Monday, October 26, 2009

சீனாவின் இந்திய பொதுஜனத் தொடர்பாளர்.

by - டென்சிங் சோனம்(Tenzing Sonam). புதன் 26 டிசம்பர் 2007.

ரஷ்யப் புரட்சியின் ஆரம்பநாட்களில் புரட்சியை கண்கள் விரியப் பார்த்த மேற்கத்திய புரட்சி அனுதாபிகள் மாஸ்கோவிற்குத் தேனீக்களைப் போல் பறந்து சென்று ‘சோவியத் சொர்க்கம்’ பற்றி அறிக்கைகள் வெளியிட்டனர். லெனின் அவர்களை ‘பயனுள்ள முட்டாள்கள்’ என்று வருணித்ததுடன், அவர்களின் அப்பாவித்தனத்தை மேற்கத்திய நாடுகளுக்கு கம்யூனிஸக் கருத்துருவாக்கத்தைப் பரப்பவும் உபயோகப்படுத்திக்கொண்டார். அப்படிச் சென்ற ஒரு ‘முட்டாள்’ப் பத்திரிக்கையாளர் லிங்கன் ஸ்டீவன்ஸ்(Lincoln Steffans). ரஷ்யாவின் விருந்தினராக 1919ல் டூர் அடித்த ஸ்டீவன்ஸ்
“நான் எதிர்காலத்திற்குள் சென்றிருந்தேன்.. அது வேலை செய்கிறது” என்று கண்மூடித்தனமாகப் புகழ்ந்து எழுதியிருந்தார். அந்த ‘எதிர்காலத்திற்கு’ என்னவானது என்று நமக்குத் தெரியும்.

இந்த மேற்கத்திய புத்திஜீவிகள் ஸ்டாலினுடைய அதீதமான செயல்பாடுகளில் மனமுடைந்ததற்குப் பின் தோன்றிய, ஒரு புதிய தலைமுறை இடது சாரிக் கருத்தியலாளர்கள் மாவோ மற்றும் சீனப் புரட்சியை ரஷ்யாவில் உடைந்துபோன தங்கள் இடதுசாரிக் கருத்தியலின் ஊன்றுகோலாகக் கொண்டனர். லெனினைப் போலவே மாவோவும் இந்த அப்பாவிகளின் குருட்டுத்தனமான போக்கை தனக்குச் சாதகமாக உபயோகப் படுத்திக் கொண்டார். உண்மையுடன் சம்பந்தமில்லாத சீனப் பெருமை கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டன. மாவோவுடைய புகழ் செறிந்த ‘நீண்ட பயணம்’ பற்றிய எட்கர் ஸ்னோ (Edgar Snow) வின் குறிப்புகள் எல்லாம் புனைவுக்கதைகள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இப்போது திபெத்தும் சீனாவால் பொருக்கியெடுக்கப்பட்ட மேற்கத்திய கைக்கூலிகளின் மூலம் சிதைக்கப்பட்ட உண்மைகளால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 1960களில் தவறான கம்யூனிசக் கொள்கைகளின் விளைவாக திபெத் முதன்முறையாக பஞ்சத்தில் சுருண்டு விழுந்த காலத்தில்தான், ரோமா(Roma) மற்றும் ஸ்டூவர்ட் ஜெல்டர் (Stuart Gelder)ன் ‘சரியான நேரத்து மழை’(Timely Rain) என்கிற சீனப் பயண புத்தகம் வெளிவந்தது. 1975ல் வெளிவந்த ஹான் சுயின்(Han Suyin)ன் நம்பிக்கையூட்டும் தலைப்புகொண்ட புத்தகம் ‘லஹாசா : ஒரு திறந்த நகரம்’ (Lhasa: The open City) வெளிவந்த காலத்தில்தான் திபெத் தற்போதைய வடகொரியாவைப் போல் வெளி உலகத்தின் பார்வை பட அனுமதிக்காத மூடப்பட்ட நாடாக இருந்தது. இம்மாதிரி விருந்தினர்களின் எழுத்துக்களெல்லாம் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே காலாவதியாகிப்போனதோடு, மாவோவின் ‘பொதுவுடைமைப்’ பரிசோதனைகளில் நிகழ்ந்த பயங்கரமான மனித இழப்புகளும் தற்போது வெளிப்படுத்தப்பட்ட நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரைத் தவிர மற்ற எல்லா அம்சங்களிலும் முதலாளித்துவம் நிரம்பியிருக்கிறது.

இவற்றின் பின் தற்போது நாம் காண்பது என். ராமின் (N. Ram) சமீபத்திய எழுத்துக்களை. இந்தியாவின் பெருமளவில் தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தேசிய நாளிதழ் ‘இந்து’(The Hindu)ப் பத்திரிக்கையின் பதிப்பாசிரியரான ராமின் வெட்கமில்லாத ஒரு பக்கச் சாய்வுடைய எழுத்துக்கள் சீனாவின் ஆட்சி பற்றிய அதே உணர்வுபூர்வமான வியப்புடனும் நம்பகத்தன்மையின்றியும் உள்ளன. திபெத்தின் மீது செயற்படும் சீனாவின் கொள்கைகளின் நேர்மை பற்றி முகஸ்துதி செய்யும் ஆர்வத்தில் அவர் அச்சமூட்டும் வகையில் ஸ்டீவன்ஸை அப்படியே எதிரொலிக்கிறார். இந்தக் கோடையில் திபெத்திற்கு சீனாவின் அதிகாரபூர்வ விருந்தினராக ஒரு வாரம் வழிகாட்டப்பட்ட சுற்றுலா சுற்றி வந்ததும் அவர் நம்பிக்கையோடு அறிவித்தது இது :
“இன்னும் ஒரு கால் நூற்றாண்டுகளிலோ அல்லது அதற்கு முன்போ திபெத் ஒரு முழுவளர்ச்சியடைந்த சமூகம் என்ற நிலையை அடைந்திருக்கும்”.
தன்னுடைய முன்னறிவிப்பை உறுதிப்படுத்த ‘இந்து’வில் இரு நீள கருத்துக் கட்டுரைகளும்(opinion piece) அதன் குழுமப் பத்திரிக்கையான ப்ரன்ட்லைனில் (Frontline) ஒரு நீண்ட கட்டுரையும் ஜூலையில் ராம் வெளியிட்டார். இந்தக் கட்டுரைகளுக்கு அவர் திரட்டிக் கொண்ட ஆதாரங்கள், அந்த ஒரு வாரச் சுற்றுலா போக ராம் மந்திரங்கள் போன்று கருதிய சீன அரசின் புள்ளிவிவரங்கள் மட்டுமே. இப்புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மைகள் குறைவு என்பதற்காக சில உதாரணங்கள்:
“[திபெத்தின்] பொருளாதாரம்...13.2% க்கும் அதிகமாக வளர்ந்தது”; “மொத்த தேசிய உற்பத்தி(GDP) 29 பில்லியன் யென்கள்(Yuan) அளவு உயர்ந்தது” ; “உணவுதானிய உற்பத்தி 9,20,000 டன்கள்” ; “96.5% குழந்தைகள் பள்ளியில் பயிலுகின்றனர்” ; “இதுவரை காணாத அளவிற்கு, 1.5 பில்லியன் யென்கள் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளால் வந்துள்ளது”…
இப்படிப் பல. இவ்வளவிற்கும் ராம் பேட்டிகண்ட திபெத்தியர் ஒரே ஒருவர்தான் எனத் தெரிகிறது. அவர் திபெத்திய அரசின் அவைத் தலைவர்(Vice-Chairman) மட்டுமே.

ராம் தோற்றமளிப்பது போல் அவ்வளவு அப்பாவியா? தனது திபெத்தினூடான கார்ப் பயணத்தைப் பற்றிஅவர் இதமாக இவ்வாறு எழுதுகிறார் :
“நீங்கள் வெளியுலகுடன் எவ்வளவு எளிதில் தொடர்புகொள்ளமுடியும் என்பது ஒரு ஆச்சரியம். உங்கள் கைபேசியில்(mobile) அல்லது பி.டி.ஏ (PDA)யில் உள்ள GPRS லகாசா-சிகாஸ்(Lhasa-Xigaze) நெடுஞ்சாலை முழுதும் வேலை செய்கிறது. இணையதளத்தில் உலாவி செய்திகள் படித்தபடியும் உங்கள் மின்னஞ்சலில் பதில் அனுப்பியபடியும் பயணிக்கும் நீங்கள் திபெத்தியர்களின் வாழ்க்கை முறையை சிறுகுறிப்பாக உணரலாம்”.
ஆனால் ‘டியனான்மென்’, ‘தலாய் லாமா’ என்பது போன்ற, சீன அதிகாரிகளால் அரசுக்கு விரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இன்னும் பல வார்த்தைகளை அவர் இணையதளத்தில் தேடிப்பார்த்திருக்க வேண்டும் அங்கே. அப்போது உலகின் மிகச் சிறந்த, வலிமையான ‘சீனப் பெரும் இணையதளச் சுவர்’(Great Firewall of China) என்கிற இணையதள தணிக்கை மென்பொருள் பற்றி அறிந்திருக்கமுடியும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ராம் தனது வாசகர்களை வேண்டுமென்றே ஏமாற்றுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

சமரசத்துக்குள்ளான புறநிலைநோக்கு(Objectivity)
திபெத்தைப் பொறுத்தவரை ராம் தனது ஒருபக்கச் சார்பில் வெளிப்படையாகவே உள்ளார். தலாய் லாமாவை தாக்கும் அவர் தலாய் லாமாவை அயதுல்லா கொமைனியுடன் (Ayatollah Khomeini) ஒப்பிடுகிறார். பனிப்போர்காலத்திய வார்த்தைப் பிரயோகங்களுடன், ‘தலாய் லாமா காலனியாதிக்க நோக்கங்களுடன் மற்றும் மேற்கத்திய சக்திகளுடன் கைகோர்த்திருப்பதற்கு’ எதிராக தலாய் லாமாவைத் தாக்குகிறார் ; “தலைசிறந்த திபெத்தை ஒரு இயக்கத்தின் மூலம் தாய்நாட்டிலிருந்து பிரித்து எடுத்துச் செல்ல விரும்புகிற தகுதியில்லாத ஒரு அரசியல்வாதி” என விமர்சிக்கிறார். இந்த விமர்சனத்தை நாம் சீனாவின் கைகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ள, சீனாவின் பொருளாதாராத்தையே உயர்த்தி நிற்கும், அமெரிக்க அரசின் பங்குப் பத்திரங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, இந்த மேற்கத்திய சக்திகளுடன் கைகோர்த்திருப்பது சீன அரசா அல்லது தலாய் லாமாவா என்ற கேள்வி எழாமலில்லை. சீனா, திபெத்தை வன்முறையாகக் கைப்பற்றியதானது வல்லரசுகளின் காலனியாக்கத்தின் அம்சமாக இருப்பதை நாம் சுட்டிக் காட்ட முடியும்.

ராம் கூற்றின் படி,
“மறுபிறவி சம்பந்தமான திபெத்திய புத்தமத நம்பிக்கைகள் இறைத்தன்மை-மதம் சம்பந்தப்பட்டவையாகவும் 21ம் நூற்றாண்டு ஆத்திகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பனவாகவும் இருக்கும், அதேசமயம் தலாய்லாமாவின் மறுபிறவி சம்பந்தமான அனுகுமுறை கூட அரசியல்-கருத்தியலாகவும் இருக்கிறது”.
மேலும் அவர்,
“பீஜிங் அரசு நூறாண்டுகள் பழைய சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகளை ” தொடர்ந்து பின்பற்றி வருவதனால், “தலாய் லாமா மற்றும் பன்ச்சென் லாமா(Panchen Lama)க்களை அங்கீகரிக்கவும், நியமிக்கவும் அதிகாரம் பெற்ற அரசாகிறது”.
இக்கூற்றிலுள்ள வரலாற்றுத் துல்லியம் கேள்விக்குரியது என்பதுடன் பின்வரும் கேள்வியையும் எழுப்புகிறது. தம்மை நாத்திகராக வெளிப்படையாக இனங்காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த 21ம் நூற்றாண்டில், இறைத்தன்மை-மதம் சார்ந்த அரசுக்குள் தலையிட வேண்டிய அவசியம் என்ன ?

“சைனாவின் அரசியலமைப்பு எல்லா குடிமக்களுக்கும் மதரீதியான சுதந்திரத்தையும், இனச்சிறுபான்மையிருக்கு பிரதேச சுயாட்சியையும் பரந்த சீனாவின் பெரும்பான்மையான பகுதிகளில் அளித்துள்ளது”
என்று ராம் உறுதியளிக்கிறார். ஒரு சட்டம் இருப்பதைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே அதன்படி எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை நிரூபிக்குமா ? ராம் போன்ற மேன்மை தாங்கிய பத்திரிக்கையாளர்கள் திபெத்தில் மட்டுமின்றி சீனா முழுதும் பரவி இருக்கும் மதரீதியான ஒடுக்குமுறைகளைப் பற்றி அறியாதவர்களல்லர். திபெத்தில் தலாய் லாமாவின் படத்தை வைத்திருப்பது இன்றும் கூட குற்றம் தான். அம்னெஸ்டி இன்டர்நேஷனல்(Amnesty International)ன் 2006 அறிக்கையின் படி,
“திபெத்தில் மதம், கருத்து மற்றும் சங்கம் சம்பந்தமான சுதந்திரங்கள் தொடர்ந்து மறுக்கப்பட்டுக் கொண்டிருப்பதோடு, தன்னிச்சையான கைதுகளும் நேர்மையில்லாத வழக்குகளும் தொடர்கின்றன”.

தவிரவும், ராம் தனது பழைய கருத்துக்களான “சீனாவின் முன்னெப்போதுமில்லாத பொருளாதார வளர்ச்சி” மற்றும் “உள்ளடக்கும் மற்றும் நெகிழ்ந்து கொடுக்கும் சமூக-அரசியல் மற்றும் பண்பாட்டுக் கொள்கைகள்” என்பன திபெத்தின் விஷயத்தில் அது காட்டும் “அளவுகடந்த பொறுமை”யின் குறியீடுகளாகக் காட்டுகிறார். நாட்டில் ஏழை பணக்காரர் இடையேயான பிரிவு வளர்ந்திருப்பதை சீனாவே ஒப்புக்கொண்டிருக்க ராமின் கூற்று ஒரு மிகைப்படுத்தப்பட்ட புகழ்ச்சி. இதில் கவனம் ஈர்க்கும் விஷயம் ராம் இன்னும் சீனாவின் மார்க்சியப் பாதையில் நம்பிக்கையோடு இருப்பது தான்.
“நாட்டின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க மார்க்சிய-லெனினிய வழியில் சட்டம் தேசிய பிரதேச சுயாட்சியை அடிப்படை அரசியல் அமைப்பாகக் கொண்டிருக்கிறது” என்கிறார்.
சீனக் கட்சியானது தற்போது ஜனநாயகச் சுதந்திரம் அல்லது சங்க உரிமைகள் போன்றவற்றால் கட்டுப்படுத்த இயலாத “லெனினிய முதலாளித்துவ” த்தைத் தொடங்கியுள்ளது நாம் நன்கறிந்ததே. இந்தப் புள்ளியில் பீஜிங்கின் ஆட்சியாளர்களின் தற்போதைய ஒரே கோட்பாடு எவ்வளவு விலைகொடுத்தும் சர்வாதிகாரத்தைக் கையில் வைத்திருப்பது தான்.

திபெத்தின் தலையெழுத்தை கேள்விக்கிடமின்றி சீன ஆட்சியாளர்களிடம் கையளித்த ராம் இதில் இந்தியாவின் பங்கை மறந்துவிடுகிறார்.
“திபெத்தானது பகை நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகளைத் தாங்கும் இடைநிலை அரசாக ஆசியாவில் பல நூற்றாண்டுகளாக கருதப்பட்டு வந்திருக்கிறது”
என்கிற தலாய் லாமாவின் கூற்றை மறுக்கிறார். ஆனால் உண்மையில் 1960ல் மக்கள் விடுதலைப் படை(People’s Liberation Army) திபெத்தைக் கைப்பற்றும் வரை இநதியாவிற்கும் சீனாவிற்குமிடையே பொதுவான எல்லைகள் இருந்ததில்லை. சென்ற ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் யக்சிய்(Sun Yuxi)ன்
“அருணாச்சலப் பிரதேச மாநிலம் முழுவதும் சீனாவுக்குச் சொந்தமானது”
என்று கூறியதற்கு ராமின் பதில் என்ன ? திபெத்தின் இறையாண்மை வன்முறையாக ஒடுக்கப்படாமல் இருந்திருந்தால் சீனா தற்போது இம்மாதிரி வாக்கியங்களை உதிர்த்திருக்கமுடியுமா என்பது இந்து நாளிதழின் பதிப்பாசிரியருக்கு உறுதியாகத் தெரியும். தற்போது இந்துவும், ப்ரன்ட்லைனும் சீனாவின் திபெத்திய ஆக்கிரமிப்பை முழு ஆதரவுகொடுத்து எழுதுவது போல, எந்த சீனப் பத்திரிக்கையாவது இந்தியாவின் இறையாண்மைக்காக அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் பகுதி என்று ஆதரித்து எழுதுமா ? அல்லது ராமின் வெவ்வேறு நாடுகளின் ஜனநாயகச் சுதந்திரத்திற்கான அளவுகோல் நாட்டுக்கு நாடு மாறுபடுமா ?

உலகின் தலைசிறந்த பத்து பத்திரிக்கைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்ட இந்துப் பத்திரிக்கைக்கு ஜூன் 2003ல் பிரதம பதிப்பாசிரியராக ராம் பொறுப்பேற்றது முதலே, அவருடைய தீவிர சீனச் சார்பு நிலையானது பத்திரிக்கையின் புறநிலை நோக்கைச் சமரசம் செய்ய வைத்துள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
உலகின் அனைத்துத் தரப்பு நிருபர்களாலும் “உலகின் மிகப்பெரிய பொய்ப் பிரச்சார நிறுவனம்” என்று அழைக்கப்படும் சீன அரசுச் செய்தி நிறுவனமான சின்ஹூவா(Xinhua)வின் செய்திகளை அப்படியே வரி பிசகாமல் வெளியிடும் ஒரே பிரபல இந்தியப் பத்திரிக்கை இந்து நாளிதழ் தான். இந்துப் பத்திரிக்கையின் செய்தியாளர்கள் தங்களுக்கு திபெத், தலாய் லாமா மற்றும் பாலுன் கோங்(Falun Gong) பற்றிய கதைகள் எழுதும் போது அவை சீன அரசுக்கு எதிராக இருந்தால் எழுதவேண்டாம் என உத்தரவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ராம் பதவியேற்றது முதல் இந்து நாளேட்டில் வெளிவந்த செய்திகளை மேம்போக்காகப் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும்.

நம் முன் எழும் முக்கியக் கேள்வி என்னவெனில், இவ்வளவு பிரபலமும், முக்கியத்துவமும் உடைய பத்திரிக்கையாளர் தனது சுய வளர்ச்சியையே பணயமாக ஏன் வைக்கவேண்டும் ? பத்திரிக்கையின் முழுமையையும் சேர்த்துப் பணயம் வைத்து சீனாவின் ‘பயனுள்ள முட்டாளாக’ ஏன் மாற வேண்டும் ? அவருடைய பயண நண்பர்களைப் போல கம்யூனிஸக் கருத்தியலையோ அல்லது தனது அறியாமையையோ பீஜீங்கின் சர்வாதிகார ஆளுகையையும் மற்றும் திபெத்தின் மீதான காலனிய ஆதிக்கத்தையும் தான் முன்னிலைப் படுத்துவதற்கு காரணமாக அவர் சொல்ல இயலாது.

(ஹிமல் தெற்காசியப் பத்திரிக்கை(Himal Southasian Magazine)யில் செப்டம்பர் 2007 இதழில் வெளியிடப்பட்ட டென்சிங் சோனம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.