Thursday, April 23, 2009

தமிழ்ப்பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் – 9 வது நாள்

ஏப்ரல் 21, 2009. செவ்வாய்க்கிழமை.
சென்னை மார்ஷல் சாலையில் உள்ள ம.தி.மு.க அலுவலக கட்டிடம்.

அமைதியான வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இடம் வழங்கக் கூட போலீஸ் மறுத்த ‘சனநாயக’ நிலையில் அரசியல் சார்பற்ற பெண்கள் இயக்கங்கள் போராட வை.கோ தனது சென்னை எழும்பூர் கட்சி அலுவலகத்தின் முன்புறத்தை வழங்கினார். இருபது பேர் பங்கேற்றுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இதுவரை 5 பேர் கவலைக்கிடமாகப் போயுள்ளனர். அவர்கள் ஜெயமணி(34) - திருச்சி; பழனியம்மாள்(28) – மதுரை, செல்வி(40)-கொடைக்கானல், லோகநாயகி(44) – வேலூர், சாந்தி(35) – திண்டுக்கல் ஆவர். இதில் ஜெயமணி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் சிகிச்சையை மறுத்து திரும்பி வந்து போராட்டத்தைத் தொடர்கிறார்.

அந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 9வது நாளாக நீடிக்கிறது.
இன்று காலையில் விவேக் மற்றும் பல சினிமா பிரமுகர்கள் வந்து உண்ணாவிரதம் இருக்கிறவர்களை வாழ்த்திச் சென்றனர்.

முன்னதாக, நேற்று, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் பெண்கள் சோனியா காந்தி தங்களிடம் போரை நிறுத்த உறுதியளிக்க வேண்டும் எனப் போராடி வருவதால் கனிமொழி, தி.மு.க சார்பான வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டனர்.

மாலை ஆறு மணியளவில் ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வந்திருந்து உரையாற்றினார். ஈழப் போராட்டம் இன்று உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதற்காக பெருமிதம் அடைந்தார். தென்னாப்பிரிக்காவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த இலங்கைப் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் (வயது 75) தென்னாப்பிரிக்க தகவல் தொடர்புத்துரை அமைச்சரின் உறுதிமொழிக்குப் பின் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அடுத்த சில நாட்களில் நடந்த நெல்சன் மண்டெலாவின் ஆளும் கட்சி மாநாட்டில் ஈழப் போராட்டத்தை அங்கீகரிப்பதாக தீர்மானம் இயற்றியுள்ளனர் என்ற தகவலை காசி ஆனந்தன் கூறினார்.

அதைத் தொடர்ந்து நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் அங்கு வந்திருந்த 100 பேர் கலந்து கொண்டனர். எழும்பூர் ரயில் நிலையம் வரை சென்று திரும்பியது ஊர்வலம். மெழுகு வர்த்தி ஏந்தி சாலையோரம் நின்று குழுவினர் தொண்டை வலிக்க “ சோனியாவே போரை நிறுத்து” என்று கோஷம் போட சாலையில் இங்குமங்கும் வாகனங்களில் எனக்கென்ன வந்தது என்று ‘பறந்து’கொண்டிருந்தனர் பொது சனங்கள்.
ஊர்வலம் முடிந்ததும் உண்ணாவிரதத்தை நடத்தி வரும் விஜயலஷ்மி வடஇந்தியாவிலிருக்கும் சில சமூக அமைப்புகள் மற்றும் மேதா பட்கரிடமிருந்து, இப்போராட்டத்தை ஆதரித்து வந்த கடிதங்களை வாசித்தார். பின்னர் பேசிய மருத்துவர் அம்மா பெண்கள் அனைவரும் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு போரை நிறுத்திவிட இயலும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர்கள் அனைவரையும் மீண்டும் நாளை சந்திக்கலாம் என்று எண்ணியபடி கிளம்பி வீடு வந்து விழுந்து டி.வி.யை ஆன் செய்தால், கலைஞர் மேலும் இரண்டு ‘தந்திகள்’ கொடுத்திருந்தார் மத்திய அரசுக்கு. அத்தோடு நாளை மறுநாள்(23ம் தேதி) வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
நாளை மறுநாளுக்குள் ராணுவம் மொத்த புத்துமாத்தளம் பகுதியையும் தரைமட்டமாக்கியிருக்கும்.

அப்புறம் போர் தன்னாலேயே நின்றுவிடும்.

உடனை கலைஞர் ‘வேலை நிறுத்தம் வெற்றி!! மத்திய அரசு பணிந்தது !!’ என்று அறிக்கை விட, அதை ஜெயலலிதாவும், ராமதாஸும் ‘நாடகம்’ என்று வருணிக்க, பிரணாப், ‘அன்னை’ சோனியா முதல் பான் கி மூன், ஹில்லாரி வரை அனைவரும் ‘தீவிரவாதத்தை’ ஒழித்த நிம்மதியோடு தூங்கப் போவார்கள். ராஜபக்சேவும், சகோதரர்களும் தமிழர்களின் வாழ்க்கையை எப்படி வதை முகாம்களில் ‘சீரமைப்பது’ என்று அவர்களின் அடுத்த ஐந்தாண்டு திட்டங்களில் இறங்க, நம்ம ஊர்த் தன்மானத் தமிழ் மக்கள் IPL ஒரு 25-25 மேட்ச் நடத்த அதை டி.வி.யின் முன்னால் உட்கார்ந்து வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்.

ஏப்ரல் 22, 2009. செவ்வாய்க்கிழமை. உண்ணாவிரதத்தின் 10வது நாள்
அதிகாலை 5 மணி.

சத்தமில்லாமல் மார்ஷல் சாலையின் இருமுனைகளையும் தடுப்புகள் போடப்பட்டன. சாலையோடு இணையும் மற்ற சந்துபொந்துகளில் போலீசார் வந்து நின்றனர். பத்திரிக்கை, டி.விக்காரர்கள் ரோட்டின் முனையிலேயே நிறுத்தப்பட்டனர். இரண்டு வேன்களில் வந்த சுமார் 150 போலீசார் உண்ணாவிரதமிருந்தவர்களில் கவலைக்கிடமாக இருந்த 5 பெண்களை கைது செய்து வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற பெண்களை கைது செய்யவில்லை. அவர்கள் அடுத்து கவலைக்கிடமான நிலையை அடையும் போது கைது செய்யலாமென்று விட்டுவைத்திருக்கிறார்கள் போல.

வாழ்க சனநாயகம்.

ஏப்ரல் 25, 2009. வெள்ளிக்கிழமை. உண்ணாவிரதத்தின் 13வது நாள்
திடீர் ஈழ வீராங்கனையாய் அவதரித்த ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் அரசின் கெடுபிடிகளினாலும், ஊடக இருட்டடிப்புகளாலும் வாடியிருந்த பெண்கள் மக்களின் 'எனக்கென்ன வந்தது' என்ற பார்வையால் மனம் வெறுத்து போராட்டத்தை நிறுத்தியிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.