Friday, April 17, 2009

வாழ்க்கையின் விளையாட்டு.

புதுதில்லி:

வாழ்க்கை :

ஜனவரி 2009, ஒரு அதிகாலை 5 மணி.


பாத்திமா பேகம். வயது 65. டில்லி (குடிசை)வாசி.

வழக்கம் போல் சீக்கிரமே எழுந்து குடிசையை விட்டு தன் சாக்குப் பையுடன் வேலைக்குக் கிளம்புகிறார்.


20 வருட வேலை. அலுக்காத, சளைக்காத வேலை. குப்பை பொறுக்கும் வேலை.

நேரே விறுவிறுவென நடந்து அருகிலிருக்கிற கார்ப்பரேஷன் குப்பைக்கிடங்கு வந்து சேர்கிறார். இதுதான் அவருடைய ஆபீஸ். 60 மீட்டர் உயர குப்பை மலை அது. 3 4 சதுர கி.மீட்டர் பரப்பளவு இருக்கும். அதன் நாற்றம் அரை கிலோமீட்டர். டில்லியின் மூன்று பெரிய குப்பைக்களங்களில் இதுவும் ஒன்று.


இன்னும் விடியவில்லை. டீ குடிக்கவும் தற்போது முடியாது.


கையிலிருக்கும் குச்சியைக் கொண்டு காலடியில் மிதிபடும் குப்பையை கவனமாகக் கிளறுகிறார்.


என்ன கிடைக்கும் ? பழைய பாட்டில்கள், உடைந்த பழைய பல்புகள், இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக் இன்னும் உங்கள் வீட்டில் எதெது வேண்டாமோ அவற்றையெல்லாம் இங்கே சேர்த்துக்கொள்ளவும்.


குப்பை சேகரிப்பும், பிரிப்பும் எவ்வாறு நடக்கிறது ? முதுகில் ஒரு பெரிய கோணியும், கையில் ஒரு குச்சியுமாகத் தெருக்களில் நாம் பார்க்கிறோமே. இவர்கள் பேரிவாலாக்கள்என்றும்போரிவாலாக்கள்என்றும் (ஹிந்தியில்) அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் பணி.. தெருக்களிலும், தெருக்குப்பைகளிலும் இருந்து மறுசுழற்சி’(recycling) செய்யப்படக்கூடிய இரும்பு, பிளாஸ்டிக் முதலான பொருட்களைப் பிரிப்பது. அதுதான் அவர்களின் மால்’.


பேகம் போன்றவர்கள் பின்னிவாலாஎன்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பெரிய குப்பைக்களங்களில் இறங்கி குப்பை பிரிப்பவர்கள். காடிவாலாக்கள் ஆபீஸ்களிலிருந்து வேஸ்ட் வாங்குபவர்கள். கபாரிகள்வீடுகளில் பழைய பொருட்களை வாங்குபவர்கள். நம்ம ஊரில் குப்பை பொறுக்குபவன், பழைய பேப்பர்க்காரன் என்ற இரண்டே பெயர்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.


இவர்கள் அனைவரும் குப்பைகளை கொண்டு சேர்க்கும்(விற்கும்) இடம் குடோன்’ (godown) எனப்படும் குப்பைப் பிரிப்பறை. இதை நடத்துபவர்கள் சிறுசிறு முதலாளிகள். இங்குதான் குப்பைகள் தொழிற்சாலை, ரசாயன மற்றும் வீட்டுக்கழிவுகளாகவும், மற்றும் எளிதில் உயிர்ச்சிதையக்கூடிய, உயிர்ச்சிதைவடைய இயலாத மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.


இங்கிருந்து அந்தந்த சுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகின்றன.

பேகம், இந்தப் பரந்த குப்பைச்சந்தையில் தான் ஓர் முக்கிய அங்கம் என்ற உணர்வேயின்றி பரபரவென்று குப்பைகளிலிருந்து பொறுக்கி தன் சாக்குப் பையில் போட்டுக்கொண்டே முன்னேறுகிறார். சுற்றுமுற்றும். அந்த அழுகிய நாற்றத்தினால் எள்ளளவும் பாதிக்கப்படாதவர்கள் போல மேலும் பல தலைகள் குனிந்தவாறே ஆங்காங்கே தென்பட்டன. யாரும் யாரையும் பார்த்து ஹாய் குட்மார்னிங் சொல்லவில்லை. ரொம்பவும் நெருங்கி தன் தேடுதல் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் விரட்டவும் இல்லை. அவரவர் குப்பை அவரவருக்கு.


பேகம் குப்பைகளுக்குள் ஏதோ பளீரென்று தட்டுப்பட, கூர்ந்து பார்க்க குனிந்தபோது, மட்டென்று பின் மண்டையில் ஓர் அடி விழுந்தது. நிலைகுலைந்து விழுந்தவரின் முகம் நசநசவென்ற எதையோ உணர்ந்தது. நிமிர்ந்து பார்க்க, எதிரே நின்ற ஆள் யூனிபாரம் அணிந்திருந்தான். கோபமாகப் பேசினான்.


இங்கேயெல்லாம் வந்து இனிமேல் குப்பை பொறுக்கக்கூடாது...எங்க கம்பெனி காண்ட்ராக்ட் எடுத்திருக்கு.. புரிஞ்சதா.. போ போ.. பேகம் அவன் சொல்வதன் அர்த்தம் புரியாமல் வலியைத் தாங்கியபடி ஏன் பொறுக்கக்கூடாது என்றதற்கு மீண்டும் பிரம்படியும், உதையும்தான் பதிலாகக் கிடைத்தன பேகத்திற்கு.


ஏதோ தவறாக நடந்துவிட்டது என்று புரிகிறது பேகத்திற்கு. ஆனால், என்னவென்றுதான் புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். நாளை முதல் பேகம் இங்கு குப்பை பொறுக்கமுடியாது.


------ ****** ----------------

விளையாட்டு :

இங்கிலாந்தின் அடிமை நாடுகளாக இருந்த காலனி நாடுகளுக்கிடையே (அடிமை)நல்லுணர்வை வளர்த்துக் கொள்வதற்காக 1921ல்ஆரம்பிக்கப்பட்டது காமென்வெல்த்’. இதன் தலைவர் இங்கிலாந்து ராணி எலிசபெத் ஆவார்.


பிற்காலத்தில் விடுதலையடைந்த பின் இவை காமென்வெல்த் குடும்பங்களாயின. காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இதன் தற்போதைய 54 உறுப்பினர் நாடுகளுக்கிடையே நல்லுணர்வை வளர்க்க நடத்தப்படும் போட்டிகளாகும். வரும் 2010 அக்டோபரில் இப்போட்டிகளை நடத்தும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது.


தலைநகர் தில்லியில் நடைபெற இருக்கும் இப்போட்டிகளுக்கான விளையாட்டுக்கிராமம் (sports village) யமுனையாற்றின் கரையில் எழிழுடன் கட்டப்பட ஆயிரத்து நூற்று ஐம்பத்தியொரு(1151) கோடி ரூபாய்ச் செலவில் 160 ஏக்கர் இடத்தில் பிரம்மாண்டமாய்த் தயாராகிக்கொண்டிருக்கிறது.

54 நாடுகளிலிருந்தும் வரவிருக்கும் வீரர்களும் தங்க, விளையாட, சுற்றிப் பார்க்க வசதிகள் செய்யப்படும். பெரிய பெரிய தலைவர்கள் விருந்தினராய் வருகை தருவார்கள். இப்படிப்பட்ட முக்கியமானநிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் தில்லி மாநகரம் மட்டும் அழுக்காகத் தெரியலாமா ? பளபளக்க வேண்டாமா ?


நல்ல விஷயந்தானே. இந்தியா மிளிரவேண்டாமா ?’


யோசித்தது தில்லி கார்ப்பரேஷன்’. விளைவு. தில்லியின் குப்பைகளை அள்ளும் பொறுப்பை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது. இதனால் குறைந்த செலவில் நிறைந்த குப்பையை அள்ள முடிகிறது. கார்ப்பரேஷன் இதில் மிச்சம் பிடிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா ?


நாற்பது ( ௪௦ ) கோடி ரூபாய். அடேங்கப்பா.


நல்ல விஷயந்தானே. எந்தக் கார்ப்பரேஷன் தான் லாபத்தில் ஓடியிருக்கிறது ? 40 கோடி ரூபாய் அரசுக்கு லாபம் தானே ?


----------- ************ --------------------------------------------------------


வாழ்க்கையின் விளையாட்டு:

இவ்வளவு நாளும், தில்லி கார்ப்பரேஷனின் அரசு ஊழியர்கள் வாறிய 80 சதவீத குப்பைகள் போக மீதி 20 சதவீத குப்பைகளை அள்ளி சுதந்திரமாய்பிழைத்த பேகம் போன்ற ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர்(1,50,000) இனிமேல் நடு குப்பையில்தான் நிற்க வேண்டும்.


ஒரு நாளில் 150 200 ரூபாய்கள் சம்பாதித்து ராஜபோகவாழ்க்கை வாழ்ந்தவர்கள் இவர்கள்.


இதில் சில ஆயிரம் பேர் தங்கள் வருமானத்தில் பாதிக்கும் குறைவான சம்பளத்திற்கு இந்தத் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளிடமே கொத்தடிமை வேலை பார்க்க நேரிடும்.

ஒரு லட்சம் பேர் அள்ளிய குப்பையை இந்த சில ஆயிரம் பேரே அள்ளிவிடவேண்டும்.


ஒருவேளை கார்ப்பரேட்டுகளுக்காக குப்பை அள்ளும்போது கழுத்தில் டைகட்டி அள்ள வேண்டிவருமாயிருக்கும். பாவம், இந்த வாழ்நாள் ஒப்பந்தஅடிமைகளுக்கு அது தான் தூக்குக் கயிறு.


இந்த (கொடுமையான) வேலைகூட கிடைக்கப்பெறாத மற்றவர்கள் ? இருக்கவே இருக்கிறது திக்கற்றவர்களின் பழம்பெரும் பாரம்பரியத் தொழில், பாலியல் தொழில்.


காமன்வெல்த் போட்டிகளை
DDயில் காட்டுவார்களா ? இல்லை டிஷ்ஷில் மட்டும் தான் காட்டுவார்களா ? அதுதானே நம் கவலை.

சரி. நம்ம ஊர்க்கதை என்ன எனகிறீர்களா ? 'ஓனிக்ஸ்'காரனிடம்தான் கேட்கவேண்டும்.
- அம்பேதன்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.