Wednesday, May 16, 2012

'நடந்த கதை' - குறும்படம். விமர்சனம்.

நடிப்பு - கருணாகர், அருள் சங்கர், தர்மா, துரை சத்தீஷ், ஏழுமலை, பழனி,மணிவண்ணன்,சுபாகரன், லில்லி ஆசிரியர், கோவிந்தன், வீரராகவன், ஓவியன், நிறைமதி, கோகுல், தமிழ்ப் பிரியன், சுந்தரேசன்.
ஒலிப்பதிவு - R. சரவணன்           ஒலிக்கலவை - T.P. தர்மபிரகாஷ்
இணை ஒளிப்பதிவு - மணி   ஒளிப்பதிவு - இராசா மதி.
வரைகலை - செந்தில் 
கதை - அழகிய பெரியவன் (குறடு சிறுகதை)
படத்தொகுப்பு - A. L. ரமேஷ்  
இசை - மரியா மனோகர்
தயாரிப்பு - அருள் சங்கர்
திரைக்கதை, வசனம், இயக்கம் - பொன் சுதா.
வெளியீடு - நண்பர்கள் குழுமம்.
ஓடும் நேரம் - 21 நிமிடங்கள்.
வெளிவந்த ஆண்டு - 2010.

படம் முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும் நவம்பர் 2011ல் தான் யூ ட்யூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு சி.டி.க்களாக கிடைத்திருந்திருக்கக் கூடும்.தமிழ்நாடு முற்போக்கு கலைஞர் மற்றும் எழுத்தாளர் சங்கத்(தமுகஎச) தின் சிறந்த சமூக குறும்படத்திற்கான 2010 ஆம் ஆண்டு விருதைப் பெற்ற படம் இது. இது மட்டுமல்ல, இது போன்று மொத்தம் 16 விருதுகளைப் பெற்றிருக்கிறது இப்படம்.

இக்குறும் படத்தின் முக்கியமான விருதுத் தகுதி இது சமூகப் பிரச்சனையான ஜாதியை களமாகக் கொண்ட படம் என்பது தான். அழகிய பெரியவனின குறடு என்கிற சிறுகதையை குறும்படமாக எடுத்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். தமிழ் சினிமாவில் கதைகளையும், நாவல்களையும் படமாக்குவது என்பது அத்திப் பூத்தாற் போல நடக்கும் விஷயம் தான். தீண்டாமை என்கிற சமூகப் பிரச்சனையை மட்டுமே கதைக் களமாகக் கொண்டிருப்பதில் (ஒரு சைடு ட்ராக் காதல் கூடக் கிடையாது !) திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய இயக்குனர் பொன்.சுதா நேரமையாக இருந்திருக்கிறார். அவரை இதற்காகப் பாராட்ட வேண்டும்.

கதை. எளிமையான கதை. தாழ்த்தப்பட்ட சக்கிலிய சமூகத்தில் 'கீழத் தெருவில்' பிறந்த வீரபத்ரன் சிறுவயது முதலே தன் வாழ்வில் செருப்புப் போட்டு நடக்க ஏங்கி ஆசைப்படுவதையும் முடிவில் ராணுவத்தில் சேர்ந்ததன் மூலம் அந்த ஆசையை எப்படி நிறைவேற்றிக் கொண்டான் என்பதையும் காட்டும் படம். செருப்புப் போட்டு நடக்க ஆசைப்படுவது என்பது கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடியாமல் இருந்த காலங்கள் உண்டு. இன்று செருப்புப் போட்டுக் கொள்ள அவர்களுக்குத் தடையில்லை என்றாலும் தற்காலத்தில் தீண்டாமையும் 'நவீனமாகி' செருப்பு போட்டுட்டு போலாம் ஆனா மேலத் தெரு வழியா போகும் போது செருப்பை கால்ல மாட்டாம கையில தூக்கிக்கிட்டு போகனும் அப்படின்னு வேற வடிவம் எடுத்திருக்கு. செருப்புத் தைக்கிறவங்களா இன்னும் இருக்கிறவங்க சக்கிலிய சாதிக்காரங்கதான். இல்லையா ?

படம் துவக்கத்தில் கதாபாத்திரம் பேசுவதாய் சாதி பற்றிய ஆழமான சில வரிகளோடு பிரமாதமாய் ஆரம்பிக்கிறது. படத்தின் ஹீரோவாக (பல்வேறு வயதுகளில்)வரும் எல்லோருடைய நடிப்பும் பரவாயில்லை. ராணுவத்தில் சேரும் இளவயது வீரபத்திரனும் நடிப்பில் தேறிவிடுகிறார். சில இடங்களி்ல் சொதப்புகிறார். முதன் முதலாக ஷூ வை கையில் வாங்கியவுடன் அவர் காட்டும் உணர்வுகள் பொருந்தவில்லை. படத்தி்ன் மற்ற எல்லாப் பாத்திரங்களும் துணைப் பாத்திரங்களாகவே ஒற்றைத் தன்மையுடன் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஹீரோ சிறு வயதிலிருந்து வளரும் போது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு வில்லன் உயர் ஜாதியில் வளர்ந்திருக்கலாம். இது கதையைச் சொல்வதில் சுவராசியத்தை கூட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது.

படத்தின் ஜாதி சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் சீரியலை ஞாபகப்படுத்தும் அளவு சிறிது நாடகத்தன்மை கொண்டிருக்கின்றன. மேல் ஜாதிக்காரர்களாக வரும் எல்லோரும், அவர்கள் நடிப்பும் நாடகத்தையே ஞாபகப்படுத்துகின்றன. இராசா மதியின் ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கிறது. வீரபத்ரனை குழந்தையாக அறிமுகப்படுத்தும் காட்சியில் உட்கார்ந்திருக்கும் சிறு குழந்தையும் அவன் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் அனைவரும் 'செருப்பில்லாத கால்களாக' மாற்றி மாற்றி வந்து போகும் அந்தக் காட்சி பிரமாதமான காட்சியமைப்பு. அதை மனதில் உருவகித்த இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மற்றொரு இடம் மேலைத் தெருவில் அப்பாவுடன் நடந்து போகும் வீரபத்ரன் முதன் முதலாக பார்க்கும் காலணிகள்; அவனுடைய மன ஓட்டங்கள்; அதைப் பிரதிபலிக்கும் ஷாட்கள்; ரமேஷின் எடிட்டிங் இங்கு கச்சிதம். மரியா மனோகரின் இசை படத்திற்கு புதிதாக எதுவும் சேர்த்துவிடவில்லை என்றாலும் படத்தைக் காலி செய்யவில்லை. ஓ.கே. ரகம். ஒலிப்பதிவும் படத்திற்கு தேவையான அளவு அமைந்து உள்ளது.

அழகிய பெரியவனின் கதையில் யதார்த்தம் எவ்வளவு அழகியலுடன் வெளிப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் படத்தில் அந்த அழகியல் இல்லை. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கதாபாத்திரங்களைத் தவிர வேறு யாரும் மாந்தர்கள் நடமாடுவதே இல்லை. இது ஒரு வகையான புனைவுத் தன்மையை கொடுக்கிறது. இயக்குனரும் நிறைய காட்சிகளில் பாரதிராஜாவின் பன்ச் போன்ற புனைவுகளை கொடுத்திருக்கிறார் (உ.ம். மரத்தில் தொங்கும் செருப்புகள், கடைசியில் வீட்டுக்கு வீடு வாசலில் ராணுவ வீரர் ஓட ஓடத் தோன்றும் செருப்புகள்). சமூகப் பிரச்சனையை தனி மனிதனின் கோணத்தில் அலசிய விதத்தில் இப்படம் ஒரு வித்தியாசமான படம் தான்.

கதையின் கரு பற்றி கொஞ்சம் பேசவேண்டும். தான் பிறந்த ஊரில் செருப்பணிந்து நடக்கக்கூடாது என்கிற ஆதிக்க ஜாதியின் கொடுமையை எதிர்க்க சமூக ரீதியாக வழியில்லாத ஹீரோ ராணுவம் என்கிற மற்றொரு ஆதிக்க கருவியின் பால் தஞ்சமடைகிறான். ராணுவ வீரனான தான் 'யார் எதிர்த்தாலும் சுட்டுக் கொல்வேன்' என்கிறான். அவனை தெருவுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைய விட மறுக்கும் ஆதிக்க சாதி அவன் 'சுடுவேன்' என்றதும் தான் பயப்படுகிறது. இது 'பேய்க்குப் பயந்து பிசாசை கட்டிக் கொண்ட கதை' எனலாமா? ஆதிக்க சாதி, ஜாதி ஏற்றத் தாழ்வுகள் சமூகப் பிரச்சனையாக பல்லாயிரம் வருடங்களாக இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு தீர்வு என்பது மந்திரத்தில் வைத்தது போல் சடக்கென்று நிகழ்ந்துவிடாது என்பது தான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை கதையாளர் ராணுவத்தின் மூலம் மாற்றி விட ஆசைப்படுவதை கதை காட்டுகிறது.
ராணுவம் என்பது என்ன? எல்லையை பத்து, 20 வருடங்களுக்கு ஒரு முறை எப்போதாவது 'நடத்தப்படும்'(நடப்பது அல்ல நடத்தப்படுவது) சண்டையில் பாதுகாப்பது தவிர ராணுவம் மொத்தமும் மக்களை, அது சொந்த மக்களோ, அன்னிய மக்களோ, அவர்களை அடக்கி ஒடுக்கவே பயன்படுகிறது. காஷ்மீரில் ராணுவம், கூடங்குளத்தில் ராணுவம், ஒரிஸ்ஸா காடுகளில் ராணுவம் என்று ராணுவம் சொந்த மக்களை கொல்லப் பயன்படுவதே அதிகம். இப்படிப்பட்ட ராணுவம் தான் சாதிய பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பதாக கதை முடிகிறது. ராணுவம் பற்றிய (பாக்யராஜ் படங்களில் வருவது போல) ஜனரஞ்சகமான பார்வை இருப்பதால் தான் இந்த மாதிரி தீர்வுகளுக்கு எழுத்தாளர் போக நேரிடுகிறது. இந்திய ராணுவத்திலும் சாதியம் இருக்கிறது என்பது ஓர் உண்மை.

நமது இந்திய ராணுவம் ஆரம்பத்தில் வெள்ளையர் ஆட்சியில், இந்திய மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இந்திய அடிமைகளை வைத்தே வீரர் படை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அதே அமைப்புடன் தான் இன்னும் இருந்து வருகிறது. வெள்ளையர்கள் தான் படைப்பிரிவுகளை சாதிய அடிப்படையில் பிரித்தனர். போராடும் 'வீரமான' சாதியைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்படும் சாதிக்காரர்களின் சாதிகளின் பெயர்களில் படைப்பிரிவுகள் (உ.ம். ஜாட், கூர்க்கா, ராஜ்புத், சீக்கியர்கள் ) அமைந்திருந்தன. இந்தியா சுதந்திரமடைந்ததும் சாதீய, இன முறைப்படி படைப்பிரிவுகளை அமைக்க வேண்டாம் என விதிமுறைகள் மாற்றப்பட்டன. ஆனாலும் பொற்கோயிலில் ராணுவம் நுழைந்த போது பயன்படுத்தப்பட்டது 'தமிழ்நாடு(தமிழர்) படைப் பிரிவு'. சீக்கியர்களின் அரசு மீதான கோபம் தமிழர்களின் மீதான கோபமாக அங்கே மாற்றப்பட்டது. அது இந்திய அமைதிப்படை 1987ல் இலங்கைக்குக் சென்ற போது வெடித்தது. இலங்கையில் தமிழர்களை கொன்று, வன்புணர்ந்து வெறியாட்டம் ஆடியது சீக்கியப் படைப் பிரிவு. இந்திரா காந்தி கொலைக்குப் பின் ராணுவத்தில் சாதீய, இன ரீதியான பிரிவுப் பெயர்கள் திரும்பவும் வைத்துக் கொள்ளப்பட்டன.

ஒரு பத்து நாட்களுக்கு முன்பு ப்ரணாப் முகர்ஜி ராணுவத்தில் இருக்கும் முஸ்லீம்களின் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூறி மாட்டிக் கொண்டார். ராணுவத்தில் ஜாதி இருக்கிறது. ஜாதிக் கொடுமைகள் நேரடியாக இனம் கடந்து இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள பறையன் என்பவன் தாழ்த்தப்பட்டவனா இல்லையா என்று வடக்கத்திய உயர் சாதியினனுக்குத் தெரியாது. ஆனால் ஒரு இனத்துக்குள்ளே இருக்கும் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் அப்படியே இருக்க வாய்ப்பிருக்கின்றன. உதாரணமாக தமிழ்நாடு ரெஜிமண்டுக்குள் இருக்கும் எல்லா தமிழர்களுக்கும் ஒருவருடைய சாதி மற்றவருக்குத் தெரியும் ஆதலால் சாதி வேற்றுமை கண்டிப்பாக ஏற்படுகிறது.

இவவளவும் இருக்கட்டும். சரி,  படம் 'மிக'ச் சிறந்த படமா என்றால்  இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல படம். மோசமான படமில்லை. அந்தப் பதினாறு விருதுகளும் இது சாதிய பிரச்சனையை கையாண்ட காரணத்திற்காகவே இந்தப் படத்திற்கு கிடைத்திருக்க நிறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் இதைச் செய்யக் கூட  விரும்பாதவர்களே தமிழ் சினிமாவில் அதிகம்.

2 comments:

  1. நல்ல பகிர்வு


    ஆனால் தமிழ் சினிமாவோடு இதை எதற்கு

    தொடர்பு படுத்துகிறீர்கள் என புரியவில்லை ?


    நன்றி

    ReplyDelete
  2. குறும்படம் என்றாலும் தமிழ் சினிமா தானே..

    ReplyDelete

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.