Sunday, May 30, 2010

ஈழத் தமிழருக்கு சி.பி.எம் தரும் ‘சாரிடான்’ மாத்திரை.

ஈழத் தமிழருக்கு சி.பி.எம் தரும் ‘சாரிடான்’ மாத்திரை.

மே 28, வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி.
இடம்– சென்னை, பூந்தமல்லி ஹை ரோடு, ஆர்யசமாஜம்.

‘இலங்கைத் தமிழர்ப் பிரச்சனைக்கு தீர்வு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சி.பி.எம்.மின் இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் பேசப்போகிறார் என்ற விளம்பரம் தீக்கதிரில் படித்ததும் வந்து சரியாக 6 மணிக்கு ஆஜராகி நின்றோம்.

ஆர்யசமாஜம் இருந்த தெருவில் இருபுறமும் மார்கசிஸ்ட் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. தோழர்கள் ஆறுமணியிலிருந்தே வரத் தொடங்கிவிட்டனர். பத்திரிக்கையாளர் கூட்டமும் நின்றது. சுமார் ஆயிரம் பேர் கொள்ளளவு கொண்ட உள்ளரங்கில் இருக்கைகள் போடப்பட்டு பழங்காலத்து காதல் பாடல்கள் ஸ்பீக்கரில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தன. தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து வணக்கம் சொல்லுதலும், அளவளாவுதலும் ஆங்காங்கே நடந்துகொண்டேயிருந்தது. எங்களுடன் வந்த கல்லூரி நண்பர் ஒருவர் பிரபாகரன் படம் போட்ட டி.சர்ட் அணிந்திருந்தார். அவ்விடத்தில் அவரை கடந்து சென்ற எல்லாரும் லேசாக திரும்பிப் பார்த்தபடி சென்றனர். அப்போது ஒரு சி.பி.எம் தோழர் அவரிடம் வந்து சட்டையில் இருந்த பிரபாகரனின் போட்டோவைக் காட்டி “யார் இவர்?” என்று நக்கலாகக் கேட்டார்.

6.30 மணியளவில் பிரகாஷ் காரத் (சிறப்புரை), சத்தியமூர்த்தி(இலங்கை பத்திரிக்கையாளர்), டி.கே.ரங்கராஜன் (தலைமை) என்று அனைவரும் ஒன்றாக ஹாலுக்குள் நுழைந்தனர். கூட்டம் ஆரம்பமானது.

முதலில் பேசியவர் டி.கே.ரங்கராஜன். ஆரம்பித்தவர் “ஈழப் பிரச்சனை முடிவடைந்து ஒரு வருடம் ஆகியும்” என்றவர் பின் கொஞ்சம் சுதாரித்து “போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் அங்கிருக்கும் தமிழ் மக்கள் முகாம்களில் சிறைப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசு உடனே ஆவண செய்து அவர்களை மீள்குடியமர்த்தி ‘ஒன்றுபட்ட இலங்கை’யில் அவர்களின் வாழ்வுரிமைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” என்றார். இரண்டாவது முறையும் 'ஈழப் பிரச்சனை முடிவடைந்து' என்று கூறிவிட்டு பின் திருத்திக் கொண்டார். விடுதலைப்புலிகள் செத்தவுடன் ‘பிரச்சனை’யும் முடிந்துவிட்டதாகக் கருதுவது தான் இவர் போன்ற தலைவர்களின் கருத்து என்றால் மற்றவர்களின் கதி ? இனவாதப் போரில் ஈடுபட்ட கடைசி 3 மாதங்களில் மட்டும் 30 ஆயிரம் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசை ‘போர்க்குற்றவாளி’ எனத் தீர்ப்பளித்த மனித உரிமை தீர்ப்பாணயம் இவர்கள் கண்ணிலே எப்படிப் படாமலே போனது. மாலைக்கண் வியாதியோ ?

அடுத்ததாகப் பேசியவர் சத்தியமூர்த்தி என்கிற ஈழத்துப் பத்திரிக்கையாளர். இவர் ‘வடக்கு வசந்தம்’ என்கிற இலங்கை அரசின் புதிய திட்டத்தை ஆதரித்தவர் என்கிறார்கள். அவர் சொன்ன முதல் விஷயம் இலங்கையின் 235 எம்.பி.க்களில் 46 பேர் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்கள், ஒருவர் மட்டும் சிங்களர். இந்த 46 பேர்களிடையே ஒருமித்த கருத்து என்ற ஒன்று இல்லை. எல்லாம் 16 பிரிவுகளாக பிரிந்து ஒற்றுமையில்லாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இருந்தால் தமிழருக்கு என்ன நீதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது ? இரண்டாவது விஷயம் இங்கிருக்கும் அரசியல் சக்திகள் இடது சாரிகளும் சேர்த்து அங்கிருக்கும் முற்போக்கு சக்திகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்களா ? இருந்தார்களா ? இனிமேலாவது இருப்பார்களா?. அவர் வேறு எதுவும் விரிவாகப் பேசவில்லை. தமிழ்ச் சக்திகள் வேறு வேறாக நின்றால் கூட அனைவரும் ஒருவரை ஒருவர் ஆதரித்துக்கொள்ள வேண்டுமே தவிர உள்ளுக்குள் அடித்துக் கொண்டு எதிராளியை பலமானவனாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தினார்.



முதலில் பேசிய டி.கே.ரங்கராஜனும், சத்தியமூர்த்தியும் ஆளுக்கு பதினைந்து, பதினைந்து நிமிடங்கள் பேசி அமர்ந்து விட இறுதியாக பேச வந்தார் பிரகாஷ் காரத். அவர் பேச்சை உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்ய ஒருவரும் உடன் நின்றார். சரிதான் அக்குவேறாக் ஆணிவேராக பிரச்சனையை அலசப் போகிறாரோ என்று நினைத்தபடி கேட்டால் பிரகாஷ் காரத் பேசியது மேலும் அபத்தமானதாக இருந்தது. முதலில் முன்னர் பேசிய சத்தியமூர்த்திக்கு பதில் கொடுக்கும் வகையில் நாங்கள் 1980களிலிருந்து இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளுடன் JVP உட்பட பேசிக்கொண்டுதான் இருந்தோம். 2004ல் இலங்கையில் சிங்கள மக்களின் முன் நடத்தப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசிய போது இந்தியாவில் இருந்த சமஷ்டி முறை (Federal Setup) இலங்கைக்கு நன்கு பொருந்தும் என்று எடுத்துரைத்தாகவும் தெரிவித்தார். JVP கட்சியுடன் தொடர்ந்து பேசினாலும் அவர்கள் தங்களது இனவாதப் பார்வையை விடாதிருந்ததால் அவர்களுடனான தொடர்பு அறுந்துவிட்டது என்றார். அதைத் தவிர மற்றைய தமிழ்க் கட்சித் தலைவர்களுடனும் பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக போராட அவர்களும் இசைந்ததாகவும், ஆனால் அவர்கள் எல்லாம் புலிகளால் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். சிங்கள அரசு பெரும்பான்மை இனவாதமும், புலிகள் சிறுபான்மை பிரிவினைவாதமும் பேசியதால் நடைபெற்ற இந்தப் போரில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றார். அதாவது சுருக்கமாக சத்தியமூர்த்தி குற்றம் சாட்டியது போல் சி.பி.எம் நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் பிறழ்வதே இல்லை: தவறே செய்யவில்லை என்று நிரூபித்தார். அதுதானே முக்கியம் முன்னால் உடகார்ந்திருக்கும் சி.பி.எம் பாமரத் தோழர்களுக்கு. 'கட்சி நிலைப்பாட்டில் தவறிழைத்ததில்லை..தவறிழைக்காது' என்று அவர்கள் பரிபூரணமாக நம்ப வேண்டும். அது மிக முக்கியம்.

அடுத்து காரத் இந்தப் போர் நடைபெற்று முடிந்தவுடன் போரில் இடம்பெயர்ந்த மக்களின் புனர் வாழ்விற்கு உடனடியாக இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்தோடு முடித்திருந்தால் பரவாயில்லை. “இந்தியா ஒரு இறையாண்மை மிக்க நாடு. இலங்கையும் இறையாண்மை மிக்க நாடு. இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்தியா உதவியது. எனவே இந்நிலையில் வரும் ஜூன் 8ஆம் தேதி பிரதமரை சந்திக்க வரும் ராஜபக்சேவை மக்களின் புனரமைப்புப் பணிகளை உடனே செய்யும் படி வற்புறுத்தவேண்டியது இந்தியாவின் உரிமை கூட” என்றார். போரே மிகக் கொடூரமான இன அழிப்புப் போர் என்று எல்லோரும் கூக்குரலிட்டுக்கொண்டிருக்க நம்ம தோழர் காரத் அதற்கு உதவி செய்தது இந்தியாவின் சட்டபூர்வ உரிமை(Legal Right) என்கிறார். நாம் எங்கே போய் முட்டிக்கொள்வது ? செத்துப் போன பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான நியாயம் என்ன ? சி.பி.எம்முக்கு கவலையில்லை என்பது தான் உண்மை. அதன் மேல்மட்டத் தோழர்களிடம் பேசுங்கள். இந்த மனப்பான்மை அப்படியே மாறாமல் தெறிக்கும். பின்னர் வழக்கமான பொத்தாம் பொதுவான வார்த்தைகள். "இலங்கையில் இருக்கும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளை ஒன்று சேர்த்து தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராட முயற்சிகள் செய்யவேண்டும்".

அவ்வளவுதான் முடிந்தது காரத்தின் உரை. முப்பது நிமிடங்களில். அதில் சரிபாதி நேரம் அதை மொழிபெயர்ப்பவர் எடுத்துக் கொண்டார். என்றால் வெறும் பதினைந்து நிமிடங்களில் பிரகாஷ் காரத் இலங்கைத் தமிழருக்கான தீர்வை வழங்கிவிட்டார். தலைவலியோ, மூக்கடைப்போ, ஈழத் தமிழர் பிரச்சனையோ, ஒரு சாரிடான் போடுங்கள்; பதினைந்தே நிமிடங்களில் வலி பறந்துவிடும். காரத் பறக்கடித்துவிடுவார்.

பின் வரும் கேள்விகள் எனக்கு எழுகின்றன.

1. உத்தப்புரத்தில் சாதிக் சுவர் கட்டி, கொடுமைப் படுத்தி, அங்கு வாழ்ந்த இருநூறு தலித் மக்களை ஓடஓட விரட்டி அடித்தது காவல்துறை என்று சாடி ஆர்ப்பாட்டம் செய்யும், காரத்தை நேரடியாக அழைக்கும், கோர்ட்டில் போராடி வந்த தீர்ப்பு வரை ‘ஆவணப்படம்’ எடுக்கும் சி.பி.எம்மின் ‘மனித நேயம்’ தமிழ் மக்கள் அங்கே பல்லாயிரக் கணக்கில் இலங்கையில் கொத்துக் கொத்தாக செத்தபோது, கற்பழிக்கப்பட்ட போது,ரசாயனக் குண்டுகளால் கருகிய போது, அதைத் தடுத்து நிறுத்த என்ன என்னவெல்லாம் செய்தது ?

2. அமெரிக்காவே போ..போ.. கியூபாவை நசுக்காதே.. இந்தியாவுடன் ஒப்பந்தம் போடாதே என்று அமெரிக்காவை, புஷ்ஷை எதிர்த்து அமிஞ்சிக்கரையில் கூட்டம் போட்டு நேருக்கு நேர் ஒபாமாவையே மேடையில் 'தில்'லாகக் கேட்க முடிந்த உங்களுக்கு, பாலஸ்தீனத்திற்கு உதவிப் பொருட்கள் ஏற்றிச் சென்ற கப்பலை மறித்துப் பிடித்த இஸ்ரேலை அடுத்த நாளே அத்தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி கண்டிக்க முடிந்த உங்களுக்கு, இலங்கையையும், ராஜபக்சேவையும் வலியுறுத்த மட்டும் ‘இறையாண்மை’ வெட்கம் வந்து தடுப்பதன் ரகசியம் என்ன ? அதற்கு மட்டும் இந்திய அரசையும், மன்மோகனையும் நீங்கள் தூதனுப்பி கேட்டுக் கொள்வதன் அர்த்தம் என்ன ? இங்கிருந்து சற்று உரக்கக் கத்தினாலே கூட ராஜபக்சேவுக்கு நம் குரல் கேட்குமே ? ஏன் இதே போல ஈழத்தமிழர்களுக்கு தாய்மண் என்கிற பெயரில் கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இலங்கையால் திருப்பி அனுப்பப்பட்டு சென்னை துறைமுகத்தில் அல்லாடியதே அப்போது எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தீர்களா ?

3. ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் ஊற்றுவது முதல் ஊழல் பல புரிந்த, திமுக ரவுடிகளை தட்டிக் கேட்டதற்கு, அரசியல் பகையால் வெட்டிக் கொல்லப்பட்ட கவுன்சிலர் லீலாவதியின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தி உருக முடிந்த உங்களுக்கு, பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் மக்களையும், அதற்கு நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் போடும் சோனியாவையும், மேனன்களையும், நம்பியார்களையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி தமிழ் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப தன் உயிரை எரித்துக்கொண்டானே முத்துக்குமரன், அவனது தியாகம் எந்த விதத்தில் குறைந்தது ? அவனுக்கு அஞ்சலி என்று ஒரு அறிக்கை விடமுடியாத அளவுக்கு இளம் DYFI தோழர்கள் கூட சொரணையற்றுப் போனார்களா ?

4. விடுதலைப் புலிகளுடன் சி.பி.எம் சார்பாக என்றாவது பேசினீர்களா ? அதன் பலன் என்ன என்று வெளியே அறிக்கை விட்டீர்களா ? அட்லீஸ்ட் மாவோயிஸ்ட்டுகளிடமாவது பேசுவீர்களா ? ப.சிதம்பரம் தான் பேசவேண்டும் என்று என்ன தலையெழுத்து ? இல்லையில்லை ஆயுதத்தை வைத்திருப்பவன் கூடவெல்லாம் பேசமாட்டோம் என்றால் CRPFம் இலங்கை-இந்திய ராணுவங்களும் கையில் பூச்செண்டுகளோடா லால்காரிலும், யாழ்ப்பாணத்திலும் நடந்து போனார்கள் ?

5. ஈழப்பிரச்சனையில் 'ஈழம்' என்கிற வார்த்தை கூட அவர்களுக்கு தனிநாடு கேட்பதாக அமையும் என்று அந்த வார்த்தையைக் கூட பயன்படுத்தாமல் 'இலங்கை' என்று கவனமாகக் கூறும் நீங்கள், கேட்டால், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பலவாறாக வியாக்கியானங்கள் கூறுகிறீர்கள். இஸ்ரேலை தனி நாடாக்கியது அமெரிக்காதான். அப்படி இல்லாவிட்டால் அது பாலஸ்தீனத்தின் ஒரு பகுதிதான். அமெரிக்கா இஸ்ரேலைப் பிரித்தால் அது உங்களுக்குப் பிரச்சனையில்லை. ஆனால் புலிகள் தனிநாடு அட அட்லீஸ்ட் சுயநிர்ணய உரிமையுள்ள பிரதேசம் அந்தஸ்து கேட்டால் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? பிரபாகரன் எத்தனையோ பேரை கொன்றவர் தான். ஸ்டாலின் கொல்லாமல் இருந்தாரா ? ஸ்டாலினை பயங்கரவாதி என்று நீங்கள் சொல்வீர்களா ?

இதற்கு சி.பி.எம் நண்பர்களின் பதில் 'சிறு நாடுகளாய் பிரிந்தால் ஏகாதிபத்தியம் எளிதில் வசப்படுத்தி அடிமையாக்கிவிடும். எனவே, நாடுகளைப் பிரிக்காமலிருப்பது முக்கியம்'. இலங்கை மொத்தமாகவே ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அடிமைதான். இதில் தமிழ் ஈழம் என்பது உயிர் போகும் பிரச்சனை அல்லவா ? என்றைக்கோ வந்து அடிமைப்படுத்தப் போகும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதா ? இல்லை இந்தக் கணத்தில் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து வெடித்துக் கொல்லும் சிங்களவனை எதிர்ப்பதா ? எது சாத்தியம் ? எது முக்கியம் தோழர்களே ?

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு நேரடியாக வந்து டயோட்டா கார் கம்பெனிக்காரன் கலைஞரிடம் MOU போட்டு ஏரியாவை வளைத்துப் பிடிக்கிறான். இதை எதிர்க்க தமிழ்நாட்டு சி.பி.எம் என்ன செய்தது ? (ஹுயூண்டாய் கம்பெனிக்காரன் தொழிலாளர்களை சுரண்டுவதைத் தடுக்க போராடி தொழிற்சங்கம் வைத்தது பெரிய முயற்சி .. எனினும்) தமிழ்நாடு தனிநாடாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் டயோட்டாக்காரனும், நோக்கியாக்காரனும் வராமலா இருப்பான் ? ஈழத்துப் பிரச்சனையில் மட்டும் 1983ன் பின் உங்கள் நிலைப்பாடு மாறவேயில்லையே ஏன் ? இந்த 30 ஆண்டுகள் நடைபெற்ற ஈழப்போராட்டத்தை வெறும் 'புலிகள் பயங்கரவாதிகள்' என இந்திய-சிங்கள அரசுகள் போல் சொல்லி நீங்களும் முகத்தைத் திருப்பிக் கொண்டால் நீங்கள் உண்மையில் யார் பக்கம் ?

சிந்தியுங்கள் தோழர்களே. உங்கள் போக்கில் மாற்றம் வேண்டுமா ? அல்லது உங்கள் தலைமைகள் உங்களை வேண்டுமென்றே திசை திருப்புகிறார்களா ? ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை (Genocide) என்று இந்தக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் உட்பட எல்லா சி.பி.எம் தோழர்களும் கவனமாக ஒரு இடத்தில் கூட வார்த்தை உபயோகிக்காதது ஏன் ? (நீங்கள் அழைத்த விருந்தினர் சத்தியமூர்த்தி கூட இனப்படுகொலை தான் என்று உறுதியாக பலமுறை சொன்னபோதும்..)

Friday, May 28, 2010

ஈழத்தமிழரை விட FICCI -பதவியை பெரிதாகக் கருதும் கமல்ஹாசன்.

மே 23, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி.
இடம்– சென்னை, ஆழ்வார்ப்பேட்டை, கமல்ஹாசன் அலுவலகம் முன்.

மே 17, 2009 ல் இலங்கையில் உச்சகட்டத்தை அடைந்து முடிவடைந்த ஈழப் படுகொலைகளின் மற்றும் சிங்களத்திற்கு எதிரான இனப்போராட்டத்தில் முழுதும் தோற்று இறந்த நம் தமிழர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய இயக்கம்தான் மே 17 இயக்கம்.

கமல்ஹாசனை FICCI என்ற வணிக அமைப்பின் பொழுதுபோக்குப் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதன் மூலம் ஈழப் படுகொலைகளைப் புரிந்த இலங்கை அரசை கண்டிக்கவும், அதை மறைக்க FICCI போன்ற வணிக கூட்டுறவு முயற்சிகளையும், சினிமா ஆட்டபாட்டங்களையும் மேற்கொள்வதை சுட்டிக் காட்டவும் வற்புறுத்தியிருந்தனர். கமல்ஹாசனை ஞாயிறு, காலையில் அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுக்கப் போவதாக மே 17 இயக்கத்தினர் அறிவித்திருந்தனர்.

FICCIக் காரர்கள் யார் ? இந்தியா-இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுப் பிரமுகர்கள், தனியார் பிரமுகர்கள், எம்.பி.க்கள், அம்பாசிடர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என்று பலரும் அங்கத்தினராயிருக்கும் ஒரு இயக்கம். அதன் நோக்கம் என்ன ? இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக வாய்ப்புகளை வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அதிகரித்துக்கொள்ள அரசுடன் ‘இணைந்து’ எடுக்கும் ஒரு முயற்சியாகும். எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் பினாமிகளும் உள்ளுக்குள் இருப்பதால் அரசுடன் ‘இணைந்து’ தொழில் நடத்துவது ரொம்ப வசதி. ஸ்பெக்ட்ரம் விவகாரம் போல்.

இந்தப் பல்தொழில் வித்தகர்கள் தங்களது 11வது கூட்டத்தை இலங்கையில் நடத்தவேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஏன் ? முன்பு சொன்னது போல இலங்கை போர்க் குற்றங்கள், கொலை பாதகங்கள் புரிந்த அரசு என்பதிலிருந்து காப்பதன் ஒரு முயற்சி. இரண்டாவது, போரில் அழிந்த பகுதிகளை புணரமைக்கும் சாக்கில் தங்களுக்கு ஆலைகளும், சந்தையும் மலிவான முதலீடுகளில் தேடிக் கொள்ளும் முயற்சி. FICCI கணவான்கள் எல்லாவற்றையும் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு செய்பவர்கள். ஆகவே இந்த இரண்டு நாள் கருத்தரங்கின் முத்தாய்ப்பாக கடைசி நாளன்று திரைப்பட விழா ஒன்றும் சேர்த்துக்கொண்டு அதற்கு அழகழகான நடிகர், நடிகைகளையும் அழைத்துள்ளனர். IIFA நடத்தும் இந்தத் திரைப்பட விழாவை சென்ற வருடம் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1 கோடிப் பேர். தற்போது இதை இங்கு நடத்துவதன் பலன் என்ன ? சினிமா என்றதும் சுமார் 2 கோடிப் பேர், 85வயது கிழம் வரை, வாயைத் திறந்தபடி கவனிக்கும் என்பது. அத்துடன் இரண்டு நாள் கருத்தரங்கில் ‘படியாத’ பேரங்களை சினிமாவின் கரங்களால் மூன்றாவது நாள் கண்டிப்பாகப் படியவைத்துவிடும் சாமர்த்தியமும் இதில் உண்டு. எப்படி என்கிறீர்களா ? நீங்கள் எல்லாம் கம்பெனி வைக்கவே லாயக்கில்லை. இன்னும் விவரம் வேண்டுமா ? பின்வரும் வலைப்பூவில் கவிஞர் தாமரையின் கட்டுரையை படியுங்கள்.
http://tamilnathy.blogspot.com/2010/05/blog-post_21.html


ஏற்கனவே FICCI ன் மற்ற பிரிவுகளுக்கு ஈமெயில் மூலம் இது மாதிரி விழாவை இந்த வருடம் இங்கு நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள்கள் விடுத்து எந்தப் பதிலும் வரவில்லை. எனவே பின்னர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் ஞாயிறன்று சந்தித்து மனு கொடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர் மே 17 இயக்கத்தினர். கவனிக்கவும் ‘மனு கொடுப்பதாக’த் தான் கூறியிருந்தனர். கமல்ஹாசனை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகச் சொல்லவில்லை.

காலையில் நண்பரும், நானும் கமல்ஹாசனின் அலுவலகத்தை அடைந்த போது அதன் முன் சுமார் 30 பேர் கூடியிருந்தனர். அவர்களைச் சுற்றி வளைத்து சுமார் 15 போலீசார் நின்றிருந்தனர். மனுக் கொடுப்பதற்கே இவ்வளவு பாதுகாப்பா ? என்று வியந்தேன். பின்னர் தான் தெரிந்தது அது எங்களுக்கு அல்ல கமல்ஹாசன் அவர்களுக்கு என்று. சுமார் 15 பத்திரிக்கையாளர்கள் கேமராக்கள் சகிதம் நின்று கொண்டிருந்தனர். மே 17 இயக்கத்தின் சார்பில் அய்யனார் மற்றும் எஸ்.எஸ்.மணி, திரு போன்றவர்கள் தலைமை தாங்கி நின்றிருந்தனர். சில இளைஞர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபடியும், கமலிடம் வேண்டுகோள் விடுக்கும் அட்டைகளை தூக்கிப்பிடித்தபடியும் நின்றிருந்தனர். சொற்ப அளவிலேயே நின்ற மே 17 இயக்க ஆதரவாளர்களாகிய நாங்கள், போலீசாரும், நிருபர்கள் கூட்டமும் சேர்த்து ஒரு பெரிய கூட்டம் கூடியது போன்ற பிரமையை ஏற்படுத்திவிட்டோம்.

கமல்ஹாசனின் அலுவலக வெளிப்புற இரும்புக் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வெளியே நாங்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்தோம்.கமல்ஹாசன் இன்னும் அலுவலகம் வரவில்லை. பத்தரை மணியாகிவிட்டது. போலீஸ் அதிகாரி பொறுமையிழந்து போய் மே 17 எஸ்.எஸ்.மணியிடம் வந்து என்ன செய்யப் போறீங்க என்று கேட்க அவரும் யோசித்தார் என்ன செய்யலாம் என்று. அப்போது படக்கென்று அலுவலகத்தின் ‘திட்டி வாசல்’ கதவு லேசாகத் திறந்து மேனேஜர் எட்டிப் பார்க்க போலீஸ் அதிகாரி உள்ளே போனார். போனவர் போன வேகத்தில் வெளியே வந்து அய்யனாரிடம் “நீங்க வேணும்னா மனுவை எங்கிட்ட குடுத்துட்டுப் போங்க..நான் மேனேஜர் கிட்ட குடுத்துர்றேன்” என்றார்.

அந்நேரம் வாசலில் ஒரு பெரிய கார் வந்து நிற்க அதிலிருந்து கமல்ஹாசன் இறங்கினார். உடனே பத்திரிக்கையாளர் கூட்டம் அவரைச் சுற்றிச் சுழன்று படமெடுக்க ஆரம்பிக்க அவர் காரிலிருந்து இறங்கியதும் திட்டிவாசல் திறக்க, அவர் விடுவிடுவென்று அலுவலகத்திற்குள் போய்விட கதவு மூடிக்கொண்டது. இடம் பரபரப்பாகியது. அய்யனார் மற்றும் மணி இருவரும் காவல் துறை அதிகாரியிடம் இரண்டு பேரை மட்டும் உள்ளே அனுமதிக்குமாறும் தாங்கள் கமல்ஹாசனை சந்தித்து மனுவை கொடுத்தவுடன் திரும்பி விடுவோம் என்றும் சொன்னார்கள். காவல் துறை அதிகாரி உள்ளே திரும்பப் போய்விட்டு வந்தார். இம்முறை அவருடன் வெளியே வந்தவர் கமல்ஹாசனின் மேனேஜர். வந்தவர் உடனே அய்யனாரிடம் இருந்து மனுவை வாங்கிக் கொண்டு உள்ளே மறைந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியே வந்து கமல்ஹாசன் மனுவைப் பெற்றுக் கொண்டதாக மட்டும் தெரிவித்தார். அவ்வளவுதான்.
சடங்கு முடிந்தது. பத்திரிக்கைக்காரர்களுக்குத் தான் ஏமாற்றம். கமல்ஹாசன் ஒரு போஸ் கூடக் கொடுக்காமல் போய்விட்டாரே என்று வருத்தம். போலீஸ் அதிகாரி அவ்வளவுதான் கிளம்புங்க என்கிற மாதிரி எல்லாரையும் கலைந்து போகச் சொல்ல, அய்யனார் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு ஒரு பேட்டி வழங்கினார். அதில் FICCI அதன் தொழில் முனைப்புகள். அதை எவ்வாறு ஈழப் படுகொலைகளை மறைக்க பயன்படுத்துகிறார்கள் என்று விளக்கினார். பத்திரிக்கையாளர்கள் படபடவென படம் எடுத்துக் கொண்டு அப்பாடா வேலை முடிந்தது எனக் கலைந்தார்கள்.

அன்றிரவு என்.டி.டிவி-ஹிண்டு சானலில் மே 17 இயக்கத்தின் ‘திரு’வை பேட்டி கண்டார்கள். இதில் முரணான விஷயம் என்னவென்றால் எந்த ஈழப்படுகொலைகளை ஹிண்டு மறைத்ததோ, அதே படுகொலைகளை முன்வைத்து போராடும் திருவை ஹிண்டு பேட்டி காண்கிறது இப்போது.

கமல் மறுநாளே ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தான் எப்போதுமே தமிழர்களின் நலனில் அக்கறையுள்ளவன் என்றும், இந்த விழா சம்பந்தமாக FICCIன் பொழுதுபோக்குப் பிரிவு உறுப்பினர்களை கலந்து கொள்ள வேண்டாம் என ஏற்கனவே கேட்டுக்கொண்டதாகவும், தானும் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஏதோ ஒரு ‘சிறிய குழுவினர்’ தன் வீட்டின் முன்வந்து மனுக் கொடுத்ததால் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் இது ஏற்கனவே தான் எடுத்திருந்த முடிவு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அவர் தனது FICCIன் பொழுதுபோக்குப் பிரிவின் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை. மாறாக FICCI ன் சிறு பிரிவுகள் சொல்வதால் இந்தியாவும்-இலங்கையும் இணைந்து நடத்தும் இந்த விழாவை FICCI நடத்தாமல் இருக்கப் போவதில்லை என்று விளக்கியிருந்தார். என்னே அவர் FICCI பற்று.. சாரி.. தமிழ்ப் பற்று என்று வியந்தேன். இந்தப் பதவியை அவர் துறப்பது அவருக்குப் பெரிய காரியமல்ல; பெரிய நஷ்டமுமல்ல. அப்படிப் பதவியை துறந்து ஒரு அறிக்கை விட்டிருந்தால் அது FICCI மட்டுமல்ல பக்சேக்களுக்குக் கூட, கொஞ்சம் அதிர்ச்சியளித்திருக்கும். கமல் என்கிற தமிழனின் பெருமையை உலகத் தமிழர்கள் நன்றியோடு பேசியிருப்பார்கள். அளிக்கப்பட்ட ஆஸ்கார் விருதினை வாங்காமல் செவ்விந்தியர்களின் மீதான ஒடுக்குமுறைகள் ஒழிய வேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை விடுத்த மார்லன் பிராண்டோவா அவர். ‘உலக நாயகனாயிற்றே’!.

இந்தப் பக்கம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு ‘அரட்டை அரங்கத்தை’ ஸ்கிப் செய்ய வேண்டியிருந்ததால் சென்னைத் தமிழர்களால் அந்தக் கூட்டத்திற்கு வரமுடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பதையும் யோசிப்போம். சரி விட்டுத் தள்ளுங்கள் சாதாரணத் தமிழர்கள். யோசிப்பதில் குறைபாடு உள்ளவர்கள். சரி அய்யா ! நன்கு யோசிக்கும் திறன் கொண்ட நெடுமாறன் அய்யா, வை.கோ, சீமான் மற்றும் இன்னும் மார்க்ஸ், திருமா போன்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ?

இங்கே தான் தமிழனின் ஒற்றுமையில்லாத கேணத்தனம் வெளிப்படுகிறது. ‘நான்கு எருதுகள் ஒரு சிங்கம்’ கதையை இவர்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் ஏறாது போலிருக்கிறது. ஏற்கனவே சிங்களவர்கள் இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து நாறடித்துக் கொண்டிருப்பது நமக்குத் தெரியும். நெடுமாறன், வை.கோ. போன்றவர்கள் இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். மே 17 இயக்கத்தின் அன்றைய போராட்டத்தில் நெடுமாறன், வைகோ இன்னும் மற்றவர்களின் ஆதரவாளர்கள் வந்திருந்தால் இன்னும் கூட்டம் கூடியிருக்கும். கமலே நேரடியாக வந்து மனுவை வாங்கியிருப்பார். ஒருவேளை பதவியை ராஜினாமாவும் செய்திருப்பார். நெடுமாறன், வைகோ, தா. பாண்டியன், இடது சாரிகள் போன்றவர்கள் நேரடியாக பங்கு பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆதரித்துப் பேசவேண்டியது கூட இல்லை. ஆனால் இது போல சிங்கள இனவெறிக்கு எதிராக போராடும் சிறு குழுக்கள் தங்களுடன் வந்து நின்றால் தான் பார்ப்போம் என்று கண்டுக்காமல் இருப்பது தவறானதாகும்.

இதேபோல முத்துக் குமரனின் நினைவு நாள்ப் பொதுக்கூட்டத்தில் வைகோவும், நெடுமாறனும் தவிர மற்றவர்களைக் காணவில்லை. திருமாவும், ராமதாஸும் துரோகிகள் கூடாரத்தில் இருப்பதால் கப்சிப். தா.பாண்டியனைக் காணவில்லை. ஆனாலும் வைகோ நிதானமாக துரோகிகளை நேருக்கு நேர் திட்டாமல் மறைமுகமாகச் சாடினார். எல்லோரும் ஒரே விஷயத்துக்காகப் போராடுபவர்கள். போராடும் விஷயங்களில் மாற்றுக் கருத்துகள் இருப்பது குற்றமல்ல. அதற்காக ஒரு இயக்கத்தினரின் போராட்டத்தை மறைமுகமாகவேனும் ஆதரிக்காமல் இருப்பது தமிழர்களின் ஒற்றுமையின்மையை உண்மை தான் என்று நிரூபிப்பது போலாகும். வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் கண்டுக்காமல் இருப்பது போல் இருந்தாலும் நெடுமாறனின் 'தென்செய்தி' மற்றும் வைகோவின் 'சங்கொலியில்' மே 17 சம்பந்தமான செய்திகளை வெளியிட்டிருக்க வேண்டும். யாரும் யாரிடமும் கேட்டுச் செய்யவேண்டியதல்ல இந்த உதவி. ஹிண்டுவைத் தவிர தமிழ்த் தொலைக் காட்சிகளில் திருமாவின் தமிழன் தொலைக் காட்சியில் மட்டுமே லேசாக இதைக் காட்டினார்கள். திருமா தமிழருக்குச் செய்த துரோகங்களின் முன்பு இது சிறிய விஷயம். என்றாலும் பரவாயில்லை. இது தான் ஒற்றுமை உணர்வு. அரசியல் எண்ணத்தில் பிளவுபட்டிருக்கலாம். எதிரியாகக் கூட மாறியிருக்கலாம். தவறல்ல. ஆனால் அதே லட்சியத்துக்காக போராடும் சக தோழனை, அவன் கேட்காவிட்டாலும் அவனை ஆதரிக்கவேண்டும் என்பது தானே இன உணர்வு.

தமிழ்த் தலைவர்கள் சிந்திப்பார்களா ?

Wednesday, May 5, 2010

மே 17ன் சவக்குழிகள்.

மே 17ன் சவக்குழிகள்

16 மே 2009.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே விடுதலைப் புலிகளுடனான போரில் சிங்கள அரசு வெற்றியடைந்ததாக அறிவிக்கிறார். கொழும்புவிலும் மற்ற சிங்களப் பகுதிகளிலும் மக்கள் வெடிவெடித்து சந்தோஷமாகக் கொண்டாடுகின்றனர்.
17 மே 2009.
விடுதலைப் புலிகள் போரில் தங்களது தோல்வியை அறிவிக்கின்றனர். பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மன் போன்றோர் பற்றி தகவல்கள் இல்லை.
18 மே 2009.
நந்திக் கடல் பகுதியில் பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக காண்பிக்கப்படுகிறது. மே 17ம் தேதி நடந்த சண்டையில் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கருணா போன்றவர்கள் சடலத்தைப் பார்த்து உறுதிப் படுத்துகிறார்கள். வினோதமாக துப்பாக்கி அல்லது குண்டுக் காயங்கள் இல்லாமல் நடு நெற்றியில் கோடரியால் பிளக்கப்பட்டு இறந்திருக்கிறார் பிரபாகரன். அவர் எவ்வாறு இறந்தார் / கொல்லப்பட்டார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.

13 மே 2009.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ‘குடிமக்களின் மீது நடத்தப்படும் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களை நிறுத்தும்படி” அறைகூவல் விடுக்கிறார்.
29 ஏப்ரல் 2009.
சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து கைது செய்யப்பட்ட விடுதலைப்புலித் தலைவர்களான தயா மாஸ்டரும், ஜார்ஜூம், புலிகள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்த்ததாகவும், அவர்களது வலையத்திலிருந்து தப்ப முயன்றவரகளைச் சுட்டதாகவும் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள்.
27 ஏப்ரல் 2009.
இலங்கையில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் ஆரம்பித்து, மதியம் 12 மணிக்குள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வந்து இலங்கைத் தமிழர் வாழ்வை இரவு 10 மணிக்குள் தான் புணரமைத்து விடுவதாகக் கொடுத்த வாக்குறுதியின் பேரில் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
3 பிப்ரவரி 2009.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நார்வே போன்ற நாடுகள் கூட்டாகச் சேர்ந்து விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும்படி ‘வேண்டுகோள்’ விடுத்தன.
2 ஜனவரி 2008.
இலங்கை அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி விடுதலைப் புலிகளுடனான நான்காம் ஈழப் போரை ஆரம்பித்தது.
ஜனவரி 2006 – டிசம்பர் 2008.
இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் ‘அடையாளந்தெரியாத’ பதினொரு கப்பல்கள் அவை கொண்டு வந்திருந்த ஆயுதங்களுடன் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில் கடலில் மூழ்கடிக்கப்படுகின்றன. சர்வதேச எல்லைப் பகுதியில் அனுமதியின்றி வந்தது முதற்கொண்டு பல்வேறு காரணங்கள் காட்டப்பட்டு அமெரிக்க கடற்படை, இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படையினர் இந்த மூழ்கடிப்பைச் செய்தனர். இது விடுதலைப் புலிகளுக்கு வந்த ஆயுதமா என்பது ஒரு விடை தெரிந்த கேள்வி. இது சீனாவிலிருந்து வடகொரியா வழியாக புலிகளுக்காக அனுப்பப்பட்டதா என்பது விடை புரியாத கேள்வி.

மேற்சொல்லப்பட்ட காலக் குறிப்பு ஒரு பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'பயங்கரவாதி' திரைப்படத்தின் நிகழ்வுகளின் வரிசைக்கிரமமான குறிப்புகளாகும். இத்திரைப்படம் தமிழ்நாட்டில் ஆறுகோடித் தமிழர்கள் முன்வரிசையில் அமர்ந்து கைதட்டி ரசிக்க உலகின் 500 கோடிப் பேர் பார்த்து மகிழ்ந்த படம். இப்படத்தில் நிஜமாகவே 37 ஆயிரம் பேர் இறந்து போனார்கள். பல்லாயிரம் பேர் வன்புணரப்பட்டார்கள். பல்லாயிரம் பேர் காணாமல் போனார்கள். மக்களின் ரசனையை ஊக்குவிக்க பான் கி மூன், பராக் ஒபாமா, நம்பியார், பிரணாப் முகர்ஜி, எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன் (மலையாள நடிகர்கள்), சோனியா, மன்மோகன் சிங், தமிழினத் தலைவர் டாக்டர். கலைஞர் கருணாநிதி போன்ற பல நட்சத்திரங்கள் வந்து மக்களின் ரசனை தொய்வின்றி செல்லும்படி பார்த்துக் கொண்டனர்.

வரலாற்றின் கோர நிகழ்வுகளில் ஒன்றான இறுதி வன்னிப் போர் நடந்து ஓராண்டாகியும் வரலாறு எனக்கென்ன என்று ‘தேமே’வென போய்க்கொண்டிருக்கிறது. வரலாறு ஒரு குருட்டுப் பைத்தியம். அது எங்கு போகும், என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. வரலாற்றை நாம் படிப்பது ஒரு பிண ஆராய்ச்சி (Postmortem) போன்றதே. நாம் பிணத்தை உயிர்ப்பிக்க இயலாது. ஆனால் எதிர்காலத்தைப் பற்றி புரிந்துகொள்ள கொஞ்சநஞ்சம் இவ்வாராய்ச்சி உதவி செய்கிறது. இங்கே கொஞ்சம் பிண ஆராய்ச்சி செய்வோம்.

உலகில் மார்க்சியம் வீழ்ந்து பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் ‘விடுதலை இயக்கங்கள்’ எல்லாம் ‘பயங்கரவாத இயக்கங்களாக’ ஆக்கப்பட்ட தன்மை நிகழ்ந்திருக்கிறது. இப்போதைய காலத்தில் விடுதலை இயக்கம் என்ற ஒன்று இருப்பது சாத்தியமற்றது. அப்படி இயக்கம் இருந்தால் அது போலியாக காந்திய வழியில் கொடிபிடித்து பார்லிமெண்ட்டின் வாசலில் உண்ணாவிரதம் வரை இருக்க ‘அனுமதி’ எப்போதும் இருக்கிறது. ஏற்கனவே இவ்வியக்கத்துக்குள் ஆயிரம் பிரிவுகள் இருக்கும். எனவே எவ்வளவு தீவிரமான போராட்டமும் 15 நாட்களைத் தாண்டுவது கடினம் (அவரவர் வேலையை விட்டுவிட்டு 15 நாட்கள் எப்படி தொடர்ந்து வந்து கொடிபிடித்து உட்காருவதாம் ?). உதாரணத்திற்கு சமீபத்தில் இடதுசாரிகள் தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்திய விலைவாசி உயர்வுக்கு எதிரான பந்த்தை பார்த்துக்கொள்ளுங்கள். இந்த பந்த்தின் விளைவாக எப்படி விலைவாசி சரிபாதியாகக் குறைந்தது என்பது நமக்குத் தெரியும். இதில் மேற்கொண்டு எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து என்ன செய்யப் போகிறார்கள் என்று நாடே 'ஆர்வமாய்' காத்திருக்க, நடுவில் டெலிபோனை ஒட்டுக்கேட்ட குழப்பம், லலித் மோடியின் நாலாயிரம் கோடி என்று வந்து எல்லோர் கவனமும் திசை திரும்பி விட்டது.

பிரபாகரன் செய்த தவறால் இன்று தமிழரின் சுயநிர்ணய உரிமை கேள்விக்குள்ளாகிப் போனது என்று புலம்புவர்கள் மறக்காமல் சேர்த்துச் சொல்வது ‘இனி தீவிரவாதம் சாத்தியமில்லை’ என்பதும். ஆம் சாத்தியமில்லை. ஏனென்றால் பிரபாகரன் போல் ஒரு மன உறுதிமிக்க, பிடிவாதமுள்ள, ஈவிரக்கமற்ற தலைமை இனித் தோன்றுவது கடினம். சாத்தியமும் இல்லை. டி.வி., சினிமா, கல்வியறிவு, கல்வியறிவு தந்த சுயநல வெளிச்சம், தனிமனிதச் சுதந்திரங்கள், இன்பங்கள் என்று எல்லோரும் தமக்குள் தாமே புணர்ந்து கொள்ளும் மனிதர்களாக மாறிய பின் ‘பேச்சுவார்த்தை’ யில் பைசா கோபுரத்தையே நிமிர்த்த வைக்கும் சாத்தியப்பாடுகளே அதிகம் யோசிக்கப்படும். இந்த யோசனைகளில் ஆயிரத்தில் ஒன்று செயல்படுத்தப்படும். அந்த ஒன்றும் எளிதாக பேச்சில் மயக்கப்படும். இன்னும் ஆழமாகப் பார்த்தால் யாரை எதிர்த்து அவ்விஷயம் பேசப்படுகிறதோ, அது அவராலேயே உண்டாக்கப்பட்டதாய் இரட்டை வேடம் கொண்டிருக்கும். ஆனால் புரட்சி பேச இயலாத, கல்வியறிவில்லாத ஆப்கானிஸ்தானில் 15 வயது பையன் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறுவான். புலம் பெயர்ந்த, படித்த, வாழும் வசதி படைத்த, தமிழர்கள் நாடு கடந்த தமிழீழ அரசை கட்டமைப்பார்கள். முதலாளித்துவத்தை எதிர்க்க முதலாளிகளிடமே (முக்கியமாக அமெரிக்காவிடம்) போய் அண்டி நிற்பார்கள். இதை என்னவென்று நினைப்பது ?

பின் என்ன மார்க்ஸிஸ்ட்டுகளிடம் போய் நிற்கவா முடியும்? அவர்கள் மாவோயிஸ்டுகள் முதல் புலிகள் வரை எல்லாரையும் இடது கையால் கழுவித் தள்ளுவார்கள். ‘இடது’சாரிகள் இல்லையா. முதலாளித்துவம் தனக்கு பல நிலைகளிலும் இயங்கு தளங்கள் வைத்திருக்கிறது. ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் வைக்கப்பட்ட பொம்மை அரசுகள் முதல், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்கிற மனிதநேய அமைப்பு வரையிலான பல்வேறு விதமான அவதாரங்களை வைத்திருக்கிறது. இடதுசாரிகளுக்கு ஒரே ஒரு உருவம் தான். தொழிலாளியாகவும், இடதுசாரியாகவும் இருந்தால் மட்டுமே அவர் 'சுத்த' இடதுசாரியாகக் கொள்ளப்படுவார். வேறெந்த உருவத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழ்த் தேசியம் பேசி ஏகாதிபத்தியத்தை எதிர்த்தாலோ, விவசாயிகளுக்கு நிலம் கொடுக்க ரன்பீர் சேனாக்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தாலோ அவர் இடதுசாரிகளைப் பொறுத்தவரையும் ‘பயங்கரவாதியே’. தமிழ்நாட்டுத் தமிழன் முத்துக்குமார் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக சாவதைக் காணச் சகிக்காமல் நம் மடத்தமிழர்களின் சொரணையைத் தட்டியெழுப்ப தீக்குளித்தான். அதற்கு ஒரு அனுதாப அறிக்கை கூட விடவில்லை நம் தமிழ்நாட்டு இடதுசாரித் தோழர்கள். முத்துக்குமார் அவர்களுக்கு ஏனோ எதிரியாகிப் போனான். என் நெருங்கிய நண்பர் தீவிர இடதுசாரித் தொழிற்சங்கவாதி. அவரிடம் எவ்வளவோ முறை இதுபற்றிக் கேட்டுப் பார்த்தும், அவரின் ஒரே பதில் ‘முத்துக்குமாரின் போராட்ட முறை இடதுசாரிகளுக்கு உடன்பாடானது அல்ல’. சேகுவாராவின் போராட்ட முறை, ஸ்டாலினின் செயல் முறை, பகத்சிங்கின் வீரம், வாஞ்சி நாதனின் தியாகம் எல்லாம் இடதுசாரிகளுக்கு உடன்பாடாய் இருக்கும் போது முத்துக்குமார் மட்டும் எப்படி உடன்பாடில்லை ? ஒரு வேளை அவர்களையெல்லாம் 50 ஆண்டுகள் கழித்து அங்கீகரித்தது போல் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தவே 50 ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறது.

இனி, என்ன நடக்கும்? இலங்கையில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தங்கள் வலைகளை விரித்துள்ளன. சீனா சிங்களர்களின் நண்பனாகவும், அமெரிக்கா அதில் குளறுபடி செய்ய பொன்சேகாவை மட்டும் தனது நண்பனாகவும், இந்தியா சிங்களர்கள் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் அவர்களின் நண்பனாகவும் அதே சமயம் தமிழர்களின் எதிரியாகவும் அங்கே தற்போது செயல்படுகின்றன. 2006 ஆண்டில் இந்தியாவுடன் இலங்கைக்கு சம்பூரில் அனல்மின் நிலையம் கட்டித்தருவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திட்ட கையோடு சிங்கள அரசு சம்பூரில் வாழ்ந்த தமிழர்களை குண்டுபோட்டு அழித்து விரட்டியடித்தது. அவ்விடத்தில் இந்திய முதலாளிகள் அனல்மின் நிலையம் கட்டி வருகிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் தங்களது இருப்பிடம், அடையாளங்கள், வாழ்க்கை அனைத்தையும் தொலைத்த சிறுபான்மையினமாகச் சிதறுண்டு போவார்கள். யாழ்ப்பாணம் கூட தன் பெயரை சிங்களத்தில் மாற்றிக் கொண்டுள்ள நிலைமை இப்போதே வந்திருக்கிறது. இனி வரும் நாட்களில் தமிழர் பகுதி என்ற ஒன்று பெயருக்குக்கூட இருக்குமா என்பது கேள்விக்குறியாகும். ஈழத்தமிழர்கள் சிங்கக் கூட்டங்களுக்கு மத்தியில் விடப்பட்ட வெள்ளாடுகள் போல் சுயம் இழந்து சிங்களர்கள் நடுவே பயந்து பயந்து வாழும் நிலை ஏற்படும். 20 ஆண்டுகளில் இலங்கை முழுக்க சிங்கள அரசாக விளங்கித் திகழும். அப்போது அது இந்தியாவுடனான தனது 2000 ஆண்டுகாலப் பகையுணர்வை வெளிப்படையாகக் காட்டும். அன்று இந்திய முதலாளிகள் இலங்கையில் அதுவரை தாங்கள் செய்த முதலீடுகளில் பெரும் நஷ்டத்தை அடைவார்கள். நைந்து போன தமிழினத்தை அப்போது அவர்கள் தங்கள் அரசியல் பண்ணுவதற்காகத் தேடுவார்கள். ஆனால் தமிழர்களை ஒன்றாகத் திரட்ட முடியாத நிலையில் அவர்களின் எண்ணிக்கை அன்று அருகிப் போயிருக்கும். இவை அனைத்தையும் உட்கார்ந்து சாட்சியாக டி.வி.யில் வரும் மெட்டி ஒலி சீரியலைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருப்பார்கள் தமிழ்நாட்டில் இருக்கும் நம் தமிழர்கள். தமிழர்களின் ஒற்றுமை உணர்வு லட்சணம் சரித்திரம் படைத்ததல்லவா.

சரி. என்னதான் செய்வது ? தமிழர்களால் இனி ஒன்றும் செய்ய இயலாது என்பது தான் நிஜம். புலம் பெயர்த் தமிழர்கள் தற்போது பெயரளவில் மட்டுமே தமிழர்கள். இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின் வரும் சந்ததிகள் அமெரிக்க, கனடிய, ஆஸ்திரேலிய உச்சரிப்புடன் நான் இலங்கையில் பிறந்தேன் என்று வேண்டுமானால் சொல்லக் கூடும். அதைத் தாண்டி அவர்களுக்கும் தமிழீழத்துக்குமான தொடர்பு அறுபடப் போவது நிச்சயம். ஒருவேளை... ஒருவேளை, புலம் பெயர்த் தமிழர்கள் பிடிவாதமாய் தங்கள் தமிழ் அடையாளங்களை தொலைக்காமல் வைத்திருக்க வலிந்து முயற்சி எடுத்தால், ஒருவேளை, இலங்கையில் சி்ங்கள அரசும், இந்திய அரசும் செய்யும் தமிழர் இன அடையாள அழிப்பு வேலைகளை எதிர்க்க உள்ளூரில் இருந்து யாராவது உறுதியுடன் நின்றால்(இது மீண்டும் ஒரு இனப்போராட்டமாகத்தான் வரும்), ஒருவேளை, அப்படி நிற்பவருக்கு தமிழர் கூட்டமைப்பு முதல் டக்ளஸ் வரை சண்டையில்லாமல் பெரும்பாலான தமிழர் அமைப்புகளும் உடன் நின்று ஆதரவு தந்தால், ஒருவேளை, இந்திய எல்லைப் பகுதி கன்னியாகுமரியோடு முடிந்துவிட்டது என்று கோடு போட்டு விட்டதால் வேறு நாடான இலங்கையில் வாழும் தமிழர்கள் ‘யாரோ எவரோ’ என்று தமிழ்நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களும் நினைக்காமல், ஐ.பி.எல் மேட்ச் இலங்கைப் போரைவிட முக்கியம் என்று நினைக்காமல் இருந்தால், ஒருவேளை..ஒருவேளை, ஈழத் தமிழர் மீண்டும் தளிர்த்தெழ வாய்ப்பு வரலாம்.

“வரலாறே எள்ளி நகையாடாதே. உனக்கும் எனக்கும் இருக்கும் போட்டியில் தமிழர்கள் என்னை ஜெயிக்கவைப்பார்கள் என்று நான் (இன்னும்)நம்புகிறேன். சிங்களர்கள் இப்போது ஜெயித்திருக்கிறார்கள்.. இனிமேல் தமிழர்கள் கதையை அவர்கள் சீக்கிரம் முடிப்பார்கள் என்று நீ கெக்கலிக்கிறாய். பார்க்கலாம். ஜெயிப்பது நீயா ? இல்லை நானா என்று?”

நாடற்றுப் போய் அனாதையாய் வாழும் நிலையை உணர்ந்ததுண்டா நீங்கள்... உணருங்கள்.. 20 லட்சம் பேருக்கு நிகழ்ந்தது ஒரு நாள் 6 கோடிப் பேருக்கும் நிகழாது என்று எந்த வரலாறும் பத்திரம் எழுதிக் கொடுக்கவில்லை... படியுங்கள் பின் வரும் வலைப் பூவை..
http://tamilnathy.blogspot.com/2010/05/blog-post_9826.html

ஒரு நாள்..
நாங்கள் உயிர் வாழாதிருந்தாலும்..
நீங்கள் உயிர் வாழப்போவதில்லை..
உத்திரவாதம் இது.

இசங்களின் எச்சங்களும்...
அரசுகளின் தொழில்நுட்ப கூச்சல்களும்..
கைக்கூலிக் கொலைகார வீரர்களும்..
அம்பானி, கும்பானிகளும்..
ஐபிஎல் கோடிகளும் தான் யதார்த்தம்.
பக்சேவோ பரந்தாமன்..
மன்மோகனோ, கலைஞனோ எட்டப்பன்.
இனி மார்க்ஸூம், எங்கெல்ஸூம் கூட
வழிசொல்ல வழியில்லை.. பாவம்
அவர்களே தொலைக்கப்பட்டுவிட்டனர்..
பணம், பலம்..பலமே வாழ்வு..
இனி பார்க்கலாம் நீயா..நானா.

எனக்கு உன் இனத்தின் மீது வெறுப்பில்லை தான்.
அதனாலே தான் உன்னைக் கொல்லும் போது..
நான் சிரிக்கப் போவதுமில்லை..
அழப்போவதுமில்லை.