Wednesday, April 9, 2014

கண்ணில்லாத குயில்கள் பாடும் 'குக்கூ'


தமிழில் ராஜபார்வை தொடங்கி காசி வரை எப்போதாவது வரும் பார்வையற்றவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட படங்கள் தோல்வியையே தழுவும் என்கிற மூடநம்பிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. தனது குக்கூ படத்தின் மூலம் அதை பொய்யாக்குவேன் என்று கிளம்பிய எழுத்தாளர் ராஜூ முருகன் ஓரளவிற்கு வெற்றி கண்டிருக்கிறார் என்று சொல்லலாம். தமிழில் படங்கள் நல்ல தரமாக இருந்தால் அதைப் பாராட்டும் நல்ல மீடியாக்கள் இருப்பதும், ரசிகர்கள் தியேட்டரில் போய் காசு கொடுத்து ஓடவைக்காவிட்டாலும் நல்ல படங்களை நல்ல படங்கள் என்பதால் அவற்றுக்குத் தரும் மதிப்பும் தமிழ் சினிமாவை நல்ல சினிமாக்கள் நிரம்பியதாக ஆக்கிவருகிறது ஒரு நல்ல அறிகுறியே.
இயக்குனர் ராஜூமுருகன் தான் விகடனில் நிரூபராக எழுதிவந்த காலத்தில் சந்தித்த பார்வையற்றவர்களான தமிழ்-சுதந்திரக்கொடியின் காதலை பற்றி கூறுவதாக கதை ஆரம்பிக்கிறது. தமிழ் (அட்டகத்தி தினேஷ் ) மின்சார ரயில்களில் பொருட்கள் விற்றும் மற்றும் பாட்டுக்கச்சேரிகளில் இளையராஜாவின் குரலில் பாடியும் வருபவர். அவர் மற்றொரு பார்வையற்றவரான சுதந்திரக்கொடியை (மாளவிகா நாயர்) சந்திக்கிறார். கொடி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தானே முயற்சி எடுத்து ஆசிரியை படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். அண்ணன்-அண்ணி இருந்தும் சுயநலமிக்க அவர்களுடன் வசிக்காமல் தனியாக சிஸ்டர்ஸ் ஹாஸ்டலில் வசிக்கிறார்.
இவர்களிருவரும் சந்தித்து, அது மோதலாகி, பின் காதலாக மலர்ந்து, வளர்ந்து, உறவினர்களின் சூழ்ந்திருப்பவர்களின் சூழ்ச்சிகளால் எவ்வாறு கலைக்கப்பட்டது? பின் கடைசியில் கண்ணுள்ளவர்களின் உலகில், இரக்கமுள்ளவர்களின் கைதூக்கல்களில், கண்ணில்லாத கொடியும் தமிழும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் கதைச் சுருக்கம். சுருக்கமாகச் சொன்னால் ஒரு எளிமையான காதல் கதை.
இது பார்வையற்ற இருவரின் காதல் கதை என்பதால் தான் இந்தக் கதை கவனிப்பு பெறுகிறது. அதற்கேற்றபடி பார்வையற்றோரின் உலகை ஓரளவிற்கு காட்சிப்படுத்த முயல்கிறார் இயக்குனர். பிங்க் நிறம் எப்படியிருக்கும். மார்க் போட்டதால் கோபப்படும் கொடியின் மீதான காதலை இன்னதென்று வரிகளில் விளக்கும் தினேஷ், கொடியின் காலடித் தடத்தையும், வாசனையையும் தூரத்திலிருந்தே  தினேஷ் உணர்வதான புனைவு, 'நீ எப்படி இருக்கேன்னு பாத்துக்கறேன்'என்று தொடு உணர்வுகளில் நபர்களை உணரும் அவர்களின் உலகம், காதலை எதிர்பார்த்துச் செல்லும் கொடிக்கு கிடைக்கும் அயர்ன்-செய்யப்பட்ட-ட்ரெஸ்கள் இரக்கம், இசை - இளையராஜா, மின்சார ரயில்களில் பார்வையற்றோர், திருநங்கை, பிச்சைக்காரர்களின் வாழ்க்கை, பார்வையற்றோரின் குசும்புகள், பேசும் வார்த்தைகள் என்று அவர்களின் உலகினுள் நம்மை எட்டிப் பார்க்க வைக்கிறார்.
யதார்த்தமான காட்சியமைப்புகளும், நாடகத்தன்மையற்ற நடிப்பும், பளிச்சென்ற வசனங்களும், எளிமையான காதலும் படத்தைவிட்டு ரசிகர்கள் விலகாமல் பார்த்துக் கொள்கின்றன. அட்டகத்தி தினேஷூம், புதுமுக நாயகியான கேரளாவைச் சேர்ந்த மாளவிகாவும் நடிப்பில் பிரமாதப் படுத்திவிடுகின்றனர். தினேஷின் அந்த முழியும், வசனங்களைப் பேசும்போது பார்வையற்றவர்கள் போலவே பேசுபவரை நோக்கிப் பேசாமல் காதைச் சாய்த்தபடி பேசுவது என்று சின்ன விஷயங்களிலிருந்து விரல் நுனியில் உணர்வுகளைப் பரிமாறுவது வரை அருமையாகச் செய்திருக்கிறார்கள். இளையராஜா வெறியர், நாடகக் குழு உறுப்பினர்கள், தினேஷின் நண்பன், கொடியின் நண்பிகள், அண்ணன், உதவி செய்பவர்கள் என்று எல்லோரும் சரியாகவே நடித்திருக்கிறார்கள். இயக்குனருக்கும் இவர்களை நடிக்க வைத்ததில் பெரும்பங்குண்டு.
படம் யதார்த்த படங்களின் சாயலைக் கொண்டிருப்பது படத்தின் கதைக் களத்திற்கு அவசியமானதென்பதால் யதார்த்த ஒளியமைப்பு கொண்ட ஒளிப்பதிவு படத்திற்கு பலமாய் நிற்கிறது. ஒளிப்பதிவு ஷர்மா. இயக்குனரோடு இணைந்து அவருடைய உணர்வுகளை சரியாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார். அடுத்த பலம் சந்தோஷ் நாராயணின் இசை. பாடல்களும் அவற்றை படமாக்கிய விதமும் தமிழ்-கொடியின் காதலை ரசிகர்கள் மனத்தில் அச்சேற்ற உதவுகின்றன. பிண்ணணி இசையில் இசைஞானி ராஜாவுக்கும் சேர்த்து டைட்டில் கார்டு போடலாம் என்கிற அளவுக்கு படம் முழுக்க இளையராஜாவின் பாடல்கள் வியாபிக்கின்றன. தமிழ் இளையராஜாவின் குரலில் பாடுபவர் என்று வைத்திருப்பதும் பார்வையற்றோருக்கும் - இசைக்கும் - இளையராஜாவுக்குமிடையேயான உறவை பதியவைக்கும் நோக்கத்தில் கையாளப்பட்ட ஒரு உத்தியே. இந்த உத்தி படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.
படம் நன்றாக இருக்கிறது என்பதைத் தாண்டி ஒரு க்ளாசிக்காக மாறுவதற்கான வாய்ப்பை தவறவிட்டுவிட்டது என்பதை நாம் கூறித்தான் ஆகவேண்டும். பிற்பாதியில் சொல்லப்பட்ட கதை வலிந்து சொல்லப்பட்ட புனைவாக, வலுவில்லாததாகத் தென்படுகிறதேயன்றி அழுத்தமானதாக இல்லை(விக்ரம் நடித்த காசியில் கதையின் முடிவில் அப்படியொரு அழுத்தம் இருக்கும்). முற்பாதியில் கதையில் இருந்த தெளிவும் முதிர்ச்சியும் பிற்பாதியில் இல்லை. பார்வையற்றவர்களின் உலகின் காதல் உணர்வுகளுக்குள் தானும் பயணித்த இயக்குனர் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குள் ஊடுருவிப் பயணிக்காமல் போனதால் இது ஏற்பட்டிருக்கலாம். அது போல க்ளைமாக்ஸ், ஆன்ட்டி க்ளைமாக்ஸ் என்று திரும்பித் திரும்பி எங்கோ அலைய வேண்டிய தேவை சுவையானதொரு திரைக்கதை அமைந்திருந்தால் ஏற்பட்டிருக்காது. படம் முடிவு தெரிந்துவிட்ட பின் காதலர்கள் படும் துன்பத்தை மூன்றாம் பிறை ஸ்டைலில் சொல்ல முனைந்ததும் படத்துக்கு தொய்வையே தருகின்றன. படம் முடியும்போது அப்பாடா நல்லவேளை சொதப்பிவிடவில்லை என்று நாம் ஆறுதலடைகிறோம். ஆனாலும் ராஜூமுருகன் நி்ச்சயம் அடுத்த படத்தில் நம்மை நெகிழ்த்திவிடுவார் என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறார்.
மொத்தத்தில் இந்தக் கண்ணில்லாத குயில்களின் காதல் ராகம் எப்போதும் நெஞ்சுக்குள்ளேயே நிற்கும் தெய்வீக ராகமாக இல்லாமல், அமைதியான ஒரு காலை வேளையில் எழுந்தவுடன் கேட்கும் இனிமையான குயில்களின் ராகமாக ஆனதோடு மட்டுமே நின்றுவிட்டது. அதனாலென்ன ? குயில்களின் ராகமும் இனிமையானதுதானே !

பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழம்

தமிழினத்திற்கு விரோதியாக தமிழனையே நிறுத்துவதுதான் 60 ஆண்டுகளாக சிங்களர்களின் ராஜதந்திரமாக இருந்து வருகிறது. அதில் இன்னும் ஒருபடி மேலே போய் ஷோபாசக்தி, லீனா மணிமேகலை, சந்தோஷ் சிவன் என்று தமிழ்நாட்டு சினிமாத் துறையினரையும் உசுப்பேற்றியுளளார்கள். சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட், தற்போது வெளிவந்த இனம், லீனாமணிமேகலை - ஷோபா சக்தி இணைந்து எடுத்த செங்கடல் போன்ற படங்கள் இதற்குச் சான்று.

ஈழத்திலும் அப்படி சிங்களவர்களை அடிதாங்கி நிற்கும் தமிழர்கள் பலரைப் பார்க்கலாம். கொழும்பு, மலையகம், தெற்குப் பகுதி போன்ற சிங்களர்கள் பகுதியில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் இந்த மனப்போக்கை கொண்டிருப்பார்கள். இப்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அந்தப் போக்கு உருவாகி வருகிறது. சோத்துக்கும், இடத்துக்கும் சிங்களன் தான் கருணைகாட்ட வேண்டும் என்கிற நிலை வரும்போது இந்தக் கேவலங்கள் நிகழுவதை என்னவென்று சொல்ல?உதாரணமாக சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழப் பிரதிநிதிகள் ராஜபக்சேவின் கையால் பதவிப் பிரமாணம் ஏற்றதில் உச்சிகுளிர்ந்து நின்றதைச் சொல்லலாம்.

முத்தையா முரளிதரன் போன்ற விஐபிக்கள் இலங்கை அரசுக்கும் அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக பெரும் பிரச்சாரமே செய்து வருகிறார்கள். இவர் தமிழன் தான். ஆனால் தமிழர்கள் யாராவது ஆட்டோகிராப் கேட்டால் கூட அலட்சியமாக இருப்பாராம். தன் வாழ்நாளில் இதுவரை ஒருமுறை கூட தமிழர்கள் பட்ட துயரத்துக்காக ஒரு வார்த்தை உதிர்த்தில்லை. ஜாலியாக கிரிக்கெட் விளையாடி சம்பாதித்துக்கொண்டே இருந்தார். இலங்கையின் தமிழினப் படுகொலையை மூடி மறைப்பதில் முரளிதரன்களின் பங்கு அபாரமானது! வடக்கு இலங்கையில் உண்மையில் என்ன நிலை நிலவுகிறது.. அங்குள்ள மக்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா என்று அறிய தன்னிச்சையாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று வந்த பின், இந்த முத்தையா முரளிதரனையும் ஒரு தமிழர் என்ற முறையில் சந்தித்தார்.

அப்போது தமிழர் நிலை பற்றி முரளிதரன் "என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன். மக்களுக்கிடையிலான உணர்வுகளை நேர்ப்படுத்தும் பாலமாக கிரிக்கெட் இருக்கிறது. ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கு நன்றி. இவையெல்லாம் நடக்க பெரும் முயற்சிகள் எடுத்தவர்கள் ராணுவத்தினர்தான். இந்த நாட்டில் 20 மில்லியன் மக்கள் உள்ளனர். வடக்கில் ஒரு மில்லியன் மக்கள்தான். ஆனால் இப்போது மற்றவர்களை விட அவர்கள் மட்டும்தான் கூடுதல் கவனம் பெற்றுவருகின்றனர்!" என்று மிகுந்த அப்பாவி போல் பேசியிருக்கிறார்.

தனி ஈழம் குறித்தும் அதன் விடுதலை குறித்தும் பாஜக கட்சியின் போடும் இரட்டை வேடம் மிக வெளிப்படையானது. தமிழ்நாட்டில் தெற்கே போகப் போக இவர்களுக்கு ஈழ ஜூரம் அடிக்கும். வடக்கே போகப் போக 'யாரது ஈழத்தமிழர்கள்?' என்பார்கள். அக்கட்சியின் சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா சமீபத்தில் பேட்டியொன்றில் ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவேற்றதில் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார். இனவெறி மிக்க ராஜபக்சே மத்தியப் பிரதேசத்தில் உள்ள புத்தர் கோயிலுக்கு சென்ற ஆண்டு வந்தபோது சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை வழங்கியவர் பாஜகவின் முதலமைச்சர். அப்போது அதை எதிர்த்து மத்தியப் பிரதேசம் வரை போய் முழங்கிய வைகோ அண்ணன் தான் இப்போது அதே பாஜக கூட்டணியில் அவர்களுக்கு ஆதரவாக முழங்குகிறார்.

உங்கள் கூட்டணியிலுள்ள வைகோவின் தேர்தல் அறிக்கையில் தனி ஈழம் பற்றி இருக்கிறதே அது பற்றி சொல்லுங்கள் என்று எச்.ராஜாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது.."பா.ஜ.க வைப் பொருத்தவரை ஒரு நாட்டை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பேச்சு வார்த்தையின் மூலம் தான் தீர்வு காண முடியும். என்பது எங்கள் நிலை. சம தர்மம், சம உரிமை என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால் 2004 வரை பேச்சுவார்ததைகள் தான் நடந்து வந்தது. அதன் பிறகு சோனியா காந்தி தலைமையில் வந்த ஆட்சி தான் ராணுவத்தை அனுப்பியது. இலங்கை ராணுவத்துடன் இந்திய ராணுவமும் அனுப்பப்பட்டது. அதனால் தான் கோத்தபய ராஜபக்சே இது இந்திய போர் என்று சொன்னார்."

கலைஞரோ முள்ளிவாயக்கால் படுகொலையின் போது இங்கிருந்து உண்ணாவிரத நாடகமாடி தன் முகத்திரையை கிழித்துக் கொண்டார். ஜெயலலிதாவோ தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் மறைமுக எண்ணத்தில் பாஜகவை எதிர்த்தே பேசுவதில்லை. வைகோ, ராமதாஸ், திருமாவின் வீர உரைகள் என்னவானதென்று நமக்குத் தெரியும். கம்யூனிஸ்ட்டுகளோ தீவிரவாதம் என்ற ஒரு சொல்லில் சிங்களர்களின் அனைத்து அரசு பயங்கரவாதங்களையும், இனப்படுகொலையையும், மறைக்கும் அறிவு ஜீவிகள்!!. அவர்களுக்கு அது அமெரிக்கா சொல்வதுபோல் ஒரு போர்க்குற்றம் மட்டுமே. மொத்தத்தில் தேர்தலில் தமிழர்கள் ஈழத்தை ஆதரிப்போருக்கு என்று வைத்துப் பார்த்தால் நிற்கும் எல்லோரும் அயோக்கியர்களே என்பது தெளிவாகும்.

முரளிதரன், டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற தமிழர்கள் இருக்கிறவரை தமிழினம் கேவலமாய்ச் சாகும் நிலை மாறப்போவதில்லை. இந்தியாவை மாற்றி மாற்றி ஆளும், தமிழர்களை தன்னுடைய நாட்டு இனமாகக் கருதாத காங்கிரஸூம், பாஜகவும் தமிழர்களை ஈழத்தில் அழிக்க வகையாக துணைபோகும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தேர்தலுக்குப் பின்தான் தமிழர் நிலைக்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.