Thursday, December 6, 2012

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்க நடந்த நாடகம் வெற்றி


 
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்கிற கதையை கடந்த சில மாதங்களாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் மாற்றி வஜனங்கள் பேசி விறுவிறுப்பாகக் கொண்டு சென்றனர்.

ஆளுங்கட்சியோ அன்னிய முதலீடு பல லட்சம் கோடி வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்று புளுகியது.

இந்தப் புளுகு பற்றி தெரிய ஒரு நடந்த கதைக்குப் போவோம்.

ஒரு சேம்பிளுக்குப் பார்த்தீங்கன்னா  நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ்நாடு 2023 என்ற பெயரில் முதல்வர் ஜெயலலிதா டி.வி.எஸ், ஆம்வே, முருகப்பா, செயின்ட் கோபெய்ன் அப்புறம் ஹிடாச்சி ஆகிய ஐந்து கார்ப்பரேட் கம்பெனிகளுடன் எம்.ஓ.யு(MOU) அதாவது மெமோரண்டம் ஆப் அண்டர்ஸ்டாண்டிங் கையெழுத்திட்டிருக்கிறார்.

அதாவது அவர்கள் எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டில் சுமார் 20,000 கோடிகள் முதலீடு செய்யப் போகிறார்களாம். அப்பாடா தமிழ்நாடு சொர்க்கபுரியா மாறப்போகுதப்பான்னு சந்தோஷப்படாதீங்க..

இந்தப் பெரிய பணத்தைப் போட்டு அவர்கள் ஆரம்பிக்கப் போகிற கம்பெனிகளில் 1.36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பாம். உடனே ஆஹான்னு சொல்வீங்களே. அதிலேயும் ஒரு ட்விஸ்ட்டு இருக்கு.

அதாவது 2500 பேருக்கு தான் நேரடியா பெர்மணன்ட் வேலையாம். மிச்சம் ஒரு லட்சத்தி 34 ஆயிரம் பேருக்கும் அப்ரண்டிஸ், ட்ரெய்னீ, டெம்பரவரி, காண்ட்ராக்ட், பிச்சைக்காரன் என்கிற பெயர்களில் மாசம் 3000, 5000 என்று அடிமாட்டு சம்பளம் பேசி வேலை வாங்கப்படும்.

அப்ரண்டிஸ், ட்ரெய்னியெல்லாம் இப்படியே பிச்சையெடுக்கிறமாதிரி சம்பளம் வாங்கினா ஏழேழு ஜென்மம் போனாலும் அம்பானியாக முடியாது (ஆனா அவுங்க மட்டும் எப்படிப்பா ஒரே ஜென்மத்துல கும்பானியானாங்க? உங்கள விட கிட்னி ஜாஸ்தியா வேலை செய்யுதா அவங்களுக்கு மட்டும்?)

சரி விடுங்க. இவுங்க குடுக்கிற வேலை வாய்ப்பின் லட்சணம் இது தான். 20000 கோடியை இறக்குனாத்தான் 2500 பேருக்கு நிரந்தரம்னு சொல்லிக்கிறமாதிரி வேலை. அதுவும் எவ்வளவு நாள் நிரந்தரம்ன்னு உறுதியா சொல்ல முடியாது.

இவுங்க இருபதாயிரம் கோடி இன்வெஸ்ட் பண்றாங்க இல்லியா. அதுல 30-40 சதவீதம் தொழிற்கூடம், கட்டிடம் கட்டவும், அப்புறம் 30-40 சதவீதம் மிஷின்களை இறக்குமதி பண்ணவும் போக, மிச்சமிருக்கிற கொஞ்சூண்டு பணம் தான் ஆப்பரேட்டிங் காஸ்ட்.

அதுல லாபம் கண்டிப்பா வந்தே ஆகணும். 10 வருஷத்துல 20ஆயிரம் கோடி இன்வெஸ்ட் பண்ணினா அந்தக் கம்பெனி தர்மத்துக்கா இன்வெஸ்ட் பண்ணும் ? இல்லை.
அதே பத்து வருஷத்துல அதிலருந்து கிடைக்கிற லாபம் 40ஆயிரம் கோடியா இருக்கணும். இல்லாட்டி என்ன கர்மத்துக்கு அந்த இன்வெஸ்ட்மண்ட்ன்றேன்.

நாப்பதாயிரம் கோடி லாபம் வரணும்னா அவனெல்லாம் டாஸ்மாக் தான் வச்சி நடத்தணும். இதிலே நம்ம முதல்வரம்மா கிட்ட எதுக்கு 'அண்டர்ஸ்டேண்டிங்' பண்றாங்க ?
எதுக்குன்னா, இடம் சல்லிசா கிடைக்கும், தண்ணீர் சல்லிசா கிடைக்கும், கரண்ட் சும்மா கிடைக்கும் 24 மணி நேரமும், ரோடு போட்டுத் தரும் கவர்மெண்ட் ப்ரீயா. இவ்வளவும் சல்லிசா கிடைக்க ஆளுங்கட்சிய ஒரு 'அண்டர்ஸ்டேண்டிங்' பண்ணா போதும்.

இது நம்ம ஊரு முருகப்பா குரூப்புக்கே இவ்வளவு சலுகைன்னா அன்னிய முதலீடுன்றது லட்சம் கோடிகளில் புரளும். லட்சம் கோடியை எண்ணிப் பார்க்கவே நமக்கு ஆயுசு முடிஞ்சு போகும்.
http://trinitymirror.net/coimbatore/wp-content/uploads/2012/11/04-11-2012.pdf

ஆயிரம் கோடிகளுக்கு அம்மாவைப் புடிச்சவங்க.. லட்சம் கோடிக்கு மன்னுமோகனைப் பிடிச்சிட்டாங்க..அவ்வளவு தான் சிம்பிள்.
வந்திருச்சி சிறு வணிகத்தில் அன்னிய முதலீடு.

இதுக்கு பில்டப்புகள் பார்த்தா பலவிதம்...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தே ஆவணும்னு பிஜேபி, மம்தா பானர்ஜி ஒரே போராட்டம்..பில்டப். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தா அதை ஜெயிக்க தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை இல்லைன்றது எல்கேஜி பையனுக்குக் கூட தெரியும்.

இதுக்கு பதில் பில்டப் நம்ம கலைஞர், கசப்பாக இருந்தாலும் நாங்கள் அதை ஆதரிப்போம்ன்றார் கலைஞர். அவரு பேரனே நாளப் பின்ன அதுல ஒரு பெரிய ஷேர் ஹோல்டராக வாய்ப்பிருக்கு. அதை ஏன் அவரு விடணும்? ஈழத்தமிழனுக்கு நீலிக்கண்ணீர் வடிச்சப்பவே அவர் கூலிங்கிளாஸ் கண்ணாடிக்குப் பின்னாடி இருந்த முகமூடி கிழிஞ்சி போச்சி. இனி எதுக்கு முக்காடுன்னு நென்ச்சிட்டார் போல இருக்கு.

இதில் கம்யூனிஸ்ட்டுகள் பில்டப் கொஞ்சம் விசேஷமானது. அவர்கள் 'நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றுப் போகும்னு எல்.கே.ஜிப் பையனுக்குத் தெரியும்ன்றது எங்களுக்கும் தெரியும். அதனால அதை பார்லிமண்டில் விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு விடணும்'  அப்படின்னு வீர வசனம் பேசினாங்க.

கடைசில என்ன ஆச்சு நேத்திக்கு வீரதீரமா பார்லிமண்ட்ல ஷிப்ட் வச்சி ஆளாளுக்குப் பேசி இன்னிக்கு ஓட்டெடுப்புக்கு விட்டதில 254 ஆதரவாயும் 224 எதிராயும் விழுந்திடுச்சி. அன்னிய முதலீடு ஜெயிச்சுடுச்சு. ஆனா பாவம் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு யார் ஓட்டுப் போடுவாங்களோ அவங்களே தான் இந்த வாக்கெடுப்புக்கும் ஓட்டுப் போடுவாங்க.. அப்போ நம்பிக்கையில்லா தீர்மானமே தோத்துடும்னா இது மட்டும் எப்படியப்பா ஜெயிக்கும்னு ப்ளே ஸ்கூல் படிக்கிற பையனுக்கு தெரியற லாஜிக் இவங்களுக்கு மட்டும் புரியவேயில்லை.

ஜனநாயக முறைப்படி போராடி நாலு நாள் பார்லிமண்டை ஒத்தி வைச்சாச்சு. கடைசில ஜனநாயக முறைப்படி தான் அன்னிய முதலீடும் வெற்றி பெற்றிடுச்சு 20 ஓட்டு கூட அதிகமா வாங்கிடுச்சு. அதுக்காக ஜனநாயக முறைல, பார்லிமண்ட்ல சொன்னா சரிதான்னு போயிடுவாங்களா கம்யூனிஸ்ட்டுகள் ?

அடுத்த புளுகு 'சில்லறை அந்நிய முதலீடு வந்தா விவசாயிகளுக்கு லாபம்..ஏன்னா இடைத் தரகர்கள் இல்லாமல் நேரடியா வால்மார்ட்டே வந்து கொள்முதல் பண்றதுனாலே '

இதுக்கு இன்னொரு கதைக்குப் போவோமா.. ஒரு ஊர்ல ஒரு நாட்டாமை(40 வருஷத்துக்கு முந்தின இந்திய கவுர்மெண்ட்டு) இருந்தாராம்.

அந்த ஊர்ச் சந்தைல மாடு விக்க வர்றவங்க(விவசாயி) மாட்டை சரியான விலைக்கு வித்துட்டுப் போகனும்றதுக்காக எல்லாரும் நாட்டாமையோட தரகர்கள் கிட்டே தான் விலை பேசனும்னு சொல்லி வியாபாரத்தை ஒழுங்கா வெச்சிகிட்டாராம்.

நடுவுல இருந்த நாலு ரவுடிப் பசங்கள் (ப்ரைவேட் கம்பெனிகள்) இதை உடைக்கிறதுக்கு அவுங்க நாலு தரகர்களை உள்ளே வுட்டு அவுங்க வேணும்னே விலையை கூட்டிக் குறைச்சிப் பேசி கடைசில மாடெல்லாம் இந்த ரவுடிப் பசங்களுக்கு கிடைக்கிற மாதிரி பண்ணிட்டாங்களாம்.

இதையெல்லாம் பாத்த பெரிய தாதா (வால்மார்ட்) இவனுங்கள் என்ன சல்லிப் பசங்க.. நானே நேரடியா புகுந்து எல்லாத்தையும் அள்றேன் பாருன்னுட்டு உள்ள புகுந்தானாம்.

இந்தச் சின்ன ரவுடிப் பசங்க, அவங்களோட தரகர்களை அடிச்சி விரட்டிட்டு ஹீரோ மாதிரி எபக்ட் குடுத்து நின்னானாம். உடனே மாட்டுச் சந்தை மக்களெல்லாம் இனிமே எங்க மாட்டையெல்லாம் நீங்க தான் நிரந்தரமா நல்ல விலை கொடுத்து வாங்கிக்கிட்டே இருக்கணும்ணு கேட்டுக்கிட்டாங்களாம்.

ஒரு மாசம், ரெண்டு மாசம் போயிட்டு பின்னாடி தாதா சொன்னானாம்.. எனக்கு இவ்வளவு மாடு தேவையில்லை. நானே நிறைய மாடு வெச்சிருக்கேன். நீங்கள்லாம் போய் ஆடு கொண்டு வாங்கன்னானாம்.

எல்லோரும் வளத்த மாட்ட அடிமாட்டு விலைக்கு அவன்கிட்டவே தள்ளிட்டு ஆடு வளர்க்க ஆரம்பிச்சுட்டாங்களாம். அப்புறம் வந்தா சீச்சி... எனக்கு ஆடு வேண்டாம் ஒட்டகம் தான் வேணும்னானாம்.

இப்படிப் போகுது கதை..  ரொம்ப சிம்பிளா கேக்கணும்னா வால்மார்ட் வந்ததால் அமெரிக்காவில் விவசாயிகள் என்கிற இனமே அழிந்து போகும் நிலையில் இருக்கிறது. அங்கே எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகள் தான் விவசாயம் பண்ணுகின்றன. விவசாயிங்க இல்லை.

ஒரு காலத்தில் 100 பேருக்கு ஆண்டு முழுதும் வேலை கொடுத்த 4 ஏக்கர் நிலம் இன்று 4 பேர் கூட பார்த்துக் கொள்ள தேவையில்லை. எல்லாம் மிஷின் பார்த்துக்கிடும் என்று இருக்கிறது அமெரிக்காவில்.

அப்புறம் எப்படி வேலை வாய்ப்பு பெருகும் ?

அடுத்த புளுகு வால்மார்ட் வந்தால் உணவுப் பொருட்கள் வீணாகாது. குளிர் பதன அறைகளில் பத்திரமாக சேமிக்கப்படும்.


40 வருடங்களுக்கு முன் உணவு தானியங்களை சேமிக்கும் குளிர் பதன கிடங்குகளை நாட்டில் நிறுவியது ஆளும் அரசு மட்டுமே. அன்றைக்கு கிடங்கை வாடகைக்கு பயன்படுத்தக் கூட வக்கின்றி இருந்தது தனியார் துறை.

இன்று அரசு பிச்சைக் காரனாய் நிற்கிறது. ரிலையன்ஸ் அம்பானி அரசை விட அதிகமாக குளிர்பதனக் கிடங்குகளை கைவசம் வைத்திருக்கிறார். அரசு கிடங்கில் தானியங்களை எலிகள் தின்கின்றன. அப்படி வீணாகப் போவதை எடுத்து மக்களுக்கு ரேஷன் கடைமூலம் குடுய்யா என்ற சுப்ரீம் கோர்ட்டைப் பார்த்து நம்ம மன்மோகன் சிங் சொல்கிறார் "உங்க வேலையப் பாருங்கப்பா.. எனக்கு வேற வேல இருக்கு".

இது யார் தவறு ? அரசு என்றால் மக்கு மோகன்களும், மௌன குரு நரசிம்மா ராவ்களும் ஆண்டதில் அரசு தனியாரிடம் கைகட்டி நிற்கும் நிலை வந்தது யாரால்?

மக்களே... உங்களால். உங்களால் தான்.
அரசுத் துறையில் இருக்கும் மக்கள் பொறுப்பற்று இருப்பதும், சாதாரண மக்கள் தனியார் தான் நல்லா வசதி செய்யுதே என்று உங்கள் சுயநலத்துக்கு தனியாரிடம் போய் தனியாரை இன்று அசுரர்களாக வளரவிட்டதும் தான்.

அதன் பலனை நீங்கள் நாளை அனுபவிப்பீர்கள்.. எஞ்சாய்..ஆல் தி பெஸ்ட்.

Friday, November 23, 2012

தெய்வநாயகம் என்கிற மனிதநேய மருத்துவர்

பிரபல நெஞ்சு நோய் நிபுணரும், அமைதி இயக்கம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தவருமான டாக்டர் சி.என். தெய்வ நாயகம் அவர்கள் கடந்த திங்களன்று காலமானார். அவருக்கு வயது 70.

தெய்வநாயகம் அவர்களை சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு தண்டுவடத்தில் டி.பி. நோய் தாக்கி நடக்க இயலாமல் போனபோது,

அவருக்காக சரியான மருத்துவர்களைத் தேடியலைந்த போது தான் முதன்முதலாய் சந்தித்தேன்.

மிகப் பெரிய மருத்துவ பதவிகளை வகித்த அவர் வெறும் 50 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு தனது சேவை அமைப்பின் க்ளினிக்கில் அம்பாசடர் பல்லவா ஹோட்டல் அருகில் இருந்த கட்டிடத்தில் இலவசமாக மருத்துவம் செய்து கொண்டிருந்தார்.

அவர் நினைத்தால் அவருக்கு லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க பெரிய பணக்கார நோயாளிகள் கூட்டம் இருக்கிறது. ஆனாலும் அவர் சேவை செய்வதையே விரும்பினார். பணக்காரர்களும் கார் போட்டுக் கொண்டு, விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து அங்கு வந்து காத்து நிற்பார்கள். அவர்களுக்கும் அதே 50 ரூபாய் தான்.

இந்த 50 ரூபாயும் வெறும் பதிவுக் கட்டணமே. அதற்குப் பின்னர் எத்தனை முறை நீங்கள் சென்றாலும் இலவசமாகத் தான் பார்ப்பார்.

1942, நவம்பர் 15ல் பிறந்த தெய்வநாயகம், சென்னை மருத்துவக் கல்லூரியில் 1965ல் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் 18 மாதங்கள் பயிற்சி பெற்றார். FRCS பட்டமும் பெற்றார். அவர் உலக அளவில் புகழ் பெற்ற எடின்பர்க்கில் உள்ள ராயல் ஸ்கூல் ஆப் பிசிசியன்ஸ் (Royal School of physicians)ல் உறுப்பினராவார். பிரிட்டனின் மருத்துவ ஆய்வுக் கவுன்சிலில் ஆய்வு அதிகாரியாகவும் இருந்தார்.

1970 முதல் 2000 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சு நோய்த் துறையின் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இந்திய நெஞ்சு நோய் கழகம் என்கிற அமைப்பையும் லங் இந்தியா என்கிற இதழையும் நடத்தி வந்தார்.

சென்னை மருத்துவமனையில் கடுமையான எதிர்ப்பை மீறி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் பிரிவை உண்டாக்கினார்.
மருத்துவத்தில் அவருடைய முக்கிய பங்கு அல்லோபதி மருத்துவத்துடன் நமது நாட்டின் பாரம்பரிய சித்த மருத்துவத்தையும் கலந்து வெற்றிகரமாகப் பயன்படுத்தியதாகும். இதற்காக எம்.பி.பி.எஸ் மருத்துவரான அவர் சித்த மருத்துவப் படிப்பையும் படித்துத் தேர்ந்தார்.

சென்னை சானேட்டோரியத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சித்த மருந்து ஆய்வு ஒன்றைச் செய்தார். அதில் சுமார் 80 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சித்த மருந்தான ரஸகந்தி மெழுகு எவ்வாறு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ந்ததில் 90 சதவீத நோயாளிகள் நோயின் கடுமையிலிருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பினர். அவர்கள் எல்லோரும் வாழ்நாள் முழுதும் அந்த மருந்தை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். மற்றபடி சாதாரணமாக வாழ ஆரம்பிக்கலாம். நோய் அவர்களை கொல்வதிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.

தனது கண்டுபிடிப்புக்களை ஐ.நாவில் இருக்கும் மருத்துவ அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் சென்று சமர்ப்பித்தார். எல்லோரும் சித்தமருத்துவத்தை வியந்து பார்க்க வைத்தார். வழக்கம் போல நமது அரசின் தொடர் உதவிகள் இல்லாததில் அந்த முயற்சியை மேலும் பரவலாக்கி நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியாமல் போனது.

அவரது சித்த மருத்துவ சேவையினால் அவர் தேசிய சித்த மருத்துவக் கவுன்சிலின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகக் கண்டிப்பாகவும், கறாராகவும் பேசக் கூடியவர். எளிமையாக வேட்டி, சட்டை அல்லது குர்த்தா அணிந்திருப்பார். செயின் இணைக்கப்பட்ட கண்ணாடி அணிந்திருப்பார்.

நடக்க இயலாமல் போன எனது நண்பரை ஆட்டோவில் வைத்துக் கூட்டிப் போய் அவரை அலேக்காகத் தூக்கிச் சென்று அவரது க்ளினிக்கில் பெஞ்ச்சில் படுக்க வைத்திருந்தோம். நண்பரின் முறை வந்ததும் மிக சகஜமாகப் பேசி அவரது ஸ்கேன் மற்றும் அனைத்து ரிப்போர்ட்களையும் ஒரு முறை பார்த்தார்.

பின்பு தனது பரிசோதனையின் மூலம் கால் செயலிலழந்து போனதை பரிசோதித்தார். பரிசோதித்து விட்டு சர்வ சாதாரணமாகச் சொன்னார். 'டி.பி. கட்டி ஸ்பைனல் கார்டுல இருந்து போகிற நரம்புகளை அழுத்திட்டு சில எலும்புகளை அரிச்சுட்டு இருக்கு. சரிபண்ணிடலாம்.'

நடக்கவே இயலாது எனக் கைவிடப்பட்ட எனது நண்பர் அவரது அல்லோபதி மற்றும் சித்த மருத்துவ முறையால் ஒரு வருடத்தில் திரும்பவும் எழுந்து நடந்தார். அதற்குப் பின் நிறைய பேரை அவரிடம் போய்ப் பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறேன்.

மக்கள் டி.வியில் தினமும் மக்களின் மருத்துவ கேள்விகளுக்கு பதில் சொல்லும் தொடரை நடத்தி வந்தார். இயற்கை உணவு மற்றும் மருந்துகளையும், பக்க விளைவுகளில்லாத சித்த மருந்துகள் பற்றியும் விரிவாக சாதாரண மக்களுக்கும் புரியும்படி விளக்குவார்.

அவர் வாழ்க்கையில் நடந்ததாக பின்வரும் நிகழ்வைச் சொல்வார்கள். அவர் மிகச்சிறந்த மருத்துவ நிபுணராக அறியப்பட்ட காலம் அது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் வெங்கட்ராமன்.

ஒரு நாள் காலை தெய்வநாயகம் அவர்களின் க்ளினிக்கிற்கு அரசு மாளிகைக் கார் வந்து நிற்கிறது. க்ளினிக்கில் சில பேஷண்ட்டுகள் இருக்கிறார்கள்.

அவசரமாக காரில் வந்த அதிகாரி ஒருவர் வெங்கட்ராமன் அவர்களுக்கு உடல் நிலை சிறிது சரியில்லை எனவும் உடனே மருத்துவரை அழைத்து வர கார் அனுப்பினார்கள் என்றும் சொன்னார்.

அதற்குப் பதிலளித்த தெய்வநாயகம், தனது பேஷண்ட்டுகளை சிறிது நேரத்தில் பார்த்து முடித்துவிட்டு உடனே வருவதாகக் கூறினார். அதிகாரியோ குடியரசுத் தலைவர் விஷயம் நீங்கள் எல்லாவற்றையும் போட்டுவிட்டு உடனே வந்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்.

"ஐயா, உங்களது குடியரசுத் தலைவருக்கு உடல் நலமில்லை என்றாலும் தலை போகும் அவசரமில்லை. இதோ எனது பேஷண்ட் வயிற்று வலி என்று துடித்துக் கொண்டிருக்கிறார். இவரை கவனித்து விட்டுத் தான் என்னால் வரமுடியும்" என்று உறுதியாகக் கூறி தனது பேஷண்ட்களை கவனித்து அனுப்பி விட்டே வெங்கட்ராமனைச் சென்று கவனித்தார்.

டாக்டர் தெய்வநாயகம் போன்ற மனித நேயம் நிரம்பிய மனிதர்கள் மருத்துவர்களாய் இருந்த காலம் போய் மணிக்கு ஒரு ஆப்பரேஷன் என்று கல்லா கட்டும் மருத்துவர்களே பெருகியிருக்கிறார்கள்.

சித்த மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் கலந்து செய்ததன் மூலம் சித்த மருத்துவத்துக்கும் அங்கீகாரம் பெற்றுத் தந்த அந்த நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மூன்று மகள்களுக்கும் மற்றும் குடும்பத்தினர், அமைதி இயக்கத்தினர் எல்லோருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Friday, September 21, 2012

கூடங்குளம்: சி.பி.எம்மின் புரட்சி! அறிஞர் அ.மார்க்ஸின் மகிழ்ச்சி!!

சி.பி.எம்-மின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் “இறக்குமதி அணு உலைகள் ஆகாது பாதுகாப்பில் சமரசம் கூடாது” என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். முதலில் இந்தக்கட்டுரையை அவர் ஏன் எழுதினார்? கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் சி.பி.எம் கட்சி மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூர் திட்டத்தை மட்டும்  ஏன் எதிர்க்கிறது என்ற கேள்விக்குத்தான் இந்த பதில். அதாவது சி.பி.எம்மின் இரட்டை வேடத்தை அல்லது டபுள் ஆக்டிங் சரிதான் என்பதே காரத்தின் பதில்.

காரத் எழுதிய இந்த வழா வழா கொழா கொழா கட்டுரையின் சாரம் என்ன? அல்லது ஏற்கனவே சி.பி.எம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை இந்தக் கட்டுரை மறுக்கின்றதா அல்லது ஆதரிக்கின்றதா? நிச்சயமாக ஆதரிக்கவே செய்கிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்திற்கு முன்பேயே ரசியாவிடமிருந்து இரண்டு அணு உலைகள் வாங்கப்பட்டு 15,000 கோடி ரூபாய் செலவில் கூடங்குளத்தில் கட்டப்பட்டு விட்டதால் அதை மூடுவது சாத்தியமானது அல்ல என்பதோடு நாட்டு நலனிற்கும் உகந்தது இல்லையாம்.

இதைத் தவிர்த்த மற்ற அணு உலைகள் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு பிறகு வந்தவையாம். இந்திய சுதேசி அணு உலைகளை விட இவை மிகுந்த செலவு பிடிப்பவையாம். அதனால் அமெரிக்க, ஐரோப்பாவிலிருந்து இறக்குமடி செய்யப்பட்ட அணு உலைகளை சி.பி.எம் கட்சி எதிர்க்கிறதாம். சரி, இதன்படி இந்த ஐரோப்பாவின் மேப்பில் ரசியா வராது போலும். மேலும் இத்தகைய அணு உலைகளின் பாதுகாப்பும் பிரச்சினையாம். அதாவது ஒரு இடத்தில் இரண்டு உலைகள் இருந்தால் பிரச்சினை அல்ல, நான்கு, ஆறு என்று இருந்தால் பிரச்சினை என்பதை காரத் சுற்றி வளைத்து கூறுகிறார். இதற்கு ஆதாரமாய் புகுஷிமா வில் ஆறு உலைகள் இருந்ததை காரத் கண்டுபிடித்துக் கூறுகிறார்.

புகுஷிமா விபத்திற்குப் பிறகு அணு உலைகள் குறித்த மக்களின் அச்சம் அதிகரித்திருக்கிறதாம். இதை நிவர்த்தி செய்யுமாறு சுயேச்சையான நிபுணர்கள் அடங்கிய கமிட்டி ஆய்வு செய்து அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டுமாம். பாதுகாப்பு தொடர்பான அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தில் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை அரசு தெளிவு படுத்தி அதையும் மக்கள் முன் வைக்க வேண்டுமாம்.

அணுமின் நிலையங்களை ஆதரிக்கும் அப்துல் கலாம் உள்ளிட்டு பலரும் காரத் பேசுவதைப் போலத்தான் பேசுகின்றனர். மக்களின் அச்சத்தை போக்குவது என்ற போர்வையில்தான் கூடங்குளம் அணுமின்நிலைய அனுமதியும், துவக்கமும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. இதையெல்லாம் செய்து விட்டால் அணுமின்நிலையங்களை சேமமாக நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் காரத் மற்றும் அவரது கட்சியின் நிலைப்பாடு.

தந்திரமான மொழியிலும், விவாதத்திலும் மறைந்து கொண்டாலும் காரத்தின் சந்தர்ப்பவாதம் இங்கே பட்டவர்த்தனமாக காட்டிக் கொள்ளவே செய்கிறது. இந்தியாவின் தரகு முதலாளிகள் மற்றும் அவர்களது பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காகவே இங்கு அணுமின்நிலையங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அமெரிக்கா முதல் ஆதாயம் அடைகிறது என்றால் பிரான்ஸ், ரசியா அடுத்தடுத்து ஆதாயம் அடைகின்றன. இதில் ஒன்றை எதிர்த்து விட்டு பிறிதொன்றை ஆதரிப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

மேலும் ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் என்று என்.ஜி.ஓ மொழியில் விளக்கமளிப்பது சி.பி.எம்மின் மறைமுக ஆளும் வர்க்க சேவையையே குறிக்கிறது. ஒரு வேளை போராடும் மக்கள் அப்படித்தான் அதை புரிந்து கொண்டு எதிர்த்தாலும் அதை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்துக் கொண்டு செல்வது நமது  கடமை. மேலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பது என்பது இந்திய அரசையே எதிர்ப்பதாக கருதப்பட்டு அங்கு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை ஒரு பகுதியின் பொருளாதார பிரச்சினையாக சுருக்கி பார்ப்பதன் மூலம் சி.பி.எம் கட்சி தனது மறைமுக இந்திய முதலாளிகளது சேவையை தொடர்கிறது.

அடுத்து கூடங்குளம் திட்டம் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு முன்பேயே வந்தாலும் அது முற்றிலும் தற்போதைய அமெரிக்க ஒப்பந்த்தத்தின் ஷரத்துக்களின் படியே அமல்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமானது விபத்து ஏற்பட்டால் அணுஉலைகளை அளித்த நாடுகள் நிவாரணம் வழங்கத் தேவையில்லை என்பது. இதை காரத் குறிப்பிட்டாலும் பெரிய மனதுடன் இரண்டு உலைகளை அங்கே செயல்படலாம் என்று அனுமதிக்கிறார். அங்கு கூடுதலாக வரும் இரண்டு உலைகளை மட்டும் அவரது கட்சி எதிர்க்குமாம்.

கூடங்குளம் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றால் அது இதர அணு உலை எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்குமென்பதால்தான் இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு அதை அடக்க முனைகிறது. இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட காரத்திற்கு அறிவு இல்லை என்பதல்ல, அவரது சந்தர்ப்பவாதம் இங்கே உண்மைகளை கொன்று விடுகிறது.

இதற்கு மேல் நிறைய செலவு செய்து விட்டார்கள் என்று கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிப்பதை இப்படியும் சொல்லலாம். அதாவது முதலாளித்துவம் இதுவரை செலவழித்து உருவாக்கியிருக்கும் பல கோடி பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கைப்பற்றி சோசலிச சமூகத்தை படைக்கும் புரட்சி கூட நாட்டு நலனுக்கு உகந்தது அல்லதான். அதனால்தான் சி.பி.எம் கட்சி புரட்சியிலிருந்து விலகி மனமகிழ் மன்றமாக மாறிவிட்டது போலும்.

அதே நேரம் காரத்தின் இந்தக் கட்டுரை அறிஞர் அ.மார்க்சை குஷிப்படுத்தியிருக்கிறது. முகநூலில் இது குறித்து விரிவாக எழுதியிருக்கும் அ.மா அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

   

 ” மக்கள் திரளைச் சார்ந்து இயங்கும் ஒரு கட்சி இப்படியான ஒரு கருத்தியல் மாற்றத்தையும், அதனடிப்படையில் ஒரு நிலைபாட்டு மாற்றத்தையும் மேற்கொள்வது கேலிக்குரியதோ, இழிவானதோ அல்ல. மக்களைத் திரட்டுவது குறித்துக் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்களுக்கு வேண்டுமானால் தாங்கள் கொள்கை மாற்றம் இல்லாமல் என்றோ உருவாக்கப்பட்ட பழைய திட்டத்தின் அடிப்படையில்  கறாராகச் செயல்படுவது பெருமையாக இருக்கலாம். இந்த அடிப்படையில் காரட்டின் கட்டுரையினூடாக வெளிப்படும் அணுகல் முறை மாற்றம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, தனி மனித ஆர்வங்கள், சுற்றுச் சூழல் இயக்கங்கள், சிறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் துணையுடனேயே இதுவரை நடைபெற்று வந்த அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களில் இந்தியாவின் முக்கிய இடதுசாரி அமைப்பான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு ஒரு பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பலாம்.”

இந்தக்கட்டுரை சி.பி.எம்மிடம் எந்த நிலைப்பாட்டு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதே காரத்தே ஒத்துக் கொண்டாலும் அறிஞர் அ.மா மறுப்பார் போலும். நிலவுகின்ற சமூக அமைப்பை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொண்டு சீர்திருத்தம் கோரும் ஒரு நிலையை மாபெரும் புரட்சி என்று சித்தரிக்கும் அளவு அறிஞரின் காமன்சென்ஸ் குறுகிவிட்டது. அணு மின்சாரம் தவிர்த்த மாற்று எரி சக்தி திட்டங்களை மையமாகக் கொள்ள வேண்டும் என்று காரத் கூறயிருப்பதெல்லாம் அ.மாவுக்கு மாபெரும் கலக குரலாக தென்படுகிறது. இதைத்தான் டிராபிக் ராமசாமி முதல் சூரிய விளக்கிற்காக என்.டி.டி.வியுடன் கூட்டணி அமைத்து செயல்படும் பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான் வரை பலரும் சலிப்பூட்டும் விதத்தில் சொல்கிறார்கள். அதன்படி அவர்களையும் புரட்சிக்காரர்களாக அ.மா ஏற்றுக்கொள்வார் என்று நம்புவோம்.

மக்களை அணிதிரட்டும் கவலை இல்லாத இரும்புக் கொள்கையர்கள் மட்டும் இது போல ஏதாதாவது கூவிக் கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறார் அ.மா. இதைத்தான் கருணாநிதி பலமுறை ஈழம் குறித்து சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும், ஆட்சியில் இருக்கும் போது எச்சரிக்கையாகத்தான் செயல்பட முடியும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட முடியாது…. இதெல்லாம் கூட அ.மாவின் இந்த இரும்பு இலக்கணத்தில் கண்டிப்பாக வரும். ஒரு பிரச்சினைக்கு இறுதித் தீர்வு என்ன என்பதும் அதை நோக்கியே தற்கால போராட்டங்கள் இருக்க வேண்டும் என்பதும் புரட்சி குறித்து ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சி அறிய வேண்டிய அடிப்படைப் பாடம். அதாவது புரட்சிக்காகத்தான் மக்களை திரட்டுகிறோமே அன்றி மக்கள் எதற்காகவாவது திரண்டு விட்டால் அது புரட்சி அல்ல. ஆனால் அ.மா இரண்டாவதைத்தான் புரட்சி என்று நம்புவதால் அதை அதற்கு உரிய சி.பி.எம்மிற்கும் விருதாக அளித்து மகிழ்கிறார்.

அணுமின்நிலையத்தை சுற்றுசூழல் பிரச்சினையாக மட்டும் பார்ப்பது என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உத்தி. சி.பி.எம் அதையும் பேசிக் கொண்டு அமெரிக்க எதிர்ப்பு என்பதாகவும் நாடகம் ஆடுகிறது. உள்நாட்டு உலை பாதுகாப்பானது, வெளிநாட்டு உலை ஆபத்தானது என்ற காரத்தின் அபத்தத்தை சுட்டிக்காட்டும் அ.மா அதன் அரசியல் சந்தர்ப்பவாதத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் எப்படியும் புரட்சி வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் போது ஒரு அறிவாளியின் நடவடிக்கையில் சந்தர்ப்பவாதம் மட்டும்தானே மையமாக இருக்க முடியும்? ஆனாலும் இது ஒரு நாசுக்கான, நாகரீகமான முறையில் வெளிப்படும் என்று அறிஞர் அ.மார்க்ஸ் நம்பிக் கொண்டிருந்தால் அவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

--நன்றி. வினவு இணையதளம்(http://www.vinavu.com).

தொடர்புடைய சுட்டிகள்

Sunday, September 16, 2012

முகம்மது நபியை இழிவுபடுத்தும் ஹாலிவுட் திரைப்படம்

கடந்த ஜூலை மாதம் இணையத்தில் யூ ட்யூபில் தி இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்’(The Innocence of Muslims)  ‘சாம் பெஸில்ஸ் தி முகமத் மூவி’ (Sam Bacile’s The Muhammed Movie) என்கிற பெயர்களில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் படம் தான் புதிதாக சர்ச்சையைக் கிளப்பியுள்ள சினிமா.

14 நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் (ஒரிஜினல் படத்திலிருந்து கட் செய்யப்பட்ட ட்ரெய்லர் வெர்ஷன் இது என்கிறார்கள்) முன்னெப்போதும் இல்லாததை விட மிக வெளிப்படையாக படத்தின் ஹீரோவாக முகமது என்கிற பெயரிலேயே பாத்திரம் இருப்பதுடன், குரானை இழிவுபடுத்தியும் வசனங்கள் பேசப்படுகின்றன.

முகமது நபியை கள்ள உறவினால் பிறந்தவராகவும், பெண் பித்தராகவும், குழந்தைகளுடன் உறவு கொள்பவராகவும், ஓரினச் சேர்க்கையாளராகவும், செல்வத்துக்காக கொலைகள் செய்யும் கொள்ளைக்காரராகவும் இன்னும் என்ன என்ன விதமாக கேவலமாகச் சித்தரிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாகச் சித்தரித்திரிக்கும் படம் இது.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு போலீஸ்காரன் சொல்வது போல ஆரம்ப வரிகளில் ‘முகம்மது நபி 61 மனைவிகள் வைத்திருந்தார். நானும் என் ஆஸ்பத்திரியில் இருக்கும் என் மனைவி இறந்துவிட்டால் உடனே இன்னொரு இளம் பெண்ணை நாளையே கல்யாணம் செய்து கொள்வேன்’ என்கிறான்.

குரானை பைபிளின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து முகமதின் மனைவி பகுதிகளை எடுத்து தொகுத்தார் என்று ஒரு காட்சியில் வருகிறது. முதல் முஸ்லீம் ஒரு கழுதை என்று காட்டுகிறார்கள். அந்தக் கழுதையுடன் முகமது பேசுகிறார். இதையெல்லாம் விடக் கேவலமாக படுக்கையறைக் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத எல்லோரும் என் எதிரிகள் என்று எல்லோரையும் முகமது நபி கொன்றொழிக்கிறார். இஸ்லாமியர்களின் ஆழ்ந்த மத நம்பிக்கைகளையும், அவர்களது சகோதரத்துவத்தையும், முகமது நபியையும் மிகவும் இழிவுபடுத்துகிறது இந்தப் படம். அத்தோடில்லாமல் ‘மேன் + எக்ஸ் = இஸ்லாமிக் டெர்ரரிஸம்’ என்று அமெரிக்கா உலகெங்கும் கூறும் இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற வாதத்தையும் அப்படியே இம்மி கூட மாற்றாமல் கூறுகிறது.

இப் படம் இணையத்தில் வெளியிடப்பட்டவுடன் மிக வேகமாகப் பரவி இஸ்லாமிய நாடுகளை மிகக் கொதிப்புக்குள்ளாக்கியது.மருத்துவமனையை எரிக்கப் போகும் எகிப்தியர்கள் செப்டம்பர் 8ம் தேதி இதன் சில துணுக்குகள் 2 நிமிடநேரத்திற்கு எகிப்து நாட்டில் ஒரு இஸ்லாமிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. எகிப்து நாடு முழுதும் இந்த சினிமா மற்றும் அதை வெளியிட்ட அமெரிக்கா மீது கடும் கோபம் எழுந்தது. .

எகிப்து அமெரிக்கத் தூதரகத்தின் முன் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். செப்டம்பர் 11 அன்று எகிப்தின் கெய்ரோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ஒரு தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸும் இன்னும் மூன்று அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர்.

எகிப்து, சூடான், துனீசியா, பாகிஸ்தான், யேமன், நைஜீரியா, லெபனான், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மக்கள் கொதித்தெழுந்து அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தியாவில் காஷ்மீரிலும், வட இந்திய மாநிலங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் அமெரிக்க தூதரகத்தின் எதிரே இஸ்லாமிய மற்றும் மனித நல்லிணக்க இயக்கங்கள் சேர்ந்து அமெரிக்க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின.
இப்படத்தை இணையத்தில் எகிப்திலும், லிபியாவிலும் தடைசெய்திருக்கிறது கூகுள் நிறுவனம். ஆனால் இந்தியாவில் இன்னும் இப்படத்தைப் பார்க்கலாம்.

இது பற்றி அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலர் ஹில்லாரி கிளின்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார். “இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறுவறுக்கத்தக்க வீடியோவினால் அமெரிக்க வெளியுறவுத் தூதகரங்கள் தாக்கப்படுகின்றன” என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டார்.

எகிப்தில் இறந்து போன தூதர் மற்றும் மூன்று அமெரிக்கர்களுக்கான நினைவுக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க தூதரகங்களின் மீதான தாக்குதல்களை அமெரிக்கா உறுதியுடன் எதிர்க்கும் என்று கூறியுள்ளார். இவர்கள் இருவருமே பட்டும் படாமலும் பதில் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

படத்தை தயாரித்தது யார்?
இப்படத்தின் தயாரிப்பு மற்றும் தயாரிப்பாளர் சம்பந்தமான செய்திகள் இப்படம் தயாரிக்கப்பட்டதன் நோக்கம் பற்றி மேலும் சந்தேகத்தை எழுப்புகின்றன.

தலைமறைவாகிவிட்ட இப்படத்தின் தயாரிப்பாளர்-மற்றும் இயக்குநரான நக்கௌலா பாசில்லி நக்கௌலா(Nakoula Basseley Nakoula) என்பவரை அமெரிக்காவின் எப்.பி.ஐ(FBI) இனம் கண்டிருக்கிறது. 55 வயதாகும் நக்கௌலா எகிப்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். அமெரிக்கக் குடியரசு உரிமை பெற்றுள்ளார். அவரைப் பேட்டி கண்ட எப்.பி.ஐயிடம் அவர் சொன்ன தத்துவ முத்து “இஸ்லாம் உலகைப் பற்றிக் கொண்ட கேன்சர்”. (கவனியுங்கள் இவ்வளவு கலவரங்களுக்கும், மரணங்களுக்கும் காரணமான அவரை எப்.பி.ஐ கைது செய்யவில்லை. மாறாக பேட்டி காண்கிறது.)

கலிபோர்னியாவில் பெட்ரோல் பங்க் நடத்திக்கொண்டிருந்த நக்கௌலா வரி ஏய்ப்பினால் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஒரு முறை போதைப் பொருள் வைத்திருந்ததற்காகவும் அவர் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். சிறையில் இருந்த அவர் மஞ்சள் கடுதாசி கொடுத்ததால் கடந்த ஜூன் 2011 ல் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

சிறையில் இவர் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியதாகவும், இப்படத்தைத் தயாரிக்க இவருக்கு யாரோ பெயர் தெரியாத ஒரு இஸ்ரேலிய பணக்காரர் 5 மில்லியன் டாலர்கள் பணம் கொடுத்ததாகவும் கூறுகிறார். 5 வருடங்களுக்கு இன்டெர்நெட் மற்றும் ரத்தச் சகதியில் இஸ்லாமியரின் ஹீரோகம்ப்யூட்டர்கள் உபயோகிக்கக் கூடாது என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்து வெளிவந்த இவர் வெளிவந்த உடனே இப்படத்தை எடுத்திருக்கிறார். கலிபோர்னியாவிலிருந்த தனது வீட்டிலேயே செட் போட்டு கம்ப்யூட்டர் முறையில் பேக்ரவுண்டு வைத்து (நம் டி.விக்களில் காம்பியரிங் பண்ணுபவர்கள் பின்னால் கிராபிக்ஸாக தூண்கள், சிற்பங்கள், படங்கள், கடல் வானம் என்று தெரியுமே!!.. அதே டெக்னிக் தான்).

இப்படத்தில் நடித்த 80 நடிகர் நடிகையர்களிடம் தொடர்பு கொண்டு இப்படத்தில் எவ்வாறு இப்படி நடித்தீர்கள் என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் தாங்கள் நடித்த திரைக்கதை இது அல்ல என்று உறுதியாக மறுக்கின்றனர். தங்களுக்கு சொல்லப்பட்ட கதையில் இஸ்லாமியப் பெயர் எதுவுமே இல்லை என்கின்றனர். படம் எடுக்கும் போது கதாநாயகனின் பெயர் ‘மாஸ்டர் ஜார்ஜ்’ என்று கூறப்பட்டு டப்பிங்கில் ‘முகமது’ என்று மாற்றப்பட்டுள்ளது. இது போல மற்ற எல்லாமே மாற்றப்பட்டுள்ளன.

முகமதுவின் மனைவியாகப் போகும் பெண்ணின் தாயாக நடித்த கார்ஸியா (Garcia) என்பவர் கூறுகையில் ‘இப்படத்தைப் பற்றி இயக்குனராக ஷூட்டிங் ஸ்பாட்டில் அறியப்பட்ட பெஸில் எங்களிடம் இது 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்ட எகிப்து பற்றிய படம் என்று கூறினார்’ என்கிறார்.

இப்படம் ஒரே ஒரு முறை கடந்த ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள ஒரு தியேட்டரில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. சுமார் பத்து பேரே அந்தக் காட்சியில் அப்படத்தை பார்த்திருக்கின்றனர். அப்போது இத்திரைப்படத்தின் டைட்டில் தி இன்னொஸன்ஸ் ஆப் ஒசாமா பின்லேடன் ‘The Innocence of Osama Bin Laden’ என்று இருந்திருக்கிறது. அந்தத் திரைப்படத்தை பார்த்த ஒருவர் கூறுகையில் “படம் தொழில்நுட்ப ரீதியாகவும், நடிப்பு மற்றும் எல்லா அம்சங்களிலும் மிக மோசமான படமாக இருந்தது. ஆனால் முகமது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. படம் மிக மோசமாக இருந்ததால் நான் பாதியில் எழுந்து வந்து விட்டேன்”.

பின்னர் இதே படம் தலைப்பு மாற்றப்பட்டு, டப்பிங் செய்யப்பட்டு உரையாடல்கள் இஸ்லாமை இழிவு படுத்தும் வாசகங்களாக மாற்றப்பட்டு அரேபிய மற்றும் ஆங்கில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சில இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள் இப்படத்தை வரவேற்றுள்ளன. ப்ளோரிடாவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ்(Terry Jones) என்கிற கிறித்தவப் பாதிரியார் இப்படத்தை தனது சர்ச்சில் திரையிடப்போவதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2010ல் இருநூறு குர்ரான் புத்தகங்களை தனது சர்ச் வளாகத்தில் வைத்து தீயிட்டுக் கொளுத்தி உலகெங்கும் பிரச்சனையைக் கிளப்பியவர்.

காரணம் என்ன?
இவ்வாறு அடிக்கடி மதத் துவேஷ பிரச்சனைகளை கையில் எடுப்பதில் ஆளும் வர்க்கங்கள் சளைப்பதேயில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் பிரான்சில் ஒரு பத்திரிக்கையாளர் முகமதுவைக் கார்ட்டூனாக வரைந்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய போது பிரான்சில் இன்னொரு பத்திரிக்கை அதே படங்களை வேண்டுமென்றே மீண்டும் வெளியிட்டது. பத்திரிக்கைச் சுதந்திரத்தை யாருக்காகவும் நாங்கள் விட்டுவிடமாட்டோம் என்று மார்தட்டியது அந்தப் பத்திரிக்கை. (ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட இரண்டு லட்சம் ஈராக்கியர்களைப் பற்றி வாயே திறக்காதிருந்த அந்தப் பத்திரிக்கையின் சுதந்திரத்தை என்னவென்பது? ஈராக்கிற்கு அனுப்பும் நேட்டோ படைகளில் பிரான்சின் படைவீரர்களும் உண்டு).

மற்ற மதங்களுக்கும் இஸ்லாமிய மதத்திற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. அது இஸ்லாமிய மதம் உருவ வழிபாட்டை கண்டிப்பாக மறுக்கிறது. கடவுளின் ஒரே தூதர் எனப்படும் முகம்மது நபிக்குக் கூட உருவ வழிபாடு கிடையாது என்பது அம்மதத்தின் முக்கியமான ஒரு கோட்பாடாகும். கிறித்துவ மதத்தின் இயேசுவோ அல்லது மற்ற எந்தக் கடவுளோ இவ்வளவு அழுத்தமாக உருவ வழிபாட்டுக்கு எதிராகச் சொல்லாததால் இயேசுவை கதாபாத்திரமாகக் கொண்ட கிறித்துவ ஆதரவு மற்றும் எதிர்க்கருத்துப் படங்கள் நிறைய வந்துள்ளன. இயேசு குழந்தை ஏசுவிலிருந்து சிலுவையில் சுமந்து சாவது வரை பல வடிவங்களில் வரையப்பட்டுள்ளார், செதுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இங்கு நபிக்கு உருவம் கொடுப்பதே மதத்திற்கு அதன் அடிப்படைக்கு மாற்றானது என்னும் போது இதில் தலையிட எந்த பத்திரிக்கை அல்லது ஊடகமானாலும் அதற்கு உரிமையில்லை.

அதற்காக இஸ்லாம் மற்றும் இஸ்லாமியருக்கு எதிரான எவையுமே அனுமதிக்கப்படவில்லையா என்ன?  முகமது மற்றும் குரானைப் பற்றி அவதூறாகப் பேசாத எல்லா வகையான விடுதலைக் கருத்துக்கள் மற்றும் இஸ்லாமின் மீதான எதிர் விமர்சனங்களை, தாக்குதல்களை சரியோ தவறோ இஸ்லாம் மக்கள் எதிர்கொள்கின்றனர். பதில் தருகின்றனர்.

உருவம் இல்லாத பொருளை மனிதனால் புரிந்து கொள்வதோ அதன் மீது கருத்துக்கள் ஏற்றுவதோ கடினமான காரியமாகும். கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் என்றாலும் அதற்கும் ஒரு குறியீடு வைத்துத் தான் அதை நாம் விளங்கிக் கொள்கிறோம். இந்த நிலையில் தான் கண்ணுக்குத் தெரியாத உருவமில்லாத இறைவன் மற்றும் அவரது தூதர் நபிகளை உருவம் கொடுத்து தங்கள் சுதந்திர ‘தாகத்தை’ தீர்த்துக் கொள்கின்றனர் இந்த விடுதலை டவுசர்கள்.

நோக்கம் என்ன?

சரி அமெரிக்காவும் இப்படி மதத்துவேஷத்தைக் (குறிப்பாக இஸ்லாமிய மதத்துவேஷத்தை)கிளறி விட்டு குளிர் காய்வதன் நோக்கம் என்ன?
உலகப் பொருளாதார நெருக்கடி.
அமெரிக்கப் பொருளாதாரம் உலகப் பொருளாதார நெருக்கடியால் மேலும் சிதைவுண்டு போயிருக்கிறது. அமெரிக்காவில் உலகின் பெரும் பணக்காரர்களில் முன்னிலை ஆட்கள் பலர் இருந்தாலும் அவர்கள் தங்களது பணத்தால் அதன் பொருளாதாரத்தை காப்பாற்றும் மூடில் இல்லை. அங்கு சாதாரண மக்கள் மேலும் நசுக்கப்பட்டு பிழியப்பட்டு பணமின்றி வாழ வாழ்வின் எல்லைகளை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர். அந்த நெருக்கடிக்குக் காரணம் இந்த அரசும் அதை பின்னிருந்து ஆட்டுவிக்கும் இந்த மெகா கார்ப்பரேட்டுகளும் என்பதை மக்கள் உணர ஆரம்பித்தால் என்ன ஆகும் ?  ஒபாமா நாட்டை விட்டே ஒட வேண்டிய நிலை வரும்.  எனவே நான் திருடன் என்பதை மறைக்க வேறொரு ஆளை கைகாட்ட வேண்டும்.

பாங்க் வாசலில் பத்து ரூபாய்த் தாளை கீழே போட்டுவிட்டு ‘சார் பத்து ரூபாயை கீழே விட்டுட்டீங்க சார்’ என்றதும், அவர் குனிந்து அதை எடுக்கையில் அவர் கைப்பையில் வைத்திருந்த லட்ச ரூபாய் திருடப்படும்.

அதே டெக்னிக்தான் இது. மக்களை தம் சொந்தப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப.. திருடனை தப்ப விட.. அப்பப்போ இப்படி படங்களும், திமிர்ப் பேச்சுக்களும் வருகின்றன. வரும். அதைத் தொடர்ந்து கலவரங்கள் வரும். தலைகள் உருளும். உயிர்கள் பலியாகும். முடிவில் “இஸ்லாம் மதமே தீவிரவாதம். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள்” என்ற கருத்தாக்கத்தில் முடியும். அதுவே அவர்கள் விரும்புவது. அதுவே நடக்கிறது.

மேலும் அமெரிக்கா இனி போர் தொடுத்து ஆக்கிரமிக்கப் போகும் எண்ணெய் வளம்மிக்க அடுத்த இஸ்லாமிய இலக்கு(target) நாடு எதுவோ அதன் மீது போர்த் தொடுக்கும் முன் அந்நாடும் அதன் மக்களும் கொஞ்சம் கூட சகிப்புணர்வு இல்லாத காட்டுமிராண்டிகள், அமெரிக்கக் கொடியை எரித்துப் போராட்டம்(இஸ்லாமியத்) தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று உலக மக்களை உளவியல் ரீதியாகத் தயார்ப்படுத்தும் வேலையை இது போன்ற பிரச்சனைகள் செய்யும்.
ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக் போன்ற நாடுகளின் மீதான அமெரிக்காவின் போரும், அதன் வெற்றியும் அவற்றின் எண்ணைக் கிணறுகள் அமெரிக்காவின் வாய்க்குள் போனதும் ஆகிய எல்லாமும் நியாயப்படுத்தப்படும்.

இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. நவம்பரில் நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல். அதில் ஒபாமா செய்த தவறுகள். கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய சலுகைகள். மக்களிடமிருந்து பறித்த உரிமைகள் எல்லாம் மறக்கப்படும். இஸ்லாமிய நாடுகளின், இஸ்லாமிய தீவிரவாதத்தின் ‘அச்சுறுத்தலும்’ முன்னிறுத்தப்படும். எகிப்து அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கு முன்பே தெரிந்திருந்தும் அதை வேண்டுமென்றே செப்டம்பர் 11 ஆம் தேதி நடக்கவிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அதில் இறந்து போன அமெரிக்கத் தூதரும் மற்ற அமெரிக்கர்களும் ஒசாமா பின்லேடனின் செப்டம்பர் 11 கதையை தொடர்ந்து நீட்டிக்க அமெரிக்கா உருவாக்கிக் கொண்ட ஒரு நல்ல வாய்ப்பு.

ஆனால் மறைமுகமாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் கை இருப்பதாக சந்தேகிக்கக் கூடிய இந்தச் சினிமாவின் வெளியீடும் அதையொட்டி நடக்கும் விஷயங்களும் இஸ்லாமிய நாடுகளனைத்தையும் இன்றில்லாவிடில் மற்றொருநாள் சகோதரர்களாக ஒன்றிணைத்துவிடும் என்பதும் அன்று அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற கார்ப்பரேட் வல்லரசுகளின் கூட்டுக்கு வலுவான ஒரு எதிரணியாக உலக அரங்கில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டு அமைந்துவிடும் என்பதும் ஒரு சாத்தியமே.

இவ்வளவு சமூக விரோதமான இந்தப் படத்தை இங்கு காணும்படி இணைக்க நான் விரும்பவில்லை. எனவே இந்த இணைப்பில் (link) யூட்யூப்பில் சென்று இந்தத் திரைப்படத்தை காணவிரும்பினால் காணுங்கள்.

Thursday, July 26, 2012

‘ஸ்த்ரிய்னா காமசூத்ரா’ - கே.ஆர். இந்திராவின் பெண் காமசூத்ரா புத்தகம்


எழுத்தாளர் கே.ஆர். இந்திரா

வாத்சயாயனா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ள காம சூத்ரா என்றழைக்கப்படும் காம சாஸ்த்திரம் என்கிற நூலைப் பற்றி தெரியாத ஆளில்லை.

வாத்சயாயனா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ள காம சூத்ரா என்றழைக்கப்படும் காம சாஸ்த்திரம் என்கிற நூலைப் பற்றி தெரியாத ஆளில்லை.

அதன் 64 உடலுறவு நிலைகள் (positions) இந்தியாவின் பன்மையான காமம் பற்றிய அறிவு என்கிற வகையில் உலகப் பிரசித்தி பெற்றது. காமசூத்ரா என்கிற பெயரிலேயே தீபா மேத்தா என்கிற பெண் இயக்குநர் செக்ஸ் படம் எடுத்து பெயரும், துட்டும் சம்பாதித்துடன் சரித்திரமும் படைத்தார்.
 இப்போது பெண்ணியம்பொங்கிப் பெருகும் உலகளாவிய காலகட்டம். எங்கும், எதிலும் பெண்ணியம்.. அதாங்க Feminism.
ஆட்டோ ஓட்டுவதிலிருந்து, ராக்கெட்டில் விண்வெளிக்குப் போவதுவரை பெண்ணியம் பெண்களுக்கு உலகில் அவர்கள் இதுவரை காலடி வைத்திராத இடங்களில் தடம் பதிக்க உதவியிருக்கிறது. கூடவே பார்களிலும் காலடித் தடம் பதிக்கிறார்கள் பெண்கள் இன்று.
அப்படி அஸ்ஸாமில் கடந்த வாரம் பாரில் தனது தோழியுடன் சென்று பிறந்த நாள் பார்ட்டியில் சரக்கடித்துவிட்டு, க்ரெடிட் கார்டு தொலைந்து போனதால் பில் கட்ட வழியில்லாமல் பார் ஊழியர்களால் பாருக்கு வெளியே தள்ளப்பட்ட பேஷன் டிசைன் படிக்கும் மாணவி, கூட வந்த தன் ஆண் நண்பர்களைக் குற்றம் சொல்லி சண்டையிட, போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாற, அப்போது சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த வேறு ஆண்கள் கும்பலொன்று இதைப் பயன்படுத்தி சண்டையின் உள்ளே நுழைந்து அந்தப் பெண்ணை தொடுவது, கட்டிப் பிடிப்பது, உடையைக் கழற்றுவது என்று அத்து மீற ஆரம்பிக்க, இந்தப் பெண்ணுடன் வந்த தோழர்கள் எஸ்கேப் ஆகிவிட, இரவு 10 மணிக்கு மேல் நடுரோட்டில் நடைபெறும் இந்த அத்து மீறலை யாரும் கண்டிக்கவில்லை. கடைசியில் வழியில் சென்ற ஒரு போலீஸ்காரர்தான் அந்தப் பெண்ணை அந்த ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றினார். மறுநாள் முதல் வழக்கம் போல பத்திரிக்கைகள், மாதர் சங்கங்கள், என்ஜிஓக்கள், சுதந்திர விரும்பிகள்(குடிப்பது என் உரிமை?!) எல்லோரும் கண்டனம் தெரிவிக்க போலீஸ் அந்த ரவுடி ஆண்களை வேட்டையாடியது. அஸ்ஸாம் முதல்வர் நடவடிக்கை எடுக்க ஆணை பிறத்திருக்கிறார்.
நீங்கள் பெண்ணியம் பேசலாம்; உலகில் பெண்தான் மேலாக இருந்தாள்.. ஆதிக் குடும்பத்தில் தாயாதிக்கம்.. இங்கே ஆணாதிக்கம்.. என்று பேசலாம்.. ஆனால் மதுவின் உட்சபட்சத்தில் உங்கள் மூளையில் (அடிப்படையில்)மிருகத்தனமான  ஆறாம் அறிவுக்கு கட்டுப்படாத வன்முறையும், வெறியும் மட்டுமே மிஞ்சும். அதை எந்தப் படிப்பும், நாகரிகமும் கட்டுப்படுத்தி விட இயலாது என்பதை மதுவின் பிடியிலிருந்து விடுபட்ட அடுத்த நாள் உணர்வீர்கள். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கக் கூடும்.
மதுவும் ஆணென்றும் பெண்ணென்றும் பாராது சரி நிகர் சமமாக மனிதர்களை மிருகங்களாக்கும். அப்போது செய்யும் பாவங்களில் ஆண் பெண் வித்தியாசமே இருப்பதில்லை.
ஜூனியர் விகடனில் சஞ்சீவ் குமார் என்பவர் தற்போது எழுதி வரும் மயக்கம் என்னமயக்கம் என்ன.. தொடர். படியுங்கள்; நிதானத்தில் இருக்கும் போது படியுங்கள். குடியை நீங்கள் நிறுத்த நிறைய வாய்ப்பு உள்ளது. குடித்தால் பெர்பார்மன்ஸ்கூடும் என்பது மூட நம்பிக்கையே மாறாக காமசூத்ராவுக்கு பிற்காலத்தில் வரையப்பட்ட படங்கள்உணர்ச்சி மரத்துப் போகும் என்பதே உண்மை.
சரி. காமசூத்ராவுக்கும் இதுக்கும் என்னைய்யா சம்பந்தம் என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது. ஸாரி..சம உரிமை பற்றி பேச நேரும் போது இப்படி திசை திரும்பிவிட்டது.
வாத்சயாயனர் எழுதிய காமசூத்ரா ஆண்களுக்கானது மட்டுமே. அது ஆண்களின் நோக்கிலே எழுதப்பட்டது. பெண்களுக்கு அதில் தகவல்கள் இல்லை. அது ஆணாதிக்கம் இருந்த உலகில் ஆணால் ஆண்களுக்காக பெண்களை வெல்வது எப்படி என்று எழுதப்பட்ட புத்தகம். இப்போது பெண்களின் பார்வையில் காமசூத்ராவை நான் எழுதியிருக்கிறேன்.” – இப்படிச் சொல்பவர் கேரளாவைச் சேர்ந்த ஐம்பது வயது பெண் எழுத்தாளர் கே.ஆர். இந்திரா என்னும் அம்மணி.
கேரளாவின் திரிச்சூரைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் எழுதியுள்ள புத்தகம் தான் ஸ்த்ரீய்னா காமசூத்ரா’ – பெண்களுக்கான காமசூத்திர அறிவுரைகள்.
இதில் இவர் வாத்சயாயனரின் 64 பொசிசன்களில் நான்கு மட்டுமே பெண்களுக்கு நன்மையானது என்கிறார். ஆண் மேலே, பெண் மேலே, பெண் ஆணின் மடிமேலே மற்றும் ஆணும் பெண்ணும் நேராக ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்பது என்பவையே அவை.
பெண்களுக்கு இவர் சொல்லும் அறிவுரைகளில் சில..
-    பெண் தன்னை விட இளமையான ஆணை உறவுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.
-    பெண்ணுக்கு சில சந்தர்ப்பங்களில் திருமணமான ஆணுடன் உறவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவை எதிரிகளை வீழ்த்த, சொத்துக்களைப் பெற, ரகசியங்களைப் பெற அல்லது மறைக்க, காரியம் சாதிக்க மற்றும் துரோகம் செய்யும் கணவனை பழிக்குப் பழி வாங்க.(இவை எல்லாமே நாம் சமூகத்தில் கண்கூடாக பார்த்து வரும் காரணங்கள்).
-    பெண் ஆசைப் படத் தகுதியான ஆண் தகுதியானவனாக, அறிவு சார்நதவனாகவும், அசிங்கமாயில்லாமல், ஏழையாகவோ நோயாளியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும்.
வாத்சயாயனரின் தவறுகளாக இவர் கூறுவது என்னவெனில்..
-    ஆண்களின் உடலுறவு வயது 16 முதல் 70 வரை என்று கூறும் வாத்சயாயனர் பெண்களின் வயது பற்றி ஏன் கூறவில்லை ?
-    வாத்சயாயனர் பெண்கள் உச்சகட்டத்தை அடையும் தன்மையற்றவர்கள் என்று தவறாக நம்பினார்.
தன்னுடையை ஆராய்ச்சிப் படிப்புக்காக பெண்கள் பற்றிய சர்வே எடுத்த இவர் அதிலிருந்து கேரளப் பெண்களைப் பற்றி பின்வரும் முடிவுகளை கூறுகிறார்.
-    சர்வேயில் பெரும்பாலான பெண்கள் 'ஆண் மேலே' என்கிற உடலுறவு நிலையையே விரும்புவதாகக் கூறியுள்ளனர். ஆணாதிக்கத்திற்கு இதற்கு மேல் என்ன உதாரணம் வேண்டும்? என்று கேட்கிறார்.
-    மிகவும் நல்ல நிலையில் வசதியாகவும், வாய்ப்பும் உள்ள மலையாளப் பெண்கள் கூட தங்களது காம ஆசைகளை விரும்பியபடி நிறைவேற்றிக் கொள்ள தயக்கம் காட்டுபவர்களாகவே உள்ளனர் (??!!).
ஒருவயது கைக் குழந்தையாக இருந்த மகனோடு கணவனை விட்டு விலகி வந்து கணவனை வேண்டாம் என்று விவாகரத்து செய்த இந்திராவின் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். இவர் பின்னர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஒரு பெண் எப்போது ஆணுடன் உடலுறுவு கொள்ள சம்மதிக்க வேண்டும் ? அதற்கு இவர் கூறுவது..
ஒன்று. அந்த ஆணின் மீது காதலுற்றிருக்கும் போது. ஆனால் கண்மூடித்தனமான காதலால் ஏமாந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு. பணம், பொருள் போன்ற லாபங்களுக்காக. ஆனால் முக்கியமாக அவனிடமிருந்து பெண் வேண்டிய பொருளை பெற்ற பின்னரே அவனுடன் உடலுறுவு கொள்ள வேண்டும்.
அதே போல ஆண்களுக்குச் சாதகமாக வாத்சயாயனர் சொல்லும் வயது குறைவான பெண்ணை மணமுடித்தல், ஒரே சாதியில் மணம், வரதட்சிணை வாங்குதல், திருமணத்திற்குப் பெண் பெண்ணை ஆண் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லுதல் இவை எல்லாம் தலை கீழாக, அதாவது பெண்ணுக்குச் சார்பாக நடக்க வேண்டும் என்கிறார் இவர் (சபாஷ்! சரியான போட்டி!!). உதாரணமாக திருமணத்திற்குப் பின் பெண்ணுடைய வீட்டில் வந்து ஆண் வந்து தங்கவேண்டும்.
இவை எல்லாவற்றையும் நவயுக புரட்சிப் பெண்ணாகக் கூறிய இந்திரா அவர்கள் கட்டுக்கடங்கா செக்ஸ்(free sex – ப்ரீ செக்ஸ்) மற்றும் சேர்ந்து வாழ்தல் போன்ற விஷயங்களை எதிர்க்கிறார்.
ஆணுக்குத் தேவை பெண்ணுடன் எப்படியாவது உடலுறுவு கொள்வது. அதற்கு வசதியாக இப்படிப்பட்ட கருத்துக்களை ஆண்கள் ஆதரிக்கிறார்கள் என்கிறார்.
மாறாக ப்ரீ செக்ஸ் நடவடிக்கைகளில் குழந்தை பிறப்பு போன்றவை தவறுதலாக நடந்து விட்டால் அது பெண்ணுக்கு பெருமளவு பாதகமாக அமைகிறது என்கிறார் இவர் (பேசாம பெண்கள் இனிமேல் எப்பவுமே குழந்தையே பெறாமல் இருக்க ஒரு வழி கண்டு புடுச்சீங்கன்னா ஒரு நூறு வருசத்துல பூமி பூரா வெறும் புல் பூண்டு மட்டுமே மொளைச்சி நிக்கிறமாதிரி பண்ணிப் புட்டு எல்லாம் மேல போயிடலாம்.. இல்லாட்டி குழந்தை பெத்துக்கறதுக்கும் மிஷின் கண்டுபிடிச்சிட்டா என்ன..? செம ஐடியா!!)
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள வாத்சயாயனரின் காமசூத்ரா அக்காலத்திய சமூகத்தின் ஜாதிய, வருணாசிரமப் படிநிலைகளை தக்கவைத்துக் கொள்ள என்ன சொல்லியிருக்கிறது என்பது பற்றி இவர் ஆராய்ந்தாரா என்று தெரியவில்லை. அது அதன் வருணாசிரம மேலாதிக்க அரசியல்.
வாத்சயாயனர் 'பெண்கள் ஆண்களைப் போல் உச்சநிலை அடையும் தன்மையுடையவர்களல்லர்' என்று கூறியுள்ளார்.  'ஆண்கள் உச்சம் அடையும் விதம் உச்சகட்டத்தை அடைந்து உடனே முடிந்து விடும். பெண்களின் உச்சம் அடையும் விதம் தொடர்ச்சியானது. ஆணுக்கு உச்சம் அடையும் கட்டத்தில் விந்து வெளிவரும். பெண்களுக்கோ உடலுறவில் இன்பம் வர ஆரம்பித்த கணத்திலிருந்தே நீர் சுரக்க ஆரம்பித்துவிடும். ஒரு கட்டத்தில் அது தீர்ந்து போய் நிற்க ஆரம்பித்த பின் பெண் உடலுறவு போதும் என்ற முடிவுக்கு வருவாள். இது ஆண்கள் அடையும் இன்பத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது' - இது வாத்சயாயனரின் கூற்று. இதற்கு இந்திரா கூறும் விளக்கம் வெறும் பெண்ணியப் பார்வை சார்ந்ததா? தெரியவில்லை.

இதெல்லாம் சும்மா மேலாப்புல நூல் அறிமுகம் தான். இன்னும் விளக்கமாக படிக்கனும்னா டி.சி. புக்ஸ் வெளியிட்டிருக்கிற 'ஸ்த்ரீய்னா காமசூத்ரா' என்கிற இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்க.

Sunday, May 27, 2012

எ செப்பரேஷன் (A Separation) - விமர்சனம் (ஈரானியத் திரைப்படம்)



2011ம் வருடத்தில் வந்த பிறமொழிப் படங்களுக்கான படங்கள் போட்டியில் சிறந்த பிறமொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதை கடந்த பிப்ரவரி மாதம் பெற்றது இந்த பெர்சிய மொழித் திரைப்படம். இது தவிர சுமார் 53 விருதுகளை உலகெங்கும் சென்று இந்த ஈரானியப் படம் வென்றுள்ளது.

ஈரான். அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் வேளையில், இன்னும் 4 மாதங்களில் ஈரான் நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கப் போகும் அமெரிக்க நாட்டின் ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகளில் இப்போது தான் ஆஸ்கார் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஈரானிய நாட்டுத் திரைப்படம் ஆஸ்கர் விருது பெறுகிறது.


இது மிகத் தற்செயல் போலத் தோன்றினாலும் அமெரிக்காவின் இத்தகைய அரசியல் பிண்ணணி காரணங்களுக்காக (அந்த நாட்டை நாங்கள் குண்டு வீசி அழித்தாலும் நாங்கள் அவர்களின் கலைகளை மதிக்கும் மாமனிதர்கள் என்கிற பிராண்ட் விளம்பரத்திற்கு) இப்படம் விருது பெற்றிருக்குமா என்பது நாம் தனியே யோசித்துப் பார்க்க வேண்டிய விடயம்.

இந்த அரசியல் காரணம் தவிர்த்து இப்படத்தை பார்த்தாலும் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படமாகவே இதைக் கருதலாம் தான்.

பேமிலி ட்ராமா எனப்படும் குடும்பச் சித்திரம்வகை சார்ந்த படம் இது. இத்துடன் ஒரு த்ரில்லர் போன்ற பரபரப்பில் திரைக்கதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஸ்கர் பர்ஹாடி(Asghar Farhadi).

தன்னுடைய கணவனான ;’நாடேர்ரிடம் (பெய்மன் மோடி - Peyman Moadi) இருந்து விவாகரத்து கோரும்சிமின்’ (லைலா ஹடாமி - Laila Hatami) கோர்ட்டில் நீதிபதியிடம் பேசுவதாக ஆரம்பிக்கிறது படம். ஈரானில் இப்போது வாழும் சூழல் சரியில்லை என்றும் எனவே தன்னுடைய ஒரே மகளின் எதிர்காலம் சிறந்ததாக அமைய வெளிநாடு சென்று தன் 11 வயதுப் பெண் குழந்தை டெர்மேவை வளர்க்க விரும்பும் சிமின் தன்னுடன் வர மறுக்கும் தனது கணவன் நாடேரிடம் இருந்து விவாகரத்து கோருகிறார். நாடேரோ அல்ஜீமர் என்கிற மூளைச் செல்கள் இறப்பு நோயால் அவதிப்படும் அவனது தந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிறான். நாடேரைத் தனது பிள்ளையென்று கூட அறிந்து கொள்ளாத நிலையில் இருக்கும் தந்தையை ஏதாவது மனநல காப்பகத்தில் விடவேண்டியது தானே என்கிறாள் சிமின்.

அவருக்கு நான் தான் அவர் பையனென்று அடையாளம் காணத்தெரியாது.. ஆனால் எனக்கு அவர் தான் அப்பா என்று தெரியுமில்லையா?’. அவரை எப்படி நான் விட்டுச் செல்லமுடியும் என்கிறான் நாடேர்.

நீதிபதியோ விவாகரத்து கோர கணவர் குடிகாரர், பெண்ணை அடிப்பவர் என்பது போன்ற தீவிர காரணங்கள் வேண்டும் என்கிறார். சிமின் அதை மறுத்து தன் கணவர் மிக நல்லவர் என்கிறாள். குழந்தையை தன்னுடன் அனுப்பி விடும்படி கோருகிறாள். இருவருமே தங்களது குழந்தை டெர்மேவின் மேல் மிகுந்த பாசம் கொண்டுள்ளனர். நீதிபதியோ அதற்கு குழந்தையிடமும் கருத்து கேட்கப்படவேண்டும் என்கிறார். எனினும் விவாகரத்து பெற கொஞ்ச நாட்கள் கழித்து வரும்படி நீதிபதி கூறுகிறார். சிமின் தற்காலிகமாக தனது தாய் வீட்டிற்குச் செல்கிறார்.

நாடேர்-சிமின்-டெர்மே குடும்பம் ஒரு உயர்-மத்திய-தர வர்க்க (Upper-middle class) ஈரானியக் குடும்பம். பாங்க் ஒன்றில் க்ளார்க்காக வேலை செய்யும் நாடேர் தனியே தன் குழந்தையையும், தந்தையையும் பார்த்துக் கொள்ள விழைகிறார். தனது கணவர் சிரமப்படக் கூடாதென்று சிமின் ஒரு கஷ்டப்படும் குடும்பத்தைச் சேரந்த பெண்ணான ரஸீயாவை (சாரா பயாட் - Sareh Bayat) வீட்டு வேலைக்காக சிபாரிசு செய்கிறாள். கர்ப்பிணியான ரஸீயா தனது கணவனுக்குத் தெரியாமல் (இஸ்லாமிய முறைப்படி இது சட்ட விரோதம்) நாடேர், அவனது தந்தை மற்றும் டெர்மே இம்மூவரும் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிற்கு வந்து வீட்டு வேலை செய்கிறாள்.  வயதான, அல்ஜீமர் நோயால் யாரையும் அடையாளம் காணக்கூட இயலாத நாடேரின் தந்தையையும் கவனித்துக் கொள்கிறாள்.. ஒரு நாள் சுய நிதானமில்லாத நாடேரின் தந்தை திறந்திருந்த வாசல் வழியே வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். அவரைத் தேடி ஓடுகிறாள் நஸீயா. அதைத் தொடர்ந்து நடக்கும் சங்கிலித் தொடர் நிகழ்வுகளே இத் திரைப்படம்.

ஒரு நல்ல திரைக்கதையின் நல்ல அம்சங்களில் ஒன்று அது கதையின் போக்கில் பார்வையாளனை சில கணங்களாவது படத்தின் பழைய காட்சிகளில் ஏதாவது ஒன்றை திரும்ப எண்ணிப் பார்க்க வைத்து விடுவது. இப்படத்தில் பிற்பாதியில் பல இடங்களில் முற்பாதியில் அவர் என்ன சொன்னார் ? என்ன நடந்தது ? என்று பார்வையாளர் தனக்குள் குழம்பி படத்துக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வைக்கிறது.

நடிகர்கள் எல்லோரும் கனகச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். மிக இயல்பான நடிப்பு. அவற்றை நடிப்பு என்றே நாம் உணர இயலாத அளவுக்கு மிகையில்லாத நடிப்பு. படத்தை இரண்டாவது முறையாக நீங்கள் பார்க்க நேர்ந்தால் ஆரம்பக் காட்சிகளில் படத்தின் பாத்திரங்கள் ஒவ்வொருவருடைய பார்வை, சிறு முகக் குறிப்புகள் போன்ற ஷாட்கள் கூட அப்பாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்த இயக்குனர் செய்திருக்கும் நுணுக்கமான வேலை என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

படத்தின் ஒளிப்பதிவு மஹ்மூத் கலாரி (Mahmoud Kalari). படம் முழுவதும் க்ளோசப் ஷாட்கள் நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் பார்வையாளர் நடிகரை பின்தொடர்ந்து சென்று வேவு பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துவதன் மூலம் அக்காட்சி பிற்பாதியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். படம் பார்ப்பவர்களை நீதிபதியின் ஸ்தானத்தில் நாடேர் மற்றும் சிமினின் வழக்கை புலன் விசாரணை செய்யும் எண்ணத்தோடு பார்க்க வைப்பதில் இயக்குனர் வெற்றிபெற்று விடுகிறார். எனவே படத்தின் முடிவையும் கூட நம்மிடமே விட்டுவிடுகிறார்.

யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை அப்படியே காட்சியமைப்பதிலும் இயக்குனர் மிளிர்கிறார். குழந்தை தாயின் வயிற்றில் காதை வைத்து கரு சிசு நகர்வதைக் கேட்பது, பெட்ரோல் பல்க்கில் டெர்மே டிப்ஸை திரும்பக் கேட்பது, மாடிப்படியில் தள்ளிவிட்ட காட்சியை மகளுக்கு விவரிக்கும் நாடேர் தான் குற்றமற்றவன் என்பதை விளக்குவது என்று பல இடங்கள்.

படத்தின் மிக நுணுக்கமான மற்றும் அழுத்தமான விஷயம் கதை, திரைக்கதை. இயக்குனரே கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

கதையில் வரும் மாந்தர்கள் எல்லோரும் நல்லவர்களே. ஆனால் வெவ்வேறு தருணங்களில் தனது குறைபாடுகளை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். நேர்மையாக வாழ்வதை தனது மகளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கும் நாடேர் வழக்கிலிருந்து தப்பிக்க பொய் சொல்வது, மாமனார், மகள் மற்றும் கணவன் மீது மிகுந்த மதிப்பு, பாசம் வைத்துள்ள சிமின் அவர்களை விட்டுவிட்டுச் செல்ல விரும்புவது, அம்மா தன்னை விட்டு எப்போதும் சென்று விடமாட்டாள் என்பதை நன்கு உணர்ந்த டெர்மேஅதனாலேயே இருவரையும் இணைக்க அப்பாவுடனேயே இருப்பது, தந்தைக்காகப் பொய் சொல்வது, ரஸீயா மத உணர்வு மிக்கவளாக இருப்பது அதே சமயத்தில் கணவனுக்குத் தெரியாமல் வேலைக்கு வருதல், மனிதாபிமான அடிப்படையில் நாடேரின் தந்தைக்குப் பணிவிடை செய்வது என்று இருந்தாலும் தவிர்க்க இயலாமல் குழந்தை விஷயத்தில் பொய் சொல்வது.. என்று கதையின் போக்கை பார்வையாளர்கள் ஊகிக்கவே முடியாதபடி படம் முழுவதும் நிகழ்வுகள் நகர்வதால் ஒரு த்ரில்லர் பார்த்த உணர்வு பார்வையாளனுக்கு ஏற்படுகிறது.

இதில் சரி எது, தவறு எது என்று தீர்மானித்து முடிவு தரவேண்டிய பொறுப்பும் பார்வையாளரிடம் வரும் போது படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட நெடுநேரமாகிறது.

படம் மேல் தட்டு மற்றும் கீழ்த்தட்டு குடும்பத்தினரிடையேயான சிக்கலான ஊடாடலை பதிவு செய்கிறது. படத்தின் முடிச்சு நாடேர்-சிமினின் விவாகரத்து விஷயம். ஏன் அது நிகழ்கிறது என்று நமக்குள் கேட்டுக் கொண்டால் அதற்கு விடை, பெரிய காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே. பெரிய காரணங்களில்லாத மேல்தட்டு சிக்கல்களில், கடைசியில் இழப்பு நேர்வது கீழ்த்தட்டு மாந்தர்களுக்கே என்கிற யதார்த்த உண்மையும் படத்தில் பதிவாகிறது.

இறுதிக் காட்சியில் மீண்டும் அவர்களது விவாகரத்து வழக்கு வருகிறது. அதில் மூவரும் கறுப்பு உடை அணிந்திருப்பதன் மூலம் குடும்பத்தில் யாரோ காலமானது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. டெர்மேயின் முடிவை கேட்கிறார் நீதிபதி.

டெர்மே என்ன பதில் சொல்லியிருப்பாள் ?