Friday, August 28, 2009

சமூகமும் ஓரினச்சேர்க்கையும்...

http://uraiyurkaran.blogspot.com/2009/07/blog-post.html
என்கிற வலைப்பதிவின் கட்டுரையைப் படித்ததும் எனக்குத் தோன்றியது இது..

incest ஒரு காலத்தில் இருந்திருந்து பிற்காலத்தில் கைவிடப்பட்டது. தற்போதைய ஆணாதிக்க சமுதாயம் தோன்றிய பின் incest முற்றிலும் மறைந்துபோனது. ஆனால் இன்னும் சரோஜாதேவி கதைகளில் இவற்றைப் பார்க்கலாம். சமூகத்தின் வளர்ச்சியில் தற்போது தாயின் நிலை வேறாக உள்ளது. Freud சொல்லியது போல தாயின் மீதான குழந்தையின் 'காதல்' அமுக்கப்பட்டு மனதில் அதனது identity உருவாவதற்கு அடிப்படையான காரணமாக உள்ளது. தாயின் மீதான பெண்குழந்தை கொள்ளும் காதல் ஒருவகை ஓரினக் கவர்ச்சியாகும். இப்போது incest சமூகத்தில் இல்லை என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் அது உள்ளவர்கள் யாரும் வெளியில் வந்து பகிரங்கமாக எங்களை அங்கீகரியுங்கள் என்று ‘சமூக’ அடையாளத்துக்காக போராடுவதில்லை. அதற்கான தேவையும், அவசியமுமில்லை.

தற்போது ஒரினச் சேர்க்கையின் நிலையும் அப்படித்தான். ஓரினச் சேர்க்கை எல்லாக் காலங்களிலும் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் தண்டனைக்குரியதாக அமுக்கப்பட்டது. ஆனால் எல்லா சமூகங்களிலும் மறைமுகமாகப் படர்ந்திருந்துள்ளது. தற்போதைய சமூகத்தில் ஓரினச் சேர்க்கை சமூகத்தின் போக்கை, கலாச்சார ரீதியாக பெரிதும் பாதித்துவிடாது என்ற புரிதல் அறிவியலாளர்களால் முன்னிறுத்தப்படுகிறது.

இப்போது incest, homosexuality இவ்விரண்டு நிலைகளின் சமூக நிலைகளையும் கருதுவோம். Incest க்கு நேரடியான சமூக அங்கீகாரம் கிடையாது. ஆனால் அது தாயின் மீதான பாசப் பிணைப்பாக மறுவியிருக்கிறது. அதற்கான சமூக அங்கீகாரம் அளவுகடந்தது. தந்தையின் மீது முரட்டுத்தனமான பாசம் கொண்ட பெண் குழந்தைகளையும் பார்க்கிறோம். தந்தை-மகள் incest பெரும்பாலும் தந்தையின் வன்முறையாகவே வெளிப்படுகிறது. இவை சமூகத்தில் நிலவும் விதிவிலக்குகள். அதுபோல ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் சமூகத்தின் அடிப்படைத் தேவையான, இனப்பெருக்கத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. சமூகத்தில் அது மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெண்ணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவு தெரிந்தும் தெரியாததுபோல இருப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தான் ஆண்களுக்கிடையேயான பாலியல் உறவும்.

சட்டத்தில் தற்போது ஓரினச்சேர்க்கையை ‘தண்டனைக்குள்ளாக்கும் குற்றமல்ல’ என்று சொன்னது வரவேற்கத்தக்கது. அது சமூகத்தின் யதார்த்தத்தை சட்டம் உணர்ந்துள்ளதைக் குறிக்கிறது. சட்டம் தனிமனிதர்களின் படுக்கையறைக்குள் எட்டிப்பார்க்கும் வகையான இத்தகைய சட்டங்களை கைவிடுதல் நல்லதுதான். குறிப்பிட்ட அளவிற்குமேல் சட்டம் தனிமனித விருப்பங்களை கட்டுப்படுத்தல் இயலாது. உதாரணமாக சட்டத்தில் 'குறி சுவைத்தல்' அனுமதிக்கப்பட்டதல்ல. ஆனால் இச்செயல் இன்பம் துய்ப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது. இது சமூகம் தரும் மறைமுக அங்கீகாரம் ஆகும்.

சமூகத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கிற்கு ஓரினச்சேர்க்கை பங்களிப்பு செய்வதில்லை என்றாலும் அதன் இருப்பை சமூகம் மறைமுகமாவது அங்கீகாரம் செய்கிறது.
ஆனாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் ‘தனிமனிதரீதியான’ கோட்பாட்டு சிந்தனை சமூகத்தின் எல்லா கூறுகளையும் பிய்த்து எறிய விரும்பும் போக்கைக் கொண்டுள்ளது. அது தனிமனித விடுதலை என்கிற போக்கில் சமூகமாய் வாழ்வதில் செய்யப்பட்டுள்ள சமரசங்களை உடைக்கிறது. ஆணகளையும், பெண்களையும் சமூக அளவில் தனித்தனியாக்க விரும்புகிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களின் தனிமனித விருப்பங்களை சத்தமாக வெளியிடச் செய்வதன் மூலம் இது சமூகத்தின் ‘குடும்பம்’ என்ற அமைப்பின் மேல் இன்னொரு தாக்குதல் தொடுக்கிறது. குடும்பம் என்ற அமைப்பு கட்டமைக்கப்பட்ட ஒன்று. அந்த ஒரு காரணத்துக்காகவே அது அழிக்கப்படவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அப்படிப் பார்த்தால் ஓரினச் சேர்க்கையின் ‘இயற்கைத்’ தன்மையும் கட்டமைக்கப்படுவதுதான். எல்லா ஓரினச் சேர்க்கையாளர்களும் இயற்கை உந்துதலால் ஓரினச்சேர்க்கையாளர்களானவர்களல்ல. சிறைகளில் நடைபெறும் ஓரினச்சேர்க்கை பாலியல் வன்முறைகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். இவ்வகையில் பார்க்கும் போது ஓரினச்சேர்க்கை எதிர்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஒரு மனப்போக்கை முன்னிறுத்துகிறது. இது ஓரினச்சேர்க்கையாளர் X எதிர்பால் சேர்க்கையாளர் என்ற இரு எதிர்போக்குகளாக உருவாக்கம் பெறுவதில் போய் முடிகிறது. இவ்வுருவாக்கம் இவற்றுக்கான அரசியலை சமூகத்தளத்தில் உண்டாக்குகிறது. இவ்விரண்டும் ஒன்றையொன்று மறுதலிப்பவைகளாக, எதிரிகளாக அடையாளம் காண்கின்றன. இது அரசியலாக்குவதின் ஒரு விளைவாகும். இந்த அரசியலில் இவ்விரண்டுக்குமிடையேயான சமரசப் பார்வைகளை முன்வைக்காமல் அடித்துக் கொண்டு சண்டையிடும் மனப்பான்மையை இரு பக்க ஆதரவாள அறிவுஜீவிகளும் போட்டிபோட்டுக் கொண்டு முன்வைப்பது தான் பிரச்சனை.

ஒரு ஆண் ஒரு பெண்ணை அடையாளம் காண்பதும், பெண் ஒரு ஆணை அடையாளம் காண்பதும் மிக வெளிப்படையான குறீயீடுகளான ஆடை போன்ற எளிய விஷயங்களாக உள்ளது. இதுபோல ஒரினச் சேர்க்கையாளர்களுக்கும் வெளிப்படையான குறியீடுகள் தோன்றலாம். அவற்றின் மூலம் ஒரு வகைச் சேர்க்கையாளர் இன்னொருவரின் சுயத் தேர்வில் குறுக்கிடாத தன்மை நிலவும் சூழல் ஏற்படலாம். அவ்வாறு குறுக்கீடற்ற நிலைமைகள் தோன்றும்போது இவ்விதமான ஓரினச்சேர்க்கைக்கு எதிரான கடுமையான மனநிலை இல்லாமல் போகும். மேற்கத்திய முறையிலான பிரித்தாளும் 'தனிமனித சுதந்திரம்' என்ற பார்வையை நான் அப்படியே ஆரோக்கியமானதாகக் கருதவில்லை. மனிதன் சமூகமாக வாழ்கிறோம் என்ற பிரக்ஞையுடன் வாழ, சிந்திக்க வேண்டும். தனிமனிதனுக்கும், சமூகத்திற்குமான தொடர்பு நெகிழ்வுத்தன்மையோடு இருக்கவேண்டும்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா முன்பு ஒருமுறை அவரது கோணல் பக்கங்களில் எழுதியதாக ஞாபகம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்திலும் அதைச் சொல்லியிருந்தார். அந்நிகழ்ச்சி இதுதான்: அவரும் அவர் நண்பரும் (இவர் நண்பருடன் பயணித்தாரா என்பது சரியாக ஞாபகமில்லை) ஐரோப்பிய நாடொன்றில் சுற்றுப்பயணம் செய்தபோது காரில் போய்க்கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு காட்சி. சாலையோரத்தில் (பார்க்கில்?) வெளிநாட்டுத் தம்பதியினர் இரண்டுபேர் கொஞ்சிக் கொண்டிருந்திருக்கின்றனர். கொஞ்சல் முற்றிப் போய் கலவிக் கட்டத்திற்குப் போக ஆரம்பித்துவிட.. காரில் போன நண்பர் வாகனத்தை நிறுத்தி அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டார். கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு அவர் காரைக் கிளப்பிக்கொண்டு போக பாதிவழியில் போலீசு துரத்திப் பிடித்தது அவரை. அந்த வெளிநாட்டுத் தம்பதியினர் போலீசுக்கு "ஒருத்தன் எங்களை உத்துப் பார்க்குறான்" என்கிற ரீதியில் புகார் செய்ய போலீஸ் வந்து நண்பரைத் துரத்திப் பிடித்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியை அவர் குறிப்பிட்டு அங்கிருக்கும் பாலியல் சுதந்திரத்தையும், நாகரிகத்தையும்(?) நமது ஆசாமிகள் உற்றுப் பார்க்கும் செக்ஸ் வறட்சியையும்(?) ஒப்பிடுவார். இக்காட்சியை அவருடைய நண்பருக்குப் பதில் ஒரு ஐந்து வயதுக் குழந்தை பார்த்தால் என்ன ஆகும் ? ஐந்து வயதுக் குழந்தைக்கு உடலுறவு என்பது இயற்கையானது என்றாலும் மனரீதியாக பாதிப்பை உண்டாக்கவே செய்யும். அதனால் தான் 'எல்லாம் வளர்ந்த' மேலை நாடுகளில் கூட பொது இடங்களில் உடலுறவு கொள்வது மாதிரியான விஷயங்கள் தவறாகப் பார்க்கப்படுகின்றன. செக்ஸ் கல்வி என்ற விஷயத்திற்கு நான் எதிரி இல்லை. ஆனால் இந்தமாதிரி செக்ஸ் சுதந்திரங்கள் பற்றிப் பேசுவது, 'சமூகம் என்கிற கட்டமைப்பில் வாழ்கிறோம்' என்பதை மறந்துவிட்டு அல்லது சமூகம் என்பது ஒரு கட்டுமானம், அதை உடைக்கவே வேண்டும் என்கிற எண்ணங்களின் அடிப்படையில் எழும் வாதங்களாகும். நாம் வாழும் வாழ்க்கையில் சமூகம் உள்ளிட்ட நிறைய கட்டுமானங்கள் உள்ளன. அவற்றை 'சமூக அளவில்' நாம் அங்கீகரித்தே வாழ்கிறோம். தனிப்பட்ட மனித அளவில் நாம் அதை நிராகரிக்கலாம்; அதை சமூகம் ஒன்றும் சொல்வதில்லை. சமூகம் என்கிற போர்வையில் சில வலுக்கட்டாயமான, வன்முறையான விஷயங்கள் அதைக் கட்டமைக்கும் ஆதிக்க வர்க்கத்தால் திணிக்கப்படும்போது சமூகத்தை எதிர்த்து கிளர்ந்தெழுதல் என்பதும் நடைபெறும். நடைபெறுகிறது. இங்கு சமூகத்திற்கும், தனிமனித உரிமைக்குமான சமரசங்களும் இருபுறங்களிலும் நடைபெறல் வேண்டும் என்பது நான் வலியுறுத்த விரும்பிய விஷயமாகும். சமரசங்களும் சாத்தியமில்லாமல் போகும்போது தவிர்க்க இயலாமல் விலகல்கள் நிகழும். அப்போது அதை நாம் நினைத்தாலும் தடுத்து நிறுத்த இயலாது.

'எல்லாமே உடைதல் தான். உடைத்தல் தான் வாழ்க்கை' என்பது மட்டுமே இயங்கியல் அல்ல. ஒன்றையொன்று ஈர்த்தல், உள்வாங்குதல், முரண்படுதல், சமரசம் செய்தல், விலகிப்போதல், வெடித்தல் போன்ற எல்லாமும் நிகழ்வதுதான் சமூகம். மற்ற விஷயங்களைப் பார்க்காமல் உடைத்தல், வெடித்தல் இரண்டில் மட்டுமே விஷயங்களை கொண்டுபோய் நிறுத்துவது சரியான பார்வையாகாது. ஓரினச் சேர்க்கையாளர்களின் இயல்பான சமூக வாழ்க்கைக்கு சமூகத்தில் செய்யவேண்டிய விஷயங்களை விடுத்து அதன் அரசியலை எதிர்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிரானதாகத் தோன்றவைக்கும் அரசியல்கள் தவறாக நம் சமூகத்தை வழிநடத்தும்.

Saturday, August 8, 2009

தி மன்ஹட்டன் ப்ராஜக்ட்



மே 11, 1945. இலக்குக் கமிட்டி, விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹீமர்(RobertOppenheimer) தலைமையில் அமெரிக்காவில் லாஸ்அலோமோஸில் (Los Alomos)கூடுகிறது. தங்களது முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பால் உருவான அதிக ஆற்றலுள்ள ஒரு நவீன ஆயுதம் அது; அதன் ஆற்றல் அவர்களுக்கே இன்னும் தெரியாது. அதன் ஆற்றலை, அழிவுசக்தியை ஆய்வகத்தில் சோதிப்பது சாத்தியமில்லை. எனவே ஒரு சோதனைக் களம் வேண்டும். இலக்கு வேண்டும். அதைத் தீர்மானிக்கத் தான் இந்த இலக்குக் கமிட்டி கூடியிருக்கிறது.

அவ்வாயுதத்தின் அளவிடப்படாத வீரியத்தால், அதன் அழிவு சக்தி எவ்வளவு என்று சரியாக அவர்களுக்கே தெரியாத காரணத்தால், தாக்குதல் இலக்கை பின்வரும் அளவுக் காரணிகளைக் கொண்டு அந்த அறிவு சார்ந்த பெரும் விஞ்ஞானிகள் தீர்மானிக்கிறார்கள்.

 1. இலக்கு 3 சதுர மைல்களை விட பெரிதாயிருக்கவேண்டும்.       பரிசோதனையின் படி ஆயுதத்தின் வீரியம் 3 சதுர மைல்களையும் தாண்டும்.
 2. இலக்கில் ஏற்படும் அழிவு பெரிதாய், முழுமையாய் தெரிய குண்டு வீசப்படும் பகுதி மக்கள் செறிவானதாய் இருக்கவேண்டும். எனவே இலக்கு மக்கள் தொகை மிகுந்த நகரமாயிருந்தால் நல்லது.
 3. தாக்குதல் தீர்மானிக்கப்படும் நாள் வரை இலக்கு வேரெதுவும் தாக்குதல்களுக்கு உட்படாதிருக்கவேண்டும். இது அதன் அழிவுசக்தியை மட்டும் தனியாக தனித்து அளக்க உதவும்.

அவர்கள் நாள் முழுவதும் உட்கார்ந்து விவாதித்து நான்கு இலக்குகளை தேர்ந்தெடுத்தார்கள். அவை க்யோட்டோ, ஹிரோஷிமா, யோகஹாமா மற்றும் கோகுரா. இந்நகர இலக்குகளை தாக்குதல் தினம் வரை நேசப்படைகளின் சாதாரண வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களிலிருந்து 'பத்திரமாக' விலக்கி வைக்க உத்தரவிடப்பட்டது.

 ஜூலை 26 1945. அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், மற்றும் சில நேசநாடுகளின் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து ஜப்பானுக்கு சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர்களின் புதிய ஆயுதம் பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. ஜப்பான் சரணடைய மறுத்தது; பாவம் விவரம் புரியாமல்.

ஆகஸ்ட் 6 1945. விடியற்காலை 2 மணிக்கு டினியன்(Tinian) தீவு ராணுவ தளத்திலிருந்து கிளம்புகிறது ஒரு அமெரிக்கப் போர் விமானம்.

பால் திபெத் (Paul Tibbet) என்கிற அமெரிக்க கமாண்டர் விமானத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். கடல்படை காப்டன் வில்லியம் பார்சன்ஸ் கூடவே மாரீஸ் ஜாப்ஸன் என்கிற துணை கமாண்டெர். இருவரும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் செயது கொண்டிருக்கும் பணியின் கணத்தால் அமைதியாக இயங்குகின்றனர். சின்னப் பையன்(Little Boy) பக்கத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறான். இவோ ஜிமா தீவை அடைந்து அதை மேலிருந்து சுற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஜப்பானை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. காலை 8.00 மணியளவில் ஜப்பானின் ரேடார்கள் அத்துமீறி நுழைந்த அந்த அமெரிக்க விமானத்தை இனங்கண்டு கொண்டன. மூன்று விமானங்கள் தானே ஏதாவது உளவு பார்த்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

அப்படியே அவை தாக்கினாலும் பெரிய சேதம் ஒன்றும் நிகழ்ந்துவிடாது. போரில் ஏற்கனவே தோல்விமுகம் கொண்டிருந்த ஜப்பான் ராணுவம், எரிபொருள் மற்றும் விமானங்களை மிச்சம் பிடிக்க இதுபோன்ற சிறு தாக்குதல்களை எதிர்த்துத் தாக்கத் தீர்மானிக்கவில்லை. காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமாவை வட்டமடித்த விமானம் யுரேனியம்-235 ல் செய்யப்பட்ட வெறும் 60 கிலோ எடை கொண்ட, 10 அடியே உயரமுள்ள சின்னப்பையன் என்கிற அந்த அணுகுண்டை வானில் 9 கி.மீட்டர் உயரத்திலிருந்து கீழே விடுவித்தது.

புவிஈர்ப்பு விசையால் கீழிறங்கிய 'சின்னப் பையன்', சரியாக ஷிமா அறுவைசிகிச்சை மருத்துவமனையின் மேல் தரைக்கு மேலே 600 மீட்டர் உயரத்தில் வெடித்தது. அந்த அணுகுண்டு வெடித்ததும் 13 ஆயிரம் டன் டி.என்.டியை வெடித்ததற்கு இணையான மாபெரும் தொடர் வெடிப்பை அது உண்டாக்கியது. அந்த ஆற்றல் பக்கவாட்டில் பரவாமல் கீழ்நோக்கி பரவியதால் சுற்றியிருந்த 5 சதுர கி.மீ பரப்பளவில் இருந்த அனைத்தையும்; சாதாரண செடிமுதல் உறுதியான இரும்புத் தூண்கள் வரை அது உருக்கி கருக்கி, சாம்பலாக்கி அழித்தது. கூடவே மனித உயிர்களையும்..

குண்டு வெடித்த இடத்திலிருந்து 45000 அடி உயரத்திற்கு வானில் குடைக் காளான் வடிவில் கரும் புகை வானைச் சூழ்ந்தது. இந்த நிகழ்வை, கூட பறந்து வந்த விமானங்களிலொன்று பல்வேறு அளவீடுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது.

4000 டிகிரி வெப்பம்; சுற்றிலும் அனல்.வெடித்த இடத்தைச் சுற்றியிருந்த அனைவரும் அலறியடித்து ஓடினார்கள். ஆனால் ஒருவரை மற்றவருக்கு அடையாளம் தெரியவில்லை. ஏனென்றால் அனைவரின் முகங்களும், கைகால்களும், உடல்களும் வெப்பத்தில் கருகிப் போய், தோல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அனைவரும் சிறிது நேரத்தில் இறந்து போனார்கள். நகரத்தின் சுமார் 30% மக்கள், அதாவது எழுபதாயிரம் பேர் உடனே மரணமடைந்தார்கள். இன்னும் 30% பேர் சில வருடங்களில் சாவார்கள்.

டோக்கியோவிலிருந்து ஜப்பான் அதிகாரிகள் ஹிரோஷிமாவில் இருந்த ஒரு சிறிய ராணுவத் தளத்தைத் தொடர்பு கொள்ள முயன்று தகவில்லாமல் போகவே காரணம் அறிந்துகொள்ள ஒரு சிறிய விமானத்தில் ஒரு இளம் வீரரை அனுப்பினர். 3 மணிநேரம் விமானத்தில் பறந்து அந்த வீரர் ஹிரோஷிமாவுக்கு 100 கி.மீ தூரத்தில் வந்தபோது வானத்தில் தெரிந்தது காளான் புகைமண்டலம்.

ஆகஸ்ட் 7,8, 1945
. ஜப்பானிய அரசு செயலிழந்தது. ஒரு சின்ன விமானத்திலிருந்து வீசப்பட்ட ஒரேயொரு குண்டால் ஒரு நகரமே அழிந்தது என்ற அதிர்ச்சியிலிருந்து அவர்களால் எளிதில் விடுபட முடியவில்லை. சேதத்தின் அளவீட்டைக் கூட அவர்களால் சரியாக எடுக்க வழியில்லை. அவர்கள் அந்த ஆயுதம் பற்றி இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

ஆகஸ்ட் 9, 1945. அன்று காலை புறப்பட்ட மற்றொரு அமெரிக்க போர் விமானத்தில் 6 கிலோ எடையுள்ள, புளுட்டோனியம்-239 த்தால் ஆன, 'குண்டு மனிதன்'(Fat Man) இருந்தான். கோக்குராவை இலக்காகக் கொண்டு பயணித்த அவ்விமானம் கோக்குராவை காலையில் அடைந்தபோது, கோக்குரா மக்களின் அதிர்ஷ்டம், அங்கு வானில் ஒரே மேகமூட்டமாயிருந்தது. எனவே அக்குழு அங்கிருந்து துணை இலக்காக லிஸ்ட்டில் இருந்த 'நாஹாசாகி'யை நோக்கிப் பறந்தது.

அங்கும் மேகமூட்டமாயிருந்ததால் இலக்கு 'clear' ஆகவில்லை. ஆனால் அவர்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை. பொறுமையாக வானில் சுற்றியபடியே இருந்தனர். கொஞ்ச நேரத்தில் மேகம் சிறிது விலகி இலக்கு தெரிய ஆரம்பித்தது. சரியாக காலை 11.00 மணிக்கு நாஹாசாகியின் மேல் குண்டு மனிதன் குதித்தான். இது குதித்த வேகத்தில் 12 ஆயிரம் டன் எடையுள்ள டி.என்.டியை வெடிக்கச் செய்த விளைவு உண்டானது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த குண்டைப் போடுவதற்கு சற்று முன்னால் ஜப்பானின் அணு விஞ்ஞானிக்கு இக்குண்டின் தீமைகள் பற்றிய கடிதம் ஒன்றையும் இதே விமானத்திலிருந்து வீசி எறிந்திருக்கின்றனர் இந்தக் குண்டை எறிந்தவர்கள். அந்த எச்சரிக்கைக் கடிதம், எல்லாம் முடிந்து போய், செத்தவர்களுக்கு பால் வார்த்து திவசம் செய்து ஒரு மாதம் கழித்து கண்டெடுக்கப்பட்டு, அந்த விஞ்ஞானியிடம் 'பத்திரமாக' வழங்கப்பட்டது. நாஹாசாகியில் ஐம்பதாயிரம் பேர் குண்டு விழுந்த உடன் சிலமணி நேரங்களில் மாண்டுபோயினர்.

ஆகஸ்ட் 6, 2009
.இன்று. நாஹாசாகியில் குண்டு வெடிப்பில் மாண்டுபோனவர்களின் புதைக்கப்பட்ட எலும்புகளிலிருந்தும், பாதுகாக்கப்பட்ட உடற்பாகங்களிலிருந்தும் உட்கதிர்வீச்சு எனப்படும் ஆல்பா கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குண்டுவீச்சின் போது வெளியான புளூட்டோனியக் கதிர்வீச்சை அளவிலும் பண்பிலும் ஒத்துள்ளது என்கிற அதிர்ச்சியான தகவலும் வெளிப்படுகிறது. இவ்வளவு வருடங்களாக இந்த உட்கதிர்வீச்சு பற்றி விஞ்ஞானிகள் பெரிதாக எண்ணவில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்து 64 வருடங்கள் கழித்தும் கதிர்வீச்சு இவ்வாறு வெளிப்படுவதைக் கொண்டு நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன ?

ஒரு மாபெரும் அழிவைக் கூட அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்வது போல படிப்படியாக, குறிப்புக்கள் எடுத்து, புகைப்படங்கள் எடுத்து, அதன் கோரத்தை பதிந்து வைப்பது தான் இந்த கார்ப்பரேட் உலகில் அறிவியலின் வேலையாக இருக்கிறது. அதில் மனிதனும், மனிதாபிமானமும் இருப்பதில்லை. அணுவைப் பிளப்பது பற்றி மனிதன் கற்றுக்கொண்டது ஒரு கடலில் மிதக்கும் பனிப்பாறையைக் கண்டுபிடிப்பது போல் தான்; மேம்போக்கானது; அந்தப் பனிப்பாறை கடலின் அடியில், பெரும் மலையாக, மனிதகுலம் என்கிற டைட்டானிக் கப்பலையே கவிழ்க்கும் அளவிற்கு பெரிதாய்  இருக்கும் என்பதை நாம் இன்னும் உணரவில்லை.

அணு உலைக் கழிவுகளை கையாளுவதில் நாடுகள் காட்டும் அலட்சிய மனப்பான்மையைப் பார்த்தால் இது உங்களுக்குப் புரியும். சமீபத்தில் டெல்லி அருகே பயிற்சியில் ஈடுபட்ட ஒரு போர் விமானத்திலிருந்து தவறுதலாக பாய்ந்த குண்டு ஒன்று கிராமம் ஒன்றில் வயற்காட்டில் விழுந்து ஒரு ஏக்கர் நிலம் கரிந்து போனது. நல்லவேளையாக மனிதர்கள் யாரும் அருகிலில்லை.

இதுவே ஒரு அணு ஏவுகணையாக இருந்திருந்தால்...

Thursday, August 6, 2009

உத்தபுரம் – தடைச் சுவற்றில் ஒரு சிறிய காற்று இடைவெளி

மீள் பதிப்பு : 28 அக்டோபர் 2009.
5 ஆகஸ்ட் 2009.
உத்தபுரத்தில் 1989 ல் மேல் சாதியினரான பிள்ளைமார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது, தங்கள் கோயிலில் வழிபாடு செய்யக்கூடாது என 600 மீட்டர் நீளச் சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர். தீண்டாமையின் கோரப்பிடியில் அடிக்கடித் தாக்கப்பட்ட தலித்களிடம் ஒரு மிரட்டல் ஒப்பந்தம் செய்து இதுபோன்ற ஒரு சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர் ஆதிக்க சாதியினர். தனி பள்ளிக்கூடம், தனி பாதை, எல்லாம் தனி. தலித் மக்கள் பிள்ளைமாரிடமிருந்து தள்ளி நிற்க, விலகி வாழ கற்றுக்கொண்டிருந்தனர். அரசு இயந்திரமும் இதற்கு வழி செய்வது போல தனிப் பள்ளிக் கூடம், தனி டீக்கடை என்று ‘எல்லாம் நல்லாத் தான் போய்கிட்டிருந்தது..’ 18 வருஷங்களாக, சி.பி.எம்காரர்கள் 2008 ல் தீண்டாமை பற்றி சர்வே எடுக்கும்வரை. அப்புறம் பிடித்தது தலித்துகளுக்குச் சனி. சி.பி.எம் இதை ஊடகங்களில் கொண்டு வர முயற்சித்தபோது ஊடகவியலாளர்கள் போட்டோ ஆதாரம் கேட்டுள்ளனர். சுவரை இவர்கள் போட்டோ எடுத்து வெளியிட பெரிய சலனம் ஏதுமில்லை. பின்னர் வட இந்தியப் பத்திரிக்கைகளும் இதை எழுத, சுவரில் மின்சாரம் பாய்ச்சி வைத்திருப்பதாக எழுந்த தகவலால் விஷயம் சூடானது.

இச்சுவற்றைப் பற்றி கண்டு வெளிப்படுத்தியது சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு. ஆனால் மாநில அரசோ, தலித் தலைவர்களோ இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆதிக்க சாதிக்காரர்கள் அவர்களின் சொந்த இடத்தில் கட்டிக்கொண்ட சுவர் அது. தீண்டாமைச் சுவரல்ல என்று அரசு விளக்கம் வேறு கொடுத்தது. கலைஞரைச் சந்தித்துவிட்டு நேரே உத்தபுரம் போன புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உத்தபுரத்து மக்களிடம் பிள்ளைமார் சார்பில் தன்னை சந்தித்துப் பேசி கிருஷ்ணசாமி சொன்ன தீர்வை ஏற்றுக் கொண்டதாகவும் அதை நிறைவேற்றும் வரை பொறுத்திருங்கள் எனவும் வேண்டிக்கொண்டார். இதற்கிடையில் பிரகாஷ் காரத்தை அழைத்து வந்து அவர் முன்னிலையில் சுவரை இடித்து தேசிய அளவில் இப்பிரச்சனையை கவன ஈர்ப்பு செய்ய சி.பி.எம்மின் குழு முடிவு செய்தது. சி.பி.எம் மின் பங்கு இப்போராட்டத்தில் முக்கியமானது. தேசிய அளவில் இது கவன ஈர்ப்புப் பெற ஆரம்பித்ததை உணர்ந்த தமிழக முதல்வர் கலைஞர் 600 மீ சுவற்றில் 150 மீட்டர் நீளச் சுவர்ப் பகுதியை காவல்துறையினர் கொண்டு இடித்துவிட்டார்.

சுவர் சிறிது இடிந்தது. தீண்டாமைப் பிரச்சனை வெளிச்சமானது.

அதைத் தொடர்ந்து பிள்ளைமார்களும், தலித்துகளும் மோதிக்கொண்டனர். பிள்ளைமார்களுக்கு பக்கத்து கிராமங்களிலிருந்தும் தேவர் போன்ற ‘சம’ சாதியினரின் ஆதரவு கிடைத்தது. கூடவே காவல் துறையின் அதிகாரம் பிள்ளைமார்களின் பக்கம். (காவல் நிலையம் இருப்பதே பிள்ளைமார்கள் பகுதியில்தான்; இடத்தில்தான்.). பிரச்சனையை பெரிதுபடுத்த விரும்பிய பிள்ளைமார்களும் அவர்களுக்குத் துணைநின்ற சுத்துப்பட்டு முக்குலத்தோரும் வியூகங்கள் வகுத்தனர். முதலில் சற்றுத் தள்ளியிருந்த கிராமத்திலிருந்த முத்துராமலிங்கத்தேவர் சிலை மீது முக்குலத்தோர் ஆட்களே செருப்பு மாலை போட்டு விட்டு தலித்துகள் மீது பழிபோட முயல (அந்த ஊரில் இருந்ததே ஒரே ஒரு தலித் தான்) அங்கிருந்த எஸ்.பி அன்பு சமயோசிதமாக மோப்பநாய் கொண்டு மாலை போட்டவனை பிடித்துவிடுவேன் என்று மிரட்ட, அவர்களே தங்கள் ஆட்களைப் பிடித்து பஞ்சாயத்தில் அபராதம் கட்டவைத்து, சிலையை கழுவிவிட்டுவிட்டார்கள்.

பின்னர் ஒரு நாள் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் மகள் திருமண போஸ்டர் பிரச்சனைக்குரிய உத்தபுரம் அம்மன் கோயில் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. இந்தக் கோயில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பிள்ளைமார்களால் உரிமை நிலைநாட்டப்பட்டு தலித்துகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தலித்துகள், தலித் குழந்தைகள் தவறி உள்ளே நுழைந்துவிடாமல் இருக்க கோயிலையொட்டி கோயில் மதிற்சுவர் போல் ஒரு சுவர் கட்டப்பட்டிருந்தது. இச்சுவர் தலித் பகுதியிலிருந்து தலித்துகள் கோயிலுக்குள் வருவதை தடுத்தது. கோயில் கும்பாபிஷேகம் நடக்கவிருந்த சமயத்தில் இந்தச் சுவற்றின் மீது வெள்ளையடிக்கப் பட, இதைத் தொடர்ந்து தலித்துகள் கோயிலினுள் புகுந்துவிடுவார்களோ என பிள்ளைமார்கள் பயப்பட்டனர். இருபக்கமும் கற்கள் பறந்தன.

இதை தினமலர் போன்ற பத்திரிக்கைகள் ஆதிதிராவிடர்கள் பிள்ளைமார்கள் தெருவை நோக்கி பெட்ரோல் குண்டு எறிந்தார்கள் அதனால் சண்டை மூண்டது என திரித்து எழுதின. ஆனால் தலித்துகள் கம்யூனிஸ்ட்டுகளின் அறிவுரையால் தற்காப்புக்கு ஆயுதங்களை வாங்காமல் தவிர்த்திருந்தனர். தலித் ஆண்கள் பலரின் மீதும் வழக்குகள் போடப்பட்டு போலீசால் ‘தேடப்பட’ தலித் ஆண்கள் மொத்தமும் தலைமறைவாயினர். ஆனால் காவல் துறையால் எந்த குண்டுகளோ, ஆயுதங்களோ உத்தபுர தலித்துகளிடமிருந்து கைப்பற்ற இயலவில்லை. காவல் துறையின் வழக்கம் எந்த இடத்தில் போராட்டம் தீவிரமடையுமோ, அவ்விடத்தில் தலித்துகளை ‘போட்டுப் பார்ப்பது’ என்பது. அப்படி உத்தபுரம் தலித்துகளை போட்டுப் பார்க்க காவல் துறை ரகசியமாய் முடிவுசெய்துகொண்டது. இதற்கிடையில் தலித் பெண்மணி ஒருவர் இறந்துவிட ஊரில் ஆண்கள் எல்லோரும் தலைமறைவாய் இருந்ததால் பெண்கள் மட்டுமே சேர்ந்து இறந்தவரை அடக்கம் செய்திருக்கிறார்கள்.

அக்டோபர் 2ம் தேதி மீண்டும் கலவரம் வெடித்து, இம்முறை காவல் துறையினர் தலித்துகளின் குடியிருப்புகளுள் நுழைந்து வீடுகளில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அவர்கள் வீடுகளிலிருந்த கொஞ்ச நஞ்ச பொருட்களையும் நொறுக்கினர்.

சி.பி.எம் மற்றும் மார்க்ஸ் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் போன்றோர் இதற்காகப் போராடினர். கிருஷ்ணசாமி மற்றும் திருமாவளவன் போன்றோர் ஆர்வமாக வந்து சேர்ந்து போராடவில்லை. இவர்களுக்கு சேர்ந்து போராட அழைப்பு விடுத்ததாக சி.பி.எம் தரப்பு சொல்கிறார்கள். திருமாவளவன் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டார் (ஏன் சார்?). சி.பி.எம் போன்ற கட்சிகளுடன் சாதிக் கட்சிகள் இணைந்து போராடுவதில் உள்ள சிக்கல்களைக் களைந்து ஒரு பொதுவான புரிதல்களுக்குள் வரவேண்டும். சி.பி.எம்மோ நாங்கள் கூப்பிட்டும் அவர்கள் வரத் தயங்குகிறார்கள் என்கின்றனர்.

கிருஷ்ணசாமியோ பிள்ளைமார்கள் வம்பு தும்புக்குப் போகாதவர்கள் என்கிற ரீதியில் ஸர்டிபிகேட் கொடுத்தார். பின்னர் பக்கத்து கிராமம் ஒன்றில் அவர் காரசாரமாகப் பேசிச் செல்ல அவரின் கார் தாக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதைக் கண்டித்து எழுமலை கிராமத்தில் அமைதியான முறையில் சாலைமறியல் செய்த தலித் மக்களின் மீது ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி துப்பாக்கிச் சூடு நடத்தி சுரேஷ் என்கிற 25 வயது தலித் இளைஞரை சுட்டுக் கொன்றார். இதற்கு தனியாக அரசு திருப்பதி கமிஷன் நியமித்தது. அந்தக் கமிஷனின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் அரசு அதை இன்னும் வெளியிடவில்லை. கிருஷ்ணசாமி இறந்த சுரேஷின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கினார். ஆனால் வேறு எந்தக் கட்சியுடனும் சேர்ந்து இது பற்றி இனிமேல் பேசக்கூடாது என்று சுரேஷின் குடும்பத்தினர் வாயை அடைத்ததாக சி.பி.எம் தரப்பில் கூறப்படுகிறது.

அ.மார்கஸ் போன்றோர் அடங்கிய உண்மை அறியும் குழு உத்தபுரத்தில் நிலவிவரும் தீண்டாமையின் ரத்தக் கீறலை உறுதி செய்தது. உண்மைப் பிரச்சனையான தீண்டாமைப் பிரச்சனையின் மீது இன்னும் ஒரு விவாதமோ, கேஸோ நடக்கவில்லை. ஊரில் இருந்த ஒரு ஆதிக்கசாதியினன் கூட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதாகவில்லை.

இந்நிலையில், சி.பி.எம் சார்பாக, காவல்துறையினரின் அத்துமீறல் தாக்குதல்களுக்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் இடைக்கால தீர்ப்பாக காவல் துறையின் தாக்குதலில் காயம் அடைந்த தலித்துகளுக்கு மருத்துவ இழப்பீட்டுத் தொகையாக 15 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. வழக்கானது திசை திரும்பி பிள்ளைமார்கள் X தலித்துகள் என்பது போய், காவல்துறை X தலித்துகள் என நிறுத்தப்பட்டிருக்கிறது. இவ் வழக்கின் இறுதியில் காவல்துறை மேல் ஏதாவது எச்சரிக்கைகள் விடப்படலாம். காக்கிச் சட்டைகள் சில சஸ்பெண்ட் பண்ண்ப்படலாம். இதைத் தவிர பெரிதாக எதுவும் செய்ய வாய்ப்பில்லை. பிள்ளைமார்களும், கோயிலும், தலித்துகளுக்காக திறக்க வழியில்லை. தலித்துகளைத் தாக்கியவர்கள் மீது சட்டங்கள் இதுவரை பாயவில்லை.

ஆனாலும் காற்றுப் புகாத கான்கிரீட் சுவற்றில் இந்தத் தீர்ப்பு ஒரு சின்ன ஓட்டை என்று நினைத்து ஆறுதலடையலாம். இந்தச் சின்ன வெற்றிக்குப் பெருங்காரணம் சி.பி.எம் தான். இந்த ஓட்டை விரிந்து என்று சுவர் முழுதும் இடியும் ?

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சி எதுவும் தெரியவில்லை.

பின்குறிப்பு:
சி.பி.எம்மின் தீண்டாமை ஒழிப்பு ஆர்வங்களின் காரணங்கள் என்ன என்று ஆராய்ச்சியை நாம் பிறகு தனியே செய்து கொள்ளலாம். தீண்டாமை ஒழிப்புப் பிரச்சனையை முப்பது வருடங்களுக்கு முன் கேலி செய்து அசட்டை செய்த சி.பி.எம் இன்று காலங்கடந்து அப்பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளது. இதனால் முப்பது வருடங்கள் அதன் வளர்ச்சி தேங்கி நின்றது.

தீண்டாமைக்காக இவ்வளவு ஆழமாக இறங்கிப் போராடிய சி.பி.எம் இந்த நூற்றாண்டில் கண்முன்னே நடந்த கொடூரமான இலங்கை இனப் படுகொலைக்கு ஏன் எச்சில் கையால் காக்கை கூட விரட்டவில்லை ? முத்துக்குமாரின் மகத்தான தியாகத்தை மறுதலித்ததன் மூலம் சி.பி.எம் ஆளும் வர்க்கத்திற்குத் துணையாய்ப் போயிற்றே என்பது எங்கள் வேதனை. அதே போல் இலங்கைப் பிரச்சனையிலும் இன்று சி.பி.எம் தேசிய இனங்களின் போராட்டத்திற்கு எதிரான நிலை எடுக்கிறது. அதை இப்போதாவது உணருமா ?
- அம்பேதன்