Sunday, February 26, 2012

பரமக்குடி துப்பாக்கிச்சூட்டின் மீதான பொதுவிசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கை வெளியீடு



டிசம்பர் 3, 2011. சென்னை. லயோலா கல்லூரி.

காலை எட்டு மணித் தூக்கத்தை மதுரையிலிருந்து வந்து கெடுத்த தீண்டாமை ஒழிப்பு முண்ணணியைச் சார்ந்த நண்பர் ஒருவர் சொல்லித்தான் கடந்த செப்டம்பர் 11 அன்று, காவல்துறையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட, பரமக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வின், காரணங்களை அறிய ஒரு பொது விசாரணைக் குழு அமைக்கப்பட்டதும், அக்குழு விசாரித்து இப்படி ஒரு அறிக்கை வெளியிடப்படுவதே தெரியும். இத்தனைக்கும் நான் எல்லா நியூஸ் சானல்களையும் நாளைக்கு மூன்று வேளையும் மேயும் கழுதை தான். இருட்டடிப்பு?!. ஆச்சரியப்பட்டவாறே மாலை சுமார் 4 மணி அளவில் நானும் நண்பரும் லயோலா கல்லூரி வாசலை அடைந்தோம்.

வாசல் செக்யூரிட்டி நமது வாகனத்தை நிறுத்தி வண்டியின் எண்களை பிழையின்றி எழுதியபின் உள்ளே அனுமதித்தார்.
கல்லூரி விடுமுறை தினம். மாணவர்கள் தென்படவில்லை.
விடுதி மாணவர்கள் ஒன்றிரண்டு பேர் எப்போதாவது உலவினார்கள்.

லயோலாக் கல்லூரியின் மைதானத்தைப் பார்த்தபடி நின்றிருந்த பெரியதொரு ஹால் அது. இரண்டாயிரம் பேரை அடைத்து வைக்கலாம். ஹாலின் முன்புறமிருந்த பெரிய பெரிய மரங்களின் நிழல்களில் புத்தகங்களின் விற்பனை களை கட்டியிருந்தது. கூட்டம் துவங்கும் நேரம் சரியாகத் தெரியவில்லை.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது மக்கள் கண்காணிப்பகம் (People’s Watch) என்கிற தன்னார்வ மனித உரிமை இயக்கம்(NGO).
பளிச் சென்ற ப்ளக்ஸ்கள் வாசலில் வரவேற்றன. வாசலில் மக்கள் கண்காணிப்பகத்தின் ப்ராஜக்ட்கள் பலவும் புத்தக வடிவில் கிடைத்தன. வாசலில் ஒரு ஆள் உயர ப்ளக்ஸ்களில் பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்து போன ஒவ்வொரு நபரின் பெயர், அவர் மேல் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடங்கள், உடலில் மேலிருந்த காயங்கள், அவர் எவ்வாறு கொல்லப்பட்டிருப்பார் என்பதை விளங்கவைக்கும் விவரங்களோடு புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன.

அப்போது தான் அதில் கொடுக்கப்பட்டிருந்த பேச்சாளர்களின் பட்டியலைப் பார்த்தேன். அதிர்ச்சி.. ஆச்சரியம். மு.க.ஸ்டாலின் தி.மு.க, நல்லகண்ணு சி.பி.ஐ, பழ.நெடுமாறன் த.தே.இ, மருத்துவர் ராமதாஸ் பா.ம.க, வை.கோ ம.தி.மு.க, ஜி.ராமகிருஷ்ணன் சி.பி.எம், திருமாவளவன் வி.சி., கொளத்தூர் மணி பெ,தி.க, ஜவாஹிருல்லா ம.நே.ம.க, ஜான் பாண்டியன் த.ம.மு.க, பெ.மணியரசன் த.தே.பொ.க, ஆம்ஸ்ட்ராங்க் பி.எஸ்.பி, சிவகாமி சமத்துவப்படை, பாலசுந்தரம் இ.க.க ம-லெ, சிதம்பரநாதன் , தீரன் நாம் தமிழர் என்று 16 பேரின் பெயர் போடப்பட்டிருந்தது. அதிமுக, காங்கிரஸ், பிஜேபி தவிர கிட்டதட்ட எல்லா கட்சிகளும் கலந்துகொள்ள இருக்கின்றன.

எனக்கோ ஆச்சரியம். அப்படியென்றால் கட்சிக்கு முன்னூறு பேர் என்றாலும் கூட்டம் ஹால் கொள்ளாதே என்று நினைத்தபடியே உள்ளே நுழைந்தோம். ஒவ்வொரு தலைவராக வர ஆரம்பிக்க கூட்டம் பெரிதானது. முன்கூட்டியே தயாராக விளம்பரம் ஏதும் செய்யாமல் இருந்திருந்தும், சுவரொட்டிகளோ, பத்திரிக்கை விளம்பரங்களோ கொடுக்காமல் இருந்திருந்தும்(ஏன்?) கிட்டத்தட்ட 2000 பேர் வந்து ஆஜராகிவிட்டார்கள்.

மேடையில் வே.வசந்தி தேவி, கருப்பன் ஐ.ஏ.எஸ், திரு சுதா ராமலிங்கம், வி. கிருஷ்ணா ஆனந்த், டாக்டர் சேவியர் செல்வ சுரேஷ், பேரா. கல்விமணி, பொன்னீலன் மற்றும் தியாகு உள்ளிட்ட பொதுவிசாரணைக் குழுவின் நடுவர் குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

மேடையில் பேசிக் கொண்டிருந்த மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த அம்மணியும், பின்னர் பேசிய பலரும் குறிப்பிட்டது இது: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை சாதிக் கலவரம் (இரு சாதிகளுக் கிடையே சண்டையே அங்கு வரவில்லை) என்று சட்டசபையில் புளுகிய ஜெயலலிதா அம்மையார் அதை விசாரிக்க அவசரமாக ஒரு கண்துடைப்பு தனி நபர் கமிஷனையும் ஏற்பாடு செய்தார்.
ஆனால் பரமக்குடி மக்கள் எந்தக் கிராமத்திலும் இவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவே இல்லை. யாரும் வந்து சாட்சியமும் கூறவில்லை. ஏனென்றால் அப்பாவி மக்களைக் கொன்றது அரசின் காவல்துறை தானே. ஆனால் தன்னார்வக் குழுவினர் தலைமையில் சென்ற பொதுவிசாரணைக் குழுவிடம் எல்லா பாதிக்கப்பட்டவர்களும் வந்து விரிவாக வாக்குமூலம் தந்தார்கள்.

இந்த விரிவான வாக்குமூலங்களைப் பெற்று ஆய்வு செய்து 500 பக்க அறிக்கையொன்றை தயாரித்தது பொதுவிசாரணைக் குழு. அவ்வறிக்கை தான் இன்று வெளியிடப்படுகிறது. மேடையில் முழங்கிக் கொண்டிருந்த தன்னார்வக்குழு அம்மையார் முடித்தவுடன் அறிக்கையை வந்திருந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் சேர்ந்து வெளியிட்டனர்.

பின் தீண்டாமை ஒழிப்பு முண்ணணியின்(சிபிஎம் சார்பு) மாநிலச் செயலாளர் சாமுவேல் ராஜ் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. வரிசையாக ஒவ்வொரு தலைவராக அழைக்கப்பட பேசினர்.

முதலில் திமுக சார்பாக வீராவேசமாகப் பேசிய திமுக செயலாளர்(இவர் ஒரு தலித்) உடனே கிளம்பிவிட்டார். பின்பு பேசியவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்.
தேவரின் குருபூஜைக்கு காங்கிரஸ் முதல் அம்மா வரை எல்லாரும் தவறாமல் ஆஜராவதையும் அதற்கான தடபுடல் ஏற்பாடுகளையும் அதே நேரத்தில் தலீத்துக்களின் தலைவர்களுக்கான விழாவிற்கு ஊரடங்குகளும், தடையுத்தரவுகளும் பிறப்பிக்கப்படுவதையும் சுட்டிக் காட்டினார். கருணாநிதி யாரோ உயர் சாதித் தலைவர்களை வரவேற்கப் போனதை சுட்டிக் காட்டினார். தலித்துக்களுக்கான பஞ்சமி நிலங்கள் கூட அவர்களுக்குக் கொடுக்கப்படாமல் இருப்பது பற்றி அரசுகள் கண்டுகொள்வதே இல்லை என்று குற்றம் சாட்டினார்.

அடுத்துப் பேசிய சிபிஐ நல்லகண்ணு பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காவல் துறை செய்த சூழ்ச்சி என்றார். அதில் கொல்லப்பட்டவர் ஒருவர் இளநீர் விற்பவர், ஒருவர் தம் பெண்ணின் திருமணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கச் சென்றவர், இன்னொருவர் தனது பிரசவத்திற்கு வந்த மனைவியையும், குழந்தையையும் பார்க்க வந்திருந்தவர். இவர்கள் யாரும் குருபூஜைக்கு வந்தவர்களோ அல்லது போராடிய போராட்டக்காரர்களோ அல்ல. ஆனால் அனைவரும் தலித்துகள்.
மேலும் இது போன்று சாதிச் சண்டைகளோ, இனச் சண்டைகளோ கிளப்பி விடப்படும் இடங்களில் பெரும்பாலும் முதலில் சொல்லப்படும் குற்றச்சாட்டு பெண்ணை மானபங்கப் படுத்தினான் என்பது. அது எதிர்ப்புறத்தின் மீது வெறுப்பை உடனே ஏற்படுத்தும் ஆயுதம் என்பதால் இங்கு காவல் துறை அதைச் செய்திருக்கிறது என்றார். இம்முறை அவர்கள் சொன்ன காரணம் பெண் சப்-இன்ஸ்பெக்டரை போராட்டக்காரர்கள் கையைப் பிடித்து இழுத்தார்கள் என்பது. காவல் துறை அங்கே இரண்டு நாட்களாக ஆயுதங்களுடன் நிற்கிறது. சுற்றிச் சூழ்ந்து எங்கு பார்த்தாலும் நிற்கும் காவல் துறைக்கு அப்படி யாரேனும் அத்துமீற முயன்றிருந்தால் அவர்களை ஏன் உடனே பிடித்து கைது செய்யவில்லை. துப்பாக்கிச் சூடு வரை போவானேன். மேலும் பேசிய அவர் சாதிச் சண்டைகளே முதலில் இல்லை என்கிற நிலை ஏற்பட வேண்டும் என்றார்.

பழ.நெடுமாறன் பேசிய போது தலித்துகளின் பொருளாதார நிலை இன்று வரை மேம்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். அதனால் அவர்களால் கோர்ட், கேஸ் என்று கூட அலைவது வாழ்க்கையைத் தொலைப்பது போலாகும் என்றார். அன்று ஜான் பாண்டியனை கைது செய்ததற்காக மறியல் செய்தவர்கள் ஆயிரம் பேரல்ல. வெறும் முப்பது நாற்பது பேர். அங்கே திரண்டு நின்ற போலீசோ நூற்றுக் கணக்கில் இருக்கும். இந்த சில நூறு போலீசால் முப்பது நாற்பது பேரை அவர்கள் வன்முறையே செய்திருந்தாலும் சுற்றி வளைத்துப் பிடித்திருக்க முடியும். அப்படியிருக்க துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்றார். இதில் ஒருவரின் நெஞ்சின் மீது கைத்துப்பாக்கி வைத்து சுடப்பட்டு அது பின்புறம் துளைத்து வெளிவந்து அவர் இறந்திருக்கிறார். இருவர் போலீசால் சுற்றி வளைத்து அடித்தே கொல்லப்பட்டு இருக்கிறார்கள். காயம் பட்டவர்கள் யாருக்கும் ஒரு கை முறிவு, ஒரு கால் முறிவு என்று தற்செயலாக நிகழ்ந்த காயம் போல இல்லாமல் ஒவ்வொருவருக்கும் மூன்று அல்லது நான்கு இடங்களில் முறிவுகள், உடலில் இடைவெளி விடாமல் அடிபட்ட காயங்கள் இப்படி கொடூரமாக குறிவைத்து தாக்கப்பட்டது தெரிகிறது என்றார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் பேசும் போது சட்டசபையில் முதல்வர் மோசடியாகக் கூறியபடி அது ஜாதிகளுக்கிடையே நடந்த கலவரம் அல்ல. காவல் துறையின் அத்துமீறிய செயல் என்று குறிப்பிட்டார்.
பின்னர் ஜான் பாண்டியன் உணர்ச்சி பொங்கப் பேசினார். அவரை முன்னெச்சரிக்கையாக கைது செய்தவர்கள் ஏன் காவல்துறை துப்பாக்கிச் சூடு பயிற்சி மைதானத்தில் கொண்டு போய் தன்னை சிறை வைத்தார்கள் என்று கேட்டார். ஜான் பாண்டியன் என்கவுன்டர் செய்யப்படுவாரோ என்கிற பதற்றமே பரமக்குடியில் அவர்களை மறியல் செய்ய வைத்தது. மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்டின் செரின் மற்றும் பாலசுந்தரம், சிதம்பரநாதன், நாம் தமிழர் இயக்கத்தின் தீரன் முதலானோர் பேசினர்.
விழா முடியும் சமயத்தில் கொஞ்சம் முன்கூட்டியே வெளியே வந்தால் வாயிலில் ஒரு டி.வி.க்காக சுற்றிலும் விளக்குகள் பளபளக்க ஒரு சாதீய இயக்கத்தின் முக்கிய பொறுப்பிலுள்ள ஒருவர் வீராவேசமாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். சுற்றிலும் அவரைப் படமெடுக்கும் பாம்புகள் போல் நாற்புறமும் கேமராக்கள் அவரை கவர் செய்தன. அவர் நினைத்திருப்பார் இன்றைக்கு சன் டி.வி.யின் தலைப்புச் செய்தி நாம தான் என்று. பாவம் அவர். அன்று தலைப்புச் செய்தி நயன்தாரா. அன்று, அடுத்த நாள், அந்த வாரக் கடைசியில் கூட நான் தொலைக்காட்சியில் இப்படி ஒரு கூட்டம் நடந்த்தையோ, இவ்வளவு தீவிரமான பேச்சுக்கள் பேசியதையோ எந்தத் தொலைக்காட்சியிலும் காணவில்லை திருமாவின் தமிழன் தொலைக்காட்சி தவிர. சரியான சோம்பேறி நிருபரான நான் இந்தக் கட்டுரையை முடித்து வெளியிட இவ்வளவு நாள் ஆகி விட்டது.

பரமக்குடியில் அநியாயமாய் கொல்லப்பட்ட ஆத்மாக்கள் என்னை மன்னிக்கட்டும்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.