதுதான் 2012ல் பிரசித்தி பெற்ற பி.ஆர்.பியின் முப்பதாயிரம் கோடிரூபாய் கிரானைட் ஊழல் கதை.  
மதுரையில் ஒரு பிரபல ரவுடி இறந்து போகவே அவரது சிஷ்யர்கள் இருவருக்கும் இடையே அடுத்த தாதா யார் என்பதில் போட்டி வருகிறது. ஒருவரையொருவர் கொல்வதற்கு அலைகிறார்கள். அதில் மத்தியஸ்தம் பேச வருபவர் இருவருக்குமிடையே ரியல் எஸ்டேட், சாராயக்கடை, வசூல், கிரானைட்ஸ், ஹோட்டல் என்று அவர்களின் தொழில்களை பங்கு பிரித்துக் கொள்ளுங்கள் என்று வழக்கமான முறையில் அட்வைஸ் பண்ண வருவார். அப்போது ரவி என்கிற அந்த தாதா சொல்வான் சாராயக்கடை, வசூல், ஹோட்டல் என்று எல்லா பிஸினெஸ்ஸையும் தூக்கிச் சாப்பிடும் கிரானைட்ஸ் தொழிலில் வரும் கொள்ளை லாபம் வருஷத்துக்கு முன்னூறு கோடி ரூபாய் என்பான். எனவே தொழில் போட்டி என்பது கிரானைட்ஸ் தொழிலை யார் அபகரிப்பது என்பதாக ஆகிறது. அரசு அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து சரிக்கட்டுவது இல்லாவிட்டால் ஆக்ஸிடெண்ட் போல திட்டமிட்டு காரில் மோதிக் கொல்வது, சட்டவிரோதமாக குறிப்பிட்ட ஆழத்துக்கும் மேல் தோண்டுவது போன்ற பி.ஆர்.பி விஷயங்கள் அப்படியே படத்தில் இருக்கின்றன.
பி.ஆர்.பி ஊழலில் துவங்கி, ஸ்பெக்டரம், கோல்கேட், தற்போதைய தாதுமணல் வரை எல்லா ஊழல்களிலும் அதை கண்டிக்கும், எதிர்க்கும் சாதாரண மக்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுவதும் அதை தடுத்துக் கேட்க ஆளின்றிப் போனதும், சட்டங்கள் மற்றும் காவல்துறை போன்றவை முப்பதாயிரம் கோடிகளுக்கு சலாம் போடுவதும், பிரதமர் கூட மென்று முழுங்கி பதில் சொல்வதுமான யதார்த்தத்தில் பாண்டிய நாடு நம் மனதில் பாண்டி ஆடிவிடுகிறது. படத்தில் அப்படிக் கொல்லப்படும் அரசு அதிகாரியான விஷாலின் அண்ணனின் மரணத்துக்காக அந்த சாதாரண நடுத்தர குடும்பம் எப்படி பழிக்குப் பழிவாங்க முயல்கிறது என்பதாகச் செல்கிறது இரண்டாம் பகுதிப் படம்.
சுசீந்திரனின் எழுத்தும் இயக்கமும் கூர்மையாகிக் கொண்டேதான் வருகின்றன. இப்படத்தில் கிரானைட்ஸை மையமாக வைத்ததில் அவரது தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். 1992ல் ஜெயலலிதா அரசு அரசின் வசமிருந்த கிரானைட் தோண்டும் உரிமையை உலகமயமாக்கலின் விளைவாக தனியாருக்கு லைசன்ஸ்களாக வழங்கியது. 2000ஆம் ஆண்டு துவங்கி கார்ப்பரேட்டுகளுக்கு இணையாக வளர்ந்துவிட்டிருக்கும் ஒரு இயற்கைவளச் சுரண்டல் தான் கிரானைட்ஸ் தொழிலில் செய்யப்பட்ட முப்பதாயிரம் கோடி ரூபாய் கொள்ளை. இதில் மதுரையருகே மேலூரில் புகழ்பெற்ற யானைமலை என்கிற மலையையே இவர்கள் கிரானைட்ஸ் மலை என்பதையறிந்து அதையும் லவட்ட முயன்றபோதுதான் இத்தகைய கார்ப்பரேட் சைஸ் கொள்ளை கலெக்டர் தேவசகாயம் அரசுக்கு எழுதிய கடிதம் மூலம் பொது வெளிச்சத்துக்கு வந்தது. கருணாநிதியின் மகன் மத்திய அமைச்சர் அழகிரிக்கு நேரடித் தொடர்பு இருந்திருக்கிறதென்று அதில் ஆதாரங்கள் காட்டப்பட்டிருந்தன. இப்போது அ.தி.மு.கவுக்கு இந்தக் கொள்ளையில் தன் பங்கைப் பெற நல்ல வாய்ப்பு. கோர்ட் மூலமாக இழுத்து மூடப்பட்டது கிரானைட் குவாரிகள். தற்போது பேரங்கள் படிந்திருக்கக்கூடும் எனவே பி.ஆர்.பி(P.R.P)க்கும் அவரது குடும்பத்திற்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இனி கிரானைட்ஸ் கதை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் கதை போலவே ஆகும். சரி நம்ம பாண்டிய நாட்டுக்கு வருவோம்.
Director Suseendran
படத்தில் பாத்திரங்கள் அனைத்தும் கச்சிதம். பாரதிராஜா ஒரு நடுத்தர அப்பாவாக அசத்தியிருக்கிறார். தமிழ்ப் படங்களுக்கு அசத்தலான ஒரு புதிய அப்பா வரவு. வெல்கம் சார். ஸ்கூல் டீச்சராக வரும் லட்சுமி மேனன் கும்கியில் வந்த ஆதிவாசிப் பெண்ணா இவர் என்று கேட்கவைக்கிறார். விஷாலின் அண்ணன் மகளாக வரும் அந்தச் சுட்டிப் பெண். தயாரித்து நடித்திருக்கும் விஷாலும் ஜமாய்த்திருக்கிறார். இமானின் இசையில் பாடல்கள் இதம் பிண்ணனி இசை் பலம். மதியின் ஒளிப்பதிவு படத்தின் யதார்த்தத்தை அதிகமாக்கியிருக்கிறது. சண்டைகள், டூயட்கள் என்று கொஞ்சம் கொஞ்சம் யதார்த்தத்தை விட்டு விலகினாலும் அது படுசீரியசான இந்தக் கதையை நோக்கி பார்வையாளர்களை கட்டிப் போடவே பயன்பட்டிருக்கிறது. அதற்காக அதை மறந்துவிடலாம்.
படத்தின் பிற்பகுதியில் கிரானைட்ஸ் பெயரே வராததால் படம் கிரானைட்ஸ் கொள்ளை என்பதாக இல்லாமல் வெறும் தாதா பிரச்சனை போன்று மாறிவிடுகிறது. அதே போல இவ்வளவு பெரிய கொள்ளைகள் நடைபெறும் போது அதன் பின்புலத்தில் செய்லபடும் அரசியல் புளளிகளின் பங்கு பெரிதாக வெளிக்காட்டப்படவில்லை. மற்றபடி ஒவ்வொரு முறையும் தாதாக்கள் பாரதிராஜாவையும், விஷாலையும் நெருங்கும் போது நாம் பதறுகிறோம். அதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.
தாதாக்களையும், ரவுடிகளையும் அரசியல்வாதிகளையும் பொதுமக்களும் பழிவாங்கலாம் 'யாரு செஞ்சான்னு கண்டுபிடிக்கமுடியாம செஞ்சா தாதாக்களை சாதாரண மக்களும் பழிவாங்கலாம்' என்கிற ஐடியாவை மக்களுக்கு கொடுப்பதன் மூலம் அநியாயங்களை எப்படியாவது தண்டிக்கவேண்டும் என்று பொதுமக்களுக்கு எழும் தார்மீகக் கோபத்துக்கு ஒரு ஜனரஞ்சகமான வடிகாலை காட்டியிருக்கிறார் இயக்குனர். தீபாவளிப் படங்களிலேயே உருப்படியான படம் இதுதான் போலிருக்கிறது. பாண்டிய நாட்டை தியேட்டரில் சென்று பாருங்கள்.

ஆதலால் காதல் செய்யாதீர்.

இன்றைய சமூகத்து இளைஞர்கள் இன்பம் திளைப்பதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்களாகவும், சுயநல விரும்பிகளாகவும் இருப்பதை நெற்றியில் அறைந்து சொல்லியிருக்கும் படம். பார்வையாளர்களுக்கு அவர்களது குறைகளை அவர்களுக்கே சுட்டிக் காட்டும்படியாக ஒரு திரைப்படம் அமையும்போது பார்வையாளர்கள் படத்துக்கு எதிரான ஒரு மனோநிலைக்கு வருகிறார்கள். இப்படி எதிர் மனநிலை
கொள்ளவைத்தாலும் அவர்களின் தவறான மனோபாவத்தை இடித்துக் காட்டியதால் அத்திரைப்படம் அவர்களது ஆழ்மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஆகிவிடுகிறது.
தமிழில் யதார்த்தத்தை மிகவும் நெருங்கிவிடக்கூடிய அதே சமயம் ரசிக்கக்கூடிய விதத்திலும் எடுக்கப்படும் படங்கள் குறைவு. இயக்குநர்களும் குறைவு. அவை தியேட்டரில் ஓடுவதும் குறைவு. ராஜபாட்டையில் சறுக்கி விழுந்த சுசீந்திரன் மீண்டும் ஆதலால் காதல் செய்வீரில் நிமிர்ந்து நின்றிருக்கிறார்.
அது ஒரு இருபாலர் படிக்கும் பொறியியற் கல்லூரி. கல்லூரி என்றால் காதல் தானே. அங்கே படிக்கும் சந்தோஷூம், மனீஷாவும் முதலில் நண்பர்களாக இருக்கிறார்கள். பின்பு காதலர்களாகிறார்கள். காதலர்களானால் அவுட்டிங் போகவேண்டுமே. காதலியே எப்போ போகலாம் என்கிறாள். சந்தோஷ் மஹாபலிபுரம் என்கிறான். அங்கே போகிறார்கள். மோகமும் காதலில் அடக்கம் இல்லையா ? காதல் கலவியாகிறது. இப்படியே ஆறுமாதங்கள் போனபின் கவனப் பிசகால் மனீஷா கர்ப்பமாகிறாள். அதைக் கலைக்க அவர்கள் அலைவதும் அதன் பிரச்சனைகளுக்கும் முன் காலம் கடந்துவிட, வீட்டிலும் தெரிந்துவிட, வெடிக்கும் பிரச்சனைகள், சுயநலம் மிக்க மனிதர்கள்.. அதன் முடிவுகள்.
படத்தில் நடித்த அனைவருமே நன்கு நடித்திருக்கிறார்கள். படம் இரு குடும்பங்களுக்குள் நடைபெறும் விஷயங்களை ஒரு மூன்றாவது பார்வையாளன் கோணத்தில் சொல்லிச் செல்கிறது. சந்தோஷூம், மனீஷா, மனீஷாவின் தோழி, அம்மா, அப்பாக்கள் என்று யாருமே நடிப்பில் சளைக்கவில்லை. இயக்குனருக்கே இவர்களை நடிக்க வைத்ததன் பாராட்டுக்கள் சேரும். பூர்ணிமா ஜெயராம் நீண்ட நாட்களுக்குப் பின் நடித்திருக்கிறார். ஆனால் அழுத்தமான பாத்திரம் அவருக்கு இல்லை.
படத்தின் காட்சிகள் சுருக்கம் மற்றும் கச்சிதம். வளவளவென்று இழுவை இல்லை. இளைஞர்கள் பெற்றோரை எவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியும், ஏமாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுமிடத்தில் சுசீந்திரன் ஜெயிக்கிறார். படம் ஒரு விதத்தில் எதிர்மறையானது தான் என்றாலும் இதுதான் இன்றைய மேற்கத்திய கலாச்சாரம் ஊடுருவிய இந்தியா, தமிழ்நாடு. இதை மறுக்கச் சொல்லுங்கள். டாஸ்மாக் வைத்துக் குடிக்கவைத்து மக்களை அழித்து காசு சம்பாதிக்கும் அரசு இருக்கும் ஊரில் வாழும் பிள்ளைகள் மட்டும் சுயநலமில்லாமல் இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் பளிச்.பளிச். யுவன் படத்திற்கு மிகப் பெரிய பலம். அவருடைய ஹிட்டான பாடலை டைட்டில் சாங்காக வைத்து வீணடித்திருக்கிறார் இயக்குநர். (பட்ஜெட் பிரச்சனையோ ?). இன்னும் கவனமாக ஷாட்கள் வைக்கப்பட்டு, கதாபாத்திரங்கள் பிரபல முகங்களாக இருந்திருந்தால் படத்தின் தாக்கம் பெரிதாய் இருந்திருக்கும்.
விதி என்று சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு படம் வந்தது. அதில் மோகனும், பூர்ணிமா ஜெயராமும் இதே மாதிரி காதலிப்பார்கள். அதில் மோகன் ஒரு ரோமியோ டைப். அவர் பூர்ணிமாவை நைச்சியமாகப் பேசி மஹாபலிபுரம் கூட்டிச் சென்று கடலில் விளையாட வைத்து, ஹோட்டலில் ரூம் போட்டு திட்டமிட்டு அவரை வளைத்துவிடுவார். பின்பு பூர்ணிமா கர்ப்பமாகிவிட வில்லத்தனமாகச் சிரிப்பார் மோகன். பூர்ணிமா பின்பு கோர்ட்டுக்குச் சென்று வக்கீல் சுஜாதாவின் உதவியோடு பரபரக்கும் கோர்ட் காட்சிகளோடு மோகனை கோர்ட்டில் ஜெயிப்பார்.
இந்த இரு படங்களுக்கும் நடுவில் இவ்வளவொரு கலாச்சார மாற்றம் ஏற்பட்டிருப்பது சுவராசியமான விஷயமாகும். பழைய படம் கொஞ்சம் நாடகத்தனமானது. புதிய படம் யதார்த்தத்தை நெருங்கி நிற்பது. பழைய படத்தில் காதல் என்பது கல்யாணத்தை நோக்கி என்று வரையறுக்கப்பட்டிருக்கும். புதுப் படத்தில் காதல் காதலுக்காக மட்டுமே. ஜாலியாக இருப்பது காதலின் முக்கிய தொழில். அதில் காமம், உடலுறவு எல்லாம் சகஜம் என்கிற சமூக மனோபாவம் வெளிப்பட்டிருக்கிறது.
மேற்கத்திய பாணிச் சுதந்திரம் சமூக அளவில் மட்டுமின்றி உடலளவிலும் சுதந்திரத்தை தேட விட்டிருக்கிறது நம்மை. உடல் ரீதியான சுதந்திரம் தேவையா இல்லையா? இளைஞர்களால் உடல் ரீதியான சுதந்திரத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த முடியுமா ? எதிரில் நடந்துவரும் ஆணை நிமிர்ந்து பார்ப்பதே குற்றம் என்கிற அளவுக்கு சமூகக் கண்காணிப்பு இருந்த காலத்திலும் இது போன்ற எல்லை மீறல்கள் உண்டு தான். இப்போது கண்காணிக்கவே யாரும் தயாராயில்லாத போது எல்லை மீறல்கள் என்பது யதார்த்தமாகின்றன. சகஜமாகின்றன. வளரும் மகனை, மகளை கண்காணிக்க வேண்டிய அப்பாவும், அம்மாவுமே தங்கள் உடல் தேடல்களை முடித்தபாடில்லாமல் அலைகிறார்கள் இங்கே. உடல் ரீதியான மீறலுக்கும், உள்ள ரீதியான மீறலுக்கும் உள்ள வேறுபாடு பருண்மையானது. சுதந்திரம் பற்றிப் பேசும் எல்லோருமே அதைக் கவனத்தில் கொள்ளத் தவறுகிறார்கள். மனரீதியாக கனவில் தியேட்டரில் பார்த்த நடிகையுடன் சரசமாடலாம். ஆனால் அதுவே நிஜத்தில் நடந்தால் அதன் விளைவுகளே வேறு. இது ஒரு யதார்த்தம்.
சுசீந்திரன் நான் மகான் அல்லவில் இதைப் போன்றேயான ஒரு பிரச்சனையை கையாண்டிருப்பார். இதிலும் அசத்தியிருக்கிறார் மனிதர் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் அந்த க்ளைமாக்ஸ். இந்தப் படம் மட்டும் ஹன்ஸிகா மோத்வானி, சித்தார்த் போன்ற பிரபல முகங்கள் நடித்திருந்தால் பெரிதும் பேசப்படும் படமாக ஆகியிருக்கக் கூடும். பார்வையாளர்களை பெரிய அளவு சலனப்படுத்தியிருக்கவும் கூடும். தாண்டவம் ஆடிய கோரதாண்டவத்தில் பரதேசியாய் சுசீந்திரன் ஆனதால் இப்படி ரசிகர்களை பெரிதும் வசீகரிக்காத புதுமுகங்களை காதல் செய்வீர் என்றிருக்கிறார் சுசீந்திரன். இந்தப் படத்தை பிள்ளைகள்
ஓடவைக்க வாய்ப்பில்லை. பெற்றவர்களே! நீங்கள் ஓடவையுங்களேன்.
இளசுகளே! ஆதலால் இது போன்ற காதல் செய்யாதீர்.