Tuesday, September 15, 2015

ஈழப் படுகொலைகள், போர்க்குற்றம் – ஐ.நா வின் கள்ள அழுகை !

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 30-வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. கவுன்சிலின் தலைவர் ஜெத்ராட் உல் உசேன் அதில் ஈழப் படுகொலைகள் பற்றி பேசியதாவது: “இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இறுதிகட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளன. பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.

இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா மனித உரிமை விவகாரங்களில் காட்டும் அக்கறை வரவேற்கத் தக்கது. அதேநேரம் அந்த நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை புதன் கிழமை வெளியிடப்படும். அப்போது சில கடுமையான முடிவுகளும் அறிவிக்கப்படும்.” என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா. சபையின் இந்த அறிக்கை இலங்கை அரசிடம் கடந்த வெள்ளிக்கிழமையை அளிக்கப்பட்டிருக்கிறது. 6 நாட்களில் இலங்கை பதில் அளிக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இலங்கை தரப்பில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் மங்கள சமர வீரா பங்கேற்றுள்ளார்.

மங்கள சமரவீரா ஐ.நா அறிக்கை பற்றி கூறியதாவது: “தென் ஆப்பிரிக்காவைப் பின்பற்றி உள்நாட்டுப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும், இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்க அரசின் ஆலோ சனையைக் கோரியுள்ளோம். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசியல் சாசனம் வரையறுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இலங்கை அரசு சார்பில் சுதந்திரமான விசாரணை அமைப்பு அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விஷயத்தை மேலோட்டமாகப் பார்த்தாலே இதன் போலித்தன்மை தெரியும். முதலாவதாக ‘போர்க் குற்றம்’ என்கிற வார்த்தை. இரு நாடுகளுக்கிடையே தான் போர் நடைபெற இயலும். இலங்கையில் நடந்ததோ உள்நாட்டில், கிளர்ச்சியாளர்களான விடுதலைப் புலிகளுடனான சண்டை மட்டுமே. இந்த உள்நாட்டுச் சண்டையே இரு நாடுகளுக்கிடைப்பட்ட போர் போல நடத்தப்பட்டிருப்பதிலிருந்து தமிழர்கள் வேறு நாட்டவராக, எதிரிகளாகவே நடத்தப்பட்டனர் என்பது தெளிவு. அதனாலேயே இன்னும் தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் நிற்கிறது. தமிழர்கள் பகுதிகளில் சிங்கள மக்களைக் குடியமர்த்தி அவர்களுக்கான பகுதிகள் சிங்களர் வசமாக்கப்படுகின்றன.

ஐ.நா. கவுன்சில் தலைவர் ஜெத்ராட் போர்க்குற்றங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன என்று பொதுவாகத் தெரிவித்துள்ளார். அதே சமயம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனாவை பாராட்டியுள்ளார். இதற்கு விசாரணை கமிஷனை இலங்கை அரசே அமைக்கப் போகிறது. அதாவது தான் செய்த குற்றங்கள் பற்றி தானே விசாரிக்கப் போகிறது. இதன் முடிவு என்னவாக இருக்கும் ?

முடிவு தமிழருக்கு சாதகமானதாக இருக்காது. சிங்களச் சார்பு ராஜபக்சே பலிகடாவாக்கப்பட்டு அவர் மேல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும். அதே சமயம் தமிழர் அழிப்புக்கு இலங்கையும், இந்தியாவும் சேர்ந்து செயல்பட்டு விசாரணையை ஒப்புக்கு நடத்தி முடிக்கும். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடரும். இந்திய நிறுவனங்களுக்கு இலங்கையில் கான்ட்ராக்டுகள் பல இதற்கு லஞ்சமாகக் கிடைக்கும். இந்திய அரசு தமிழருக்குச் செய்யும் துரோகம் தொடரும். அது மோடியோ அல்லது மன்மோகனோ அல்லது வேறு யாரோவாக இருந்தாலும் சரி.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.