Monday, October 26, 2009

சீனாவின் இந்திய பொதுஜனத் தொடர்பாளர்.

by - டென்சிங் சோனம்(Tenzing Sonam). புதன் 26 டிசம்பர் 2007.

ரஷ்யப் புரட்சியின் ஆரம்பநாட்களில் புரட்சியை கண்கள் விரியப் பார்த்த மேற்கத்திய புரட்சி அனுதாபிகள் மாஸ்கோவிற்குத் தேனீக்களைப் போல் பறந்து சென்று ‘சோவியத் சொர்க்கம்’ பற்றி அறிக்கைகள் வெளியிட்டனர். லெனின் அவர்களை ‘பயனுள்ள முட்டாள்கள்’ என்று வருணித்ததுடன், அவர்களின் அப்பாவித்தனத்தை மேற்கத்திய நாடுகளுக்கு கம்யூனிஸக் கருத்துருவாக்கத்தைப் பரப்பவும் உபயோகப்படுத்திக்கொண்டார். அப்படிச் சென்ற ஒரு ‘முட்டாள்’ப் பத்திரிக்கையாளர் லிங்கன் ஸ்டீவன்ஸ்(Lincoln Steffans). ரஷ்யாவின் விருந்தினராக 1919ல் டூர் அடித்த ஸ்டீவன்ஸ்
“நான் எதிர்காலத்திற்குள் சென்றிருந்தேன்.. அது வேலை செய்கிறது” என்று கண்மூடித்தனமாகப் புகழ்ந்து எழுதியிருந்தார். அந்த ‘எதிர்காலத்திற்கு’ என்னவானது என்று நமக்குத் தெரியும்.

இந்த மேற்கத்திய புத்திஜீவிகள் ஸ்டாலினுடைய அதீதமான செயல்பாடுகளில் மனமுடைந்ததற்குப் பின் தோன்றிய, ஒரு புதிய தலைமுறை இடது சாரிக் கருத்தியலாளர்கள் மாவோ மற்றும் சீனப் புரட்சியை ரஷ்யாவில் உடைந்துபோன தங்கள் இடதுசாரிக் கருத்தியலின் ஊன்றுகோலாகக் கொண்டனர். லெனினைப் போலவே மாவோவும் இந்த அப்பாவிகளின் குருட்டுத்தனமான போக்கை தனக்குச் சாதகமாக உபயோகப் படுத்திக் கொண்டார். உண்மையுடன் சம்பந்தமில்லாத சீனப் பெருமை கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டன. மாவோவுடைய புகழ் செறிந்த ‘நீண்ட பயணம்’ பற்றிய எட்கர் ஸ்னோ (Edgar Snow) வின் குறிப்புகள் எல்லாம் புனைவுக்கதைகள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இப்போது திபெத்தும் சீனாவால் பொருக்கியெடுக்கப்பட்ட மேற்கத்திய கைக்கூலிகளின் மூலம் சிதைக்கப்பட்ட உண்மைகளால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 1960களில் தவறான கம்யூனிசக் கொள்கைகளின் விளைவாக திபெத் முதன்முறையாக பஞ்சத்தில் சுருண்டு விழுந்த காலத்தில்தான், ரோமா(Roma) மற்றும் ஸ்டூவர்ட் ஜெல்டர் (Stuart Gelder)ன் ‘சரியான நேரத்து மழை’(Timely Rain) என்கிற சீனப் பயண புத்தகம் வெளிவந்தது. 1975ல் வெளிவந்த ஹான் சுயின்(Han Suyin)ன் நம்பிக்கையூட்டும் தலைப்புகொண்ட புத்தகம் ‘லஹாசா : ஒரு திறந்த நகரம்’ (Lhasa: The open City) வெளிவந்த காலத்தில்தான் திபெத் தற்போதைய வடகொரியாவைப் போல் வெளி உலகத்தின் பார்வை பட அனுமதிக்காத மூடப்பட்ட நாடாக இருந்தது. இம்மாதிரி விருந்தினர்களின் எழுத்துக்களெல்லாம் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே காலாவதியாகிப்போனதோடு, மாவோவின் ‘பொதுவுடைமைப்’ பரிசோதனைகளில் நிகழ்ந்த பயங்கரமான மனித இழப்புகளும் தற்போது வெளிப்படுத்தப்பட்ட நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரைத் தவிர மற்ற எல்லா அம்சங்களிலும் முதலாளித்துவம் நிரம்பியிருக்கிறது.

இவற்றின் பின் தற்போது நாம் காண்பது என். ராமின் (N. Ram) சமீபத்திய எழுத்துக்களை. இந்தியாவின் பெருமளவில் தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தேசிய நாளிதழ் ‘இந்து’(The Hindu)ப் பத்திரிக்கையின் பதிப்பாசிரியரான ராமின் வெட்கமில்லாத ஒரு பக்கச் சாய்வுடைய எழுத்துக்கள் சீனாவின் ஆட்சி பற்றிய அதே உணர்வுபூர்வமான வியப்புடனும் நம்பகத்தன்மையின்றியும் உள்ளன. திபெத்தின் மீது செயற்படும் சீனாவின் கொள்கைகளின் நேர்மை பற்றி முகஸ்துதி செய்யும் ஆர்வத்தில் அவர் அச்சமூட்டும் வகையில் ஸ்டீவன்ஸை அப்படியே எதிரொலிக்கிறார். இந்தக் கோடையில் திபெத்திற்கு சீனாவின் அதிகாரபூர்வ விருந்தினராக ஒரு வாரம் வழிகாட்டப்பட்ட சுற்றுலா சுற்றி வந்ததும் அவர் நம்பிக்கையோடு அறிவித்தது இது :
“இன்னும் ஒரு கால் நூற்றாண்டுகளிலோ அல்லது அதற்கு முன்போ திபெத் ஒரு முழுவளர்ச்சியடைந்த சமூகம் என்ற நிலையை அடைந்திருக்கும்”.
தன்னுடைய முன்னறிவிப்பை உறுதிப்படுத்த ‘இந்து’வில் இரு நீள கருத்துக் கட்டுரைகளும்(opinion piece) அதன் குழுமப் பத்திரிக்கையான ப்ரன்ட்லைனில் (Frontline) ஒரு நீண்ட கட்டுரையும் ஜூலையில் ராம் வெளியிட்டார். இந்தக் கட்டுரைகளுக்கு அவர் திரட்டிக் கொண்ட ஆதாரங்கள், அந்த ஒரு வாரச் சுற்றுலா போக ராம் மந்திரங்கள் போன்று கருதிய சீன அரசின் புள்ளிவிவரங்கள் மட்டுமே. இப்புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மைகள் குறைவு என்பதற்காக சில உதாரணங்கள்:
“[திபெத்தின்] பொருளாதாரம்...13.2% க்கும் அதிகமாக வளர்ந்தது”; “மொத்த தேசிய உற்பத்தி(GDP) 29 பில்லியன் யென்கள்(Yuan) அளவு உயர்ந்தது” ; “உணவுதானிய உற்பத்தி 9,20,000 டன்கள்” ; “96.5% குழந்தைகள் பள்ளியில் பயிலுகின்றனர்” ; “இதுவரை காணாத அளவிற்கு, 1.5 பில்லியன் யென்கள் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளால் வந்துள்ளது”…
இப்படிப் பல. இவ்வளவிற்கும் ராம் பேட்டிகண்ட திபெத்தியர் ஒரே ஒருவர்தான் எனத் தெரிகிறது. அவர் திபெத்திய அரசின் அவைத் தலைவர்(Vice-Chairman) மட்டுமே.

ராம் தோற்றமளிப்பது போல் அவ்வளவு அப்பாவியா? தனது திபெத்தினூடான கார்ப் பயணத்தைப் பற்றிஅவர் இதமாக இவ்வாறு எழுதுகிறார் :
“நீங்கள் வெளியுலகுடன் எவ்வளவு எளிதில் தொடர்புகொள்ளமுடியும் என்பது ஒரு ஆச்சரியம். உங்கள் கைபேசியில்(mobile) அல்லது பி.டி.ஏ (PDA)யில் உள்ள GPRS லகாசா-சிகாஸ்(Lhasa-Xigaze) நெடுஞ்சாலை முழுதும் வேலை செய்கிறது. இணையதளத்தில் உலாவி செய்திகள் படித்தபடியும் உங்கள் மின்னஞ்சலில் பதில் அனுப்பியபடியும் பயணிக்கும் நீங்கள் திபெத்தியர்களின் வாழ்க்கை முறையை சிறுகுறிப்பாக உணரலாம்”.
ஆனால் ‘டியனான்மென்’, ‘தலாய் லாமா’ என்பது போன்ற, சீன அதிகாரிகளால் அரசுக்கு விரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இன்னும் பல வார்த்தைகளை அவர் இணையதளத்தில் தேடிப்பார்த்திருக்க வேண்டும் அங்கே. அப்போது உலகின் மிகச் சிறந்த, வலிமையான ‘சீனப் பெரும் இணையதளச் சுவர்’(Great Firewall of China) என்கிற இணையதள தணிக்கை மென்பொருள் பற்றி அறிந்திருக்கமுடியும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ராம் தனது வாசகர்களை வேண்டுமென்றே ஏமாற்றுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

சமரசத்துக்குள்ளான புறநிலைநோக்கு(Objectivity)
திபெத்தைப் பொறுத்தவரை ராம் தனது ஒருபக்கச் சார்பில் வெளிப்படையாகவே உள்ளார். தலாய் லாமாவை தாக்கும் அவர் தலாய் லாமாவை அயதுல்லா கொமைனியுடன் (Ayatollah Khomeini) ஒப்பிடுகிறார். பனிப்போர்காலத்திய வார்த்தைப் பிரயோகங்களுடன், ‘தலாய் லாமா காலனியாதிக்க நோக்கங்களுடன் மற்றும் மேற்கத்திய சக்திகளுடன் கைகோர்த்திருப்பதற்கு’ எதிராக தலாய் லாமாவைத் தாக்குகிறார் ; “தலைசிறந்த திபெத்தை ஒரு இயக்கத்தின் மூலம் தாய்நாட்டிலிருந்து பிரித்து எடுத்துச் செல்ல விரும்புகிற தகுதியில்லாத ஒரு அரசியல்வாதி” என விமர்சிக்கிறார். இந்த விமர்சனத்தை நாம் சீனாவின் கைகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ள, சீனாவின் பொருளாதாராத்தையே உயர்த்தி நிற்கும், அமெரிக்க அரசின் பங்குப் பத்திரங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, இந்த மேற்கத்திய சக்திகளுடன் கைகோர்த்திருப்பது சீன அரசா அல்லது தலாய் லாமாவா என்ற கேள்வி எழாமலில்லை. சீனா, திபெத்தை வன்முறையாகக் கைப்பற்றியதானது வல்லரசுகளின் காலனியாக்கத்தின் அம்சமாக இருப்பதை நாம் சுட்டிக் காட்ட முடியும்.

ராம் கூற்றின் படி,
“மறுபிறவி சம்பந்தமான திபெத்திய புத்தமத நம்பிக்கைகள் இறைத்தன்மை-மதம் சம்பந்தப்பட்டவையாகவும் 21ம் நூற்றாண்டு ஆத்திகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பனவாகவும் இருக்கும், அதேசமயம் தலாய்லாமாவின் மறுபிறவி சம்பந்தமான அனுகுமுறை கூட அரசியல்-கருத்தியலாகவும் இருக்கிறது”.
மேலும் அவர்,
“பீஜிங் அரசு நூறாண்டுகள் பழைய சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகளை ” தொடர்ந்து பின்பற்றி வருவதனால், “தலாய் லாமா மற்றும் பன்ச்சென் லாமா(Panchen Lama)க்களை அங்கீகரிக்கவும், நியமிக்கவும் அதிகாரம் பெற்ற அரசாகிறது”.
இக்கூற்றிலுள்ள வரலாற்றுத் துல்லியம் கேள்விக்குரியது என்பதுடன் பின்வரும் கேள்வியையும் எழுப்புகிறது. தம்மை நாத்திகராக வெளிப்படையாக இனங்காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த 21ம் நூற்றாண்டில், இறைத்தன்மை-மதம் சார்ந்த அரசுக்குள் தலையிட வேண்டிய அவசியம் என்ன ?

“சைனாவின் அரசியலமைப்பு எல்லா குடிமக்களுக்கும் மதரீதியான சுதந்திரத்தையும், இனச்சிறுபான்மையிருக்கு பிரதேச சுயாட்சியையும் பரந்த சீனாவின் பெரும்பான்மையான பகுதிகளில் அளித்துள்ளது”
என்று ராம் உறுதியளிக்கிறார். ஒரு சட்டம் இருப்பதைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே அதன்படி எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை நிரூபிக்குமா ? ராம் போன்ற மேன்மை தாங்கிய பத்திரிக்கையாளர்கள் திபெத்தில் மட்டுமின்றி சீனா முழுதும் பரவி இருக்கும் மதரீதியான ஒடுக்குமுறைகளைப் பற்றி அறியாதவர்களல்லர். திபெத்தில் தலாய் லாமாவின் படத்தை வைத்திருப்பது இன்றும் கூட குற்றம் தான். அம்னெஸ்டி இன்டர்நேஷனல்(Amnesty International)ன் 2006 அறிக்கையின் படி,
“திபெத்தில் மதம், கருத்து மற்றும் சங்கம் சம்பந்தமான சுதந்திரங்கள் தொடர்ந்து மறுக்கப்பட்டுக் கொண்டிருப்பதோடு, தன்னிச்சையான கைதுகளும் நேர்மையில்லாத வழக்குகளும் தொடர்கின்றன”.

தவிரவும், ராம் தனது பழைய கருத்துக்களான “சீனாவின் முன்னெப்போதுமில்லாத பொருளாதார வளர்ச்சி” மற்றும் “உள்ளடக்கும் மற்றும் நெகிழ்ந்து கொடுக்கும் சமூக-அரசியல் மற்றும் பண்பாட்டுக் கொள்கைகள்” என்பன திபெத்தின் விஷயத்தில் அது காட்டும் “அளவுகடந்த பொறுமை”யின் குறியீடுகளாகக் காட்டுகிறார். நாட்டில் ஏழை பணக்காரர் இடையேயான பிரிவு வளர்ந்திருப்பதை சீனாவே ஒப்புக்கொண்டிருக்க ராமின் கூற்று ஒரு மிகைப்படுத்தப்பட்ட புகழ்ச்சி. இதில் கவனம் ஈர்க்கும் விஷயம் ராம் இன்னும் சீனாவின் மார்க்சியப் பாதையில் நம்பிக்கையோடு இருப்பது தான்.
“நாட்டின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க மார்க்சிய-லெனினிய வழியில் சட்டம் தேசிய பிரதேச சுயாட்சியை அடிப்படை அரசியல் அமைப்பாகக் கொண்டிருக்கிறது” என்கிறார்.
சீனக் கட்சியானது தற்போது ஜனநாயகச் சுதந்திரம் அல்லது சங்க உரிமைகள் போன்றவற்றால் கட்டுப்படுத்த இயலாத “லெனினிய முதலாளித்துவ” த்தைத் தொடங்கியுள்ளது நாம் நன்கறிந்ததே. இந்தப் புள்ளியில் பீஜிங்கின் ஆட்சியாளர்களின் தற்போதைய ஒரே கோட்பாடு எவ்வளவு விலைகொடுத்தும் சர்வாதிகாரத்தைக் கையில் வைத்திருப்பது தான்.

திபெத்தின் தலையெழுத்தை கேள்விக்கிடமின்றி சீன ஆட்சியாளர்களிடம் கையளித்த ராம் இதில் இந்தியாவின் பங்கை மறந்துவிடுகிறார்.
“திபெத்தானது பகை நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகளைத் தாங்கும் இடைநிலை அரசாக ஆசியாவில் பல நூற்றாண்டுகளாக கருதப்பட்டு வந்திருக்கிறது”
என்கிற தலாய் லாமாவின் கூற்றை மறுக்கிறார். ஆனால் உண்மையில் 1960ல் மக்கள் விடுதலைப் படை(People’s Liberation Army) திபெத்தைக் கைப்பற்றும் வரை இநதியாவிற்கும் சீனாவிற்குமிடையே பொதுவான எல்லைகள் இருந்ததில்லை. சென்ற ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் யக்சிய்(Sun Yuxi)ன்
“அருணாச்சலப் பிரதேச மாநிலம் முழுவதும் சீனாவுக்குச் சொந்தமானது”
என்று கூறியதற்கு ராமின் பதில் என்ன ? திபெத்தின் இறையாண்மை வன்முறையாக ஒடுக்கப்படாமல் இருந்திருந்தால் சீனா தற்போது இம்மாதிரி வாக்கியங்களை உதிர்த்திருக்கமுடியுமா என்பது இந்து நாளிதழின் பதிப்பாசிரியருக்கு உறுதியாகத் தெரியும். தற்போது இந்துவும், ப்ரன்ட்லைனும் சீனாவின் திபெத்திய ஆக்கிரமிப்பை முழு ஆதரவுகொடுத்து எழுதுவது போல, எந்த சீனப் பத்திரிக்கையாவது இந்தியாவின் இறையாண்மைக்காக அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் பகுதி என்று ஆதரித்து எழுதுமா ? அல்லது ராமின் வெவ்வேறு நாடுகளின் ஜனநாயகச் சுதந்திரத்திற்கான அளவுகோல் நாட்டுக்கு நாடு மாறுபடுமா ?

உலகின் தலைசிறந்த பத்து பத்திரிக்கைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்ட இந்துப் பத்திரிக்கைக்கு ஜூன் 2003ல் பிரதம பதிப்பாசிரியராக ராம் பொறுப்பேற்றது முதலே, அவருடைய தீவிர சீனச் சார்பு நிலையானது பத்திரிக்கையின் புறநிலை நோக்கைச் சமரசம் செய்ய வைத்துள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
உலகின் அனைத்துத் தரப்பு நிருபர்களாலும் “உலகின் மிகப்பெரிய பொய்ப் பிரச்சார நிறுவனம்” என்று அழைக்கப்படும் சீன அரசுச் செய்தி நிறுவனமான சின்ஹூவா(Xinhua)வின் செய்திகளை அப்படியே வரி பிசகாமல் வெளியிடும் ஒரே பிரபல இந்தியப் பத்திரிக்கை இந்து நாளிதழ் தான். இந்துப் பத்திரிக்கையின் செய்தியாளர்கள் தங்களுக்கு திபெத், தலாய் லாமா மற்றும் பாலுன் கோங்(Falun Gong) பற்றிய கதைகள் எழுதும் போது அவை சீன அரசுக்கு எதிராக இருந்தால் எழுதவேண்டாம் என உத்தரவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ராம் பதவியேற்றது முதல் இந்து நாளேட்டில் வெளிவந்த செய்திகளை மேம்போக்காகப் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும்.

நம் முன் எழும் முக்கியக் கேள்வி என்னவெனில், இவ்வளவு பிரபலமும், முக்கியத்துவமும் உடைய பத்திரிக்கையாளர் தனது சுய வளர்ச்சியையே பணயமாக ஏன் வைக்கவேண்டும் ? பத்திரிக்கையின் முழுமையையும் சேர்த்துப் பணயம் வைத்து சீனாவின் ‘பயனுள்ள முட்டாளாக’ ஏன் மாற வேண்டும் ? அவருடைய பயண நண்பர்களைப் போல கம்யூனிஸக் கருத்தியலையோ அல்லது தனது அறியாமையையோ பீஜீங்கின் சர்வாதிகார ஆளுகையையும் மற்றும் திபெத்தின் மீதான காலனிய ஆதிக்கத்தையும் தான் முன்னிலைப் படுத்துவதற்கு காரணமாக அவர் சொல்ல இயலாது.

(ஹிமல் தெற்காசியப் பத்திரிக்கை(Himal Southasian Magazine)யில் செப்டம்பர் 2007 இதழில் வெளியிடப்பட்ட டென்சிங் சோனம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)

Friday, October 16, 2009

இலங்கைக்குச் சென்ற தூதுக்குழு

இலங்கைக்கு சென்ற தூதுக்குழு திரும்பி வந்திருக்கிறது. அங்கே போய் ராஜபக்சே வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு முகாம்களில் போய்க் 'கைகழுவி' விட்டு வந்திருக்கிறார்கள். இந்தியாவின் கபட நாடகம் என்று எதிர்கட்சிகள் எல்லோரும் வருணிக்க, டெல்லி காங்கிரஸ்காரர்கள் இயக்கத்தில் நடந்த இந்த கபடநாடகத்தில் 'தர்மராய்' நம் கலைஞர்.

தூதுக்குழுவை அனுப்பச்சொல்லி ராஜபக்சே லட்டர் போட்டுத்தான் நம்ம ஆட்கள் போனார்கள் என்று கலைஞர் சொல்கிறார். போனவர்கள் அவங்கவங்க சொந்தக் காசுல தான் போனாங்க; நீங்களும் வேணும்னா போகவேண்டியதுதானே என்று கலைஞர் பொறுப்பை எதிர்கட்சிகளிடம் தள்ளுகிறார். எதிர்கட்சிகள் 'அப்படியா..சரி..இதோ எங்க குழு ரெடி.. அவங்களை பத்திரிக்கையாளர்கள் கூட அனுப்ப முடியுமா ?' என்று பதிலுக்கு வரிந்துகட்டிக்கொண்டு நிற்காமல் நெடுமாறன் ஐயா முதல் சி.பி.எம் வரை கபடநாடகம் என்கிற அறிக்கைகளோடு நின்று கொண்டார்கள். இதில் கேப்டன் கூடுதலாய் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி. விசாரணையிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்த தூதுக் குழுவை வரவைத்து உலகை ஏமாற்ற முயல்கிறார் என்கிறார். ஒருவேளை எதிர்க் கட்சிகள் எல்லாம் வரிந்து கட்டியிருந்தால் 'ஹி..ஹி.. சென்டர்ல இறையாண்மை குறையுதான்னு பார்த்து பெர்மிசன் குடுப்பாங்க'...'ஹி..ஹி.. ராஜபக்சேவோட இறையாண்மை குறையுதான்னு பார்த்துட்டு அவர் பெர்மிசன் குடுப்பாரு' என்று மக்கள் முன் மத்திய மாநில ஆளும் முகங்கள் இன்னும் அம்பலப்பட்டிருக்கக்கூடும்.

இப்படித்தான் போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் போகும் safety zoneக்குள் குண்டு போடுகிறார்கள் என்று இங்கிருந்து எதிர்கட்சிகள் குரலெழுப்ப ராஜபக்சே "அப்படியா..வந்து தான் பாருங்களேன்"னு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விட அப்போதும் அம்மையார் உட்பட எல்லோரும் இங்கேயே பங்க் குழிகளுக்குள் பதுங்கினார்கள்.

இப்போது போய்விட்டு வந்த சிறுத்தை திருமாவோ 'பிராபாகரனோடு போர்க்களத்தில் நீங்க இருந்திருந்தால் உங்களையும் கொன்றிருப்பேன்' என்று ராஜபக்சே சொன்னதை 'நகைச்சுவை'யாகப் பேசினார் என்கிறார்(சபை நாகரிகமாம்). இதைவிட அசிங்கம், ராஜபக்சே கட்டின முகாம்கள் நல்லா வழுவழுன்னு இருந்தது.ஐ.நா. கட்டின முகாம்கள் தான் மோசமா கொஞ்ச நாள்தான் தங்கப்போற மாதிரி இருந்தது என்று இவர் கொடுக்கும் சேனிட்டரி இன்ஸ்பெக்டர் சர்டிபிகேட். ராஜபக்சே 10 வருஷம் மக்கள் முகாம்கள்ல சந்தோஷமா இருக்கட்டும்னு கக்கூஸ் வரைக்கும் ஏ.ஸி. வச்சு கட்டிட்டாராம்.. இந்த ஐ.நா. வெட்டிப் பசங்கதான் ஏதோ ஒரே மாசத்துல முகாமை காலி பண்ற மாதிரி டெம்பரவரியா முகாமைக் கட்டிட்டாங்களாம். அவரை முகாமில் சந்தித்த தம்பி சொன்னாராம் 'நீங்க(தமிழ் நாடு) கொடுத்த டிரெஸ் தான் இது. இது ஒன்னுதான் இருக்கு. அதைத்தான் மாசக்கணக்கா போட்டுகிட்டு இருக்கேன்' என்று சொன்னாராம். புரிந்ததா உங்களுக்கு..? திருமா அண்ணன் எதைப் பதிவு பண்றாருண்ணு ? நாலுமாசமா வணங்காமண் கப்பலை ராப்பிச்சக்காரன் ரேஞ்சுக்கு அலைக்கழிச்சு கடைசில கலைஞர் 'கருணையால்' கொழும்பு துறைமுகத்து வரைக்கும் அனுப்பப்பட்டு அங்க துறைமுகக் குடோன்ல நாறிக்கிட்டு கிடக்கிற உலகத்தமிழ் மற்றும் நம்ப தமிழ் மக்கள் அனுப்புன உணவு, மற்றும் துணிமணிகள் எல்லாம் அங்கிருந்து கால் முளைச்சு நேரா நடந்து முகாம்களுக்குப் போயிடுச்சின்னு சொல்றாரு.

இதில் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழீழ ஆதரவாளர்களுக்கு போராட்டத்தில் தங்களின் பங்கு பற்றி என்ன நிலைப்பாடு என்பது புரியவில்லை. ஈழ ஆதரவு மாநாடுகளும், தீர்மானங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மட்டுமல்ல தமிழ் ஈழஅழிப்பு அரசியலுக்கு எதிரான 'அரசியலும்' செய்யவேண்டுமா இல்லையா ? யாரும் இங்கு மாநில அரசு, மத்திய அரசுகள் நடத்தும் நாடகங்களை அம்பலப்படுத்தும் அரசியல் செய்யவேயில்லையே ஏன் ? இப்படி வேடதாரிகள், கபட நாடகம், என்று அறிக்கைகள் மட்டும் விடுவது அந்த அரசியலுக்கு எதிராக என்ன செய்யும் ? மக்களுக்கு உண்மையை யார்தான் விளக்குவார்கள் ?

தமிழ் நாட்டு மக்கள் விலைவாசி உயர்வுகள், சிறுதொழில் தேக்கங்கள், திடீரென வேலையின்றிப் போன குடும்பங்கள் கோடி என்று அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு பருப்பு சாமான் என்று அம்பானிகளின், Fordகளின், சன் குடும்பங்களின் புறங்கைகளில் வடிந்து சொட்டும் துளியூண்டு தேனை.. வேண்டாம் என்னை நானே திட்டிக்கொள்ளவேண்டாம்..கணநேர தற்காலிக நிம்மதிகளில் தீபாவளியைக்(தமிழனை ஆரியன் கொன்ற நன்னாளை ?) கொண்டாடி ஏதோ வாழட்டும். இதற்கு நடுவில் அங்கே மூன்று லட்சம் பேர் முகாம்களில் வாடுகிறவர்கள் வாரத்தில் ஒரு முறைதான் குளிக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்..? டி.ஆர். பாலு போனாரே இங்கிருந்து கூலிங்கிளாஸ்லாம் போட்டுட்டு, அவர் இங்கிருக்கும் கும்பானிக்களுக்கு காண்ட்ராக்ட்டுகள் பிடித்துக் கொடுத்து அவர்கள் ஈழத்தமிழர் வாழ்வை புணரமைத்துவிடாமல் தூங்கமாட்டார்களே. பின் என்ன கவலை ?

Tuesday, October 6, 2009

உன்னைப் போல் ஒருவன் - சினிமா விமர்சனம்

ஹிந்தியில் வந்த 'wednesday' படம் பார்த்திருந்தேன். அதில் ஹிந்தி சரியாகப் புரியாததால் படம் முழுக்கப் புரியவில்லை. உ.போ.ஒ அதன் தமிழ் ஆக்கம். உலக நாயகன் கமல்ஹாசன் எடுத்திருக்கிறார். கமல் தமிழ்ச் சினிமாவின் முக்கியமான தூண்களில் ஒருவர். ஆனால் அந்தத் தூணே இந்துத்துவா தூண் என்பது தான் வேதனை. சுகுணா திவாகரின் வலைத்தளத்தில் இதைப் பற்றி விலாவரியாக எழுதியிருக்கிறார்.

படத்தின் கரு, தீவிரவாதிகள் ரயில்வே ஸ்டேஷன், பஸ்டாண்டு, தியேட்டர், மார்க்கெட் என்று பொது இடங்களில் குண்டு வைக்க, வெடித்துச் சாகும் சாதாரண பொதுஜனம் (common man) வெகுண்டெழுந்து தீவிரவாதிகளைக் குண்டுவைத்துக் கொன்றால்... என்கிற எதிர்வினை எண்ணத்தில் எழுந்த கதை. இந்த எண்ணத்தை அரசியல் கலக்காமல் அப்படியே தெளிவாக திரைக்கதையாக்கியுள்ளார்கள் ஹிந்தியில் என்றான் என் நண்பன். தமிழில் கமல் மணிரத்னம் பாதையில் தனது 'தேசபக்தி' கலந்து கொடுத்திருக்கிறார். தீவிரவாதிகள் உலகெங்கும் நடத்தும் (வி.புலிகள் அப்படிச் செய்வதை கொள்கை அடிப்படையாகக் கொண்டவர்களில்லை என்றாலும் கூட அப்படிக் கொன்றிருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது ) அரசுகளுக்கெதிரான போராட்டத்தில் இன்றும் வெடித்துச் சாகுபவர்களில் அப்பாவி மக்கள் பெரும்பான்மையினர். இது விடுதலைப் போராட்டத்தை மக்களிடமிருந்து அந்நியப்படுத்த எளிதில் பயன்படுகிறது; தீவிரவாதிகளுக்கு எதிரான உணர்வை, பயத்தை மக்களிடம் உருவாக்க அரசுகளால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கையறு நிலையில் ஆயுத பலங்களில் அரசுகள் முன் மண்டியிட வேண்டிய, பலமில்லாத தீவிரவாத விடுதலை இயக்கங்கள் இந்தத் தவறை உணர்ந்து கொள்வதில்லை. இத்தோடு தீவிரவாதிகள் தங்களது இலட்சியங்களை மறந்து சுயலாபங்களுக்காக பணலாபங்களுக்காக கொலைகள் புரியும் பயங்கரவாதிகளாக மாறிவிடுவதும் நடக்கிறது.

ஆனால் தியேட்டரில் பொதுஜனங்கள் கையைத்தட்டி இப்படத்தை ரசித்ததை சொல்லியாக வேண்டும். இஸ்லாமியர்கள் தவிர. ஏனென்றால் ஓர் R.S.S காரன் இஸ்லாமியர் எந்த 'மாதிரி' தேசபக்தியுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறானோ அப்படியே படத்தில் எல்லா இஸ்லாமிய கதாபாத்திரங்களும் உள்ளன(எ.கா. ஆரிப்). கமல் படத்தில் இந்து, கிறித்துவ, இஸ்லாமிய அடையாளங்கள் கலந்து வருகிறார். அது தேவையே இல்லை; அவர் பக்கா இந்து என்று படத்தில் வரும் 'சம்பவாமி யுகேயுகே' வாசகங்கள் சொல்லிவிடுகிறது தெளிவாக. கமல் நாத்திகராம். நம்பமுடிகிறதா ?

படத்தின் அரசியல், தீவிரவாதிகள்=வில்லன்கள் என்கிற மக்கள் கொண்டுள்ள கருத்தைக் கொண்டே படத்தோடு மக்களை இணைக்கும் கருவியாகப் பயன்படுத்துகிறது. எடுத்தவுடனே கமல் ஒரு தீவிரவாதிபோல் சில வெடிகுண்டுகள் எனச் சந்தேகப்படும் 'பேக்'குகளை பஸ், போலிஸ் ஸ்டேஷன், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்று ஒரு ஆறு இடங்களில் வைக்கிறார். பின்னர் தனது லேப்டாப் மற்றும் ஹைடெக் சாதனங்களின் உதவியோடு காவல் துறை கமிஷனர் மோகன்லாலுக்குப் போன் செய்து இத்தகவலைச் சொல்லி சிறையில் இருக்கும் ஐந்து தீவிரவாதிகளை (அல்கொய்தா, அல்உம்மா.. போன்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள் அனைவரும்) விடுவித்து தான் சொல்லும் இடத்தில் வந்து ஒப்படைக்கச் சொல்கிறார். அவர்கள் ஒப்படைத்ததும் தான் படத்தின் கிளைமாக்ஸ், யாரும் எதிர்பாராத திருப்பம்..

இந்தக் கருவை மட்டும் கதையாக சொல்லியிருந்தால் கூட படம் நன்றாக இருந்திருக்கும். இந்திப்படம் இந்த ஜாக்கிரதை உணர்வோடு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் ஏற்கனவே குருதிப்புனலில் தீவிரவாதிகளை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கேவலமானவர்களாகவும், RAW வுக்குப் போட்டியாக போலீஸ் உயர் அதிகாரிகள் வரை கைவசம் வைத்திருப்பவர்களாகவும் காட்டிய கமல் இப்படத்தில் இன்னும் கூடுதலாகவே தேசப் பற்றைப் பொழிந்திருக்கிறார். உண்மையில் கெட்டவார்த்தை சொல்லி திட்டவேண்டும் கமல் சாரை. ஆனால் திட்ட வாய் வரவில்லை. அவருடைய மனசாட்சியிடம் அப்பொறுப்பை விடுகிறேன்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக இன்னும் இருப்பதற்குக் காரணம் இங்கு பா.ஜ.க போன்ற வெறியர்களை திராவிட இயக்கங்கள் விரட்டியடித்து மக்கள் மனத்தில் மத வெறி எழாமல் பார்த்துக் கொண்டதுதான். இல்லாவிட்டால் இன்று கமல் சாரே பால் தாக்கரே போல் வசனம் பேசிக்கொண்டிருக்கக் கூடும். ஆனால் அவர் தமிழகம் ஏன் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று வயிரெறிகிறார். போதாக்குறைக்கு 'போராளிகள்' என்று தீவிரவாதிகளை வேண்டுமென்றே அழைக்கிறார். போராளிகள் என்று தமிழில் அழைக்கப்படும் தீவிரவாத இயக்கம் எது என்று நமக்குத் தெரியும். இஸ்லாமியத் தீவிரவாதிகள் மத்தியில் அப்பாவியாக வரும் ஆயுதம் விற்கும் ஒரு இந்து, சும்மா சப்பைக் கட்டுக்காக. ஒரு இஸ்லாமியத் தீவிரவாதி தனது (மூன்றாவது)மனைவி பெஸ்ட் பேக்கரியில் வைத்து எரிக்கப்பட்டாள் என்பதற்காக (காஷ்மீரில் கொல்லப்பட்டதற்காகவோ, கோத்ராவில் எரிக்கப்பட்டதற்காகவோ, பம்பாய் கலவரத்தில் அல்லது குஜராத் கலவரத்தில் விரட்டிக் கொல்லப்பட்டதற்காகவோ இல்லையாம்..) தீவிரவாதியானேன்(?) என்று சொல்லும் போது இந்த இந்து அப்பாவி 'அதான் மிச்ச ரெண்டு இருக்கில்லப்பா' என்று காமெடி பண்ணுகிறான். இஸ்லாமியனின் துயரம் காமெடியாகுமாம் 'மும்பை ரயில் குண்டுவெடிப்பு' 'தாஜ் ஹோட்டல் எரிப்பு' இவர்களுக்கு 'சீரியசாக' நாட்டுப் பற்றை ஊட்டுமாம். எப்படி கமல் சார் உங்கள் 'காமன் மேன்' இந்துவாக மட்டும் இருக்கிறான். அதுமட்டுமல்ல உங்கள் போலீசில் வேலை பார்க்கும் ஆரிப் கூட அப்படித்தான் இருக்கிறான். இஸ்லாம் தீவிரவாதிகள் பற்றி தகவல் சொல்லும் இஸ்லாமியனிடம் மட்டும் இணக்கமாகப் பேசுகிறான். அதாவது 'அரச பயங்கரவாதத்துக்கு' துணை போகும் ஆபீசராக இருந்தால், ஒரு இஸ்லாமியனே இஸ்லாமியனை சுட்டுக் கொன்று
என்கௌன்டர் செய்து திமிராக நெஞ்சு நிமிர்த்தி நடக்கலாம் என்று நிறுவுகிறான்.

இன்றைய முதலாளித்துவம் சோசலிஸம் பேசுவதுபோல் இப்படம் இந்துத்துவா விஷத்தை "நாட்டுப் பற்று" சோற்றில் கலந்துதான் வைக்கிறது. ஆரிப் செய்யும் சில விஷயங்களும் இஸ்லாமியருக்கு ஆதரவாயிருப்பது போல தோற்றம் தரச் செய்யும் கலப்படங்கள். இந்தக் கால அரசியல் நீக்கம் பெற்ற சூழலில் வளரும் இளம் தலைமுறையினர் இந்த விஷத்தை கவனிக்காமல் நாட்டுப் பற்று சாப்பாட்டை சாப்பிடுவதும் இப்படத்தில் நடக்கிறது. முந்தா நாள் விஜய் டி.வியில் கமலுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு கல்லூரிப் பெண் 'உங்களை கட்டிப் பிடிச்சி அழுதுடுவேன் சார்' என்று அழுதாள். ஆனால் அதே நிகழ்ச்சியில் பம்பாய் ரயில்வே ஸ்டேஷன் துப்பாக்கிச் சூட்டை நேராகப் பார்த்த ஒருவர் 'வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்று ஏன் சார் சொன்னீங்க' என்று பொட்டிலடித்தார் போலக் கேட்டார். என்கௌண்டர் கொலைகளை ஞாயப்படுத்தும், வன்முறையை ஞாயப்படுத்தும் கமல் 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற போர்வையில் புஷ் செய்த கொலைகளை தமிழில் செய்திருக்கிறார்.

சினிமா என்கிற ஊடகமாக இப்படம்:
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே விறுவிறுப்பில் செல்வதால் திரைக்கதை வெற்றியானதுதான். அதற்கு படம் நிறுத்தும் இரு எதிர்நிலைகள் தீவிரவாதம் X அரசு. தீவிரவாதியின் பயங்கரம் அவன் வைக்கும் குண்டுகள் வெடிக்காமல் படம் முழுதும் துடிக்கும் துடிப்பில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தப் பயங்கரத்திற்கு அரசு சவாலாக என்ன எதிர்வினை செய்கிறது என்பதற்கான காட்சியமைப்புகளும் கதாபாத்திர அமைப்புகளும் உள்ளன. மோஹன்லால் தனது கீழதிகாரியை 'கல்யாணம் ஆகிடுச்சா' என்று கேட்டு "யெஸ் ஸார்" என்று அவன் சொன்னவுடன் "நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்ய தயாரா" என்று கேட்க, அதற்கு அந்தக் காக்கிச் சட்டை அதிகாரியின் பதிலில் தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் பரவச நிலையை அடைகிறார்கள். வேறு சில கட்டங்களில் இது வெறும் இரு ஈகோக்களுக்கிடையேயான சண்டையாகக் கூட மிளிர்கிறது (WWF ஸ்டைலில்).

ஆனால் கமல், மோஹன்லால், லஷ்மி, இரு கீழதிகாரிகள் போன்ற யாருடனும் பார்வையாளர்கள் ஒன்ற முடிவதில்லை. தீவிரவாதிகளுக்கோ முகமே இல்லை. 'Character development' என்பதே இல்லை. இந்திப் படத்திலும் இக்குறை உண்டு. மோஹன்லால், கமல் இருவரின் நடிப்பும் ஓ.கே. என்று கூட சொல்ல முடியாது. பிசிறு தட்டுகிறது. மற்றும் கமல் சார் ஊர் பூராவும் குண்டு வைத்து மிரட்ட, அதை ஒரே ஒரு டி.வி. மட்டும் கடைசி வரை படம் பிடிக்க மற்ற டி.வி.க்கள் இதைக் கவனிக்கவேயில்லை என்பது என்ன லாஜிக். பொதுமக்கள் இந்நிகழ்வுகளைப் பார்த்து என்ன உணர்வடைந்தார்கள் என்று படம் முழுவதிலும் ஒரு சின்ன ஷாட் கூட காண்பிக்கப்படவில்லை. இது வீடியோ கேம் விளையாடும் உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது. கமல் லேப்டாப் முன்னால் உட்கார்ந்து கொண்டு 'ரேஷன் கடையில் அரிசி வாங்க கியூவில் நிற்கும் காமன் மேன் நான்' என்று சொல்வது பொருத்தமில்லாமல் இருக்கிறது. photography, editing இரண்டும் அப்படியே இந்திப் படத்தின் சாயலை பிரதியெடுத்துள்ளன. ஸ்ருதி ஹாசனின் (கமலின் மகள் தான்) இசையில் தீம் பாடல் சம்பவாமி யுகேயுகே என்று ஆரம்பித்து உ.போல்.ஒ என்று புகழ்பாடியபடியும், MTV ல் போடுவதற்கு வசதியாக 'வானம் எல்லை'யில் ராப்,தவில் கலந்து ஸ்ருதிஹாசன் குரலில்(பரவாயில்லை) இனிமையாகவும், 'நிலை வருமா' பாடல் (போலி)மதச்சார்பின்மையை கமல் குரலில் பாடவும்.. அதே போன்ற தீம் இசை படம் முழுவதும் வருகிறது + வழக்கமான த்ரில்லர்களின் இசை. படம் முழுக்க அப்படி வாசிக்க வேண்டிய அளவுக்கு (கமல் சாரின்)தேசபக்தி அரிப்பைத் தவிர வேறு ஒன்றும் சொரிவதற்கு இல்லை. (western)இசை பெரிதாகக் குழப்பிவிடவில்லை. அடுத்த படங்களில் பார்க்கலாம்.

இன்றைய Consumerist உலகத்தில் இப்படம் நாட்டுப் பற்றைச் சொன்னதை விட எப்படி செல் போனில் பேசினாலும் இடம் கண்டுபிடிக்கமுடியாமல் இப்படிக் குழப்பினான் என்று டெக்னாலஜி ஆச்சர்யங்களிலும் சின்ன அரசியல் நையாண்டிகளிலும் தொய்வின்றி போனது என்றும் சொல்ல வேண்டும். பிராமணியம், இந்துத்துவம் இல்லை என்று இனி கமலே படம் எடுத்தால் கூட நம்ப முடியாது போங்கள்.

நான் அவன் இல்லை.
மதிப்பெண்: 10 க்கு 4.