Tuesday, October 6, 2009

உன்னைப் போல் ஒருவன் - சினிமா விமர்சனம்

ஹிந்தியில் வந்த 'wednesday' படம் பார்த்திருந்தேன். அதில் ஹிந்தி சரியாகப் புரியாததால் படம் முழுக்கப் புரியவில்லை. உ.போ.ஒ அதன் தமிழ் ஆக்கம். உலக நாயகன் கமல்ஹாசன் எடுத்திருக்கிறார். கமல் தமிழ்ச் சினிமாவின் முக்கியமான தூண்களில் ஒருவர். ஆனால் அந்தத் தூணே இந்துத்துவா தூண் என்பது தான் வேதனை. சுகுணா திவாகரின் வலைத்தளத்தில் இதைப் பற்றி விலாவரியாக எழுதியிருக்கிறார்.

படத்தின் கரு, தீவிரவாதிகள் ரயில்வே ஸ்டேஷன், பஸ்டாண்டு, தியேட்டர், மார்க்கெட் என்று பொது இடங்களில் குண்டு வைக்க, வெடித்துச் சாகும் சாதாரண பொதுஜனம் (common man) வெகுண்டெழுந்து தீவிரவாதிகளைக் குண்டுவைத்துக் கொன்றால்... என்கிற எதிர்வினை எண்ணத்தில் எழுந்த கதை. இந்த எண்ணத்தை அரசியல் கலக்காமல் அப்படியே தெளிவாக திரைக்கதையாக்கியுள்ளார்கள் ஹிந்தியில் என்றான் என் நண்பன். தமிழில் கமல் மணிரத்னம் பாதையில் தனது 'தேசபக்தி' கலந்து கொடுத்திருக்கிறார். தீவிரவாதிகள் உலகெங்கும் நடத்தும் (வி.புலிகள் அப்படிச் செய்வதை கொள்கை அடிப்படையாகக் கொண்டவர்களில்லை என்றாலும் கூட அப்படிக் கொன்றிருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது ) அரசுகளுக்கெதிரான போராட்டத்தில் இன்றும் வெடித்துச் சாகுபவர்களில் அப்பாவி மக்கள் பெரும்பான்மையினர். இது விடுதலைப் போராட்டத்தை மக்களிடமிருந்து அந்நியப்படுத்த எளிதில் பயன்படுகிறது; தீவிரவாதிகளுக்கு எதிரான உணர்வை, பயத்தை மக்களிடம் உருவாக்க அரசுகளால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கையறு நிலையில் ஆயுத பலங்களில் அரசுகள் முன் மண்டியிட வேண்டிய, பலமில்லாத தீவிரவாத விடுதலை இயக்கங்கள் இந்தத் தவறை உணர்ந்து கொள்வதில்லை. இத்தோடு தீவிரவாதிகள் தங்களது இலட்சியங்களை மறந்து சுயலாபங்களுக்காக பணலாபங்களுக்காக கொலைகள் புரியும் பயங்கரவாதிகளாக மாறிவிடுவதும் நடக்கிறது.

ஆனால் தியேட்டரில் பொதுஜனங்கள் கையைத்தட்டி இப்படத்தை ரசித்ததை சொல்லியாக வேண்டும். இஸ்லாமியர்கள் தவிர. ஏனென்றால் ஓர் R.S.S காரன் இஸ்லாமியர் எந்த 'மாதிரி' தேசபக்தியுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறானோ அப்படியே படத்தில் எல்லா இஸ்லாமிய கதாபாத்திரங்களும் உள்ளன(எ.கா. ஆரிப்). கமல் படத்தில் இந்து, கிறித்துவ, இஸ்லாமிய அடையாளங்கள் கலந்து வருகிறார். அது தேவையே இல்லை; அவர் பக்கா இந்து என்று படத்தில் வரும் 'சம்பவாமி யுகேயுகே' வாசகங்கள் சொல்லிவிடுகிறது தெளிவாக. கமல் நாத்திகராம். நம்பமுடிகிறதா ?

படத்தின் அரசியல், தீவிரவாதிகள்=வில்லன்கள் என்கிற மக்கள் கொண்டுள்ள கருத்தைக் கொண்டே படத்தோடு மக்களை இணைக்கும் கருவியாகப் பயன்படுத்துகிறது. எடுத்தவுடனே கமல் ஒரு தீவிரவாதிபோல் சில வெடிகுண்டுகள் எனச் சந்தேகப்படும் 'பேக்'குகளை பஸ், போலிஸ் ஸ்டேஷன், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்று ஒரு ஆறு இடங்களில் வைக்கிறார். பின்னர் தனது லேப்டாப் மற்றும் ஹைடெக் சாதனங்களின் உதவியோடு காவல் துறை கமிஷனர் மோகன்லாலுக்குப் போன் செய்து இத்தகவலைச் சொல்லி சிறையில் இருக்கும் ஐந்து தீவிரவாதிகளை (அல்கொய்தா, அல்உம்மா.. போன்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள் அனைவரும்) விடுவித்து தான் சொல்லும் இடத்தில் வந்து ஒப்படைக்கச் சொல்கிறார். அவர்கள் ஒப்படைத்ததும் தான் படத்தின் கிளைமாக்ஸ், யாரும் எதிர்பாராத திருப்பம்..

இந்தக் கருவை மட்டும் கதையாக சொல்லியிருந்தால் கூட படம் நன்றாக இருந்திருக்கும். இந்திப்படம் இந்த ஜாக்கிரதை உணர்வோடு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் ஏற்கனவே குருதிப்புனலில் தீவிரவாதிகளை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கேவலமானவர்களாகவும், RAW வுக்குப் போட்டியாக போலீஸ் உயர் அதிகாரிகள் வரை கைவசம் வைத்திருப்பவர்களாகவும் காட்டிய கமல் இப்படத்தில் இன்னும் கூடுதலாகவே தேசப் பற்றைப் பொழிந்திருக்கிறார். உண்மையில் கெட்டவார்த்தை சொல்லி திட்டவேண்டும் கமல் சாரை. ஆனால் திட்ட வாய் வரவில்லை. அவருடைய மனசாட்சியிடம் அப்பொறுப்பை விடுகிறேன்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக இன்னும் இருப்பதற்குக் காரணம் இங்கு பா.ஜ.க போன்ற வெறியர்களை திராவிட இயக்கங்கள் விரட்டியடித்து மக்கள் மனத்தில் மத வெறி எழாமல் பார்த்துக் கொண்டதுதான். இல்லாவிட்டால் இன்று கமல் சாரே பால் தாக்கரே போல் வசனம் பேசிக்கொண்டிருக்கக் கூடும். ஆனால் அவர் தமிழகம் ஏன் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று வயிரெறிகிறார். போதாக்குறைக்கு 'போராளிகள்' என்று தீவிரவாதிகளை வேண்டுமென்றே அழைக்கிறார். போராளிகள் என்று தமிழில் அழைக்கப்படும் தீவிரவாத இயக்கம் எது என்று நமக்குத் தெரியும். இஸ்லாமியத் தீவிரவாதிகள் மத்தியில் அப்பாவியாக வரும் ஆயுதம் விற்கும் ஒரு இந்து, சும்மா சப்பைக் கட்டுக்காக. ஒரு இஸ்லாமியத் தீவிரவாதி தனது (மூன்றாவது)மனைவி பெஸ்ட் பேக்கரியில் வைத்து எரிக்கப்பட்டாள் என்பதற்காக (காஷ்மீரில் கொல்லப்பட்டதற்காகவோ, கோத்ராவில் எரிக்கப்பட்டதற்காகவோ, பம்பாய் கலவரத்தில் அல்லது குஜராத் கலவரத்தில் விரட்டிக் கொல்லப்பட்டதற்காகவோ இல்லையாம்..) தீவிரவாதியானேன்(?) என்று சொல்லும் போது இந்த இந்து அப்பாவி 'அதான் மிச்ச ரெண்டு இருக்கில்லப்பா' என்று காமெடி பண்ணுகிறான். இஸ்லாமியனின் துயரம் காமெடியாகுமாம் 'மும்பை ரயில் குண்டுவெடிப்பு' 'தாஜ் ஹோட்டல் எரிப்பு' இவர்களுக்கு 'சீரியசாக' நாட்டுப் பற்றை ஊட்டுமாம். எப்படி கமல் சார் உங்கள் 'காமன் மேன்' இந்துவாக மட்டும் இருக்கிறான். அதுமட்டுமல்ல உங்கள் போலீசில் வேலை பார்க்கும் ஆரிப் கூட அப்படித்தான் இருக்கிறான். இஸ்லாம் தீவிரவாதிகள் பற்றி தகவல் சொல்லும் இஸ்லாமியனிடம் மட்டும் இணக்கமாகப் பேசுகிறான். அதாவது 'அரச பயங்கரவாதத்துக்கு' துணை போகும் ஆபீசராக இருந்தால், ஒரு இஸ்லாமியனே இஸ்லாமியனை சுட்டுக் கொன்று
என்கௌன்டர் செய்து திமிராக நெஞ்சு நிமிர்த்தி நடக்கலாம் என்று நிறுவுகிறான்.

இன்றைய முதலாளித்துவம் சோசலிஸம் பேசுவதுபோல் இப்படம் இந்துத்துவா விஷத்தை "நாட்டுப் பற்று" சோற்றில் கலந்துதான் வைக்கிறது. ஆரிப் செய்யும் சில விஷயங்களும் இஸ்லாமியருக்கு ஆதரவாயிருப்பது போல தோற்றம் தரச் செய்யும் கலப்படங்கள். இந்தக் கால அரசியல் நீக்கம் பெற்ற சூழலில் வளரும் இளம் தலைமுறையினர் இந்த விஷத்தை கவனிக்காமல் நாட்டுப் பற்று சாப்பாட்டை சாப்பிடுவதும் இப்படத்தில் நடக்கிறது. முந்தா நாள் விஜய் டி.வியில் கமலுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு கல்லூரிப் பெண் 'உங்களை கட்டிப் பிடிச்சி அழுதுடுவேன் சார்' என்று அழுதாள். ஆனால் அதே நிகழ்ச்சியில் பம்பாய் ரயில்வே ஸ்டேஷன் துப்பாக்கிச் சூட்டை நேராகப் பார்த்த ஒருவர் 'வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்று ஏன் சார் சொன்னீங்க' என்று பொட்டிலடித்தார் போலக் கேட்டார். என்கௌண்டர் கொலைகளை ஞாயப்படுத்தும், வன்முறையை ஞாயப்படுத்தும் கமல் 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற போர்வையில் புஷ் செய்த கொலைகளை தமிழில் செய்திருக்கிறார்.

சினிமா என்கிற ஊடகமாக இப்படம்:
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே விறுவிறுப்பில் செல்வதால் திரைக்கதை வெற்றியானதுதான். அதற்கு படம் நிறுத்தும் இரு எதிர்நிலைகள் தீவிரவாதம் X அரசு. தீவிரவாதியின் பயங்கரம் அவன் வைக்கும் குண்டுகள் வெடிக்காமல் படம் முழுதும் துடிக்கும் துடிப்பில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தப் பயங்கரத்திற்கு அரசு சவாலாக என்ன எதிர்வினை செய்கிறது என்பதற்கான காட்சியமைப்புகளும் கதாபாத்திர அமைப்புகளும் உள்ளன. மோஹன்லால் தனது கீழதிகாரியை 'கல்யாணம் ஆகிடுச்சா' என்று கேட்டு "யெஸ் ஸார்" என்று அவன் சொன்னவுடன் "நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்ய தயாரா" என்று கேட்க, அதற்கு அந்தக் காக்கிச் சட்டை அதிகாரியின் பதிலில் தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் பரவச நிலையை அடைகிறார்கள். வேறு சில கட்டங்களில் இது வெறும் இரு ஈகோக்களுக்கிடையேயான சண்டையாகக் கூட மிளிர்கிறது (WWF ஸ்டைலில்).

ஆனால் கமல், மோஹன்லால், லஷ்மி, இரு கீழதிகாரிகள் போன்ற யாருடனும் பார்வையாளர்கள் ஒன்ற முடிவதில்லை. தீவிரவாதிகளுக்கோ முகமே இல்லை. 'Character development' என்பதே இல்லை. இந்திப் படத்திலும் இக்குறை உண்டு. மோஹன்லால், கமல் இருவரின் நடிப்பும் ஓ.கே. என்று கூட சொல்ல முடியாது. பிசிறு தட்டுகிறது. மற்றும் கமல் சார் ஊர் பூராவும் குண்டு வைத்து மிரட்ட, அதை ஒரே ஒரு டி.வி. மட்டும் கடைசி வரை படம் பிடிக்க மற்ற டி.வி.க்கள் இதைக் கவனிக்கவேயில்லை என்பது என்ன லாஜிக். பொதுமக்கள் இந்நிகழ்வுகளைப் பார்த்து என்ன உணர்வடைந்தார்கள் என்று படம் முழுவதிலும் ஒரு சின்ன ஷாட் கூட காண்பிக்கப்படவில்லை. இது வீடியோ கேம் விளையாடும் உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது. கமல் லேப்டாப் முன்னால் உட்கார்ந்து கொண்டு 'ரேஷன் கடையில் அரிசி வாங்க கியூவில் நிற்கும் காமன் மேன் நான்' என்று சொல்வது பொருத்தமில்லாமல் இருக்கிறது. photography, editing இரண்டும் அப்படியே இந்திப் படத்தின் சாயலை பிரதியெடுத்துள்ளன. ஸ்ருதி ஹாசனின் (கமலின் மகள் தான்) இசையில் தீம் பாடல் சம்பவாமி யுகேயுகே என்று ஆரம்பித்து உ.போல்.ஒ என்று புகழ்பாடியபடியும், MTV ல் போடுவதற்கு வசதியாக 'வானம் எல்லை'யில் ராப்,தவில் கலந்து ஸ்ருதிஹாசன் குரலில்(பரவாயில்லை) இனிமையாகவும், 'நிலை வருமா' பாடல் (போலி)மதச்சார்பின்மையை கமல் குரலில் பாடவும்.. அதே போன்ற தீம் இசை படம் முழுவதும் வருகிறது + வழக்கமான த்ரில்லர்களின் இசை. படம் முழுக்க அப்படி வாசிக்க வேண்டிய அளவுக்கு (கமல் சாரின்)தேசபக்தி அரிப்பைத் தவிர வேறு ஒன்றும் சொரிவதற்கு இல்லை. (western)இசை பெரிதாகக் குழப்பிவிடவில்லை. அடுத்த படங்களில் பார்க்கலாம்.

இன்றைய Consumerist உலகத்தில் இப்படம் நாட்டுப் பற்றைச் சொன்னதை விட எப்படி செல் போனில் பேசினாலும் இடம் கண்டுபிடிக்கமுடியாமல் இப்படிக் குழப்பினான் என்று டெக்னாலஜி ஆச்சர்யங்களிலும் சின்ன அரசியல் நையாண்டிகளிலும் தொய்வின்றி போனது என்றும் சொல்ல வேண்டும். பிராமணியம், இந்துத்துவம் இல்லை என்று இனி கமலே படம் எடுத்தால் கூட நம்ப முடியாது போங்கள்.

நான் அவன் இல்லை.
மதிப்பெண்: 10 க்கு 4.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.