Friday, August 28, 2009

சமூகமும் ஓரினச்சேர்க்கையும்...

http://uraiyurkaran.blogspot.com/2009/07/blog-post.html
என்கிற வலைப்பதிவின் கட்டுரையைப் படித்ததும் எனக்குத் தோன்றியது இது..

incest ஒரு காலத்தில் இருந்திருந்து பிற்காலத்தில் கைவிடப்பட்டது. தற்போதைய ஆணாதிக்க சமுதாயம் தோன்றிய பின் incest முற்றிலும் மறைந்துபோனது. ஆனால் இன்னும் சரோஜாதேவி கதைகளில் இவற்றைப் பார்க்கலாம். சமூகத்தின் வளர்ச்சியில் தற்போது தாயின் நிலை வேறாக உள்ளது. Freud சொல்லியது போல தாயின் மீதான குழந்தையின் 'காதல்' அமுக்கப்பட்டு மனதில் அதனது identity உருவாவதற்கு அடிப்படையான காரணமாக உள்ளது. தாயின் மீதான பெண்குழந்தை கொள்ளும் காதல் ஒருவகை ஓரினக் கவர்ச்சியாகும். இப்போது incest சமூகத்தில் இல்லை என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் அது உள்ளவர்கள் யாரும் வெளியில் வந்து பகிரங்கமாக எங்களை அங்கீகரியுங்கள் என்று ‘சமூக’ அடையாளத்துக்காக போராடுவதில்லை. அதற்கான தேவையும், அவசியமுமில்லை.

தற்போது ஒரினச் சேர்க்கையின் நிலையும் அப்படித்தான். ஓரினச் சேர்க்கை எல்லாக் காலங்களிலும் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் தண்டனைக்குரியதாக அமுக்கப்பட்டது. ஆனால் எல்லா சமூகங்களிலும் மறைமுகமாகப் படர்ந்திருந்துள்ளது. தற்போதைய சமூகத்தில் ஓரினச் சேர்க்கை சமூகத்தின் போக்கை, கலாச்சார ரீதியாக பெரிதும் பாதித்துவிடாது என்ற புரிதல் அறிவியலாளர்களால் முன்னிறுத்தப்படுகிறது.

இப்போது incest, homosexuality இவ்விரண்டு நிலைகளின் சமூக நிலைகளையும் கருதுவோம். Incest க்கு நேரடியான சமூக அங்கீகாரம் கிடையாது. ஆனால் அது தாயின் மீதான பாசப் பிணைப்பாக மறுவியிருக்கிறது. அதற்கான சமூக அங்கீகாரம் அளவுகடந்தது. தந்தையின் மீது முரட்டுத்தனமான பாசம் கொண்ட பெண் குழந்தைகளையும் பார்க்கிறோம். தந்தை-மகள் incest பெரும்பாலும் தந்தையின் வன்முறையாகவே வெளிப்படுகிறது. இவை சமூகத்தில் நிலவும் விதிவிலக்குகள். அதுபோல ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் சமூகத்தின் அடிப்படைத் தேவையான, இனப்பெருக்கத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. சமூகத்தில் அது மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெண்ணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவு தெரிந்தும் தெரியாததுபோல இருப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தான் ஆண்களுக்கிடையேயான பாலியல் உறவும்.

சட்டத்தில் தற்போது ஓரினச்சேர்க்கையை ‘தண்டனைக்குள்ளாக்கும் குற்றமல்ல’ என்று சொன்னது வரவேற்கத்தக்கது. அது சமூகத்தின் யதார்த்தத்தை சட்டம் உணர்ந்துள்ளதைக் குறிக்கிறது. சட்டம் தனிமனிதர்களின் படுக்கையறைக்குள் எட்டிப்பார்க்கும் வகையான இத்தகைய சட்டங்களை கைவிடுதல் நல்லதுதான். குறிப்பிட்ட அளவிற்குமேல் சட்டம் தனிமனித விருப்பங்களை கட்டுப்படுத்தல் இயலாது. உதாரணமாக சட்டத்தில் 'குறி சுவைத்தல்' அனுமதிக்கப்பட்டதல்ல. ஆனால் இச்செயல் இன்பம் துய்ப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது. இது சமூகம் தரும் மறைமுக அங்கீகாரம் ஆகும்.

சமூகத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கிற்கு ஓரினச்சேர்க்கை பங்களிப்பு செய்வதில்லை என்றாலும் அதன் இருப்பை சமூகம் மறைமுகமாவது அங்கீகாரம் செய்கிறது.
ஆனாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் ‘தனிமனிதரீதியான’ கோட்பாட்டு சிந்தனை சமூகத்தின் எல்லா கூறுகளையும் பிய்த்து எறிய விரும்பும் போக்கைக் கொண்டுள்ளது. அது தனிமனித விடுதலை என்கிற போக்கில் சமூகமாய் வாழ்வதில் செய்யப்பட்டுள்ள சமரசங்களை உடைக்கிறது. ஆணகளையும், பெண்களையும் சமூக அளவில் தனித்தனியாக்க விரும்புகிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களின் தனிமனித விருப்பங்களை சத்தமாக வெளியிடச் செய்வதன் மூலம் இது சமூகத்தின் ‘குடும்பம்’ என்ற அமைப்பின் மேல் இன்னொரு தாக்குதல் தொடுக்கிறது. குடும்பம் என்ற அமைப்பு கட்டமைக்கப்பட்ட ஒன்று. அந்த ஒரு காரணத்துக்காகவே அது அழிக்கப்படவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அப்படிப் பார்த்தால் ஓரினச் சேர்க்கையின் ‘இயற்கைத்’ தன்மையும் கட்டமைக்கப்படுவதுதான். எல்லா ஓரினச் சேர்க்கையாளர்களும் இயற்கை உந்துதலால் ஓரினச்சேர்க்கையாளர்களானவர்களல்ல. சிறைகளில் நடைபெறும் ஓரினச்சேர்க்கை பாலியல் வன்முறைகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். இவ்வகையில் பார்க்கும் போது ஓரினச்சேர்க்கை எதிர்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஒரு மனப்போக்கை முன்னிறுத்துகிறது. இது ஓரினச்சேர்க்கையாளர் X எதிர்பால் சேர்க்கையாளர் என்ற இரு எதிர்போக்குகளாக உருவாக்கம் பெறுவதில் போய் முடிகிறது. இவ்வுருவாக்கம் இவற்றுக்கான அரசியலை சமூகத்தளத்தில் உண்டாக்குகிறது. இவ்விரண்டும் ஒன்றையொன்று மறுதலிப்பவைகளாக, எதிரிகளாக அடையாளம் காண்கின்றன. இது அரசியலாக்குவதின் ஒரு விளைவாகும். இந்த அரசியலில் இவ்விரண்டுக்குமிடையேயான சமரசப் பார்வைகளை முன்வைக்காமல் அடித்துக் கொண்டு சண்டையிடும் மனப்பான்மையை இரு பக்க ஆதரவாள அறிவுஜீவிகளும் போட்டிபோட்டுக் கொண்டு முன்வைப்பது தான் பிரச்சனை.

ஒரு ஆண் ஒரு பெண்ணை அடையாளம் காண்பதும், பெண் ஒரு ஆணை அடையாளம் காண்பதும் மிக வெளிப்படையான குறீயீடுகளான ஆடை போன்ற எளிய விஷயங்களாக உள்ளது. இதுபோல ஒரினச் சேர்க்கையாளர்களுக்கும் வெளிப்படையான குறியீடுகள் தோன்றலாம். அவற்றின் மூலம் ஒரு வகைச் சேர்க்கையாளர் இன்னொருவரின் சுயத் தேர்வில் குறுக்கிடாத தன்மை நிலவும் சூழல் ஏற்படலாம். அவ்வாறு குறுக்கீடற்ற நிலைமைகள் தோன்றும்போது இவ்விதமான ஓரினச்சேர்க்கைக்கு எதிரான கடுமையான மனநிலை இல்லாமல் போகும். மேற்கத்திய முறையிலான பிரித்தாளும் 'தனிமனித சுதந்திரம்' என்ற பார்வையை நான் அப்படியே ஆரோக்கியமானதாகக் கருதவில்லை. மனிதன் சமூகமாக வாழ்கிறோம் என்ற பிரக்ஞையுடன் வாழ, சிந்திக்க வேண்டும். தனிமனிதனுக்கும், சமூகத்திற்குமான தொடர்பு நெகிழ்வுத்தன்மையோடு இருக்கவேண்டும்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா முன்பு ஒருமுறை அவரது கோணல் பக்கங்களில் எழுதியதாக ஞாபகம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்திலும் அதைச் சொல்லியிருந்தார். அந்நிகழ்ச்சி இதுதான்: அவரும் அவர் நண்பரும் (இவர் நண்பருடன் பயணித்தாரா என்பது சரியாக ஞாபகமில்லை) ஐரோப்பிய நாடொன்றில் சுற்றுப்பயணம் செய்தபோது காரில் போய்க்கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு காட்சி. சாலையோரத்தில் (பார்க்கில்?) வெளிநாட்டுத் தம்பதியினர் இரண்டுபேர் கொஞ்சிக் கொண்டிருந்திருக்கின்றனர். கொஞ்சல் முற்றிப் போய் கலவிக் கட்டத்திற்குப் போக ஆரம்பித்துவிட.. காரில் போன நண்பர் வாகனத்தை நிறுத்தி அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டார். கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு அவர் காரைக் கிளப்பிக்கொண்டு போக பாதிவழியில் போலீசு துரத்திப் பிடித்தது அவரை. அந்த வெளிநாட்டுத் தம்பதியினர் போலீசுக்கு "ஒருத்தன் எங்களை உத்துப் பார்க்குறான்" என்கிற ரீதியில் புகார் செய்ய போலீஸ் வந்து நண்பரைத் துரத்திப் பிடித்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியை அவர் குறிப்பிட்டு அங்கிருக்கும் பாலியல் சுதந்திரத்தையும், நாகரிகத்தையும்(?) நமது ஆசாமிகள் உற்றுப் பார்க்கும் செக்ஸ் வறட்சியையும்(?) ஒப்பிடுவார். இக்காட்சியை அவருடைய நண்பருக்குப் பதில் ஒரு ஐந்து வயதுக் குழந்தை பார்த்தால் என்ன ஆகும் ? ஐந்து வயதுக் குழந்தைக்கு உடலுறவு என்பது இயற்கையானது என்றாலும் மனரீதியாக பாதிப்பை உண்டாக்கவே செய்யும். அதனால் தான் 'எல்லாம் வளர்ந்த' மேலை நாடுகளில் கூட பொது இடங்களில் உடலுறவு கொள்வது மாதிரியான விஷயங்கள் தவறாகப் பார்க்கப்படுகின்றன. செக்ஸ் கல்வி என்ற விஷயத்திற்கு நான் எதிரி இல்லை. ஆனால் இந்தமாதிரி செக்ஸ் சுதந்திரங்கள் பற்றிப் பேசுவது, 'சமூகம் என்கிற கட்டமைப்பில் வாழ்கிறோம்' என்பதை மறந்துவிட்டு அல்லது சமூகம் என்பது ஒரு கட்டுமானம், அதை உடைக்கவே வேண்டும் என்கிற எண்ணங்களின் அடிப்படையில் எழும் வாதங்களாகும். நாம் வாழும் வாழ்க்கையில் சமூகம் உள்ளிட்ட நிறைய கட்டுமானங்கள் உள்ளன. அவற்றை 'சமூக அளவில்' நாம் அங்கீகரித்தே வாழ்கிறோம். தனிப்பட்ட மனித அளவில் நாம் அதை நிராகரிக்கலாம்; அதை சமூகம் ஒன்றும் சொல்வதில்லை. சமூகம் என்கிற போர்வையில் சில வலுக்கட்டாயமான, வன்முறையான விஷயங்கள் அதைக் கட்டமைக்கும் ஆதிக்க வர்க்கத்தால் திணிக்கப்படும்போது சமூகத்தை எதிர்த்து கிளர்ந்தெழுதல் என்பதும் நடைபெறும். நடைபெறுகிறது. இங்கு சமூகத்திற்கும், தனிமனித உரிமைக்குமான சமரசங்களும் இருபுறங்களிலும் நடைபெறல் வேண்டும் என்பது நான் வலியுறுத்த விரும்பிய விஷயமாகும். சமரசங்களும் சாத்தியமில்லாமல் போகும்போது தவிர்க்க இயலாமல் விலகல்கள் நிகழும். அப்போது அதை நாம் நினைத்தாலும் தடுத்து நிறுத்த இயலாது.

'எல்லாமே உடைதல் தான். உடைத்தல் தான் வாழ்க்கை' என்பது மட்டுமே இயங்கியல் அல்ல. ஒன்றையொன்று ஈர்த்தல், உள்வாங்குதல், முரண்படுதல், சமரசம் செய்தல், விலகிப்போதல், வெடித்தல் போன்ற எல்லாமும் நிகழ்வதுதான் சமூகம். மற்ற விஷயங்களைப் பார்க்காமல் உடைத்தல், வெடித்தல் இரண்டில் மட்டுமே விஷயங்களை கொண்டுபோய் நிறுத்துவது சரியான பார்வையாகாது. ஓரினச் சேர்க்கையாளர்களின் இயல்பான சமூக வாழ்க்கைக்கு சமூகத்தில் செய்யவேண்டிய விஷயங்களை விடுத்து அதன் அரசியலை எதிர்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிரானதாகத் தோன்றவைக்கும் அரசியல்கள் தவறாக நம் சமூகத்தை வழிநடத்தும்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.