Monday, March 23, 2015

காலம் தாழ்த்தும் தந்திரம் வாளேந்திய சிங்கள சிங்கத்தின் அரசியல் போர்வாள்! - ஜெயந்தரன்

காலம் தாழ்த்தும் தந்திரம்
அரசியலில் காலம் தாழ்த்தும் தந்திரம் (Delaying Tactics) என்பது ஒருவகை யுத்தமுறையாக பின்பற்றப்படுகிறது. கால தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும். (Justice delayed is justice denied) என்பதற்கு அப்பால் அது நீதி நியாயம் உரிமை என்பனவற்றிற்கான கட்டமைப்பையே சல்லடையாக்கி விடுகிறது. பின்போடுதல் என்பதன் பொருள் இல்லை என்பதாகும். அதிக தாமதம் அதிக தீங்கானதாகும். சிங்களத் தலைவர்கள் தமிழரின் உரிமைகள் தொடர்பான விடயங்களை பின்போடுவதன் மூலம் அதனை தனித்து பின்பு பையவே இல்லாது அழித்துவிடுகிறார்கள். ஒன்றை அதிகம் தாமதப்படுத்துவதன் மூலம் அதனை அதற்குரியவர்களுக்கு தீங்கானதாக்கிவிடுகிறார்கள்.

காலதாமதப்படுத்தல் என்பது எப்போதும் அளவால் பெரிய இனத்திற்கு சாதகமானதாகவும் அளவால் சிறிய இனத்திற்கு பாதகமானதாகவும்
அமைந்துவிடுகிறது. ஆதலால் ஈழத்தமிழர் விவகாரத்தில் சிங்களத் தலைவர்கள் எப்போதும் காலதாமதப்படுத்தல் தந்திரத்தை ஈழத்தமிழருக்கு
எதிரான ஒரு முக்கிய ஆயுதமாக எப்போதும் வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிங்கள தலைவர்களிடமும் ஆட்சியாளர்களிடமும்
அரச இயந்திரம் அவர்களது கையில் இருப்பதினால் அதனை அவர்கள் ஒரு முக்கிய கருவியாக்கொண்டு அரச இயந்திரமற்ற தமிழ்மக்களை
காலதாமத்தால் இலகுவாக தோற்கடித்திட முடியும். அதாவது அரச இயந்திரத்தின் கூரிய வாளுக்கு தமிழர்கள் கொடுக்கும் காலதாமத வாய்ப்பு
இலக்காகி வெட்டுண்டு அந்த அரச இயந்திரத்தின் பாரத்துக்குள் அது நசிந்து அழிந்துபோய்விடும். ஆதலால் அரச இயந்திரம் உள்ளவர்களுக்கு
காலதாமதம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்போது அது இயல்பாகவே தமிழரின் இலக்கை அழித்துவிடும்.

இனவெறுப்பை தூண்ட  பௌத்தமதத்தை உபயோகப்படுத்துதல்
சிங்கள அரச இயந்திரம் தெளிவான சித்தாந்தங்களாலும் கோட்பாடுகளாலும் அதற்கு பொருத்தமான நடைமுறைகளினாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசின் அரசியல் யாப்பானது பின்வரும் மூன்று விடயங்களை அப்படியே உள்வாங்கி அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. 1956ஆம் ஆண்டு வெளியான பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையை அப்படியே நிறைவேற்றிய யாப்பாக
இந்த யாப்பு காணப்படுகின்றது. அதாவது பௌத்தத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது (Betrayal of Buddhism) என்ற தலைப்புடைய இந்த
அறிக்கையானது எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் பௌத்தத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை
வற்புறுத்தியிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பௌத்தத்தை அரச மதமாக்கவேண்டும் என்றும் பௌத்த சாசன அமைச்சை உருவாக்க
வேண்டும் என்றும் பௌத்த நிறுவனங்களும் அமைப்புக்களும் ஓங்கி குரல் ஒலித்தன. இந்த அறிக்கை 1956ஆம் ஆண்டு தேர்தலை நிர்ணயிப்பதில்
பெரும் பங்கு வகித்தது. இவ்வறிக்கையின் அபிலாசையை அரசியல் யாப்பு ரீதியாக 1972ஆம் ஆண்டு யாப்பு உட்கொண்டிருந்தது. இதனை 1978ஆம்
ஆண்டு அரசியல் யாப்பு மேலும் வலுவுடன் முன்னெடுத்தது.

பௌத்தம் இலங்கையின் முதன்மையான மதம் என்றும் அதனை பேணிப்பாதுகாப்பதும் கட்டிவளர்ப்பதும் அரசின் பொறுப்பும் கடமையும் என்று
இந்த யாப்பு கூறுகிறது. இதன் மூலம் ஏறக்குறைய பௌத்தம் அரச மதம் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது என்பதே உண்மை.1953ஆம் ஆண்டு டி.சி.விஜயவர்த்தன எழுதிய விகாரையில் புரட்சி (Revolt in the Temple) என்ற நூலும் அதே ஆண்டு வெளியான ஆதர் விஜயவர்த்தன தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்க பாஷை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் 1956ஆம் வெளியான மேற்படி பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இணைந்து சிங்கள மக்களினதும் சிங்கள தலைவர்களினதும் அரசியல் மனப்பாங்கை தீவிர வலுவுடன் வடிவமைத்தனர். இம்மூன்று நூல்களும் இன மத விரோதங்களையும் சகிப்புத்தன்மையின்மையையும் பரந்து பட்ட சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்குவதில் பெரும் பங்குவகித்தன.

மஹாவம்சத்தின் பங்கு
ஏற்கனவே நீண்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றுப் பகை உணர்வை சுமந்த ஒரு நூலாக மகாவம்சம் காணப்படுகிறது. அந்த நூலில்
இருந்து இன மத பகைமையும் விரோதமும் கருவாக பெறப்பட்டு நவீன இனவிரோத வரலாற்றுக்கு ஏற்ப வடிவமைப்பட்டன. சிங்கள அறிஞர்களினதும் ஆராய்ச்சியாளர்களினதும் எழுத்தாளர்களினதும் தீவிர பங்களிப்புடன் இனவாத அரச இயந்திரம் கட்டமைக்கப்பட்டது.
ஆதலால் இந்த அரச இயந்திரமானது தமிழின வெறுப்பையும் அழிப்பையும் தமது இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்ற வகையில் தமிழின பகைமையும் தமிழினத்தை அழிக்கும் மனப்போக்கும் சிங்கள மக்களின் மனங்களில் ஒரு தர்மமாக நியாயமாக கடமையாக வளர்ந்துள்ளது. இதனை பிரதிப்பலிப்பதும் நிறைவேற்றுவதும்தான் எந்த ஒரு சிங்களத் தலைவர்களினதும் எந்த ஒரு சிங்கள அரசாங்கத்தினதும் பணியாகிறது. அதலால் சிங்கள அரச இயந்திரம் அந்த அரச இயந்திரத்திற்கு பின்னால் உள்ள மூளைகள் அதற்கு இசைவான நிர்வாக கட்டமைப்புக்கள் இவற்றை முன்னெடுக்கவல்ல தலைவர்கள் அதன் வழி அரசாங்கங்கள் என்ற அனைத்தையும் ஒன்றில் இருந்து இன்னொன்றை பிரித்துப்பார்க்காது அனைத்தையும் ஒரு திசை வழி இலக்கென பார்க்க வேண்டும்.

அரசியலை மேடையில் காட்சியளிக்கும் தலைவர்களின் சந்தர்ப்பவாத வார்த்தைகளுக்கு உள்ளால் அரசியலை பார்க்காது அதனை அரச இயந்திர
கட்டமைப்புக்கு உள்ளாலும் அந்தக் கட்டமைபுக்குரிய மூலச் சித்தாந்தம் கோட்பாடு என்பனவற்றிற்கு ஊடாகவும் அது வரலாற்று நடைமுறையில்
ஈட்டியிருக்கும் வெற்றி அடைந்திருக்கும் ஸ்தானம் என்பவற்றிற்கு ஊடாகவும் எடைபோடவேண்டும். அப்படி எடை போட்டால் நுனிப்புல் மேயும்
அரசியல் கண்ணோட்டத்திற்கு உட்படாமல் வெறும் சலசலப்பு தளம்பல் அரசியலுக்கு பலியாகாமல் ஏமாற்று வித்தைகளுக்குள்ளும் காலம் தாழ்த்தல்களுக்கு உள்ளும் சிக்குண்டு அழியாமல் ஈழத்தமிழரை பாதுகாப்பதற்கான வழிகளைத் தேட முடியும்.

ராஜபஷ எனும் சுனாமி
ராஜபக்ஷ அரசாங்கம் ஓர் அகால தோல்வி அடைந்துவிட்டது. இந்த தோல்வி ஒரு பெரும் அதிசயம் போல் தோன்றுகிறது. ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இந்த தோல்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதேவேளை சிங்களமக்கள் மத்தியில் இருந்து ராஜபக்ஷவுக்கு 60 வீத வாக்குகள் கிடைத்துள்ளன. ராஜபக்ஷ தோல்வியடைந்தது அதிசயம் போல் தோன்றுவதை விடவும் உண்மையான அதிசயம் இனிமேல்தான் நடக்க இருக்கிறது.

இதுபற்றி முதுபெரும் ஆங்கில பத்திரிகையாளரான டி.மஹிந்தபாலா The Birth and Rise of the Nugegoda Man என்ற ஆங்கில கட்டுரையில் மகிந்த ராஜபக்ஷ ஓரு சுனாமியாய் அதாவது ஆழிப்பேரலையாய் இப்பொழுது இருக்கும் அரசாங்கத்தை நடைபெறவுள்ளதாக கூறப்படும் எதிர்வரும் சூலை நாடாளுமன்றத் தேர்தலில் அடித்துச் சென்றுவிடுவார் என்று கூறுவதன் மூலம் நிகழவிருக்கும் அதிசயத்தை இப்போதே ஆருடம் கூறுகிறார்.

சிங்கள மக்களின் மனப்பாங்கை புரிந்துகொண்ட அனுபவம் வாய்ந்த ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இவர் கூறும் ஆருடத்தை நாம் புறந்தள்ள முடியாது. அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி நுகேகோடவில் நடந்த மாபெரும் பேரணியில் லட்சக்கணக்கில் சிங்கள மக்கள் பெரு வெள்ளமென திரண்டதாகவும் இது ஆழிப்பேரலையாய் இப்போது இருக்கும் அரசாங்கத்தை சூலை மாதத்தில் அடித்துச் சென்றுவிடும் என சிங்கள பேரினவாத மனப்பாங்கிற்கு ஊடாக அவர் அதனை விளக்குகிறார்.

47 வேறுபட்ட கட்சிகளும் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யும் இந்திய உளவு அமைப்பான றோவும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களும் இணைந்து மக்கள் எதிர்பாராத விதமாக இரகசிய சதிகாரத்தனமாக ராஜபக்ஷாவை வீழ்த்தி விட்டதாகவும் ஆனால் ராஜபக்ஷாவோ வெளிப்படையான மக்கள் வெள்ளத்தொடர் எழுச்சிபெற தொடங்கிவிட்டதாகவும் அக்கட்டுரையில் அவர் விவரிக்கிறார். மேலும் ஜனவரி மாதம் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தல் 1960ஆம் அண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் டட்லி செனநாயக அரசாங்கம் அமைத்ததுடன் ஒப்பிட்டு பின் அதே ஆண்டு சூலை மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் டட்லி தோற்கடிக்கப்பட்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக வெற்றிபெற்று அரசு அமைத்தது போல ராஜபக்ஷவின் ஜனவரி தோல்வியையும் சூலையில் வெற்றி பெறக்கூடும் என்பதையும் அக்கட்டுரை விவரித்தது. இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் சிங்கள இனவாத அரசியல் மனப்பாங்கை பற்றி மேற்படி மஹிந்தபால கொண்டிருக்கும் கண்ணோட்டமும் அது மேலும் வீரியத்துடன் எழுச்சிபெறும் என்ற அவரது கருத்தான அடிப்படைகள் புறந்தள்ளப்பட முடியாதவை என்பதுதான்.

இன அழிப்புத் தன்மையோடு வடிவமைக்கப்பட்டு வலுப்பெற்று ஸ்தாபிதம் அடைந்திருக்கும் சிங்கள அரச இயந்திரம் பற்றிய அரசியல் உடற்கூற்றினை (Poitical Anatomy) புரிந்துகொள்ளாமல் அதுபற்றிய அரசியல் பார்வை இல்லாமல் எழுமாத்திரத்தில் அரசியல் அணுகுமுறைகளை மேற்கொண்டால் அது தமிழ்மக்களுக்கு புதைகுழி தோண்டுவதாகவே அமையமுடியும்.

போர்க்குற்ற விசாரணையை நீர்த்துப் போகச்செய்ததில் சிங்களம் அடைந்த வெற்றி
‘போர்குற்ற விசாரணையை’ ஒத்திபோட்டமை என்பது இனவாத சிங்கள அரசுக்கு கிடைத்த வெற்றியும் அதன்பொருட்டு தற்போதைய சிறிசேன அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியும் இறுதியில் இராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றியும் ஒட்டுமொத்தத்தில் சிங்கள இனப் படுகொலையாளர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியுமாகும்.

இனப்படுகொலை ஒரு தனிநபருடையதல்ல. அது சகல சிங்கள இனத்தவருடையதுமான ஆதரவுடனும் விருப்பத்துடனும் வரவேற்புடனும் அரங்கேறிய ஒரு கூட்டுமன இனப்படுகொலையாகும். அதற்கான விசாரணையை இல்லாமல் செய்வதில் சிங்கள அரசும் சிங்கள இனவாதமும்
வெற்றி பெற்றுவிட்டன என்பதே உண்மையாகும்.

இங்கு சந்திரிகா-சிறிசேன-ரணில் அரசாங்கம் பதவியில் இருக்கின்றதோ அல்லது இல்லையோ என்பதல்ல பிரச்சனைமீண்டும் ராஜபக்ஷ பதவிக்கு வருவாரா இல்லையா என்பதல்ல பிரச்சனை. யார் பதவியில் இருந்தாலும் ‘போர்க்குற்ற விசாரணையை’ பின்போடுவதில் வெற்றி பெற்றுவிட்டனர் என்பதே தந்திரம். இது ஒட்டுமொத்த சிங்கள இனப்படுகொலை கலாச்சாரத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

அரசற்ற படுகொலைக்கு உள்ளான அப்பாவி தமிழ் மக்களை உலக அரங்கில் உள்ள அனைத்து அரசுகளும் சிங்கள அரசு சார்ந்த தத்தம் அரச நலன் கருதி கைவிட்டுவிட்டன. இந்தவகையில் நீதி நியாயங்களுக்கு அப்பாலான அரச நலன் சார்ந்த சர்வதேச உறவு நிலையைப் புரிந்து கொண்டு ஈழத்தமிழரின் உரிமைகளை நிலைநாட்டவல்ல அரசியல் ராஜதந்திர வியூகங்களுக்கு ஊடாக ஈழத்தமிழர்களின் உரிமைகளையும் நியாயங்களையும் நிலைநாட்டுவதற்குரிய வழிவகைகளை கண்டறிய வேண்டும். இதில் அதிக பொறுப்புணர்வுடனும் புதிய சிந்தனையுடனும் புத்திக்கூர்மையுடனும் ஆழ்ந்த அரசியல் ஞானத்துடனும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஈழத்தமிழர் செயற்பட வேண்டும். கரையான் புற்றெடுத்ததுபோல சிங்கள மேலாத்திக்க அரசியல் தமிழ்மக்கள் மீது புற்றெடுத்து தமிழ்மக்களின் தேசிய தன்மையையும் வாழ்வையும் சல்லறையாக்கிவிட்டது. உரிமை, பண்பாடு , அடிமைநிலை என்பனவற்றை புரிந்து கொள்ளவதற்கென ஒரு மனமும் அதற்கான பார்வையும் வேண்டும். ‘ஒருவன் தான் அடிமையாய் இருக்கின்றேன் என்பதை புரிந்துகொண்டாலே அவர் அரைவாசி விடுதலையடைந்துவிடுகிறான்’.

இந்தவகையில் தமிழ்மக்கள் காலதாமதப்படுத்தும் அரசியல் மூலம் மேலும் மேலும் அடிமையாக்கப்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் சிந்தனை தேவைப்படுகிறது. இந்த ‘போர்க்குற்ற விசாரணையை’ தாமதப்படுத்துவதன்மூலம் மட்டுமன்றி கடந்த 75 ஆண்டுகாலப் பகுதியில் இதேபோல எல்லா வகைகளிலும் அனைத்து துறைகளிலும் காலதாமதப் படுத்தும் தந்திரத்தை பிரயோகித்து தமிழ் மக்களை கருவறுப்பதை சிங்கள இனவாதம் தொடர் வெற்றிகளை ஈட்டிவருகிறது. அதிக தாமதம் அதிக ஆபத்தானதும் அதிக தீங்கானதுமாகும். இனி அடுத்தது என்ன என்ற கேள்வியை தமிழ்த்தரப்பு தன் நெஞ்சில் நிறுத்தி புதிய வழியில்; சிந்திக்க வேண்டும்.
 - ஜெயந்தரன்

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.