Friday, October 16, 2009

இலங்கைக்குச் சென்ற தூதுக்குழு

இலங்கைக்கு சென்ற தூதுக்குழு திரும்பி வந்திருக்கிறது. அங்கே போய் ராஜபக்சே வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு முகாம்களில் போய்க் 'கைகழுவி' விட்டு வந்திருக்கிறார்கள். இந்தியாவின் கபட நாடகம் என்று எதிர்கட்சிகள் எல்லோரும் வருணிக்க, டெல்லி காங்கிரஸ்காரர்கள் இயக்கத்தில் நடந்த இந்த கபடநாடகத்தில் 'தர்மராய்' நம் கலைஞர்.

தூதுக்குழுவை அனுப்பச்சொல்லி ராஜபக்சே லட்டர் போட்டுத்தான் நம்ம ஆட்கள் போனார்கள் என்று கலைஞர் சொல்கிறார். போனவர்கள் அவங்கவங்க சொந்தக் காசுல தான் போனாங்க; நீங்களும் வேணும்னா போகவேண்டியதுதானே என்று கலைஞர் பொறுப்பை எதிர்கட்சிகளிடம் தள்ளுகிறார். எதிர்கட்சிகள் 'அப்படியா..சரி..இதோ எங்க குழு ரெடி.. அவங்களை பத்திரிக்கையாளர்கள் கூட அனுப்ப முடியுமா ?' என்று பதிலுக்கு வரிந்துகட்டிக்கொண்டு நிற்காமல் நெடுமாறன் ஐயா முதல் சி.பி.எம் வரை கபடநாடகம் என்கிற அறிக்கைகளோடு நின்று கொண்டார்கள். இதில் கேப்டன் கூடுதலாய் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி. விசாரணையிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்த தூதுக் குழுவை வரவைத்து உலகை ஏமாற்ற முயல்கிறார் என்கிறார். ஒருவேளை எதிர்க் கட்சிகள் எல்லாம் வரிந்து கட்டியிருந்தால் 'ஹி..ஹி.. சென்டர்ல இறையாண்மை குறையுதான்னு பார்த்து பெர்மிசன் குடுப்பாங்க'...'ஹி..ஹி.. ராஜபக்சேவோட இறையாண்மை குறையுதான்னு பார்த்துட்டு அவர் பெர்மிசன் குடுப்பாரு' என்று மக்கள் முன் மத்திய மாநில ஆளும் முகங்கள் இன்னும் அம்பலப்பட்டிருக்கக்கூடும்.

இப்படித்தான் போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் போகும் safety zoneக்குள் குண்டு போடுகிறார்கள் என்று இங்கிருந்து எதிர்கட்சிகள் குரலெழுப்ப ராஜபக்சே "அப்படியா..வந்து தான் பாருங்களேன்"னு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விட அப்போதும் அம்மையார் உட்பட எல்லோரும் இங்கேயே பங்க் குழிகளுக்குள் பதுங்கினார்கள்.

இப்போது போய்விட்டு வந்த சிறுத்தை திருமாவோ 'பிராபாகரனோடு போர்க்களத்தில் நீங்க இருந்திருந்தால் உங்களையும் கொன்றிருப்பேன்' என்று ராஜபக்சே சொன்னதை 'நகைச்சுவை'யாகப் பேசினார் என்கிறார்(சபை நாகரிகமாம்). இதைவிட அசிங்கம், ராஜபக்சே கட்டின முகாம்கள் நல்லா வழுவழுன்னு இருந்தது.ஐ.நா. கட்டின முகாம்கள் தான் மோசமா கொஞ்ச நாள்தான் தங்கப்போற மாதிரி இருந்தது என்று இவர் கொடுக்கும் சேனிட்டரி இன்ஸ்பெக்டர் சர்டிபிகேட். ராஜபக்சே 10 வருஷம் மக்கள் முகாம்கள்ல சந்தோஷமா இருக்கட்டும்னு கக்கூஸ் வரைக்கும் ஏ.ஸி. வச்சு கட்டிட்டாராம்.. இந்த ஐ.நா. வெட்டிப் பசங்கதான் ஏதோ ஒரே மாசத்துல முகாமை காலி பண்ற மாதிரி டெம்பரவரியா முகாமைக் கட்டிட்டாங்களாம். அவரை முகாமில் சந்தித்த தம்பி சொன்னாராம் 'நீங்க(தமிழ் நாடு) கொடுத்த டிரெஸ் தான் இது. இது ஒன்னுதான் இருக்கு. அதைத்தான் மாசக்கணக்கா போட்டுகிட்டு இருக்கேன்' என்று சொன்னாராம். புரிந்ததா உங்களுக்கு..? திருமா அண்ணன் எதைப் பதிவு பண்றாருண்ணு ? நாலுமாசமா வணங்காமண் கப்பலை ராப்பிச்சக்காரன் ரேஞ்சுக்கு அலைக்கழிச்சு கடைசில கலைஞர் 'கருணையால்' கொழும்பு துறைமுகத்து வரைக்கும் அனுப்பப்பட்டு அங்க துறைமுகக் குடோன்ல நாறிக்கிட்டு கிடக்கிற உலகத்தமிழ் மற்றும் நம்ப தமிழ் மக்கள் அனுப்புன உணவு, மற்றும் துணிமணிகள் எல்லாம் அங்கிருந்து கால் முளைச்சு நேரா நடந்து முகாம்களுக்குப் போயிடுச்சின்னு சொல்றாரு.

இதில் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழீழ ஆதரவாளர்களுக்கு போராட்டத்தில் தங்களின் பங்கு பற்றி என்ன நிலைப்பாடு என்பது புரியவில்லை. ஈழ ஆதரவு மாநாடுகளும், தீர்மானங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மட்டுமல்ல தமிழ் ஈழஅழிப்பு அரசியலுக்கு எதிரான 'அரசியலும்' செய்யவேண்டுமா இல்லையா ? யாரும் இங்கு மாநில அரசு, மத்திய அரசுகள் நடத்தும் நாடகங்களை அம்பலப்படுத்தும் அரசியல் செய்யவேயில்லையே ஏன் ? இப்படி வேடதாரிகள், கபட நாடகம், என்று அறிக்கைகள் மட்டும் விடுவது அந்த அரசியலுக்கு எதிராக என்ன செய்யும் ? மக்களுக்கு உண்மையை யார்தான் விளக்குவார்கள் ?

தமிழ் நாட்டு மக்கள் விலைவாசி உயர்வுகள், சிறுதொழில் தேக்கங்கள், திடீரென வேலையின்றிப் போன குடும்பங்கள் கோடி என்று அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு பருப்பு சாமான் என்று அம்பானிகளின், Fordகளின், சன் குடும்பங்களின் புறங்கைகளில் வடிந்து சொட்டும் துளியூண்டு தேனை.. வேண்டாம் என்னை நானே திட்டிக்கொள்ளவேண்டாம்..கணநேர தற்காலிக நிம்மதிகளில் தீபாவளியைக்(தமிழனை ஆரியன் கொன்ற நன்னாளை ?) கொண்டாடி ஏதோ வாழட்டும். இதற்கு நடுவில் அங்கே மூன்று லட்சம் பேர் முகாம்களில் வாடுகிறவர்கள் வாரத்தில் ஒரு முறைதான் குளிக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்..? டி.ஆர். பாலு போனாரே இங்கிருந்து கூலிங்கிளாஸ்லாம் போட்டுட்டு, அவர் இங்கிருக்கும் கும்பானிக்களுக்கு காண்ட்ராக்ட்டுகள் பிடித்துக் கொடுத்து அவர்கள் ஈழத்தமிழர் வாழ்வை புணரமைத்துவிடாமல் தூங்கமாட்டார்களே. பின் என்ன கவலை ?

1 comment:

  1. அன்புள்ள அம்பேதன்,

    எனக்கு நீங்கள் அனுப்பிய பின்னூட்டத்தைத் தொடர்ந்து வந்தேன். உங்களுக்கு எள்ளல் நன்றாக வருகிறது. எல்லோரும் முகமூடி மாட்டிக்கொண்டு அலைகிறார்கள் என்று தெரிந்தும், அவர்களுக்குப் பின்னால் ஒரு கூட்டம் அலைகிறது. உங்களைப் போன்றவர்களாவது தெளிவோடு இருக்கிறார்களே என்று மகிழ்ந்துகொள்ளவேண்டியதுதான்.

    ReplyDelete

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.