Saturday, October 31, 2015

சித்த மருந்துகளில் உலோகங்கள் சேர்ப்பதால் கிட்னி பாதிக்கும் என்று சொல்வது உண்மையா? - மருத்துவர் கு.சிவராமன்

புதிதாக யாரிடமாவது சித்த மருத்துவம் பற்றியோ, குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்குச் சித்தத்தில் நல்ல மருந்து இருக்கிறது என்றோ சொன்னால், உடனடியாக அவர்களுடைய எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? படித்தவர் முதல் பாமரர்வரை உடனடியாக வேதியியல் பேராசிரியர்போல மாறி ‘அதில் மெட்டல் கலக்கிறார்களே. அதெல்லாம் சரிதானா என யோசிப்பார்கள். மக்களிடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் இந்த மூடநம்பிக்கை தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது.

மருத்துவர் யார்?
‘சித்த மருந்துகளில் மெர்குரி கலந்திருக்கிறது' என்றொரு சர்ச்சைக்குரிய செய்தி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் சமீபகாலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. நாளிதழ் ஒன்றிலும் அந்தச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னூட்டமாக ‘சித்த மருந்துகள் எதுவும் தரநிர்ணயம் செய்யப்படாதவை' என்பது போன்ற அவதூறுகளும் வேகமாகப் பரவி வருகின்றன.
மருத்துவ முறை வழிகாட்டுதலின்படி ஒரு நோயாளியின் சிகிச்சை அறிக்கையின் அடிப்படையில், மருந்துகளால் ஏற்படும் எந்த ஒரு பின்விளைவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை (Pharmacovigilance) எடுக்கப்பட வேண்டும். இது சித்த மருத்துவத்துக்கும் பொருந்தும். அந்த வகையில் சர்ச்சைக்குரிய சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டத்தைப் பெற்ற சித்த மருத்துவராகவோ, பாரம்பரியச் சித்த மருத்துவராகவோ தெரியவில்லை. அந்த மருத்துவரின் தகுதி குறித்து முறைப்படி விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, மருந்துகளைப் பரிந்துரைக்கத் தகுதி இல்லாத போலி மருத்துவர் ஒருவர் செய்த தவறுக்கு, ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையையே நம்பிக்கையற்ற ஒன்றாக ஊடகங்களில் சித்தரிக்கும் போக்கு வருத்தம் தரும் அதேநேரம், கண்டிக்கத்தக்கதும்கூட..

வேர், மூலிகை
அந்தச் சர்ச்சையில் குறிப்பிட்டுள்ள மிகவும் தவறான பொய்ச் செய்தி, ‘எல்லாச் சித்த மருந்துகளும் செய்து முடித்த பின்னர் மெர்குரியை (பாதரசத்தை) கலந்து தருகிறார்கள்' என்பதுதான். அப்படி ஒரு வழக்கம் எந்தச் சித்த மருத்துவச் செய்முறையிலும் கிடையாது. பொதுவாகவே சித்த மருந்துகளில் கனிமங்களின் பயன்பாடு மிகவும் சொற்பம். அப்படியே இருந்தாலும் முக்கிய, நாட்பட்ட, பிற மூலிகைகளால் குணப்படுத்த இயலாத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் உயர் சித்த மருந்துகளில் மட்டும்தான் உள்ளது.
"வேர்பாரு தழைபாரு, மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே"- என்பதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை இலக்கணம். அதன்படி வேர், மூலிகைகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு நோயைத் தீர்க்க இயலாதபட்சத்தில் கடைசிப் பெருமருந்தாக மட்டுமே உப்புகளை, கனிமங்களைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகளைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட சம்பவத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், மருந்துகளைச் செய்துமுடித்துவிட்டு ஒருபோதும் கனிமங்கள் கலக்கப்படுவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மாறாக, ஒரு சில உயர் மருந்துகளில் மருத்துவ மூலப்பொருளாக மட்டுமே சில கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கனிம உருமாற்றம்
சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, ஏன் பெரும்பாலோர் நம்பும் நவீன மருத்துவத்திலும்கூட நேரடி கனிம - ரசாயன மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே சில மருந்துகளின் செய்முறைகள் தொடங்கப்படுகின்றன. அந்தந்த மருத்துவத் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி (National Pharmacopoeia / Formulary Guidance) கடைசியில் அம்மருந்துகள் முறைப்படியான மருந்து வடிவத்தை வந்தடைகின்றன. கடைசியாகப் பயனுக்குரிய மருந்தாக அது மாறும்போது, கனிம மூலக்கூறு வடிவில் இல்லாமல் உப்புகளாக, உடலுக்குத் தீங்கு செய்யாத வடிவத்துக்கு மாறியும் இருக்கும்.
பல்வேறு மூலிகைச் சாறுகளில் பல மணி நேரம் ஊற வைத்தும், பல நாட்கள் அரைத்தும், சாண வறட்டியில் புடமிட்டும்தான் இம்மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பத்தில் பல்லாயிரம் டிகிரி மிகை வெப்பத்திலும், பெரும் அழுத்தத்திலுமே நானோதுகள்களைப் பெற முடியும் என்றுள்ள நிலையில், 100 வறட்டிகளை வைத்துப் புடமிட்டு ஒரு உயர் கனிமத்தை நானோதுகள்களாகப் பெற்ற சித்த மருத்துவ நுட்பத்தை நவீன விஞ்ஞானம் இன்றைக்கும் மெய்சிலிர்த்துத்தான் பார்க்கிறது. இப்படிப்பட்ட நவீன நானோதுகள்களின் மருத்துவப் பயன்கள் ஏராளம்.

உறுதிப்படுத்தும் ஆராய்ச்சி
கனிமங்களை மூலப்பொருளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மருந்துகள், நானோ துகள்களாக நுண்மையடைந்து மருந்தாக மாறுவதைப் பல மருத்துவ நூல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் (Standardization of Metal-Based Herbal Medicines, American Journal of Infectious Diseases 5 (3): 200-206, 2009 ISSN 1553-6203 © 2009 Science Publications Corresponding Author: Arun Sudha, Indian Institute of Technology Madras, Chennai- 600 036), பெரும்பாலான மூலிகைகளில் உள்ள கனிமங்கள் உடலைப் பாதிக்காத ஆக்சைடு மற்றும் சல்பைடு வடிவத்தில் மாறுவதாகவும், நேரடியாகக் கனிமங்களை வைத்தே செய்யப்படும் மருந்துகளும்கூட நானோதுகள்களைப் போன்ற நுண்ணிய அளவில் இருப்பதையும் உறுதிசெய்துள்ளது.

அது மட்டுமல்லாமல் மெர்குரி (பாதரசம்), கந்தகத்தை வைத்துச் செய்யப்படும் மிக முக்கியமான சித்த மருந்தான ரசகந்தி மெழுகு குறித்து இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. குஜராத் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் உயரிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆய்வு நிறுவனமும், நவீன ஆய்வு வழிகாட்டுதலின்படி ஒரு நீண்ட ஆய்வை நடத்தி, ரசகந்தியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. சென்னையில் இயங்கிவரும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான மறைந்த பேராசிரியர் சரஸ்வதி நடத்திய ஓர் ஆய்வில், பாதரசத்தை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் மருந்து மிகப் பாதுகாப்பானது என நிறுவப்பட்டுள்ளது (அந்த முடிவுகள் இன்னும் நூலாக வெளியிடப்படாமல், அரசு ஆவணமாகவே உள்ளன).

வியந்த உலகம்
மறைந்த நவீன மருத்துவப் பேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம், இதே ரசகந்தி மெழுகைக் கொண்டுதான் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் கிருமிகள் கட்டுப்படுத்தப்படுவதையும், நோய் எதிர்ப்பாற்றல் பெருகுவதையும் பற்றி நீண்ட ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வு JAPI எனும் மருத்துவ இதழில் வெளியாகி, உலக மருத்துவத்தின் கண்கள் சித்த மருத்துவத்தின் பக்கம் திருப்பப்பட்டன.
இதைத் தாண்டி கனிம மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள்தாம் புற்றுநோய் முதலான சவாலான நோய்களுக்கான மிக முக்கிய சித்த மருந்துகள். Acute promyelocytic leukemia எனும் புற்றுநோய்க்கு இன்றளவும் பெரும் நச்சாகக் கருதப்படும் பாடாணங்களை (Arsenic trioxide) கொண்டு செய்யப்படும் சீன மருந்துகளின் பயன், உலகளவில் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரம்வாய்ந்த British Journal of Haematology எனும் மருத்துவ இதழில், இதன் பயன் குறித்துக் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்கள் (Mathews V, Chandy M, Srivastava A. Arsenic trioxide in the management of acute promyelocytic leukaemia. Natl Med J India. 2001;14(4):215-22) கட்டுரையில் கிடைக்கின்றன.

தேவையற்ற குழப்பம்
இன்று சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் அரசு பதிவுபெற்ற சித்த மருந்துகளில், மத்திய அரசின் வழிகாட்டுதலில் (AYUSH- Good Manufacturing Practice guidelines) சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரநிர்ணயத்தின் அடிப்படையிலேயே கனிமங்களின் அளவு, வடிவம், செய்கை, நச்சற்ற பாதுகாப்பு நிலை போன்றவை இருந்தாக வேண்டும். ஒவ்வொரு மருந்து தயாரிப்பு நிறுவனமும் அதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை (Quality assurance) மேற்கொண்டு ஆவணப்படுத்த வேண்டும். இதில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய Pharmacovigilance முறை மத்திய, மாநில அரசுகளால் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் எதைப் பற்றியும் அறியாமல், சர்ச்சைக்குரிய சம்பவத்தை விவரிக்கும் செய்தி போலியாய் எச்சரிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையைக் களங்கப்படுத்தும் தொனியிலும், சித்த மருத்துவப் பயனாளர்களைக் குழப்பத்தில் தள்ளும் வகையிலும் உள்ளது.

எத்தகைய மாற்றம் தேவை?
அறம் சார்ந்து சித்த மருத்துவத்தை மேற்கொண்டுவரும் சித்த மருத்துவர்களால் மக்களுக்கு, மருத்துவப் பயனாளிகளுக்கு எவ்விதத் தீங்கும் நிகழக் கூடாது என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. அதற்குச் சித்த மருத்துவம் தொடர்பாக உலகத் தரத்துடன் Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்தப்படவேண்டும் என்பதுதான் சித்த மருத்துவத்தை மேம்படுத்த நினைக்கும் பெரும்பாலோரின் நிலைப்பாடும் முயற்சிகளும்.

ஒரு மருந்து பழமையானது என்பதாலோ, நம்முடைய மரபு என்பதாலோ கொண்டாடாமல், Reverse pharmacology முறையில் நடத்தப்படும் ஆய்வுகளில் தவறென்று தெரியவரும் எந்த மருந்தையும் விலக்கி வைக்கவும் நவீன காலச் சித்த மருத்துவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
ஆனால், அதேநேரம் நம் நாட்டு மருத்துவ முறைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல் அவசரமாக இன்றைக்கு வலிந்து வலியுறுத்தப்படும் தரநிர்ணயத்தின் பின்னணியில் பெரும் அரசியல் உள்ளதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தரநிர்ணயங்கள் மக்கள் நலனை மையப்படுத்தியவை அல்ல. பெரும் வணிகச் சந்தையை மையப்படுத்தியவை என்ற உண்மையையும் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடையே மரபு மருத்துவ முறைகள் முக்கியத்துவம் பெற்றுவரும் பின்னணியிலேயே இது வலியுறுத்தப்படுகிறது.

நமது மரபு மருத்துவ முறைகள் சார்ந்து Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்த அரசிடம் வலியுறுத்துவது அவசியம். அப்படியல்லாமல், ஒரு சில போலி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறை மீது பழிசுமத்துவதும் அந்தத் துறையையே பலியிடச் சொல்வதும் எந்த வகையில் நியாயம்? காலம்காலமாகப் புடம் போடப்பட்டுவரும் சித்த மருத்துவத் தத்துவங்களையும், நெடுங்காலமாகப் பயனில் உள்ள ஆவணங்களையும், அவசரஅவசரமாகப் புறந்தள்ளி, நவீன மருத்துவம் காட்டும் மாற்றத்துக்குரிய ஆய்வுகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது கோடிக்கணக்கான சாமானியர்களுக்கு பயன்பட்டுவரும் சித்த மருத்துவத்தை வீணாகத் தூற்றுவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.

- கட்டுரையாளர், சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர் 
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

Sunday, October 25, 2015

ஒரே வாரத்தில் 75 ஆயிரம் டன் பருப்புகள் பறிமுதல் ! யார்கிட்டே கதை விட்றீங்க.?

பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு போன வாரம் வந்தது. உடனே மத்திய அரசு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 2 லட்சம் டன் பருப்பை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தது. உலக சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கும் பருப்பை தனியார் இறக்குமதியாளர்கள் வாங்கி அரசிடம் 130 ரூபாய்க்கு விற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த அரசு இயந்திரம் திடீரென் விழித்துக் கொண்டது போல ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகள் நடத்திய சோதனையில் 75 ஆயிரம் டன் பதுக்கல் பருப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் பரப்பரப்பாக வெளிவருகின்றன. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.

இந்தியா முழுவதும், 13 மாநிலங்களில், 6077 இடங்களில் அரசுகள் சோதனை செய்தன. அதில் மஹாராஷ்ட்ராவில் மட்டும் 46 ஆயிரம் டன்னும், கர்நாடகத்தில் 8755 டன்னும், பீகாரில் 4933 டன்னும், சத்தீஸ்கரில் 4500, தெலங்கானாவில் 2546, மத்தியப் பிரதேசத்தில் 2295, ராஜஸ்தானில் 2222 டன் என்று ஆயிரக்கணக்கில் பருப்பு வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அரசு வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதுக்கல் கைப்பற்றல் செய்திகளின் பின்னால் வேறு எதுவும் இருக்கிறதா என்று 'தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ரவி சொல்வது போல நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. சேம்பிளுக்கு சில கேள்விகள்.

ஒரே வாரத்தில் பரபரப்பாக செயல்பட்ட அரசு இயந்திரம் 75 ஆயிரம் டன் பருப்பு வகைகளை பிடித்துள்ளது. அப்போ இவ்வளவு நாள் அரசு செயல்படாமலேயே இருந்ததா ? அல்லது பதுக்கல்களை கண்டுகொள்ளாமல் இருந்ததா ?

பதுக்கல் சோதனைகளில் ஏன் பருப்பு தவிர, அரிசி, கோதுமை போன்ற எந்தப் பொருட்களும் பிடிபடவில்லை ? பருப்பு பதுக்கல்காரர்களை மட்டும் குறிவைத்து சோதனை நடத்தினார்களா ? பதுக்குபவர்களில் பருப்பு மட்டும் கடத்துபவர், வேறு எதையும் கடத்தவே மாட்டாரா ?

6 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் எத்தனை பேர் பிடிபட்டனர். ஏன் ஒருவரது புகைப்படம் கூட செய்தித் தாளிலோ அல்லது சேனல்களிலோ காட்டப்படவில்லை? ஒருவேளை இந்தப் பதுக்கல் பிடிப்புக் கணக்கு மக்களுக்கு காட்டப்படும் பொய்க்கணக்கா ? ஒரு சாதாரண பைக் திருடனை, செயின் திருடனை பத்திரிக்கையில் போட்டோ போட்டு, சேனல்களில் சுற்றிச் சுற்றிக் காட்டும் மீடியாக்களுக்கு மக்களின் வாழ்வாதாரத்தையே அசைக்கும் இந்தக் கேடிகளில் ஒருத்தருடைய போட்டோ கூடவா கிடைக்கவில்லை ?

பதுக்கியவர்கள் எல்லோரும் தனிப்பட்ட ஆட்களா ? நிறுவனங்களே இல்லையா ? சில பல டன்களை தனியாக ஒரு ஆள் கடத்தி விட முடியுமா ? தனியார் நிறுவனங்கள் தான் கடத்தலில் ஈடுபட்டிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் உணவுப் பதுக்கலில் ஈடுபட்டால் அது குற்றமாக கருதப்படாதா ? அல்லது ஏன் பதுக்கலில் ஈடுபட்டது என்று ஒரு நிறுவனத்தின் பெயரையும் பேப்பரில் போடவில்லை அரசு ?

இது பற்றி ஏன் ஒரு மாநில அரசு கூட வாய் திறக்கவில்லை ? 45 ஆயிரம் டன் பதுக்கலை கண்டு பிடித்த மஹாராஷ்டிரா முதல்வர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை. மோடி வாய் திறக்கவில்லை. ஆனால் அரசு பிடித்தது என்று செய்தி மட்டும் வருகிறது. அப்போ உண்மையிலேயே இதெல்லாம் பதுக்கல் கைப்பற்றல் கணக்கா ? இல்லை, நாங்களும் செயல்படுகிறோம் பாருங்கள் என்று மக்களுக்குக் காட்ட அரசு சும்மா வெளிவிடும் செய்தியா ?

யாருக்காவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்.

Monday, October 12, 2015

காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஒரு வழியாக கைவிட்டது அரசு!

காவிரி டெல்டா மாவட்டங்களி்ல் பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் பெரிய நிலக்கரிப் படுகை உள்ளது. அந்தப் படுகையின் மேலே மீத்தேன் வாயு பெருமளவில் நிரவி நிற்கிறது. இதை எடுத்துத்தான் நமக்கு கேஸ் சிலிண்டர்களில் அடைத்து சமையல் எரிவாயுவாக விற்கிறார்கள்.
சரி. நல்லது தானே. அதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா?  இருக்கிறது. அந்த வாயுவை எப்படி எடுக்கிறார்கள். அந்த வாயுவை அப்படி எடுப்பதால் பாதிக்கப்படுவது என்னென்ன போன்ற விஷயங்கள் இதை ஒரு ஆபத்தான விஷயமாக்கி இருக்கின்றன.
மீத்தேன் வாயுவை மேலே கொண்டு வர பெரிய ஆழ்துளைக் கிணறுகள் போடுவார்கள். பின்பு அதில் மிகுந்த அழுத்தத்துடன் டன் கணக்கில் தண்ணீர், மண் கலந்த கலவையைக் கொண்டு அடிப்பார்கள். அதில் பாறைகளிடையே துளைகள் ஏற்பட்டு வாயுக்கள் வெளியே வரும். இந்தக் கலவையை தொடர்ந்து சுவாசித்தால் கேன்ஸர் கன்பர்ம். சுற்றுப் புறச் சூழலுக்கும் பெரும் கேடு. இந்த வாயு வெளியேற்றத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். இன்னும் மோசமாக நிலத்தடியில் உள்ள பாறைகளைத் துளையிட்டு பொருட்களை வெளியேற்றி வெற்றிடமாக்குவதால் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும். இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்தத் தொழில்நுட்பத்தை வெளிநாடுகள் ஏற்கனவெ 1957லிருந்து உலகெங்கும் பிரயோகித்து பல நாடுகளில் பாதிப்புகள் ஏற்ப்பட்டிருக்கின்றன. இப்போதுதான் இதற்கென உலக அளவில் ஒரு கண்காணிப்புக் குழுவை போட்டிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஹரியானாவைச் சேர்ந்த கிரீன் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேஷன் என்கிற பன்னாட்டுதனியார நிறுவனத்திற்கு லைசென்சு வழங்கியிருந்தது. ஆனால் காவிரி டெல்டா விவசாயிகள் தங்கள் எதிர்காலம் பாழாகப் போவதை உணர்ந்து தொடர்ந்து போராட, அவர்களுக்கு சமூகவியல் ஆர்வலர்களும், இடதுசாரிகளும் விழிப்புணர்வு ஊட்ட கடைசியில் வேறு வழியின்றி அரசு இதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது.
இந்தக் குழுவின் முடிவுகள் இந்தத் திட்டத்தின் தீய விளைவுகள் கிடைக்கும் எரிவாயு நன்மையை விடப் பல நூறு மடங்கு தீயது என்று அறிக்கை கொடுத்ததைத் தொடர்ந்து அரசு மீத்தேன் எடுக்க இன்று தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அந்த தொழில்நுட்ப வல்லுனர் குழு அளித்த அறிக்கையின் படி அரசு முடிவெடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, October 8, 2015

சிகரெட்டை ஒழி.. மக்களுக்கு 'தண்ணி' காட்டு !- அரசின் புதிய கொள்(ளை)கை.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிகரெட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைய  ஆரம்பித்துள்ளது. காரணம் அரசுகள் சிகரெட்டுக்கு எதிராக முடுக்கி விடும் கடுமையான பிரச்சாரங்கள் ஆகும்.

குடிப்பழக்கம் சிகரெட்டை விட பன்மடங்கு தீமையானது. சிகரெட் குடிப்பதால் மட்டுமல்லை, குடித்தாலும் கூட கேன்சர் வரும். ஆனாலும் குடிப்பழக்கம் எல்லா நாடுகளிலும் சகஜமாக கருதவைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசே இதை நடத்துகிறது. தமிழக அரசு சிகரெட் கம்பெனி நடத்தி இத்தனை ஆயிரம் கோடிகள் வருடத்துக்கு சம்பாதிக்க முடியுமா ?   குடிப்பவர்களால் கிடைக்கும் வருமானம் சிகரெட் குடிப்பவர்களை விட பலமடங்கு அதிகம் என்கிற வியாபராக் கணக்கே குடியை விடுத்து சிகெரட்டை மட்டும் அரசுகள் குறிவைப்பதன் காரணம்.  குடிக்கு அடிமையானவர்கள் மூளையும் வேலை செய்வதில்லை. அவர்கள் பாதி அடிமைகள் என்பதால் இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது. 

அதன் வெளிப்பாடாக  உத்தரப் பிரதேசத்தில், சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாநில முதன்மை செயலர் (சுகாதாரம்) அர்விந்த் குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

"உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் சில்லறையில் சிகரெட் விற்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.

சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கும் அவசர சட்டம் கொண்டுவர அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்தச் சட்டத்துக்கு ஆளுநர் ராம் நாயக்கும் அனுமதி வழங்கி விட்டார்.

புதிய சட்டத்தின்படி சில்லறையில் சிகரெட் விற்பது கண்டறியப்பட்டால், முதல் முறையாக ரூ.1000 அபராதம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மறுபடியும் குற்றம் செய்தால் ரூ.3000 அபராதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சில்லறையில் சிகரெட் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம், 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்." இவ்வாறு அர்விந்த் குமார் கூறியுள்ளார்.

இது சில்லறை வர்த்தகம் எனப்படும் பெட்டிக் கடைக்காரர்களின் வயிற்றில் அடித்து அந்தத் தொழிலை இல்லாமல் செய்வதற்கே. அமெரிக்கா போன்ற நாடுகளில் தெருமுனைப் பெட்டிக் கடைகள் எல்லாம் சுத்தமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. காரணம் சிகரெட்டை கூட வால்மார்ட்டில் தான் வாங்கவேண்டும் என்று கார்ப்பரேட் கம்பெனிகள் நினைப்பதால்.

இதே போன்றதொரு கடுமையான தடையை மதுபாட்டில் விற்பவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும் ஏன் ஐயா கொண்டு வரவில்லை ? வருமானம் போயிடுமே ஐயா. அதுதான் அவங்க கவலை. மக்கள் மேல் அக்கறையும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. புரிஞ்சுக்கோங்க.

Friday, October 2, 2015

ஐ.நா நிறைவேற்றிய இலங்கையை தப்பவைக்கும் கண்துடைப்பு தீர்மானம் !

ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அத்தீர்மானத்தில்,
  • இலங்கையுடன் இணைந்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • அத்துடன், காமன்வெல்த் அமைப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் இணைந்த விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  தலைப்பில் போர்க்குற்றம் என்கிற வார்த்தையே இல்லை. இந்த தீர்மானம் கடந்த வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு  அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கிரீஸ், லுத்வியா, மான்டினிக்ரோ, போலந்து. ருமேனியா, மாசிடோனியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கியிருந்தன. நாடு கடந்த ஈழ அரசும், இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அமைச்சரவையும், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் இத்தீர்மானத்தை கடுமையாக எதிர்த்துள்ளன.
இத்தீர்மானத்தைப் பற்றி ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கெய்த் ஹாப்பர், சீனா, ஸ்ரீலங்கா, தென்னாப்பிரிக்கா, கானா, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள்  உரையாற்றினார். இதை ஓட்டெடுக்கக்கூடத் தேவையில்லாமல் நிறைவேற்றியபின் இந்தியாவின் பிரதிநிதி பேசினார்.
பன்முகத் தன்மையுள்ள நாடாக இலங்கை இருக்க இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், 13வது சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி 1980களில் பாடிய பல்லவியையே திரும்பப் பாடினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சிம்பிளாக கதையை முடித்து விட்டார்கள். அப்படியென்றால் கொல்லப்பட்ட லட்சம் தமிழர்களும் பயங்கரவாதிகளா?
இலங்கையின் மீதான போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இலங்கையே முன்மொழிகிறது. நீதி எந்த அளவிற்கு வெளிவரும் என்பது இதிலிருந்தே தெரிகிறது. 
இலங்கையை கழுவும் மீனில் நழுவும் மீனாக தப்பிக்க வைக்க புத்திசாலித்தனமான வார்த்தைகளைப் போட்டு இயற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் முக்கியமான தகிடுதத்தங்கள்.
காமன்வெல்த் - காமன் வெல்த் நாடுகள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், சீனா போன்ற ஈழப் போரில் சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்ற அரசுகள் கொண்ட அமைப்பு. இந்த காமன்வெல்த்திலிருந்து நீதிபதிகளை அனுப்பி அவர்களை 'சர்வதேச நீதிபதிகள்'என்று கண்துடைப்பு விசாரணை செய்யவே காமன்வெல்த்  அமைப்பு இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
சிறிசேனா அரசு - அமெரிக்க அரசு முந்தைய ராஜபக்சே அரசை போர் புரிந்த அரசாகவும் தற்போதைய சிறிசேனா அரசை மக்கள் நலப் பணிகளைச் செய்யும் அரசாகவும் தந்திரமாகக் குறித்து தீர்மானத்தில் பேசுகிறது. ராஜபக்சே புலிகளுடன் போர் என்று எல்லாத் தமிழர்களையும் கொன்ற போது அவரிடம் ராணுவ அமைச்சராக இருந்தவர் தான் தற்போதைய இலங்கை அரசின் அதிபர் சிறிசேனா. பின் எப்படி சிறிசேனா அரசு நியாயமாக விசாரணை நடத்தும் என்று நம்புவது ?
இலங்கையுடன் இணைந்து - அனைத்து உலகத் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வந்த இந்த ஆலோசனையை இந்தத் தீர்மானம் முன்மொழிந்திருக்கிறது. அதாவது திருடனைக் கூப்பிட்டு 'அவனே அவனை விசாரித்து அவனை தண்டித்துக் கொள்ளவேண்டும்' என்று தீர்ப்பு வழங்குவது போன்றது இது. திருடன் தன்னையே தான் ஒழுங்காக விசாரிக்கிறானா என்று மொழி தெரியாத ஊரிலிருந்து நான்கு பெருசுகள் வந்து இதைக் கண்காணிக்கும்.
இவ்வளவு மோசமான நிலைமை தமிழர்களுக்கு உலகில் ஏற்ப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலையை அவர்களை ஆளும் இந்தியாவே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சிங்கள ராணுவத்துடன் இந்தியா இணைந்து போர்ப் பயிற்சி செய்தது. போன மாதம் ஒரு போர்க்கப்பலை இலங்கை கடற்படைக்கு தானமாக வழங்கியது இந்தியா தான். இப்படி தமிழருக்கு பச்சைத் துரோகம் செய்யும் இந்தியாவும் மோடியும் ஒரு நாளில் இதற்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்.